சிவ தாண்டவ துதி

Image
Photo: Wikimedia Commons

சிவதாண்டவ  துதி” இலங்கேஸ்வரன் இராவணனால் இயற்றப்பட்டது. இராவணன் அசுரர் குலத்தில் பிறந்ததால் அசுர குணங்கள் நிரம்பியிருந்தாலும் அறிவும், ஆற்றலும், வீரமும் ஒருங்கே பெற்றவன். சிறந்த சிவ பக்தன்.

ஒருமுறை இராவணன், சிவன் உறையும் கயிலாய மலையைப் பெயர்த்து இலங்கைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது இச்செயல் உண்மையான ஒரு பக்தனுக்குரிய செயலாக கருதப்படாததால் சிவன்  இராவணனுக்குப் பாடம் கற்பிக்க தனது காலால் கயிலாய மலையை அழுத்த, இராவணனின் கைகள் அந்த பாரத்தால் நசுங்க, அந்த வலியைப் பொறுக்கமாட்டாமல் தன்னை மன்னிக்கக்கோரி  அவன் சிவனின் நாமங்கள்  பலவற்றை  உரக்க உச்சரிக்கிறான். அது “சிவ தாண்டவ துதி” என வழங்கி துதிக்கப்படுகிறது.  

Image
Photo: Wikimedia Commons

இலங்கேஸ்வரன் இராவணன் இயற்றிய “சிவ தாண்டவ துதி”
“ஓம் கணேசாய நமஹ”

1

அடர்ந்த காடு போன்ற சடை
அதிலிருந்து பொங்கும் நீர்
அந்த நீரால் நனையும் அவன் திருக்கழுத்தில்
ராஜநாகம் மாலைபோல் சுழன்றாட
“டம” “டம” என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி
திருக்கூத்தாடும் சிவன்
அவன் அருள் மழை எங்கும் பொழிக!

2

தளும்பும் புனித கங்கையின் அலைகள்
வரிவரியாய் அலங்கரிக்கும் தலையையும்
திருநெற்றியில் கனல் வீசும் தீயையும்
இளம்பிறையையும்
அணிகலன்களாக அணிந்துள்ள
சிவனை நான் போற்றுகின்றேன்!

3

இப்பரந்த உலக உயிர்களெல்லாம் வாழ
திருவுளம் கொண்டவன்
மலையரசன் மகளுடன் மகிழ்ந்திருப்பவன்
தன் கடைக்கண் பார்வையால் துன்பம் தீர்ப்பவன்
திசைகளை ஆடையாய் அணிந்து திரிபவன்
அந்த சிவனைக்கண்டு உள்ளம் மகிழ்கிறேன்!

4

வாழ்க்கைக்கு ஆதாரமானவன்
கொடி போன்ற நாகத்தின் மாணிக்கம்
எங்கும் ஒளி வீசத் திகழ்பவன்
பல திசைகளும் நிறைந்து
மாதரின் முகங்களில் மாணிக்கக் கதிர்கள்
கோலமிடவும்
மத யானையின் தோல் போர்த்து
அருளொளி வீச அமர்ந்திருக்கும் சிவனைக்கண்டு
என் உள்ளம் ஆனந்தக்கூத்தாடுகிறது!

5

சகோரப்பறவையின் தோழனான
நிலவைத் தலையில் அணிந்தவன்
செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவன்
அரி இந்திராதி தேவர்களின்
தலைகளிலிருந்து விழுந்த மகரந்தத்தால்
சாம்பல் நிறமாகிய திருவடிகளை உடையவன்
அவன் எனக்கு எல்லா வளங்களும் நல்கட்டும்!

6

பிறை நிலா சூடிய அழகன்
காமனை எரித்த நெற்றிக்கண்ணன்
தேவர்கள் துதிக்கும் ஈசன்
அவன் திருச்சடை பணிந்து
எல்லா நலன்களும் பெறுவோம்!

7

முக்கண்ணன்
நெற்றிக்கண் நெருப்பால் காமனை எரித்தவன்
மலையரசன் மகளின் மார்பில்
சந்தனக்குழம்பால் கோலமிட்டு மகிழும்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!

8

உலகெலாம் தாங்குபவன்
இளைய நிலா அணிந்த அழகன்
பொன்னார் மேனியன்
கங்கையை அணிந்த சடையன்
மேகங்கள் நிறைந்த இரவின்
கருநிறம் கொண்ட கழுத்தன்
அந்த ஈசன் எனக்கு மங்களம் அருள்க!

9

மலர்ந்த நீலத் தாமரைகள் போல் தோன்றும்
நீலகண்டன்
மன்மதனை எரித்தவன்
முப்புரம் எரித்தவன்
பற்றுக்களை அறுப்பவன்
தக்கனின் வேள்வியை அழித்தவன்
அந்தகனை வதைத்தவன்
கயாசுரனை அழித்தவன்
எமனை உதைத்தவன்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!

10

வண்டுகள் மொய்க்கும்
கடம்ப மலர்களைச் சூடியவன்
மன்மதனையும் ,முப்புரத்தையும் எரித்தவன்
அந்தகனையும்,எமனையும்,
கயாசுரனையும் ஒழித்தவன்
அந்த ஈசனைப் பணிகின்றேன்!

11

“திமி” “திமி” என மிருதங்கம் ஒலிக்க
அந்த மங்கள இசைக்கேற்ப ஆடும் சிவன்
நெற்றிக்கண்ணில் நெருப்பைக் கொண்டவன்
தீ கக்கும் மூச்சைக்கொண்ட நாகம்
அவன் கழுத்தில் சீறத் திகழ்கின்றான்!

12

மக்களையும் மன்னனையும் நான்
சமமாக எண்ணுவதெப்போ?
வெற்று விழிகளையும்
தாமரைக் கண்களையும் நான்
சமமாகப் பார்ப்பதெப்போ?
நண்பனையும் எதிரியையும் நான்
ஒன்றாக எண்ணுவதெப்போ?
மதிப்பு மிக்க மணியும் மண்ணும்
ஒன்றெனச் சொல்வதெப்போ ?
மாலையையும் பாம்பையும்
ஒன்றென அணிவதெப்போ?
சொல் என் இறைவா!

13

கங்கைக்கரை குகையில்
நான் வாழ்வதெப்போ?
எந்நேரமும் தலைமேல் கை தூக்கி
என் கொடுங்குணங்கள் கரைந்தோட
உன் நாமங்கள் உச்சரித்து
நான் மகிழ்வதெப்போ?
நெற்றிக்கண்ணனே சொல்வாய்!

14

மேலான இத்துதியைப் பாடுவோர்
ஞானகுரு சிவனின் அருளும்
அவனது புனிதமும் பெறுவர்
அறியாமை விலகி
சங்கரன் அருள்பெற
இதைவிட எளிதான வழியொன்றில்லை!

15

தினமும் மாலையில்
பிரதோஷ வேளையில்
பூசையின் முடிவில்
இராவணன் பாடிய இத் துதியைப் பாடி
ஈசனைத் தியானிப்போர்
திருமகளும் நாற்படையும் சூழ
வளம் பெற்று விளங்குவர்!

திருச்சிற்றம்பலம்

Posted in Siva Thandava Thuthi | Tagged | Leave a comment

குழந்தைகளைப்பற்றி கூறவேண்டாம்

Don’t Mention the Children by Michael Rosen

குழந்தைகளைப்பற்றி கூறவேண்டாம்

  —- மைக்கேல் ரோஸென் 

Image
Hussam Shabat (Q128903950), CC BY-SA 4.0 https://creativecommons.org/licenses/by-sa/4.0, via Wikimedia Commons


இறந்துவிட்ட குழந்தைகளின் பெயர்களைக் கூறாதே
இறந்துவிட்ட குழந்தைகளின் பெயர்களை
மக்கள் அறியக்கூடாது
அவர்களது பெயர்கள் மறைக்கப்படவேண்டும்
அவர்களுக்குப் பெயர்களே இருக்கக்கூடாது
இந்த உலகை விட்டு அவர்கள்
பெயர்கள் இல்லாமலேயே போய்விடவேண்டும்
இறந்துவிட்ட குழந்தைகளின் பெயர்களை
ஒருவர் கூட அறியக்கூடாது
இறந்துவிட்ட குழந்தைகளின் பெயர்களை
ஒருவர் கூட சொல்லக்கூடாது
யாருமே குழந்தைகளுக்குப் பெயர்கள் இருந்ததாகவே
நினைக்கக்கூடாது
அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
குழந்தைகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வது
ஆபத்தானதென்று
குழந்தைகளின் பெயர்கள்
காட்டுத்தீபோல் பரவக்கூடும்
குழந்தைகளின் பெயர்கள் தெரிந்திருந்தால்
மக்கள் பாதுகாப்பாக இருக்கமுடியாது
இறந்து விட்ட குழந்தைகளுக்கு பெயர் வேண்டாம்
இறந்து விட்ட குழந்தைகளை
நினைவில் வைக்க வேண்டாம்
அவர்களைப்பற்றி நினைக்கவும் வேண்டாம்
கூறாதீர்: “இறந்துவிட்ட குழந்தைகள்”


2014 ம் ஆண்டு இஸ்ரேல் அரசு காஸாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட வானொலி விளம்பரத்துக்கு தடை விதித்துள்ளது. அதன் விளைவுதான் இந்தக் கவிதை. 2014ல் இஸ்ரேல் தாக்குதலில் இறந்த குழந்தைகள் 539. காஸாவில் அக்டோபர் 2023 முதல் நடந்துவரும் தாக்குதலில் இதுவரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 18500 க்கும்மேல்.இன்றுவரை தொடர்கிறது இந்த தாக்குதல்.

மைக்கேல் ரோஸென் குழந்தைகள் இலக்கியம் போதிக்கும் பேராசிரியர், கவிஞர் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர்.

Posted in Translated poems | Tagged , | Leave a comment

நான் சாகத்தான் வேண்டுமென்றால் அது ஒரு கதையாக ஆகட்டும் 

நான் சாகத்தான் வேண்டுமென்றால்
நீ வாழ்ந்தே ஆகவேண்டும்
என் கதையைச் சொல்ல
என் உடைமைகளை விற்க
ஒரு துண்டுத்துணி வாங்குவதற்கு
கொஞ்சம் மெல்லிய கயிறுகளும்
(அதை வெண்மையாக்கி நீளமான வால் பொருத்திவிடு)
யாருக்கும் பிரியாவிடை கூறாமல்
தன் தசைக்கும்
ஏன் தனக்கேகூட பிரியாவிடை கூறாமல்
பெரு நெருப்பு பிரித்த தன் தந்தைக்காகக் காத்திருக்கும்
காஸாவில் எங்கோ உள்ள ஒரு குழந்தை
சொர்க்கத்தைக் கண்ணால் காண்கையிலே
எனக்காக நீ செய்த இந்த பட்டம்
உயரத்தில் பறப்பதை பார்க்கும்போது
ஒரு கணம் அது நினைக்கும்
அங்கே ஒரு தேவதை
மீண்டும் அன்பை மீட்டுவரும் என்று
நான் சாகத்தான் வேண்டுமென்றால்
அது நம்பிக்கையைக் கொண்டு வரட்டும்
அது ஒரு கதையாக ஆகட்டும்.


ரெஃபாத் அலரீர் (Refaat Alareer) பாலஸ்தீன எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர், மற்றும் சமூகப்போராளி. 2023 டிசம்பர் 6 அன்று இஸ்ரேலின் வான் தாக்குதலால் கொல்லப்பட்டார்.

If I must die” எனத்தொடங்கும் அவரது கவிதையின் தமிழ் வடிவம். இன்று வரை 57000 பாலஸ்தீனியர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர்.

Posted in Translated poems | Tagged , , | Leave a comment

அவ்வையாரின் காதல் கவிதைகள் – 26

26. நற்றிணை 394 முல்லை

(வினை முடித்து மகிழ்வோடு வீடு திரும்பிவரும் தலைவனை வழியில் கண்டவர் வியந்து பாராட்டி தமக்குள் கூறிக்கொள்வது)

“மீண்டு வருகிறான்”

மரங்கள் அடர்ந்த பரந்த காட்டிலே
வாடிய மரத்திலிருக்கும் பெரிய ஆந்தை
பொற்கொல்லன் தட்டி எழுப்பும் ஒலி போல்
இனிதாக ஒலிக்க
மணிகள் ஒலிக்கும் நெடுந்தேரிலே
கடினமான கற்கள் கொண்ட மேட்டு நிலத்திலே
அதன் சக்கரங்கள் அதிர
கடுமையான முன் பனி பெய்த நாளில்
வினை முடிக்கச்சென்றான்
அவன் ….
இப்போது மேகங்கள் மழை பொழிந்ததுபோல்
மார்பில் சந்தனப்பூச்சோடு
குளிர்ச்சியான பண்பாளனாய்
மீண்டு வருகின்றான்
இதற்கா நான் வருந்துவேன்
இல்லை
மகிழ்ச்சிகொள்வேன்
அவன் வாழ்க!

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின் காதல் கவிதைகள் –25

25. நற்றிணை 390 மருதம்


(பரத்தை உறவு உடையவன் தலைவன் என்று ஊடியிருந்த தலைவி அவன் மீண்டும் தன்னை நாடி வருவதை விரும்பியவளாக அவனது ஏவலர்கள் காதில் படும்படி தோழிக்குச் சொல்லுதல்)

“ஏவலரே கேளுங்கள்”

தோழீ!
வாளை மீன்கள் வாளைப்போல் மின்னி
குளத்தில் துள்ளும்
எப்போதும் குளத்தில் கிடக்கும் நீர்நாயோ
அதைக்கண்டுகொள்ளாமல் உறங்கி இருக்கும்
வள்ளல் கிள்ளிவளவனின்
கோயில்வெண்ணி வயல்களில் உள்ள
அழகான வெள்ளை அல்லித் தழையை
மெலிதாக அகன்ற இடை அழகுபெற உடுத்து
நானும் விழாக்களம் செல்லவேண்டுமோ?
அப்படி நான் சென்றால்
தலைவன் என்னைச் சேராதுபோவது அரிது!
அவன் சேர்ந்தாலோ
மலை போன்ற யானைகளை உடையவன்
சொன்னசொல் தவறாதவன்
அந்த மலை நாட்டுச் சிற்றூரின் தலைவன்
அவன் மலையிலுள்ள மூங்கிலைப் போன்ற
பிற பெண்களின் தோள்கள்
தம் அழகினை இழக்கும்!

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின் காதல் கவிதைகள் –24

24. நற்றிணை 381 முல்லை

(பிரிவிடை ஆற்றாளாகிய காதலி, காதலன் வருவேன் என்று கூறிச்சென்ற கார்காலம் வந்தும் அவன் வராததால் துடித்து சோர்கிறாள்.அவள் தன்னுள் வருந்திக்கூறிக்கொள்வது)

“தத்தளிக்கும் மனமே”

மன்னன் அஞ்சியிடம் உள்ளது
கம்பீரமான விரைந்த நடையையுடைய
யானைப்படையும் ,
விரைந்து செல்லும் குதிரைப்படையும்
அவன் ஈர நெஞ்சோடு
நீண்ட காலம் தன் பெயர் நிலைத்திருக்க
அரச மண்டபத்தில்
இரவலருக்கு தேர்களைப் பரிசு கொடுக்க உள்ளான்
அந்த பரிசில் இருக்கைபோல்
மேகம் மழை பொழிகிறது
காதலன் வருவேன் என்று சொல்லிச்சென்ற
காலமும் வந்தது
ஆனால் அவர் வரவில்லை
அவர் வராமையால் வந்த தாங்கமுடியா துன்பத்தால்
நான் இன்னும் இறக்கவில்லை
அதனால்
நான் அவர்பால் அன்பில்லாதவளா என்ன?
அப்படியே அன்பில்லாதவளான என்னை
அவர் மன்னித்து அருளாராயின்
கரையை மோதி ஓடும் காட்டாற்றின் கரையிலே
வேர்களெல்லாம் வெளியில் தெரியும்
மரத்தின் தளிர்போல்
தத்தளிக்கும் நெஞ்சோடு
இத்துன்பத்தை எவ்வாறு தாங்குவேன்?

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின் காதல் கவிதைகள் – 23

23.நற்றிணை 371. முல்லை

(வினை முடித்து மழைக்காலத்தில் மீண்டு வருகின்ற தலைமகன் காதலி காத்திருப்பாள் என்பதால் தன் தேர்ப்பாகனை விரைந்து தேரை செலுத்தச் சொல்லுதல்)

“விரைந்து செல்”

பாகனே!
இதுவரையில் பெய்யாதிருந்த மேகங்கள்
பூத்திருக்கும் காயா மரங்கள் உள்ள மலை
அதற்கிடையே பூத்திருக்கும் சரக்கொன்றை போல்
மலைப்பிளவுகள் தெரியும்படி மின்னி
மாந்தளிர் மேனியாள் என் காதலி இருக்கும் இடம் தேடி
வானமெல்லாம் மறையும்படி
மழைபொழியத் துவங்கிவிட்டன
தேர்ந்தெடுத்த அணிகலன்கள் அணிந்த அவள்
ஒளிவீசும் தன் கை வளையல்கள் கழன்றுவிழ
நிச்சயம் என்னை எண்ணி ஏங்கி
அழத்தொடங்கியிருப்பாள்
அவள் மேலும் வருந்த
இரவில் முழங்கும் இடியோசையாய்
கோவலர்கள் குழலோசை கேட்டுக்கொண்டிருக்கும்
பாகனே!
விரைவில் தேரைச்செலுத்து.

(பிரிந்திருக்கும் காதலருக்கு குழலோசை கூட இடியோசை)

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின்  காதல் கவிதைகள் – 22

22 நற்றிணை 295 நெய்தல்


(களவொழுக்கத்தில் தலைமகன் விரைந்து மணமுடிக்கக் கருதாமல் தொடர்ந்து தலைவியைச் சந்தித்து மகிழ்ந்திருக்க ஒரு சந்திப்பின்போது தோழி தலைவி பேசுவதுபோல் அவன் காதுபட நிலைமையை விளக்கி விரைவில் செயலாற்ற அறிவுறுத்துகிறாள்)

வாழ்க நீ!

பாறைகள் சரிந்து வீழ்ந்த மலைப் பக்கம்
அங்கே
தீயில் கருகிய வள்ளிக்கொடிபோல்
முதுகில் வீழ்ந்து கிடக்கும்
கருங்கூந்தலை உடையவளே!
தோழியர் பலரும் துணையிழந்து வாடுகிறார்
நம் தாயோ
நம் நடத்தையைத் தெரிந்துகொண்டார்
கடக்க முடியா காவலையும் அமைத்துவிட்டார்
நமது தந்தையோ
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டார்
அழகான அவரது மரக்கலங்களோ
பெருந்துறையில் நிறுத்தப்பட்டுள்ளன
அங்குள்ள
உவகை தரும் கள் நிறைந்த ஜாடிகளைப்போல்
நம் இளமையும் அழகும்
வீட்டுக்குள் வீணாகின்றன
உள்ளம் வாடி வீட்டிலிலேயே கிடப்போம்
இந்நிலைக்கு ஆளாக்கிய தலைமகனே
வாழ்க நீ!

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின்  காதல் கவிதைகள் – 21

21.நற்றிணை 187 நெய்தல்


(காதலன் பகலில் வந்து சந்தித்து திரும்பும்போது காதலி தனக்குள்ளே சொல்லிக்கொள்வது)

துயர் தருமோ?

நெய்தல் மலர்கள் குவியத்தொடங்கின
நிழல்கள் கீழ்த்திசையில் விழுந்தன
மேற்கில் மறையும் சூரியன் சிவந்து
நிலத்தின் வெப்பமும் தணிந்தது
பலப்பல பூக்களையுடைய சோலையும்
இருள் படர்ந்து பொலிவிழந்தது
உடம்பில் மிகுந்த காமத்தால்
நாம் இங்கேயே வேண்டிக்கிடக்கின்றோம்
பொழுது கழியவும்
மணிகள் ஒலிசெய்யும்
குதிரைகள் பூட்டப்பட்ட அவரது தேரும்
நம் பார்வையிலிருந்து மறைந்தது
ஆதலால்
தேன் உண்ணும் வண்டுகள் ரீங்காரமிடும்
மாலையணிந்த மார்பில்
ஒளிரும் ஆபரணங்கள் அணிந்த தலைவனோடு
சிரித்தபடி நாம் விளையாடிய சோலை
இனி
நமக்கு எத்தகைய துயர் தருமோ?

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment

அவ்வையாரின்  காதல் கவிதைகள் – 20

20.நற்றிணை 129 குறிஞ்சி

( தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனை அது குறித்து முகத்தோற்றத்தால் உணரச்செய்தல்)

“இதென்ன கொடுமை?”

தோழீ!
காதலன் ஒருநாள் உன்னைப்பிரிந்தாலும்
உன் உயிர் துடிக்கும்
அழகிய கூந்தலை உடையவளே!
எல்லோரையும் பெரிதாய்ச் சிரிக்கவைக்கும்
சேத்தி ஒன்று கேட்பாய்
அவர் நம்மை இங்கே தனித்திருக்கவிட்டு
வேற்று நாட்டுக்குச் செல்வார் என
அக்கம்பக்கத்தவர் கூறுகிறார்
அவர் தனியே சென்று
தன் செயல் முடித்து வருவாராம்
அதுவரையில்
படமெடுக்கும் பாம்பின் தலையே நடுங்குமாறு
கொட்டும் மழையோடுகூடிய இடிமுழக்கத்தை
நடு நிசியில் கேட்டபடியே
நாம் நமது வீட்டிலே
அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு
வாழ்ந்திருக்க வேண்டுமாம்
இதென்ன கொடுமை?

Posted in Avvaiyar Love Poems | Tagged | Leave a comment