மாலையில் எழுத வேண்டும் என்று இரவு 9 மணி ஆகி விட்டது.
இன்று காலையில் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்து ஒன்றரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது.
ஒன்றரை மணிக்கு காலைக் கடன்களை முடித்து விட்டு 2 மணியிலிருந்து நினைத்தது போல பணிகளை ஆரம்பித்தேன். வாடிக்கையாளரின் கணினியும் இயக்கத்தில் இருந்தது. அதில் இணைந்து செய்ய வேண்டிய பணிகளை ஒவ்வொன்றாக முடித்தேன். முதலில் எளிதான இரண்டு முடிந்தது. முதலாவதில் அறிக்கையில் கூடுதலாக ஒரு விபரம் சேர்க்க வேண்டியது. இரண்டாவது சரக்கிலிருந்து வெளியில் போகும் ஒரு முறை விட்டுப் போயிருந்ததை சரி செய்வது, அதையும் சரி செய்து ஓட விட்டுப் பார்த்தால் அறிக்கை எதிர்பார்த்தபடி வந்து விட்டது.
மூன்றாவதில் இரண்டு மணி நேரம் இழுத்து விட்டது. அளவுக்கதிகமாக விரிவாகச் செய்ய நினைத்து குழப்படி அதிகமாகி விட்டது. எழுந்து ஒரு இடைவெளி கொடுத்த பிறகு தெளிவாகி தேவையில்லாதவற்றை நீக்கி விட்டேன். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மீதியிருந்த இன்னொரு பணியை முடித்து விட்டேன்.
நான்கு அறிக்கைகளில் செய்ய வேண்டிய கிட்டத்தட்ட 9 தேவைகளில் மூன்று அறிக்கைகளில் 6 தேவைகள் முடிந்து விட்டன. ஒரு அறிக்கையில் 3 தேவைகள் எஞ்சியிருக்கின்றன. அதிலும் பாதி வேலை முடிந்திருக்கிறது. அறிக்கை நிரல் தொகுப்பில் கூட்டுத் தொகை வரும்படியான அறிக்கை செய்யும் போது பயன்படுத்தும் நிரலை மாற்றி எழுத வேண்டும். அதை முடித்து விட்டால் மற்றவர்களுக்கும் பயன்படும்.
அதன் பிறகு உலாவப் போகவில்லை. வீடு தூத்து, காலையிலேயே ஊற வைத்திருந்த துணிகளைத் துவைத்துக் குளித்த பிறகு நேரம் பார்த்தால் எட்டரை நெருங்கியிருந்தது. குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது. எதிரில் வீட்டு உரிமையாளர் வீட்டுக்குப் பிடிக்கப் போனேன். அவர் முன்னறையில் கீரை ஆய்ந்து கொண்டிருந்தார். நான் கீழ்நிலைத் தொட்டியில் இறங்கி குடத்தை வைத்தேன். தேங்கியிருந்த தண்ணீரை இறைத்திருக்கிறார்கள்.
தண்ணீர் வரும் வேகம் குறைந்திருக்கிறது. ஓரிரு நிமிடங்களில் நிறைந்து விடக் கூடிய குடம் நான்கைந்து நிமிடங்கள் வரை பிடித்தது. வீட்டுக்கார அம்மாவும் இரண்டு குடங்களைக் கொண்டு வந்து கழுவி வைத்தார்கள். அவர்கள் பையன் தண்ணீர் பிடிப்பதற்கு வந்தான். அவன் பேச்சுக் கொடுக்க நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவனது வேலை விபரங்கள் எல்லாம் பேசினோம். அப்படியே எனது இரண்டு குடங்களை நிரப்பிய பிறகு அவரது குடங்களையும் நிரப்ப நானே கீழே நின்று கொண்டேன். அவர் மேலே நின்று குடங்களை வாங்கி வைத்தார். அந்த வகையில் ஒருவருக்கொருவர் உதவிதான்.
அவர் பெங்களூரில் விப்ரோவில் வேலை செய்கிறாராம். டிசிஎஸ்சில் இவர் விப்ரோவில் சேர்ந்த சமயத்தில் சேர்ந்த அவரது நண்பர் இவரை விட இப்போது 12000 அதிகம் சம்பளம் வாங்குகிறாராம் இவருக்கு எதுவும் அதிகமாக மாட்டேன்கிறது.
'நான் தனியாகத்தான் இருக்கிறேனா' என்று கேட்டார். 'நண்பர்கள் யாரும் கூட இல்லையா'.
'ஆமா, நிரல் எழுதும் வேலை நான் மட்டும் தான் செய்கிறேன். அவர் வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனை வேலைகளை செய்கிறார்' என்று சொன்னேன்.
மின்சாரம் போவதற்கு முன்பு அரைக்க வேண்டிய பணிகளை செய்து கொள்ள வேண்டும். காலையில் உருளைக்கிழங்கு மசால் கறி வைத்து, சப்பாத்தி செய்யலாம் என்று எண்ணம். தேங்காய் இருக்கிறது, தக்காளிகளையும் பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களாக அரிசிச் சோறு நிறைய சாப்பிடுவதால் சப்பாத்திக்கும் ஒரு வாய்ப்பு.
தேங்காயைக் கீறி உலர் அரவையில் பொடியாக்கிக் கொண்டேன், துருவிக் கொண்டால் இன்னும் நல்லது. துருவிய தேங்காயில் தண்ணீர் ஊற்றி பால் பிழிந்து விட்டு சக்கையைப் பயன்படுத்த வேண்டும். அதை மறந்து போய் அப்படியே வறுக்க ஆரம்பித்து விட்டேன். சிறிதளவு எண்ணெயில் பெருஞ்சீரகம் போட்டு தேங்காயும் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இறக்கும் முன்பு மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு சில விநாடிகள் வறுத்து விட்டு இறக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை வேக வைக்கத் தண்ணீரில் மூழ்க வைத்துப் போட்டேன்.
வறுத்தது ஆறிய பிறகு அரைக்க வேண்டும். அது வரை கொதித்துக் கொண்டிருந்தது. வெங்காயமும், தக்காளிகளும் வெட்டிக் கொண்டேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த தேங்காய்க் கலவையை அரைத்துத் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். உருளைக்கிழங்கு வெந்ததை இறக்கிய பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டேன்.
உருளைக்கிழங்கு வெந்த சுடுநீரை ஊற்றி விட்டு குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ஆறச் செய்து தோல் உரித்து, அவற்றைத் துண்டு துண்டுகளாக வெட்டி கொதிக்க ஆரம்பித்திருந்த குழம்பில் சேர்த்தேன். தேவையான உப்பும் சேர்த்துக் கொண்டேன். உருளைக் கிழங்கு நடுப்பகுதிகளில் கொஞ்சம் வேகாமல் இருந்தது போலத் தோன்றியதால் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டேன்.
கோதுமை மாவை பாத்திரத்தில் எடுத்து, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போடும் பதத்தில் பிசைந்து வைத்தேன். குழம்பு இறக்கும் நேரத்தில் தக்காளி துண்டுகளைச் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கி விட்டு சப்பாத்தி சுட கல்லைப் போட்டேன். தேங்காய் பால் எடுத்து வைத்திருந்தால் தக்காளிக்கு முன்னதாக அதையும் சேர்த்திருக்கலாம்.
தேங்காயில் பால் எடுப்பதற்குக் காரணம் வறுக்க எளிதாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். கடைசியில் பாலாகச் சேர்ப்பதால் குழம்பு அளவும் அதிகாகவும் செறிவாகவும் இருக்கும் என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்றைக்குச் செய்ததில் குழம்பு எல்லாம் வற்றிப் போய் உருளைக்கிழங்குகளாகத்தான் நின்றது.
சப்பாத்தி போட்டுக் கொண்டே சுட்டு எடுத்தேன். ஆறோ ஏழோ வந்தது. நல்ல பசியும் ஏற்பட்டு விட்டது. நேற்று இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டதால் கிட்டத்தட்ட மதிய உணவுக்குப் பிறகான உணவு. 9 மணிக்கு மின்சாரம் போகவில்லை. செய்தது எல்லாவற்றையும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மீதி இருந்தால் அடுத்த வேளை சாப்பிட மனம் இல்லை, கெட்டுப் போய் விடுகிறது என்பதால் செய்தது எல்லாம் உள்ளே போகிறது.
7 சப்பாத்திகளையும் மூன்று உருளைக்கிழங்குகளில் பெரும்பகுதியையும் சாப்பிட்டு முடித்து விட்டேன். உருளைக்கிழங்கு மசால் கறியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்தது. பழகிய சமையல் எதுவும் மறந்து விடவில்லை. வசதிகளும் வாய்ப்பும் மன விருப்பமும் இருக்க செய்வதற்கு கை கூடுகிறது.
சாப்பிட்டு விட்டு அடுத்த 2 மணி நேரம் ஓய்வெடுப்பு. 10 மணிக்கும் மின்சாரம் போகவில்லை. 10-12 மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டியது தள்ளிப் போய் 12 மணிக்கு மேல் ஆரம்பித்தேன். நேற்று இரவே ஆரம்பித்து முதல் 2 பக்கங்கள் முடித்திருந்தேன். நீள நீளமான வாக்கியங்கள், சட்டபூர்வமான சொற்கள் என்று கொஞ்சம் திணறலாகத்தான் இருந்தது.
காலையில் செய்த பணிகளை தொலைபேசி விபரங்கள் சொல்லி விட்டேன். மொழிபெயர்ப்பில் பாதி வரைதான் முடிந்தது. மீதியை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை முதல் வேலையாக முடித்து சரி பார்த்து காலைக்குள் அனுப்பி விட வேண்டும். நாளைக்கு உற்பத்தித் திட்டமிடலின் மீதியையும், மீதி இருக்கும் பணியையும் முடித்து விட வேண்டும்.
மதிய உணவுக்கு சோறு வைத்தேன். ரசம், உருளைக்கிழங்கையும், பாகற்காயையும் வெட்டி பொரியல், மாங்காயை வெட்டி எண்ணெயில் வதக்கிக் கொண்டேன். காலையில் செய்த உருளைக்கிழங்கும் இருந்தது. பொரியல் செய்யாமல் இருந்திருக்கலாம், பாகற்காய் வாட ஆரம்பித்திருந்தது. தக்காளியும் கெட்டுப் போய் விடும். அதனால் ரசம், பொறியல் இரண்டும் செய்தேன். ரசத்துக்கு பூண்டு தீர்ந்திருந்தது. நல்லதுதான்.
செவ்வாய்க்கிழமை ஊருக்குப் போவதற்கு முன்பு காய்கறிகளை தீர்த்து விட வேண்டும். எல்லாம் தீர்ந்தாகி விட்டது நான்கைந்து தக்காளிகளும் இரண்டு வெங்காயங்களும் மட்டும் இருக்கின்றன.
ஈழம் தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இவ்வளவு தூரம் ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது.
ஆனந்த விகடனை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். திருமாவேலனின் கட்டுரைகள், தமிழ்நதி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கணிசமான ஒரு பகுதியினரின் மனதில் ஈழப் பிரச்சனையின் ரணத்தை உயிரோடு வைத்திருந்தது.
அடுத்ததாக சீமானின் பரப்புரை, அவரது இயக்கம், தனிப்பட்ட செயல்முறை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அளவில் ஈழப் பிரச்சனையின் முகமாக செயல்பட்ட அவரது பணி மகத்தானது.
மூன்றாவதாக காங்கிரசை எதிர்த்துக் களப்பணிஆற்றிய தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை. அப்போதே நினைத்தது போல தேர்தலின் வெற்றி தோல்வியை விட கணிசமான மக்களிடம் ஈழப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அது தனக்குரிய பங்கை ஆற்றியது.
கடைசியாக நெடுமாறன், வைகோ போன்று தொடர்ந்து உறுதியாக உழைக்கும் தலைவர்கள்.
மேலே சொன்ன மூன்று பேரும் கடைசிக் கட்ட போரில் நடந்த அநியாயங்களால் மனம் வெதும்பி செயல்பட்டவர்கள் என்றால் இவர்கள் எந்த கால கட்டத்திலும் மனம் ஊசலாடாமல் உறுதியாக நின்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் நான்காவதாக ஜெயலலிதாவையும் இதில் சேர்க்கலாம். கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துவதாகத் தோன்றினாலும். முந்தைய நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் பேசி பத்திரிகைகளில் செய்தி இடம் பெறச் செய்த வகையில் அவரது பணி முக்கியமானது.
அவரது நிலைப்பாடுகளை சராசரி தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக பார்க்கலாம். 1989 வரை ஈழ இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவு. 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது தவறு என்ற குற்ற உணர்வில் கடுமையான ஒதுக்கி வைத்தல், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளதாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்தது.
இறுதிக் கட்டப் போரில் நியாயங்கள், சர்வதேச சட்டங்கள், மனிதாபிமானம் மனித உரிமைகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு போருக்குப் பின் மக்களை கேவலமாக நடத்தும் சிங்கள பேரினவாத அரசின் மீது கோபம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.
இது சரி தவறு என்று அவரவர் அரசியல், உணர்வு நிலைப்பாடு பொறுத்து இருக்கலாம். ஆனால் இது ஒரு வகையான விளக்கம்.
இந்தியா டுடேயின் தேர்தலுக்குப் பின்னான கருத்துக் கணிப்பின் திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 105-120 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இதனால் என்ன விளைவு ஏற்படும்?
திமுக உச்ச வரம்பு வெற்றி பெற்றால்
திமுக கூட்டணி - 130 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 25
பாமக - 15
விசி - 5
அதிமுக கூட்டணி - 104 தொகுதிகள்
அதிமுக - 75
தேமுதிக - 15
கம்யூனிஸ்டுகள் - 10
பிறர் - 5
சிறுபான்மை அரசாக இந்த முறை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசுதான் ஏற்படும். அதிமுக, தேமுதிக, காங்கிரசு சேர்ந்து அரசு அமைக்கும் சூழலும் ஏற்படலாம். கம்யூனிஸ்டுகள் எதிரணிக்குப் போய் விடுவார்கள். பாமக அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம். திமுகவின் 2G ஊழலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று காங்கிரசு அதிமுக அணிக்குப் போய் விடலாம்.
இரண்டாவது சூழலில் திமுக கீழ் வரம்பு வெற்றி பெற்றால்,
திமுக கூட்டணி - 115 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 15
பாமக - 7
விசி - 3
அதிமுக கூட்டணி - 120 தொகுதிகள்
அதிமுக - 80
தேமுதிக - 20
கம்யூனிஸ்டுகள் 15
பிறர் - 5
இந்தச் சூழலில் அதிமுக+தேமுதிக+பிறர் ஆட்சி அமைக்க முடியும், கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தரலாம்.
நான் நடத்திய பத்து பதினைந்து பேரிலான கருத்துக் கணிப்பின் அடிப்படையில்
1. அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2. அரசு உதவி பெறுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் - கூலி வேலை செய்பவர்கள், முதியவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்.
3. 200 ரூபாய் பெரிய தொகையாக கருதுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.
4. திமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்
4. சுயதொழில் செய்பவர்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். - வியாபரம், சேவைத் தொழில்கள் (மருத்துவர், வழக்கறிஞர், கணக்காளர்கள்), நிலம் படைத்த விவசாயிகள், மீனவர்கள்
5. நீண்ட கால திமுக ஆதரவாளர்களில் பலர் அதிமுகவுக்கு வாக்களிக்கா விட்டாலும், சுயேச்சை அல்லது 49 O வாக்கு அளித்திருக்கிறார்கள்.
6. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளைச் சட்டை வர்க்கத்தினர் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
7. இளைஞர்களில் பலர் சீமானின் தாக்கத்தால் ஈழப் பிரச்சனை தொடர்பான வெறுப்பில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.
என்னுடைய கணிப்பில் திமுகவின் வாக்கு சதவீதம் 2009 நாடாளுமன்றத் தேர்தலை விடக் குறைந்திருக்க வேண்டும். 2009 மே மாதத்துக்குப் பிறகுதான் ஈழத்துக்குச் செய்த துரோகத்தின் முழு சோகமும் மக்களைத் தாக்கியது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.
அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் 2G ஊழல், திரைப்படத் துறை ஆதிக்கம் குறித்த கோபங்கள் வெளியாக ஆரம்பித்தன. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.
என்னுடைய கணிப்பின் படி, போட்டி நிலைமை இருந்திருந்தால்
திமுக - 65
காங்கிரசு - 10
பாமக - 15
விசி - 5
அதிமுக - 90
தேமுதிக - 25
கம்யூனிஸ்டுகள் - 20
மமக - 3
ஸ்வீப் என்று இருந்தால் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும். அந்தச் சூழலில்
திமுக - 10
காங்கிரசு - 6
பாமக - 8
விசி - 2
அதிமுக - 140
தேமுதிக - 40
கம்யூனிஸ்டுகள் - 23
மமக - 3
முதல்கணிப்பின் படி முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும். கம்யூனிஸ்டுகள்+தேமுதிக கடிவாளங்களுடன் அதிமுக ஆட்சி அமைவது இருப்பதில் நல்ல அமைப்பாக இருக்கும்.