காலை 4.49
நேற்று மாலை சீக்கிரமாகவே தூங்கி விட்டேன். 7.30க்கு தியானம். 8 மணிக்குள் தூங்கி விட்டதால் காலையில் 2 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. மீண்டும் புரண்டு படுத்து தூங்கி எழுந்திருக்கும் போது நேரம் 4.30.
நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு இணையம். மின்னஞ்சல்கள், பதிவுகள், செய்திகள், கூகுள் பஸ் விவாதங்கள், கட்டுரைகளுக்கான பின்னூட்டங்கள் என்று ஒரு மணி நேரம் ஆனது. 8.30க்கு உலாவப் போய் விட்டு காலை உணவும் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று திட்டம்.
அழகர் விடுதிக்குப் போகும் முன்பு நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள். 50 காசுக்கு ஹால்ஸ் மிட்டாய் தருகிறார். 1.50 என்று விலை மாற்றியதால் இதுதான் தொல்லை. பேசாமல் 2 ரூபாய் என்று சொல்லியிருக்கலாம். மாதச்சந்தா கொடுப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். 4 இட்லி+1 தோசை+ 1 காபி. வடை வேண்டாம், பூரியும் வேண்டாம். காலையிலேயே நிறைய பேர் வருகிறார்கள். ஆபிசர்ஸ் லைனிலும் அழகர் என்று ஒரு உணவு விடுதி இருக்கிறது. இந்த ஊரில் பல தொழில் நிறுவனங்கள் ஏதோ பெருந்தலைக்குச் சொந்தமாகவே இருக்கின்றன என்று தோன்றியது.
சாப்பிட்ட பிறகு திரும்பி நடந்து கொண்டிருக்கும் போது தொலைபேசி. காசோலையை சென்னையிலிருந்து ராணிப்பேட்டைக்கு அனுப்பி விட்டார்களாம். திருப்பி அனுப்பி விடவா என்று கேட்டார். அனுப்பி விடச் சொல்லி, சென்னைக்குப் போய் வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். உடனேயே மீண்டும் தொலைபேசி, நேரில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டேன். அவரது காசோலையை நேரில் தந்து விடுவதாகச் சொன்னேன். வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் புறப்பட வேண்டும். 9.15க்கு இன்னும் 1 மணி நேரத்தில் புறப்படுவேன் என்று சொல்லியிருந்தேன்
வீட்டுக்கு வந்து குளித்து விட்டு உடை மாட்டி 20 நிமிடம் தியானம். அதன் பிறகு கறுப்பு பேன்ட் போட்டுக் கொண்டு பையில் டாடா புத்தகம், தண்ணீர், ஆவணங்கள் வைக்கும் கோப்பு, குடை எடுத்துக் கொண்டேன். மழை இல்லை. ஆனால் மழை பெய்து தெருவெல்லாம் நாஸ்தியாகியிருந்தது. காட்பாடி ரோடுக்கு வந்து ராணிப்பேட்டையிலிருந்து வரும் 10ம் தட பேருந்தில் ஏறிக் கொண்டேன். சில்க்மில்லிலிருந்து 3 ரூபாய் இங்கிருந்து 4 ரூபாய் என்று நடத்துனர் விளக்கினார். ராஜா தியேட்டர் வரை, அதைத் தாண்டியும் 4 ரூபாய்தான் வாங்குகிறார்கள். என்ன கணக்கு என்று புரியவில்லை. சில்க்மில் வரை ஒரு பாய்ண்ட் என்று வைத்திருக்கலாம். முன்பு புதிய பேருந்து நிலையத்துக்கு 2 ரூபாய், பழைய பேருந்து நிலையத்துக்கு 3 ரூபாய் என்று வாங்கினார்கள். இப்போது இரண்டுக்குமே 4 ரூபாய்தான்.
பேருந்து நிலையத்துக்கு உள்ளே போகாமல், நெடுஞ்சாலை பாலத்துக்கு பக்கவாட்டில் போக்குவரத்து காவலர் நிற்கும் இடத்துக்கு வந்தேன். அப்போதுதான் வந்த ஒரு பேருந்துக்கு கை காட்டி ஓடிப் போய் ஏறினேன். வாலாஜாவுக்கு 18 ரூபாய் கட்டணம். 20 ரூபாய் நோட்டு கொடுத்தால் அவர்தான் 2 ரூபாய் சில்லறை தர வேண்டும். டாடா புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். மேல்விஷாரம் தாண்டும் போது மூடி வைத்து விட்டு இறங்கத் தயாரானேன். வழியில் எங்கும் இறங்குவதற்கு வேகம் குறையாமல் வாலாஜா பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். சென்னை போகும் பேருந்துதான் இது. எதிரில் வந்தால் நகரப் பேருந்தில் ஏறலாம். திமிரி போகும் பேருந்தில் ஏறி வி சி மோட்டூரில் இறங்கிக் கொண்டேன். இதற்கு 3 ரூபாய்.
அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சும்மா காசோலை வாங்கத்தான் போகிறோம், இதற்காக ஆட்டோவில் போய் 60 ரூபாய் செலவழிக்க முடியுமா? தொலைபேசி சொன்னேன். டேவிட் ஷூ அருகில் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் பார்த்தால் வெளியில் வந்திருந்தார். காசோலையைக் கொடுத்து விட்டு, இன்னும் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டேன்.மற்றவர்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்த நம்மால் முடியாது. நமது கடன் என்று சொல்லப்படுவதைக் கொடுப்பது மட்டும் செய்யலாம்.
அதைத் தொடர்ந்து தாய்த்தமிழ் பள்ளி பற்றி பேசினோம். அடுத்த வாரம் போகத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னேன். ஆனால், மதியத்துக்கு மேல் தொலைபேசி கூடங்குளம் திட்டம் ரத்தாகி விடலாம் என்று சொன்னார். பாதி எதிர்பார்த்துதான். 4ம் தேதி கூடங்குளம் போக வேண்டாம் என்றால், 3ஆம் தேதி கல்லூரி வேலை முடிந்ததும், அறைக்கு வந்து பையை எடுத்துக் கொண்டு, கோயம்பேடு போய் வேலூர் வந்து விட வேண்டும். 4ஆம் தேதி வாடகை கொடுப்பது, சம்பளம் கொடுப்பது போன்ற கடமைகளை முடித்து விட்டு அன்று மாலை திருச்சி போகும் பேருந்தை பிடிக்கலாம்.
அங்கிருந்து மதுரை போய் திருமணத்தில் 5ஆம் தேதி கலந்து கொண்டு, கொடுத்து விட்டு, அங்கிருந்தே ராமநாதபுரம் வந்து கோட்டைபட்டினம் 6ம் தேதி வர வேண்டும். அன்று மதியம் வேதாரண்யம் வந்து பேசி விட்டு இரவு பேருந்து பிடித்து வேலூர் வந்து விட வேண்டும். தொடர்ந்து 7ம் தேதி வகுப்புக்கு சென்னை போகலாம்.
அப்படியே நடந்து போனேன். வாசலில் பார்க்க வேண்டும் என்று சொல்லி என் பெயரையும் சொல்ல வேண்டியிருந்தது. iso 14001-2004 certified company என்று வெளியில் பொறித்திருந்தார்கள். உள்ளே வேலை செய்பவர்கள் எல்லாம் நேர்த்தியான சீருடையில் தெரிந்தார்கள்.
சீருடையில் உட்கார்ந்திருந்தார். அவரது அறையில் போய் உட்கார்ந்தேன். தேநீருக்குச் சொல்ல முயற்சித்தார். அறையில் இருந்தார். எட்டிப் பார்க்க முயற்சி செய்தேன். திரும்பி வந்து காசோலையை வாங்கிக் கொண்டேன். அவர்கள் சொன்னது போலவே பணம் கொடுத்திருந்தார்கள். கடுப்பானது. போகும் போதே 'அப்படி குறைத்துக் கொடுத்திருந்தால் அவர்கள் இன்னும் பெரிய நிறுவனமாக வளர்வதற்கான அறிகுறி, சரியான தொகையைக் கொடுத்திருந்தால் சீக்கிரத்தில் ஊத்தி மூடி விடுவார்கள்' என்று நினைத்திருந்தேன். முன்னதுதான் சரியாகிப் போனது, இன்னும் பெரிதாக வளர்வார்கள்.
அறைக்குள் போய் வணக்கம் சொன்னால், சிறுத்துப் போன முகத்துடன் எல்லாம் நல்லா இருக்கிறதா என்று பேசி முகத்தை வேறு வேலைக்குத் திருப்பிக் கொண்டார். பேச மனம் வரவில்லை. அவ்வளவு பயம், காசு கேட்டு விடுவோமோ என்று. வெளியில் வந்தேன்.
அறைக்குள் உட்கார்ந்து அவரிடம் கருத்துக்களைச் சொன்னேன். தமது வசதிக்கேற்றபடி காரணங்களைச் சொல்லி தமக்கு ஆதாயம் தரும் வழியில் நடப்பதுதான் வெற்றிக்கு ஒரே வழி என்று சொல்ல முயற்சித்தேன். அவருக்கு எவ்வளவு புரிந்ததோ தெரியவில்லை, மீண்டும் விளக்கம் சொல்ல முயற்சித்தார்.
இப்படி நம்மிடமும் நம்மைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களிடமும் அடிக்கும் பணத்தைத்தான் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். நான் புத்திசாலியாக இருந்தால், என்னிடம் வேலை பார்ப்பவர்களை சுரண்ட கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
காசோலையை பையில் வைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். எப்படிப் போவீர்கள் என்று கேட்க நல்ல காலநிலைதான் நடந்தே போய் விடுகிறேன் என்று புறப்பட்டேன். சொல்லி வைத்தது போல மழை ஆரம்பித்தது. குடையை விரித்துக் கொண்டேன். அதற்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா.
பாதி வழியில் வண்டியில் வந்து ஏற்றிக் கொண்டார். அவரையும் இன்றைக்கு நேர்முகத்துக்கு வரச் சொல்லியிருந்திருக்கிறார்கள். அவர் காத்திருந்தார். வேறு வேலையில் பிஸியாக இருந்ததால் இவரை சந்திக்க முடியவில்லை. காத்திருந்து விட்டுப் புறப்படுகிறார்.
அவர்கள்தான் சரியாக செயல்படுகிறார்கள். நாம் தர்மம், நியாயம், என்றெல்லாம் போனால் எந்த விளைவும் இருக்காது.
வி சி மோட்டூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். எந்த திசையில் பேருந்து வருகிறதோ அந்த திசையில் போவதாக முடிவு. முத்துக் கடை போனால் பிரியாணி சாப்பிடலாம், வாலாஜா போனால் ஆரிய பவனில் சாப்பிடலாம். முத்துக் கடை திசையில் நின்று கொண்டேன். முதலில் வந்தது வாலாஜா போகும் வண்டிதான். முன் பக்கமாக ஏறினால் நிறைய கூட்டம். ஏதோ பள்ளி அல்லது கல்லூரி மாணவியர் நிறைந்திருந்தார்கள். நடத்துனர் பின் பக்கம் நின்றிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பின்னால் ஏறி சீட்டு வாங்கலாம் என்று நினைத்திருந்தார் அவரே முன்பக்கம் வந்தார். 3 ரூபாய் சீட்டு.
பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே இறங்கி ஆரிய பவன் போனேன். இருட்டாக இருந்தது. கரண்ட் இல்லை என்று காரணம் சொன்னார்கள். தயிர் சாதம் இல்லை, தக்காளி சாதம் கொடுத்தார்கள். கூடவே ஒரு பொரியலும், வடை கறியும். இந்த வடைகறியை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எப்போது செய்த வடையை எப்போது உடைத்து செய்ததோ என்று. இது பரவாயில்லாமல் இருந்தது, கொண்டைக் கடலை எல்லாம் தென்பட்டது. 20 ரூபாய் விலை.
சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தம் வந்தால், சென்னையிலிருந்து வந்த பேருந்தே கிடைத்தது. கடைசி இருக்கையில் மீதியிருந்து ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் படிக்க முடிந்தது. பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நகரப் பேருந்து. தனியார் பேருந்துதான். அதிலும் கல்லூரி மாணவியர் கூட்டம். ஆக்சிலியம் கல்லூரியில் இறங்குபவர்கள். ஆக்சிலியம் வந்ததும் பேருந்தே காலியாகி விட்டது. சில்க் மில் அருகில் உட்காரவும் இடம் கிடைத்தது. நல்ல பாடல்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் 1.30 ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பத்ரி, பாஜகவின் வானதி, திமுகவின் ஒரு பிரமுகர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அரசியலில் தனிமனிதர் துதியைப் பற்றிப் பேச வேண்டும். கலைஞர் துதி பாடப்படுவதை இவர்கள் குறிப்பிட்டால், பீஷ்மர், இரும்பு மனிதர் என்று வாஜ்பாயி, அத்வானி சொல்லப்படுவதைத் திருப்பிச் சொன்னார் திமுக காரர். 'அப்படி தனி நபரை தூக்கிப் பிடிப்பது தவறு' என்று பத்ரி சொல்ல முயற்சித்தார். கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து யாராவது கலந்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சமாயிருக்கும். மார்க்ஸ், லெனின், மாவோ என்று துதி பாடுகிறீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
கருப்பு பணம் பதிவில் அதியமானுடன் விவாதம். சொல்லும் பதில்களுக்கு பொருத்தமான விடை தர முடியாமல், என்னைப் பற்றி அவருக்குத் தெரிந்த தனிப்பட்ட விபரங்களைச் சொல்லி பேச ஆரம்பித்தார். அதில் நானும் இறங்கிப் போய் விட்டேன். தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சொல்ல வந்த பொருளை ஒட்டியே பேசியதாகத் தோன்றியது. ஊழல் பற்றியோ, சீனா பற்றியோ, நாடுகளின் வளர்ச்சி பற்றியோ அவர் சொன்ன கருத்துக்கு சொன்ன பதில்களை புறக்கணித்துக் கொண்டே போய் விட்டார். மூடிய மனதுடன் விவாதம் புரிபவரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாதுதான்.
இதை முடிக்கும் போது 5.50 ஆகியிருக்கும். உடனேயே getmewell ஆவணம் எழுத வேண்டும். 7 மணிக்குள் அதை முடித்து விட்டு மின்னஞ்சலில் அனுப்பி விட வேண்டும். 7 மணிக்கு fசொன்ன தேவைகளை அலசி குறிப்புகள் எழுதிக் கொள்ள வேண்டும். அது 7.45 வரை. 8 மணிக்கு சீன மொழி கற்றுக் கொள்வதற்கான உரையாடல். ஸ்கைப்பில் இணைந்து பேச வேண்டும். அது 8.30 - 9.00 வரை போகலாம். அதன் பிறகு முகம் மழித்து, குளித்து தயாராக வேண்டும். 20 நிமிடங்கள் தியானம். 10 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும்.
11.30க்கு ஆம்பூர். 1 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டால், மதியம் அங்கு சாப்பிட்டு விட்டு 3.30 அல்லது 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம். மின்சாரம் இருந்தால் துணி தேய்க்க வேண்டும். இல்லை என்றால் எழுத வேண்டும். 4 மணி முதல் 6 மணி வரை இந்த பணிகளை முடித்து விட்டு பெட்டி கட்டி புறப்பட்டு விட வேண்டும். 7 மணிக்கு சென்னை பேருந்து பிடித்தால் 9.30க்குள் பூந்தமல்லி, 10 மணிக்கு வளசரவாக்கம், தியானம் செய்து விட்டு படுத்து தூங்கி விட வேண்டும்.
நாளைக்குக் காலையில் எழுந்து கல்லூரிக்குப் போக வேண்டும். மதியம் 3.30க்குப் புறப்பட்டு வீடு திரும்ப வேண்டும்
வெள்ளிக் கிழமை, வங்கிக்குப் போய் பிரைம் காசோலை போட்டு விட்டு, கூரியர் அனுப்பி விட வேண்டும். சனிக்கிழமை கல்லூரிக்குப் போய் விட்டு வந்து வேலூர் திரும்ப வேண்டும். ஞாயிற்றுக் கிழமை காலையில் வாடகை வகையறா கொடுத்து விட்டு அடுத்த திட்டம் இடலாம்.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாம் இடையில் புகுந்து ஆலோசனைகளோ கூடுதல் தகவல்களோ சொல்ல வேண்டாம். அவர்களுக்குப் புரிந்தபடி பேசி, விபரம் சேகரித்து வரட்டும். அவர்களுக்கு எப்படிப் படுகிறது என்று பார்க்கலாம்.
கல்லூரியில் கற்றுக் கொடுப்பதும் மாதா மாதம் தொடரும் என்று உறுதி கிடையாது. டிசம்பர், ஜனவரிக்கு உறுதி இருக்கிறது. அதன் பிறகு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
வேலூரில் வாடகை 3,500+வீடு 1,000+தண்ணீர் எடுக்க 100+கேபிள் 100+தொலைபேசி 1,000=5,700 செலவாகிறது.
சென்னையில் வாடகை 2,000+1,000+200=3,200 செலவாகிறது. கூடவே மின்கட்டணம்.
9,000 ரூபாய் வரை மாதா மாதம் செலவு. இதை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியும்? வாடகைக்கு 5,500 ஆவதை 3,000 என்று குறைக்க வேண்டும். இணையத்துக்கு 1,000 செலவாவதை குறைப்பது தேவையில்லை. தண்ணீர் எடுக்க, வீடு ஆகும் செலவுகளை நிறுத்த வேண்டும், மொத்தம் 5,000 என்று அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் சாப்பாடு, பயணம் என்று செலவுகள்.