என்னைப் பற்றி

சனி, ஜூன் 08, 2019

இரவில் பகல், பகலில் தூக்கம்

தூக்கத்தை வேலைகளை மையமாகக் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தூக்கத்தை மையமாகக் கொண்டு வேலைகளை அமைத்துக் கொள்ளக் கூடாது.

இதில் ஒரு முக்கியமான ஆட்சேபணை என்னவென்றால், இரவில் தூங்கா விட்டால் உடல்நலம் குன்றி விடும் என்பது. அது குன்றாது என்பதுதான் உண்மை. நமது விருப்பத்திற்கேற்ற, சமூகத்துக்கு அவசியமான, சக மனிதர்களுக்கு சேவை செய்வதற்கான வேலையைச் செய்யும் போது உடல் அதற்கு ஈடு கொடுத்து விடும். 24 மணி நேரத்தில், ஏதாவது ஒரு 6 மணி நேரத்தில் தூங்கி விடுவது போதுமனதாக இருக்கும்.

அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்த காலின் பாவெல் தனது ராணுவ பயிற்சியில், இரவை பகலாகவும், பகலை இரவாகவும் பயிற்றுவிக்கப்பட்ட கதையைச் சொல்வார்.

மாலை 5 மணிக்கு துகில் எழுந்து காலைக் கடன்கள் முடித்து மாலை 6 மணிக்கு அணிவகுப்பு, இரவு முழுவதும் வேலை, இரவு 1 மணிக்கு மதிய உணவு, அதிகாலை 6 மணிக்கு தேநீர், காலை 7 மணி முதல் 9 மணி வரை பொழுதுபோக்குக் கொண்டாட்டம், காலை 10 மணிக்கு தூக்கம் என்ற நடைமுறையில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தூங்க வேண்டும், இரவு முழுவதும் உடற்பயிற்சி, களப் பயிற்சி, வகுப்புகள், காடுகளில் பயிற்சி ஆகியவற்றைச் செய்ய வேண்டும். ரோந்து பணியில் இருப்பவர்கள் மற்றவர்கள் தூங்கும் போது பகலில் ரோந்து நடத்த வேண்டும்.

திங்கள், ஏப்ரல் 15, 2019

மொபைல் தொலைந்தால் உலகமே இடிந்து விழுந்ததா?

"இந்த இடத்தில் படுத்துத் தூங்கி விட வேண்டாம். மொபைலே திருடிக் கொண்டு போய் விடுவார்கள், பர்ஸ், பை எல்லாம் மாயமாகி விடும்" என்று எச்சரித்தான் அந்தப் பையன்.

அவனை விட்டு விலகிச் சென்று டிக்கெட் வாங்கும் இடத்தில் படுத்திருந்தேன். அங்கு எதுவும் நடக்கவில்லை. எழுந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு, நிலையத்துக்குள் போய் பிளாட்பார்மில் உட்கார்ந்தேன். அங்கு தண்ணீர் ஊற்றி கழுவுவதற்கான தொழிலாளர்கள் வேலை ஆரம்பிக்கத் தொடங்க, அதிலிருந்து ஒதுங்கி உட்கார்ந்தேன். அவர்கள் நகரத் தொடங்கியதும் படுத்து விட்டேன். கண் அயர்ந்து விட்டு எழுந்து பார்த்தால், பையில் மொபைல் இல்லை. போய் விட்டது என்று தெரிந்து விட்டது, அடி வயிற்றுக்குள் கத்தி எதுவும் இறங்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

பக்கத்தில் இருந்தவரை தொலைபேச சொன்னால், போகவில்லை. சிறிது நேரம் கழித்து இன்னொருவரை கேட்டேன். அவர் நிறையவே அனுதாபப் பட்டார். அங்கும் இங்கும் நடந்தேன். டிக்கெட் கவுண்டர் அருகே போய் பார்த்தேன். ரயில்வே போலீசை அணுக வேண்டுமா வேண்டாமா என்று யோசனை. திரும்பவும் இங்கு வந்து அதே நபரிடம் போன் கேட்டு நண்பரை அழைத்தேன். முதல் அழைப்பில் எடுக்காமல் அவரே பின்னர் அழைத்தார். அவரிடம் விபரம் சொன்னேன். "போலீஸ் புகாரில் பலன் இல்லை. பி.எஸ்.என்.எல்-க்கு தொலைபேசி முடக்கக் கோரலாம். அதற்கு பி.எஸ்.என்.எல் எண்ணில் இருந்து அழைக்க வேண்டும்" என்றார். "அது என்னிடம் இல்லை, உங்களால் முடிந்ததை செய்யுங்கள்" என்று முடித்துக் கொண்டேன்.

அதன் பிறகு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை எழுப்பி விபரம் சொன்னேன். அவர் லாத்தூர் போவதற்காக காத்திருக்கிறார். அவரது ரயில் நள்ளிரவுக்குப் பிறகு வரும். அவரும் மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு முழுவதுமாக உதறி விட்டு சென்னை விரைவு வண்டி 4-வது நடை மேடைக்கு வருவதை அறிந்து அங்கு போய்ச் சேர்ந்தேன். மொபைல் போயிந்தே!

மொபைல் தொலைந்ததன் விளைவுகள்

  • முதலில், ரூ 5,500 மதிப்பிலான கருவி போய் விட்டது. அதன் மூலம்தான் லேப்டாப்பை இணையத்தில் இணைத்து வந்தேன். அது இனிமேல் சாத்தியமில்லை. இதனால் ஏற்படும் இழப்பு பண ரீதியிலானது. [உடனடியாக ஒரு பழைய போனில் போட்டு எல்லா வேலைகளையும் தொடர முடிந்தது]
  • இரண்டாவதாக, மாற்று சிம் எழுதிக் கொடுத்து வாங்க வேண்டும். அடையாள ஆதாரம், முகவரி ஆதாரம் கொடுத்து, கடிதம் எழுதிக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படுவது நேர இழப்பும், சிறிதளவு பண இழப்பும்.  [சென்னை திரும்பிய அடுத்த நாளே சிம் மாற்ற முடிந்தது]
  • மூன்றாவதாக, பயணத்தின் போது பதிவான விபரங்கள் அனைத்தும் போய் விட்டன. யார் யாரை எப்போது அழைத்தேன், யாருடன் எப்போது பேசினேன், சுவிக்ஞன் எண், பிரதீக் எண், பயண ரயில் விபரங்கள் தேடிய வரலாறு, இடம் பெயரும் தொழிலாளர்கள் பற்றி எழுதிய குறிப்பு எல்லாம் போய் விட்டன. அவை எல்லாம் போனில் மட்டுமே கிடைக்கக் கூடியவை அவற்றை மீட்கவே முடியாது. [தொடர்பு எண்கள் எல்லாம் கூகிள் பேக்-அப்-ல் இருந்தன, புதிய போனுக்கு வந்து விட்டன]
  • நான்காவதாக, போனில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள், SD கார்டு கோப்புகள், தகவல்கள், தொடர்பு விபரங்கள் போன்றவை. கோப்புகள், தகவல்கள் எல்லாமே கணினியில் இருப்பவை அல்லது பிறரிடமிருந்து கேட்டுப் பெறக் கூடியவை. 
  • ஐந்தாவதாக, இதுதான் மிக சீரியஸ் ஆனது. வெறும் போனை மட்டும் எடுக்காமல் அதை அறுவடை செய்ய முயற்சித்தால் பேஸ்புக் கணக்கில் தொடர்புகள், மின்னஞ்சல் கணக்குகள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவற்றுக்கு எதிராக உடனடி தடுக்கும் வழி எடுக்க வேண்டும். [புதிய இணைப்பு கிடைத்ததும், எல்லா கணக்குகளிலையும் அந்த போன் கருவியில் இருந்து லாக் அவுட் செய்து விட்டேன்

சனி, ஏப்ரல் 13, 2019

பெசன்ட் நகர் கடற்கரையில் சூரிய உதயம்

காலையில் காலைக் கடன்களை முடித்து விட்டு ஒரு லெமன் டீ குடித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டேன். கடற்கரைக்குப் போக வேண்டும் என்று திட்டம். திரும்பி வந்து எழுதுவது, உடற்பயிற்சி எல்லாம் வைத்துக் கொள்ளலாம். முதலில் பை எடுக்காமல் புறப்பட்டு பின்னர் திரும்பி வந்து பையில் டேப், தண்ணீர் பாட்டில், பை எடுத்துக் கொண்டேன்.

சிக்னல் அருகில் வரும் போது ஒரு பேருந்து ஜாபர்கான் பேட்டை மெயின் ரோடில் திரும்பிப் போனது. அது 18K ஆக இருந்திருக்கும் என்று பின்னர் அதே நிறுத்தத்துக்கு வந்த அம்மா சொன்னார்கள். கிண்டி திசையிலும் 10 நிமிடங்களுக்கு எந்த பேருந்தும் வரவில்லை. அதன் பிறகு கூட்டமாக M70, D70. அவற்றை விட்டு விட்டு 5E நிறுத்தத்தில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

மன்த்லி ரிவியூ கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். அந்த அம்மா வந்து 5.30-க்குப் பிறகுதான் பேருந்து என்று சொல்லி சில நிமிடங்களுக்குள் ஒரு பச்சை பலகை வண்டி வந்து விட்டது. ரூ 16 டிக்கெட். ஒரு ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டே போனேன்.

கடற்கரைக்குப் போகும் முனையில் இறங்கினால், நியூஸ் பேப்பர் வந்து அடுக்கும் வேலை தொடங்கியிருந்தது. கடற்கரை சாலையை பேரிகேட் வைத்து தடுத்திருந்தார்கள். நான்கு சக்கர வாகனங்கள் நுழைய முடியாது. சாலை முழுவதும் நடப்பவர்கள், ஓடுபவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள். ஸ்கேட்டிங் மைதானத்தில் ஒரு சின்ன குழு கால் முட்டிக்கு இடையே பந்தை வைத்து உடற்பயிற்சி ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அதில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஏழை மக்கள் அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்திருந்தார்கள்.

நடைபாதையில் நடந்து போகும் போதே கடலைத் தொட்டு வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். கிழக்கு திசையில் சூரிய உதயத்தை பார்க்கலாம். கன்னியாகுமரியில்தான் சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இங்கு கிழக்குக் கடற்கரையில் சூரிய உதயம் தெரியும்.

ஆனால், அடி வானம் முழுவதும் மேக மூட்டமாக இருந்தது. சரி, சூரியன் உதித்தாகி விட்டது, மேகத்துக்குப் பின்னால் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேன். நேரம் 5.45 தாண்டியிருந்தது. கடற்கரை மணல் பனிப் பொழிவில் ஈரமாக மெத்து மெத்து என்று இருந்தது. செருப்பைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு நடந்தேன். மணலில் ஏதோ சிறு சிறு நுணுக்கமான தடங்கள் பதிந்திருந்தன. நண்டு தடமா? ஏதோ கொக்கி இழுத்துப் போனதா?

இன்னும் கொஞ்சம் போனால், குப்பைகளை வட்டமிட்ட காகங்களுக்கு அப்பால் ஒரு புறாக் கூட்டம். கவுதாரியா? அவை ஒரு கூட்டமாக ஒரு இடத்தில் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து இரை கொத்துகின்றன. அருகில் போனதும் அவை எழுந்து பறக்க, அந்த இடம் முழுவதும் அவற்றின் நகத்தடங்கள். அந்த இடத்தில் அவற்றின் பாத வெப்பம் சூடாக்கியதை உணர முடிந்தது.

கடலில் கால் நனைக்கவும், குளிக்கவும், விளையாடவும், கடலோரமாக வாக்கிங் போகவும், சும்மா உட்கார்ந்திருக்கவும் காலையிலேயே அவ்வளவு நேரத்துக்கு நல்ல கூட்டம். செருப்பை ஒரு இடத்தில் வைத்து விட்டு பையையும் அதன் மீது நிற்க வைத்து விட்டு அலையை நாடிப் போனேன். பை இருந்த இடம் வரை அலை நனைப்பு தெரியத்தான் செய்தது.

கால்கள் நனைந்தன, பேன்ட் நனைந்தது, பாதங்களுக்குக் கீழே மண்ணைப் பறித்து சென்றது. கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் படகுகளில் மிதந்து கொண்டிருந்தார்கள். வானம் அமைதியாக இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு பைக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். கடலையும் நீரையும் மக்கள் கூட்டத்தையும் வெறித்தபடியே எண்ணங்களை ஓட விட்டேன். திடீரென்று பார்த்தால் அடிவானில் சூரிய கோளம் மேலெழும்பி வருகிறது. சுமார் 6-ல் ஒரு பங்கு ஏற்கனவே ஏறி விட்டது. மேக மூட்டம் என்று நினைத்ததை பீறிட்டுக் கொண்டு சிவப்புக் கோளமாக சாதுவாக தெரிந்தது. ஓரிரு நிமிடங்களில் பூமி சுழன்று சுழன்று முழு கோளமும் கண் பார்வைக்கு வந்து விட்டது. அதன் பிறகு மேகத்துக்குள்தான் போக வேண்டும்.

பலர் கேமராக்களை கிளிக்கினார்கள், மொபைல் கேமராக்கள், இன்னும் தனிச்சிறப்பான கேமராக்கள் என்று உற்சாகமடைந்தார்கள். கடல் நீர்பரப்பில் ஜொலிஜொலிப்பான ஒளி பரவியிருந்தது. மேகத்துக்குள் போய் வெளியே வரும் போது வெயிலாகி விடும் புறப்பட்டு விடலாம் என்று நினைத்திருந்தேன்.

திடீரென்று வலது கைப்பக்கம் ஒரு மஞ்சள் நிற நண்டு. ஒரு இளைஞன் மெலிதான அட்டையால் அதைத் தூக்கி விட்டு கடலுக்குள் செலுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். ஏதாவது அமைப்பில் இருக்கிறானா, அல்லது தனிப்பட்ட ஆர்வமா என்று தெரியவில்லை. அது கடல் அலை விளிம்பைத் தாண்டி போயிருந்திருக்கிறது. அலை விளிம்புக்குள் கொண்டு வந்து, தண்ணீர் ஓடி வரும் இடத்தில் விட்டான். அலை வந்து தொடும்போது அதில் கொஞ்சம் உயிர் தெரிந்தது. மற்றபடி சுறுசுறுப்பாக கடலுக்குள்ளோ வெளியிலோ ஓடுவது போல தெரியவில்லை. கூட இருந்த இன்னும் இரண்டு இளைஞர்கள் போட்டோ எடுத்தார்கள்.

“கடலுக்குள் போக விரும்பவில்லை போல இருக்கிறது" என்று சொன்னேன். அதற்கு முன்பு, “இது மஞ்சளாக இருக்கிறது, மெரீனாவில் சிவப்பு நண்டு பார்த்திருக்கிறேன்" என்று சொன்னதற்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி முடித்து விட்டான்.

சூரியன் ஏறி ஏறி இன்னும் வெளியில் வருவதற்கு முன்பே கிளம்பி விட்டேன்.

செவ்வாய், பிப்ரவரி 19, 2019

நாகர்கோவில் ஒரு நாள்

காலையில் 3 மணிக்கு எழுந்து அதிகாலை வாசிப்பை செய்தேன். அதைத் தொடர்ந்து பல் தேய்த்து விட்டு நாட்குறிப்பு. அப்போது ரயில் மதுரை வந்து விட்டிருந்தது. எனவே, அங்கு இறங்கியவர்களின் இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். 1 மணி நேரத்தில் எழுத வேண்டியதை எழுதி முடித்து விட்டேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் நான் எழுதுவதை பார்த்துக் கொண்டே இருந்தார். சாத்தூரில் இறங்கும் போது பாராட்டி சொல்லி விட்டு இறங்கினார்.

அதன் பிறகு இணையம், திருநெல்வேலியில் காஃபி, அல்வா பாக்கெட் வாங்குவது, சிறிதளவு தூக்கம், செய்திகள் வாசிப்பது என்று போனது. நாகர்கோவில் வருவதற்கு 8 மணி ஆகி விட்டது. பழம் பொரி சாப்பிட வேண்டும் என்று நினைத்து உடற்பயிற்சி செய்யாமல் சாப்பிடக் கூடாது என்ற விதியில் நின்று கொண்டேன்.

பேருந்து பிடித்து செட்டிக் குளம், அங்கிருந்து பேருந்து பிடித்து கன்கார்டியா, அங்கிருந்து நடந்து வீடு வந்து சேர்ந்தேன். டாய்லெட் போய் விட்டு, துணிகளை துவைத்து போட்டு விட்டு, குளித்து சாப்பிட்டேன். உடற்பயிற்சிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி செய்திருக்கலாம். அதைத் தவற விட்டு விட்டேன். அதன் பிறகு எழுதிய நாட்குறிப்பை எடிட் செய்து அனுப்பி வைத்தேன். சமையலுக்கு ஏற்பாடு செய்ய கடைக்குப் போய் பொருள் வாங்குவதற்கு பட்டியலை வைத்து விட்டு படுத்து நன்கு தூங்கி விட்டேன்.

எழுந்த பிறகு டீ குடித்து விட்டு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், வாழ்க்கையை எப்படி பார்க்கிறேன் என்று விளக்கினேன். கம்யூனிஸ்ட் கட்சிகள், அரசு, நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ், சாதி, அவதூறுகள், பதில்கள், மதமாற்றம் என்று விவாதம் போனது. நியாயமாக சொன்ன விஷயங்களை கேட்டுக் கொள்கிறார்கள், பரிசீலிக்கிறார்கள்.
நான் தூங்கி எழுந்ததுமே, சென்னைக்கு போகலாம் என்று சொன்னபடி டிக்கெட் புக் செய்யவும் ஏற்பாடு ஆகி விட்டது.

மூலதனம் வாசிப்பை மின்னஞ்சலில் அனுப்புவது, பதிவில் போடுவது, அதீஷ் தாபோல்கர் பதிவை தயாரித்து வெளியிடுவது என்று போனது. அதன் பிறகு டீ போட்டு குடித்து விட்டு வெளியில் கிளம்பினேன்.

கலெக்டர் ஆஃபீஸ் எதிரில் மா.லெ கட்சி ஆர்ப்பாட்டத்தின் அறிகுறியை காணவில்லை. பேருந்தில் குளத்து பேருந்து நிலையம், அங்கிருந்து ஒரு சீதப்பால் 4E பேருந்தில் ஏறி புத்தேரி. பள்ளிக் குழந்தைகள், பையன்களும் பெண்களும் ஜெ... ஜெ... வென்று போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. மிகவும் உற்சாகமாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்தது. சுவர்களில் காணப்படும் பயங்கரவாத ஆதரவு போஸ்டர்களும், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க ஊடுருவலும் இதற்கு முன் தவிடுபொடியாகும் என்ற நம்பிக்கை உருவானது.

புத்தேரியில் வெள்ளாளர் - நாயர் சாதியினர் சார்பாக மோடிக்கு 10% இட ஒதுக்கீட்டுக்காக நன்றி தெரிவித்து பேனர் வைத்திருக்கிறார்கள். குமரி மலர் பத்திரிகையில் இதுதான் பேச்சு. 'தி.மு.க நமது சாதிக்காக இட ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. மோடி செய்து கொடுத்தார். மோடிக்கு ஓட்டு போட வேண்டும்' என்று பிரச்சாரம். இப்படி குறிப்பிட்ட சில சாதியினரின் ஓட்டுக்களை வளைப்பதற்கு மோடிக்கு இது உதவியாகத்தான் இருக்கும். அதே நேரம் பிற சாதியினரின் ஓட்டுக்களை எதிர்நிலைக்குக் கொண்டு நிறுத்துவதற்கும் இது காரணமாக இருக்கும்.