ஓ.. ஜெமிமா !

நீ என்ன செய்துவிட்டாய்..

நான் ஏன் மயங்குகிறேன்..!

இப்படி ஆரம்பிக்கும் பழைய திரைப்பாடலொன்று நேற்றிரவு ஞாபகத்துக்கு வந்தது! உலகக்கோப்பை செமி ஃபைனலில் நமது கிரிக்கெட் வீராங்கனைகள் நேற்று ஒரே போடாகப் போட்டு எதிரணியைச் சாய்த்ததே காரணம். சாதாரண கிரிக்கெட் வெற்றியா இது!

நேற்றிரவு (30-10-25) திருச்சியின் ரெட் ஃபாக்ஸ் ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய-ஆஸ்திரேலியா செமிஃபைனல் மேட்ச்சைப் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோற்றுப்போகும் என்று ஒருபோதும் நம்பவில்லை. இந்தியா கொஞ்சம் போராடும். கடைசியில் தோற்று வெளியேறும். நாமும் கொஞ்சம் பார்த்துவைப்போம் என்றுதான் நினைத்து டிவி முன் அமர்ந்திருந்தேன்.

ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி, 339 என்கிற ஹிமாலய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. ஃபீபி லிட்ச்ஃபீல்ட் (Phoebe Litchfield) 119, எலிஸ் பெர்ரி (Elyse Perry) 77, ஆஷ்லே கார்ட்னர்(Ashley Gardner) 63 முக்கிய ஸ்கோர்கள். இலக்கு நோக்கி, இந்தியா தன் பேட்டிங்கைத் தொடங்கியதும், ஸ்டார் பேட்டர் ஸ்ம்ருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் ஆஸ்திரேலிய சீற்றத்தில் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டனர். ஜெமிமா ரோட்ரிக்ஸும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் இறங்கி, எதிரணியின்பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ஆடினார்கள். ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். சரி, இந்த ரெண்டுபேரும் 50-60 எடுத்து அவுட் ஆகிவிடுவார்கள். அடுத்து, ரிச்சா கோஷ் கொஞ்சம் வானவேடிக்கைக் காண்பித்து ரசிகர்களை அநியாயத்துக்கு உசுப்பேற்றுவார். அவரும் தன் கணக்குக்கு நாற்பதோ ஐம்பதோ எடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்களால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாது. எப்படியும் 339 என்கிற இலக்கெல்லாம் இந்திய மகளிருக்கு எட்டாக் கனிதான். 70-80 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கும் என்கிற அனுமானத்தோடும், அவநம்பிக்கையோடும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

கதை நேற்றிரவு வித்தியாசமாக விரிந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் 89 ரன்னில் வீழ்ந்துவிட்டார். ஆஸ்திரேலிய முகங்களில் மினுமினுப்பு! ஆனால் ஜெமிமா மசியவில்லை. அடுத்துவந்த ரிச்சா கோஷுடன் (Richa Ghosh) ஆட்டத்தின் போக்கு குறித்து அடிக்கடி பேசிக்கொண்டும், ரன்களை வேகவேகமாக ஏற்றியவாறும் பரபரப்பு காட்டினார். தடாலென்று இரண்டு சிக்ஸர்களைத் தூக்கிய ரிச்சா, ஆஸ்திரேலிய ரத்த அழுத்தத்தை ஏற்றிவிடுவார் எனத் தோன்றியது. இருவரின் ஆட்டமும் இந்திய ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்றது. வியர்க்க விறுவிறுக்க போராடிக்கொண்டிருந்த ஜெமிமா நைஸாக தன் சதத்தையும் எட்டிவிட்டார். தன் முதல் உலகக்கோப்பை சதத்தைக் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. தரப்பட்ட பணியை முடித்துவிட்டுத்தான் மற்றதெல்லாம் என மனம் சொல்லியிருக்கும். ரிச்சாவுடன் வேகமாக ஓடி, ஓடி சிங்கிள்கள், அவ்வப்போது பௌண்டரி என ஒரே முனைப்பிலிருந்தார் ஜெமி.

Image

(படம்) ஜெமிமா ரோட்ரிக்ஸ் !

இந்த நேரத்தில் பாய்ண்ட் திசையில் ஒரு பந்தை தூக்கியடிக்க முற்பட்ட ரிச்சாவை கேட்ச் பிடித்து ஆஸ்திரேலியர்கள் வெளியேற்றிவிட்டார்கள். தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொண்டு ரிச்சா என்கிற ரூபத்தில் சூழ்ந்திருந்த ஆபத்துமேகம் விலகிவிட்டது எனக் கொஞ்சம் கொண்டாடினார்கள். அடுத்தாற்போல் இறங்கிய அமன்ஜோத் கௌர் நெருக்கடி நேரத்தில் ரிச்சாவைப்போல் அதிரடி காட்டி ஆடக்கூடியவரல்ல. ஜெமிமாவின் முகத்தில் கவலையின் இருள். ஜெமிமா வெகுவாகக் களைத்திருக்கிறார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழல். அமன்ஜோத் எந்த நேரத்திலும் அவுட்டாகலாம். அடுத்து ஆட வரவிருக்கும் வீராங்கனைகளுக்கு மட்டையைப் பிடித்து சரியாக நிற்கக்கூட முடியாது. ‘இந்தியாவின் கதை ..ஐயோ பாவம்..இன்னும் சில ஓவர்களில் முடிந்துவிடும்’ என்ற இறுமாப்பில் வலிமையான ஆஸ்திரேலிய அணி ஆவேசமாகப் பந்து வீசியும், ஃபீல்டிங் செய்தவாறும் இருந்தது.

ஏற்கனவே ஒல்லிக்குச்சி. தன் மீது அணியினருக்கும், ரசிகர்களுக்கும் எகிறியிருந்த எதிர்பார்ப்பின் அழுத்தம். வியர்வை, புழுக்கம்வேறு என எல்லாமாகக் கூட்டணிபோட்டு ஜெமிமாவைப் பாதியாக உருக்கிவிட்டிருந்தது. ஆனால் அந்த இளம் வீராங்கனை அசரவில்லை. அவருக்குள் ஏதோ ஒரு பூதம் புகுந்துகொண்டு ஆட்டிவைப்பதுபோல் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெமி. இவரும் அமன்ஜோத்தும் சிங்கிள்களுக்கிடையில் எதிர்பாரா பௌண்டரிகளையும் கொளுத்திப்போட்டனர். பயக் களை ஆஸ்திரேலிய முகங்களில் தெரிய ஆரம்பித்தது. 49- ஆவது ஓவரிலேயே திறன் காட்டிய ஜெமிமாவும், சமயோஜிதமாகத் துணையாட்டம் ஆடிய அமன்ஜோத் கௌரும் இலக்கை வெற்றிகரமாகக் கடந்தனர். இந்தியாவை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரவேசிக்கவைத்தனர். இரண்டாவது ஓவரிலேயே ஆடவந்திருந்த ஜெமிமா 127 ரன் எடுத்து அவுட்டாகாது நின்றார். (ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 26 எடுத்தார். அமன்ஜோத் 8 பந்துகளில் 15 ரன்! பந்துவீச்சில், ஸ்ரீசரணியும், தீப்தி ஷர்மாவும் தலா 2 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.)

முக்கிய விக்கெட்டுகளை இந்தியா தடதடவென இழந்த இலையில், ஜெமிமா இன்று காண்பித்த. ஆட்ட சாதுர்யம், திறன், இலக்கை நோக்கிய விடாமுயற்சி, தனி ஒருவளாய் நின்று சாதித்துக் கொடுத்தது என எப்படி வேண்டுமானாலும் அவரது பங்களிப்பைப் புகழலாம் கிரிக்கெட் உலகம். தான் பாராட்டப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இண்டர்வியூவின்போது ஜெமிமா வெகுவாகக் கண்கலங்கித் தடுமாறுவதைப் பார்க்கையில், நமக்கே கண்களில் ஈரம் தட்டியதை உணர முடிந்தது.

ஞாயிறன்று நம்மை உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சந்திக்கத் தயாராயிருக்கிறது, இங்கிலாந்தை ஓட,ஓட விரட்டிவிட்ட தென்னாப்பிரிக்க அணி. இந்தியாவோ, தென்னாப்பிரிக்காவோ – எது வென்றாலும்- அதன் கையில் உலகக்கோப்பை சிக்குவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

ஹர்மன்ப்ரீத் கௌருக்கு அந்த யோகம் உண்டோ ..!

Scores:

Aus 338 all out

Ind 341/5

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை – ஃபைனலில் தென்னாப்பிரிக்கா.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ‘ஆட்டம்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது நேற்று (29-10-25). குவஹாட்டியில் நடந்த முதல் செமிஃபைனல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெகு சிறப்பாக ஆடி, இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இரண்டு சிறப்பம்சங்கள் : தென்னாப்பிரிக்க கேப்டன் வொல்வார்ட்டின் (Laura Wolvaardt) அட்டகாச சதம். 169 ரன் ,என அதிரடிகாட்டி அவர் அவுட்டானபோது இங்கிலாந்து அணியில் ஒவ்வொருவராக அவரிடம் சென்று கையைக் குலுக்க முயற்சித்தார்கள். அல்லது கையசைத்தார்கள். தலையசைத்து அமைதியாக நடந்தவாறே மைதானத்தை விட்டு வெளியேறினார் வொல்வார்ட். ஒரு சிரிப்பில்லை. கொண்டாட்டமில்லை. குரைத்தல், குதித்தல், கோணல்கள்போன்ற  ட்ராமா ஏதுமில்லை. {இந்தியக் கேப்டன் (பெண் கோஹ்லி எனத் தன்னைக் கருதிக்கொண்டிருக்கும்) ஹர்மன்ப்ரீத் கௌர் கவனித்திருந்தால், ஏதேனும் இதிலிருந்து கற்றுக்கொண்டிருந்தால், நாட்டுக்கு நல்லது!} நேற்றைய போட்டியின் இன்னுமொரு சிறப்பு பங்களிப்பாளர்: தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் மரிஸான் காப். (Marizaane Kapp) ஏழே ஓவர்களில் வெறும் 20 ரன்கள் கொடுத்து, 5 இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வலிமையான இங்கிலாந்தை நிலைகுலையச் செய்ததோடு, 42 ரன்களையும் தன் அணிக்காக சேர்த்தார் காப். ஆல்ரவுண்டர் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்?

Image

South African Skipper Laura Wolvaardt.

இன்றைய இரண்டாவது செமிஃபைனலில் இந்தியா, உலக சேம்பியனான, இந்த முறையும் கோப்பையை தட்டிச்செல்லக்கூடிய அணி என அனுமானிக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இருப்பினும், ஒருவேளை இந்தியா ப்ரமாதமாக சாதித்து வெற்றிபெற்றால், கோப்பைக்கான ஃபைனலில் நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கும்.

இதுகாறும் சிறப்பாக ஆடிவந்த ஓப்பனர் ப்ரதிகா ராவல் காயம் காரணமாக இனி மிச்சமிருக்கும் ஆட்டங்களில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக, இதற்கு முன்னால் துவக்க ஆட்டக்காரராக இருந்த, உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறாதிருந்த,  21-வயது ஷெஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இன்றைய செமிஃபைனலில் அவர் ஸ்ம்ருதி மந்தனாவுடன் இந்திய பேட்டிங்கைத் துவக்க வாய்ப்பு. பொதுவாக அதிரடியாக ஆடக்கூடிய வர்மா, எடுத்த எடுப்பிலேயே செமிஃபைனலில் இறக்கப்படவிருக்கிறார்! எப்படிப் பாடுவாரோ… ஐ மீன்.. ஆடுவாரோ..!

Image

Recalled to open India Innings: Shafali Varma

இன்றைய ஆட்டத்தில் ரேணுகா, க்ராந்தி, ஸ்ரீ சரணி ஆகியோரின் பௌலிங் இந்தியாவுக்குக் கைகொடுக்கலாம். இந்தியாவின் கண்ராவி ஃபீல்டிங் அணியைக் கவிழ்த்துவிடும் அபாயமுண்ட்டு. பேட்டிங்கில்,  ஸ்ம்ருதி, ஷெஃபாலி, தீப்தி, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா ஆகியோரின் பேட்டிங் ரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இவர்களில் மூன்றுபேராவது க்ளிக்கானால், இந்தியா பிழைக்கும். இல்லையேல், ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா ஃபைனலை ஞாயிறன்று கண்டுகளிக்கலாம்!

**

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை- செமிஃபைனலில் இந்தியா!

ஆரம்ப இரு மேட்ச்சுகளின் சுலப வெற்றிகள் தவிர்த்து, முக்கிய அணிகளுக்கெதிரான தொடர்ந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் மண்ணைக் கவ்வித் திணறிக்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி, நேற்று (23/10/25) நியூஸிலாந்தை நவி மும்பையில் சந்தித்தது. இந்தப் போட்டியை ஜெயித்தே ஆகவேண்டும். இல்லை எனில் கிட்டத்தட்ட வெளியேற்றம்தான் என்கிற எக்கச்சக்கமான நெருக்கடி நிலையில், இந்திய அணி திடீரென விழிப்பு கண்டது! அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், நியூஸிலாந்து பௌலர்களை ஒரு கை பார்த்துவிட்டனர். எட்டி நின்ற வெற்றி, கைக்கெட்டியது. ம்ஹ்ம்ம்…. ஒருவழியாக உலகக்கோப்பையின் செமிஃபைனலில் நுழைந்தாயிற்று.

Image

Century celebrations : 1. Smriti Mandhana

Image

2. Pratika Rawal

முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது டாஸை வென்ற நியூஸிலாந்து அணி. இந்திய அணியின் நம்பகமான துவக்க வீராங்கனைகளான ஸ்ம்ருதி மந்தனாவும் (Smriti Mandhana), ப்ரதிகா ராவலும் (Pratika Rawal) மெல்ல ஆரம்பித்து, பின் பிரமாதமாக ஆடினார்கள். இருவரும் வெகுவாக முன்னேறி இறுதியில் சதமடித்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இதற்கு முந்தைய உலகக்கோப்பைகளில், இப்படி ஒரு சிறப்பான துவக்க பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு நிகழ்ந்ததில்லை. ஏராளமாக வந்திருந்து களித்திருந்த ரசிகர்கள் ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள்! ஸ்ம்ருதி அவுட்டானவுடன் உள்ளே இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் (Jemimah Rodrigues) எதிரணயின் பந்துவீச்சாளர்களை விளாசி அபாரமாக ஆடியதில், இந்தியாவினால் 340 என்கிற பெரிய ஸ்கோரை 49 ஓவர்களில் எழுப்பமுடிந்தது. நியூஸிலாந்தின் ரோஸ்மேரி மாயர் (Rosemary Mair), அமேலியா கெர், சுஸீ பேட்ஸ் (Suzy Bates)ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. மற்ற பௌலர்களின் பாச்சா நம்மவர்களிடம் பலிக்கவில்லை! மழை வேறு இடையிடையே உள்ளே வந்து ஆட்டம்போட்டதால், DLS முறைப்படி நியூஸிலாந்துக்கான இலக்கு 44 ஓவர்களில் 325 என நிர்ணயிக்கப்பட்டது.

Image

India’s spirited pace duo: Renuka Singh Thakur & Kranti Gaud

நியூஸிலாந்து அதி கவனமாக ஆடி இலக்கை நோக்கி முன்னேறத்தான் பார்த்தது. ஆனால், இந்திய பௌலர்களான அனுபவ வீராங்கனை ரேணுகா டாக்குரும் (Renuka Thakur), 22 வயது புதுவரவு க்ராந்தி கௌடும் (Kranti Goud) தங்களின் துல்லிய வேகத்தினால்,அவர்களை நாட்டியமாடவைத்தார்கள். விக்கெட்டுகள் அவ்வப்போது சரிந்தவாறு இருந்தன. ஜியார்ஜியா ப்ளிம்மர் (Georgia Plimmer) (30), அமேலியா கெர் (Amelia Kerr)(45) நன்றாக ஆரம்பித்தும், பிட்ச்சில் நீடிக்க முடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்டர், ப்ரூக் ஹாலிடே (Brooke Halliday) சிறப்பாக ஆடி 84 பந்துகளில் 81 விளாசினார். நியூஸிலாந்தின் விக்கெட்கீப்பர் இஸபெல்லா கேஸ் (Isabella Gaze) வேகமாக 65 ரன் எடுத்தும் மற்றவர்கள்  வரிசைகட்டி வெளியேறியதால் நியூஸிலாந்தைக் காப்பாற்ற முடியவில்லை.  

இந்த மேட்ச்சில், ஆறு பந்துவீச்சாளர்களை இந்தியக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur) மாற்றி மாற்றி நன்றாகப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் விக்கெட் கிடைத்தது! ரேணுகா, க்ராந்திக்கு தலா 2 விக்கெட்டுகள். ஸ்பின்னர்களான ஸ்னேஹ் ரானா, ஸ்ரீ சரணி, தீப்தி ஷர்மாவுக்கு தலா ஒரு விக்கெட். எப்போதாவது பந்து கொடுத்தால் போதும் என்பதாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் ப்ரதிகாவுக்கு நேற்று பெரிய மனசுபண்ணி கேப்டன் 4 ஓவர் கொடுக்க, ப்ரதிகாவும் தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைப் பிடுங்கி வீசிவிட்டார்.  ப்ரதிகா 122 ரன்கள், ஒரு விக்கெட் என  எடுத்தபோதிலும், சிறப்பு ஆட்டக்காரருக்கான விருது ஸ்ம்ருதி மந்தனாவுக்கே கிடைத்தது. 109 ரன் எடுத்த துணைக் கேப்டன் ஸ்ம்ருதி, 3 கேட்ச்சுகளை லாவியதும் முக்கிய காரணமாக இருந்திருக்கும்..

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. இங்கிலாந்துக்கெதிராக 70 ரன் எடுத்ததைத் தவிர, அவரது பேட்டிங்கை சகிக்கமுடியவில்லை. நேற்றைய போட்டியிலும் 10 ரன்களில் அம்மா காலி! ஆனால், கோஹ்லியைப் போல் ஆவேசம், முகக்கோணல்கள் காண்பிப்பதில், ஜூனியர்களை முறைப்பதில், வசைபாடுவதில் குறையேதும் வைக்கவில்லை அம்மணி!

**