எட்டிப்பிடிக்கத் தவறிய இரட்சிப்பின் செய்தி

பிப்ரவரி 13, 2021

ஒரு நரி பசியோடு உணவு தேடி அலைந்தது. இறுதியில் அது ஒரு திராட்சைக் கொடியைக் கண்டது. திராட்சை குலை உயரத்தில் இருந்ததால் அது இந்த திராட்சைக் பழத்தை எவ்வளவோ எம்பிக்குதித்தும் பறித்து பசியாற இயலவில்லை. அதன் பசி ஒருபுறம் அதன் இயலாமை ஒருபுறம். உணவைக்கண்டும் உண்ணமுடியாத சூழ்நிலையில் அது கூறியதாம் “சீச்…சீ இந்தப் பழம் புளிக்கும்”. சுவைக்காத ஒன்றின் சுவையை கூறும் மனநிலையை நாம் என்னவென்று கூறுவோம்? பசியைப் போக்காத உணவை நாம் எப்படி உணவென்று அழைப்பது?

 

ஒருவேளை தனது இயலாமையை நரி அங்கதத்தோடு வெளிப்படுத்திய விதமா இது?  உணவு அற்ற நரி தனது உயிரைக் காப்பாற்றிகொண்டதா எனும் பதைபதைப்பு யாருக்கேனும் எழுகிறதா? இக்கதை கூறும் முடிவு என்ன? ஒருவேளை இக்கதைக்கு முடிவில்லாததுபோல தோன்றுகிறதில்லையா? ஆம் ஆழ்ந்து யோசித்தால் அதன் பசி என்னாயிற்று என்பதற்கு விடை இல்லை. நரியின் பசி அதை எதை நோக்கி உந்தித்தள்ளியது என்பதை நாம் அறியமாட்டோம்! இன்னும் நாம் அச்சமுறவேண்டிய ஒரு உண்மை உண்டு. அதற்கு எங்கேனும் உணவு கிடைத்ததா? கிடைத்ததென்று கொண்டால் அது கசப்பையும் இனிப்பென கொண்டிருக்குமோ? கசந்ததைத் தின்று, அல்லது ஏதுவுமே கிடைக்காமல் உயிரை விட்டிருக்குமோ?

 

அன்பு உள்ளங்கொண்ட திருச்சபையினரே! முடிவிலா கேள்விகள் நம் முன் நிற்கின்றன. நாம் யார்? திராட்சையாக பிறர் பசியைப் போக்காத எட்டா உயரத்தில் இருக்கிறோமா? அல்லது பசிகொண்ட நரியாக சுற்றிவருகிறோமா? இல்லை இக்கதையை சொல்லும் கதை சொல்லியாக அனைத்தையும் அறிந்த கடவுளின் நிலையில் இருக்கிறோமா? இல்லை ஒருவேளை கதைக் கேட்போராக இருந்து நரியை ஏளனத்துடன் பார்த்து பரிகாசக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருக்கிறோமா?

 

கேள்விகள் இன்னும் நின்றபாடில்லை. திராட்சையும் நரியும் வாழும் இஸ்ரவேலில் கூறப்பட்ட கதையா இது? எனில் திராட்சை எதன் சாயலாக குறிப்பிடப்படுகிறது, நரி எதற்கு உவமானமாக நிற்கின்றது? “குலை குலையா முந்திரிக்கா” எனும் சிறு பிள்ளைகளின் விளையாட்டு நாம் விளையாடியிருப்பதால் இக்கதையின் ஊற்றும் நமது பிராந்தியத்திலேயே தோன்றியதாயிருக்குமா? உணவற்ற நரி ஏன் தான் உண்ணும் சிறு விலங்குகளை விட்டு திராட்சைக்காக அலைந்தது? ஊற்றைப்போல் ஊறிவரும் இக்கேள்விகள் அனைத்தும் நாம் சிறு வயதில் கேட்ட ஒரு நான்கு வரிக்கதையிலிருந்து எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லையல்லவா? கதை தான் முடிந்துவிட்டதே அதன் பின் ஏன் கேள்விகள் என எண்ணுகிறோமா?

ஏசாயவின் கவிதையொன்று இதைப்போன்றே ஒரு திராட்சைத் தோட்டத்தை முன்னிறுத்துகிறது. அது நேசருக்கேற்றப் பாட்டைப் பாடுகின்ற மணவாட்டியாக ஏசாயா தன்னை உவமித்துக்கொள்ளும் ஒரு தருணம். —–*அழகையும் அழுகையையும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும், உழைப்பையும் அது வீணய்ப்போவதையும் பதிவுசெய்யும் கவிதை

 

மிகவும் செழிப்பான மேட்டிலே நேசருக்கு ஒரு திரட்சைத்தோட்டம் இருக்கின்றது. தண்ணீர் தேங்கி அதன் வேர்கள் அழுகிவிடாதபடி அதன் மேடுகளிலிருந்து வாய்க்கால்கள் ஓடுகின்றன… அதன் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்காத தன்மையில் வெயில் படும் இடத்திலே அது அமைந்திருக்கிறது. அத்தோட்டத்தை நேசர் தன் உடல் உழைப்பாலும் தன்னிடமுள்ள பொருளையும் சேலவளித்து அதை பாதுகாக்கும் வண்ணம் வேலி அமைக்கிறார். அந்நிலத்தைப் பண்படுத்தி வளர்ச்சிக்குத் தடையாயிருந்த கற்களையெல்லாம் பொறுக்கி ஒரு நல்ல தோட்டமாக வேர்பற்றி வளர  ஆயத்தம் செய்தார்.

 

இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னும் அவர் கருத்துடன் நேரம் செலவு செய்து, இருப்பதிலேயே சிறந்த நாற்றுகளான “நற்குல” திராட்சைச் செடியை மிக விருப்புடனும், மதி நுட்பத்துடனும், கருத்துடனும் தெரிவுசெய்து அதை தனது நிலத்தில் நாட்டினார். அவைகள் கிளைத்தெளும்ப சரியான பிடிமானங்களை எழுப்பி, அதற்காக தண்ணீர்  பாய்ச்சி, ஏற்ற நேரத்தில் அதற்கான உரமிட்டு இரவு பகல் என்று கண்ணயராது காத்துநின்றார்.

 

மிகவும் எதிர்பார்ப்புடனும்  பெரும் பொருட்செலவும்  செய்து திராட்சை ரசம் பிழியும் ஒரு ஆலையையும்  உருவாக்கி,   கனிதரும் காலத்திற்காக காத்து நின்றார். பூ பூத்தது – நேசர் மகிழ்ந்தார், பிஞ்சு காய்கள் தோன்றின – நேசர் அகமகிழ்ந்தார். ஓரு தகப்பனைப் போன்று வாஞ்சையுடன் அவைகளை கவனித்தார். காலம் கனிந்தது திராட்சைகளும் கனிந்து நின்றன, நேசர் பேருவகை கொண்டார். திராட்சை அறுவடைக்காக அவர் கூலியாட்களை அமர்த்தினார். அடுத்திருப்பவர்களையும் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தார். அவர்கள் கூடை கூடையாக பழங்கள் பறித்து ஆலைக்கு எடுத்துச் சென்றனர்.

 

சிறுமி ஒருத்தி  ஆவல் மிகுதியால் ஒரு திராட்சைப் பழத்தை எடுத்து சுவைத்தாள். அவள் முகம் கோணலானது. வெறுப்பை உமிழும் சுவையும் பார்வையும் அவளில் நின்றன. அம்மா கசக்கிறது என் கத்திவிட்டாள். சுற்றி நின்ற வேலைக்காரர்கள் அதைப் பார்த்தனர். தாங்களும் சுவைத்துப்பார்த்து இக்கனியின் சுவை ஏற்றதாக இல்லையே என்று ஏங்கிப்போயினர். தனது ஆலைக்காக வாங்கியிருந்த புதிய தோல் துருத்திகளையும் ஜாடிகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த நேசரிடம் ஒருவன் ஓடிப்போய்,             “ அய்யா நாம் மோசம் போனோம். பழங்கள் யாவும் எட்டியப்போல் கசக்கின்றன. இவைகள் ஒன்றுக்கும் உதவாது. ஆலையிலே இவைகளை பிழிவதால் எந்த நன்மையும் விளையப்போவதிலை” என அங்கலாய்ப்புடன் வந்து கூறினான்.

 

நேசர் திகைத்து நிற்கிறார். வந்திருந்த உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அருகிலுள்ள தோட்டத்திலுள்ளவர்கள் சிலர் பரிதபம் கொள்கின்றனர். வேறு சிலர் இத்தோட்டத்தை விலைபேச இது தகுந்த நேரம் என மனகணக்குப் போடுகின்றனர். ஆனால் நேசருக்கு திகைப்பு இன்னும் அடங்கவில்லை. தான் தெரிந்துகொண்ட நற்குல திராட்சைக்கொடிகள் எப்படி கஷாயத்தைப் போன்ற கசந்த ரசத்தை உள்ளடக்கியது எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. இத்திகைப்பிற்கான விடை காணப்படாமலே இருக்கின்றது. எப்படி இந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பது? செய்யத்தக்க அனைத்தும் மிகச்சரியாக செய்தும் நற்குல திராட்சைச் செடிகளான யூதா இஸ்ரவேல் குடிகள் கசப்பான பழங்களையே தருகிறார்கள் எனும்போது இதைச் சரிசெய்வது எங்கனம்? தவறே நிகழாத இடத்தில் சரி செய்வதற்கான பிரச்சனை என்ன இருக்கிறது? யாராலும் சரி செய்ய இயலாதபடி பழுது ஏற்பட்டுவிட்டச் சூழலில் மறுபடியும் முதலிலிருந்து துவக்குவது எவ்வளவு கடினம்?

 

நேசரின் ஆற்றாமை அளவிடமுடியாதது. நேசர் வேதனையின் உச்சத்திலிருந்து, தான் மிகவும் நேசித்த, பாதுகாத்த, தன் அனைத்து ஆற்றலையும் செலவிட்டு அன்புகாட்டி வளர்த்த திரட்சைத்தோட்டத்தைப் பார்த்து இவ்விதமாக கூறுகிறார் “இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். (ஏசாயா 5: 5&6)

தீர்க்கன் ஏசாயா எதை முன்னிட்டு இக்கவிதையை புனைகிறார் என்று நாம் நோக்கினால்… யூதா இஸ்ரவேல் எனும் இரு குடிகள் கர்த்தருடைய அன்பை உணராதபடி அவரை துக்கப்படுத்தும் காரியங்களைச் செய்தனர் என்பதினால் தானே? “அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு”.(ஏசாயா 5: 7ஆ)

நியாயமும் நீதியுமற்றத்தன்மையை பாவம் என எளிதில் கூறிக் கடந்துவிடமல் இன்னும் ஒருபடிமேல் போய் “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5: 8) என கர்த்தர் சொன்னதாக ஏசாயா கூறுகிறார்.

இன்றைய தினத்தின் வெற்றிச் சின்னங்கள் நமது வீடுகள். நமது தோட்டங்கள், நமது சொத்துக்கள், நமது நகைகள், நமது உயர்குடி நண்பர்கள், நாம் வாங்கும் பொருட்கள், நாம் செல்லும் ஆலயம், நாம் சார்ந்திருக்கும் சமயம், நாம் வணங்கும் கடவுள். இச்சிறு காரியங்களா? ஒரு தேசம் அல்லது ஒரு திருச்சபை கர்த்தருக்கு விரோதமாக செய்தவைகள் என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

 

இன்று ஒரு போதகராக இந்த ஆலயத்தின் பளிங்கு தரையில் நின்று நான் பேசுகின்ற இவ்வேளையில், ஒரு சில பேராயர்கள் மண் தரையில் அமர்ந்து ஒரு மேஜை கூட இன்றி  போரினாலும், வறுமையினாலும், இனக்கலவரங்களுக்கும் மத்தியில் அமர்ந்து தங்கள் பணிகளைச் செய்கிறார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலுகின்றதா? எவ்வகையில் இவர்களுக்காக நாம் அனுப்பும் காணிக்கைகள் பொருத்தமுடையதாயிருக்கும்? எவ்வகையில் நாமும் இவர்களோடு ஐக்கியப்படுவோம்? கசப்பான பழங்களாக நாம் மாறியபின், யாருடைய வாழ்வில் நாம், சுவையேற்ற இயலும்?

 

இன்றைய தினத்தில் ஒரு போதகரின் செய்தி மிகக்கடுமையாகவும் கண்டிப்புடனும் திருமறைக்கு ஒத்ததாகவும் நமக்கு ஒத்துக்கொள்ள கடினமாகவும் இருந்தால் நாம் என்ன செய்வோம்? அவரை எதிர்க்கலாம், எள்ளி நகையாடலாம், குழி பறிக்கலாம், அவர்களுக்கு விரோதமாக எதையும் சொல்லலாம், நெருக்கடி கொடுக்கலாம். துணிந்தவர்கள் அங்கியைப்பிடித்து இழுக்கலாம், எச்சில் உமிழலாம், துரத்தலாம், வேலையை விட்டு நீக்கலாம், ஏன் கன்னத்தில் கூட அறையலம். அவ்வளவே

 

இன்றைய மானுடம் ஒருவகையில் பண்பட்டு ஆனால் சற்றும் நெகிழாத் தன்மையுடன் இறுகியிருப்பதை வேதனையுடன் காண்கிறோம். ஆனால் ஏசாயாவின் காலத்தில் அப்படியல்ல. தீர்க்கதரிசனம் சொல்லுவது தன்னையே மாய்த்துக்கொள்ளுவதற்குச் சமம்.

 

ஆம் பிரியமானவர்களே, எபிரேயர் கடிதம் இதை மிக அழகாக சித்தரிக்கின்றது. விசுவாசம் குறித்த விளக்கத்தை எபிரேயர் 11ன் முற்பகுதியிலும், விசுவாசத்தில் நடந்த பெரியோர்களது வாழ்வு, அரும்பண்புகள், அற்பணிப்பு, அருஞ்செயல்கள் யாவும் விசுவாசத்தால் நிகழ்ந்தன என அது பறைசாற்றுகின்றது. எனினும் அவர்கள் பெற்றுக்கொள்ள இயலாத நன்மையான  காரியத்தை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

 

உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். அனைத்து நன்மையின் மத்தியிலும் சிலர் “நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பண்ணப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டுண்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்.

 

தாங்கள் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை பகிர்ந்துகொள்ளத்தவறினால் அதனால் வரும் ஆக்கினைக்குப் பயந்து, கீழ்ப்படிந்து; வைராக்கியம் கொண்டு, மேய்ச்சல் நிறைந்த தேசத்திலே தங்களைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்கொள்ளுவதற்காக ஆட்டுத்தோலைப் போர்த்தியபடி, தாங்கள் சந்திக்கவிருந்த ஆபத்துகளிலிருந்து தப்பினார்கள். அவ்விதமாகவே  உறுதியுடன் நின்ற அனேகர் தேடப்பட்டு, வேட்டையாடப்பட்டு, கல்லெறியுண்டு வாளால் அறுப்புண்டு போயினர். ஏசாயா எனும் தீர்க்கதரிசியின் முடிவும் இவ்விதமாக இருந்தது என்றே நாம் கண்டுகொள்ளுகிறோம்.

 

எனினும் தேவ தாசர்கள் எனக் குறிப்படப்படும் விசுவாசிகள் கூட்டத்தில் இராகாப் எனும் பெண்ணும் சேர்ந்திருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்காமலில்லை. இவை எவைகளைச் சுட்டி நிற்கிறது? சேதமாகாமல் இருப்பதோ சேதமாவதோ அல்ல விசுவாசத்தின் அளவுகோல். எச்சூழலிலும் கடவுளின் சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் துணிச்சலையே நாம் கண்டுகொள்ளுகிறோம். ஆம் இவர்கள் அனைவருக்கும் முன்னால் ஒருவர் மேலாக உயர்ந்து நிற்கிறார். அன்பின் அடையாளமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து எனும் இயேசு  “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு. அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (12.2) என நாம் வாசிக்கும்பொழுது நமது உள்ளங்கள் கொளுந்துவிட்டு எரியவில்லையா? ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (12:1) என முத்தாய்ப்பு வைக்கிறார்.

 

இந்த பொறுமையான ஓட்டம் எத்தகையது எனும் நாம் கூர்ந்து அவதானித்தால் இயேசுவின் கூற்றில் உள்ள உண்மைகளை நாம் கண்டுகொள்ளுவது எளிதாகும். அது நமது வாழ்வில் நாம் கண்ட பாரதியின் கவிதையோடும் உறவு கொள்ளுவதைக் காணமுடியும்.

அக்கினி குஞ்சொன்றைக் கண்டேன்

அதில் ஆங்கோற் காட்டிடைப் பொந்தொன்றில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு.

“பூமியிலே அக்கினியைப் போடவந்தேன், அது இப்போதே பற்றியெறிய வேண்டும் என்று விரும்புகிறேன்”(லூக்கா 12:49) என இயேசு தாம் பூமியிலே வந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் இது போல் பலமுறைக் கூறியிருந்தும் பல விதங்களில் தன் வருகையின் இரகசியத்தைக் குறிப்பிட்டிருந்தும் அவரின் வருகையை, அதன் உட்கருத்தை எவரும் அறிந்திலர். ஆகவே தான் மீண்டும் மீண்டும் அவர் தனது வருகையின் நோக்கத்தை, புரிந்துகொள்ளாத் தன்மையை அடிக்கோடிடுகிறார்.

 

அப்படி புரிவதற்கு என்ன கடினம் அவர் வார்த்தைகளில் ஒளிந்திருந்தன? ஏன் அவர் உவமைகள் மூலமாகதானே பேசினார். எளிய மக்களோடெல்லாம் அவர் பேசினாரே. ஒரு கிணற்றடியில் நின்ற பெண்மணி கூட “மேசியாவைக் கண்டேன்” என சாட்சி கூற முடிந்ததே? மறைநூல் அறிஞர்களோ, பரிசேயரோ, பிலாத்துவோ, ஏரோதோ ஏன் அவரைக் கண்டுகொள்ள இயலவில்லை?

 

இயேசு கூறுவது நிறுவப்பட்ட நம்பிக்கைக்கு  எதிரான ஒரு போங்கே என நாம் காணும்போது நம் இதழ்களில் ஒரு மெல்லிய புன்முறுவல் எழலாம். “நீதிமான்களையல்ல பாவிகளையே மனம்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்” என கூறுவது இயேசு தனது பணியை பாவிகளுக்கானது என சொல்வதுபோல் தோன்றினாலும் நல்லோர் வேடமிட்டிருப்போரையும் அது சுட்டி நிற்பதால் அவ்வார்த்தையின் தீண்டலினாலே சீண்டப்பட்ட “மெத்தப் படித்தவர்கள்” அவருக்கு விரோதமாய் நின்றதைக் காணமுடியும். அவ்விதமாகவே யோவான் 7: 28 ஐ வாசிக்கையில் இயேசுவின் “சிலுவை” மட்டுமல்ல “வாழ்வே சிலுவையாக” இருந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு; “நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என் சுயமாய் வரவில்லை என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்” என்றார்.

 

எப்படியிருந்தாலும் தனது பணியின் ஒட்டுமொத்த அழைப்பையும் அவர் உதாசீனம் செய்யவில்லை என்பதே உண்மை. இவ்வுலகத்தை இரட்சிக்கவே அவர் வந்தார்  என்பதை அவர் மிக தெளிவாகவே உணர்ந்திருந்தார். அந்த அன்பின் சாட்சியாகவே அவர் ” ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்காமல் இரட்சிக்க வந்தேன்” என உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மைப்பார்த்துக் கூறுகிறார்.

 

தாகம் நிறைந்த காகம், தண்ணீர் குறைந்த ஜாடியைக் கண்டபோது ஏற்பட்ட உந்துதலால் கற்களை நிறைத்து தண்ணீர் பருகிய கதையைப் போன்றே நரியும் உந்துதலோடு செயலாற்றியிருந்தால் ஒருவேளை அதன் பசி ஆறியிருக்குமோ?

 

நாம் எவ்விதத்தில் இந்த இரட்சிப்பை புரிந்துகொள்ளுகிறோம்?

அருட்திரு. காட்சன் சாமுவேல்

(18.08.2013 ஞாயிறன்று வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம். இடம்: மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்)

கற்பனை குற்றச்சாட்டுகள்

பிப்ரவரி 13, 2021

கற்பனை குற்றச்சாட்டுகள்

பனை சார்ந்த எதிர்மறை பதிவுகள் வலம் வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. எதிர்மறை என இவற்றை எப்படி இனம் கண்டு கொள்ள இயலும் என்பதற்கு சில அடிப்படை காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பனை சார்ந்த சமீபத்திய எதிர்மறை பதிவுகளில் பனை “முச்சனிகளில்” ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டது. “சனி பகவான்” என்ற கருதுகோள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதோ அங்கிருந்தே விடம் கக்கும் நாவுகளும் புறப்படுகிறது என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். எந்த “சனி” குறித்த  கவலையும் அற்ற சூழியலாளர்கள், கனி தரும் பனை பேணும் பணியினை தொடர்ந்து செய்வார்கள்.

முன்று முக்கிய கருத்துக்கள் இப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வருவதை நாம் கண்டுகொள்ளலாம்.

  1. பனை சாதியோடு தொடர்புடையது
  2. பனை வந்தேரிகளுடன் தொடர்புடையது
  3. பனை “தமிழருக்கு” எதிரி

சாதி எனும் அமைப்பினை கேள்விக்குட்படுத்தாமல், சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தி, மொழி அரணுக்குள் பதுங்கும் நத்தையை ஒத்த அணுகுமுறை இது. ஆகவே  முற்றாக  புறம்தள்ள வேண்டியது.

தன்னையே முழுமையாக வாரி வழங்கும் பனை மீது ஏன் இந்த வெறுப்பு? பனை ஒரு பொருளியல் சார்ந்த மரம் என இன்று கட்டமைக்கப்படுவது தான் காரணம். எதிர்தரப்பு அது குறித்து எந்த கவலையும் அடைய வேண்டியதில்லை. இன்றைய சந்தை பொருளாதாரத்தை முன்னிட்டு நாம் பார்க்கையில், பனை வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரன் ஆக முடியாது. பனை தொழில் செய்பவர்கள் ஒரு விழுமியத்தை தான் முன் வைக்க இயலும். தற்சார்பு, கிராமிய பொருளியல் போன்றவைகளையே நாம் இன்று பேசமுடியும். சர்வதேச பொருளியலைக் குறித்து பேச இயலாது.  ஆனால் சர்வதேச சந்தை பொருளியலைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு “அறம் சார்ந்த பொருளியலாக பனைப் பொருளியலைக் காணலாம்.

தமிழகத்தில் பனை சார்ந்த பேச்சினை முன்னெடுத்த கட்சி யார் என அனைவரும் அறிவார்கள். நாம் தமிழர் கட்சி அதனை பேசுவதற்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். புலிகள் பனை சார்ந்த ஒரு பொருளியலைக் கட்டமைத்திருந்தார்களா என்றால் இல்லை என்பதே பதில். அவர்கள் கொண்டிருந்தது பனை சார்ந்த வாழ்வியல் மட்டுமே. இறாலை விற்கும் சந்தை அவர்களுக்கு உலகமெங்கும் உண்டு. பனையை விற்கும் சந்தை அவர்களுக்குள் மட்டுமே இருந்தது. விடுதலைப் புலிகளின் பனை சார்ந்த பொருட்கள் ஏதாகிலும் தமிழக சந்தைக்கு வந்து யாரேனும் வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்களா? இல்லை என்பதுவே பதில். சர்வதேச சந்தையில் விற்கும் கருப்பட்டி மீண்டும் வால்மாட்டிற்கும், பே டி ஏம்மிற்கும் கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை எப்படி மறந்து போனோம்? பனை ஒரு சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட பொருளல்ல. ஆனால் பனை சர்வதேச சந்தையில் தனது இடத்தை நிறூபிக்கும் வல்லமை கொண்ட மரம். ஆகவே தான் பனையின் அடையாளம் பல்வேறு தரப்பினரால் இன்று உலக அளவில் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது.

பனையின் எழுச்சியைக் கண்டு பெருமுவதற்கு மற்றொரு காரணம். பனை இன்று ஒரு அரசியல் தரப்பாக எழுந்து வருவது தான். பனை சார்ந்த பொருளியலை குறித்து பேசினாலும், பனை கூறும் சூழியல் முக்கியத்துவம் மறைக்கவியலா. அது உள்ளங்கை நெல்லிக்கனி போல காணப்படும் உண்மை.

தோழர். திருமாவளவனின் பங்களிப்பு பனை சார்ந்த ஒரு முக்கிய திருப்பத்தை தமிழக அரசியலில் நிகழ்த்தியிருக்கிறது. திருமாவளவன் அவர்கள் தனது சூழியல் பங்களிப்பாக பனை மரத்தினை முன்னெடுப்பது அவரது அரசியல் வாழ்வில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. தமிழகத்தில் பனை குறித்து பெருமளவில் முழக்கமிட்டிருந்த சீமான் அவர்கள், திருமாஅவர்களின் முன்னெடுப்பிற்கு பின்பே களத்தில் இறங்கி பனை நட துவங்கினார்.  இன்று தமிழக் அரசியலில் பனை ஒரு முக்கிய அரசியல் தரப்பாக எழுத்துநிற்கின்றது. பனை தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யாத ஸ்டாலின் கூட வேறு வழியின்றி பதனீரை பட்டையில் குடிக்கின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டார்.

பனை மரம் குறித்து ஏன் இத்த திடீர் எழுச்சி? பனை சார்ந்த வணிகம் செய்யும் மக்களுக்கு இதன் மேன் ஒரு கண்ணா? குறிப்பாக நாடார் இன மக்கள் இதன் பின்னணியமாக இருந்து தூண்டுகிறார்களா? அப்படி தேவையில்லாத ஒரு மரத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார்களா? எனபதுவே கேள்வியாக இருக்கிறது.

இன்றும் பெருமளவில் நாடார் மக்கள் பனை சார்ந்த தொழிலில் இருந்தாலும், அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே உழல்கின்றனர். அரசு பனைத் தொழிலாளர்களை வஞ்சித்தது போல் வேறு எவரையும் கடந்த 30 ஆண்டுகளில் வஞ்சித்திருக்குமா தெரியாது. அந்த அளவு வறுமையின் கோரப்பிடியில் நின்றே பனைத்தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் 95% பனைகள் பயன்படுத்தப்படவே இல்லை.

பனை மரங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவைகளை நம்மால் எப்படியும் பொருளியல் ரீதியாக பாதுகாக்க இயலாது. ஆனால் சூழியல் சார்ந்து பனை மரங்களின் பங்களிப்பு என்பது பனையேறி இருந்தால் ஒருவகையிலும், பனையேறி இல்லாவிட்டால் வேறு வகைகளிலும் இருக்கிறதைக் காணமுடிகிறது. ஒருவகையில் மனிதன் சூழியலின் அங்கமாக எவ்விதம் இருக்கவேண்டும் என்பதைக் கூட நாம் பனையேறிகளிடம் இருந்து அறியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பனை மரங்களின் எண்ணிக்கை 1965 (பனை வளம்) முதல் இன்று வரை 5 கோடியாக இருப்பது ஒரு மாபெரும் அதிசயம் என்றே கூறவேண்டும். இந்த மண்ணில் மனிதர்கள் இருக்கிறார்களோ இல்லையோ பனை மரங்கள் இருக்கும். பனை இருந்தால் தான் மனித இனம் தழைக்க முடியும். பனைக்கு மாற்றாக மற்றோரு மரத்தை எவரும் சுட்டிக்காட்ட இயலாது. கேரளாவில் காணப்படும் கற்பகத்தருவான தென்னை உட்பட.

சூழியலில் ஒரு மரத்தையோ ஒரு மிருகத்தையோ ஒரு பறவையையோ ஒரு இனக்குழுவுடன் இணைப்பது என்பது பழங்குடியினர் வாழ்வில் இருந்த ஒரு கலாச்சார அமைப்பு. இன்று அவைகள் மீண்டும் வேறு வகையில் நமது அடையாளமாக மறுசீரடைகின்றனவே ஒழிய, அவைகளை சாதியோடு சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாது. அப்படி செய்வது சிக்கலான ஒரு வரலாற்று திருப்பத்தை நமக்கு அளிக்குமே அன்றி முழுமையான வரலாற்று நோக்கை அளிக்காது.

ஏன் இப்போது பனை சார்ந்து ஒரு பரபரப்பு கூட்டப்படுகின்றது என்பவர்கள் பனை சார்ந்து முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளை கூர்ந்து ஆராயாதவர்கள். பனை சார்ந்த முயற்சிகள் 1950 – 1960களில் நடைபெற்றதில் ஒரு துளி கூட இன்று நடைபெறவில்லை. கருப்பட்டி இன்று மருத்துவபொருளாக எஞ்சியிருப்பதனால் அதன் தேவை தக்கவைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, அது மிகப்பெரிய எண்ணை வணிகம் போன்றதல்ல. ஆக ஒரு வணிகத்திற்காக பிறரை ஏமாற்றும் பணியினை நாடார்கள் செய்கிறார்கள் என்பது போன்ற பிரச்சாரம் தேவையற்றது. வணிகம் செய்பவர்கள் தங்கள் வணிகத்திற்கு பனை தடையாக இருக்கும் என்றே வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். பனை மரம் ஏற ஆட்கள் இல்லை என்பதுவே இன்றைய சிக்கலாக இருக்கிறது.

சூழியல் சார்ந்த ஒரு மரமாக பனையினை முன்னெடுப்பதற்கு பனை மரத்தடியில்  தண்ணீர் நிற்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பனை மரத்தின் தகவமைப்பு பல்வேறு சூழலமைப்புகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் வலிமை பெற்றது. மீனவர்கள் வாழும் நெய்தல் நிலப்  பகுதிகளிலும், முல்லை நில பகுதியிலும், மருத நிலப் பகுதிகளிலும் பனை இருந்திருப்பதாக இலக்கியங்களின் வாயிலாகவும் நமது நிலவியல் அமைப்பினைக் கொண்டும் நம்மால் உறுதியாக கூறமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் பனை நின்றிருக்கிறதா? அது ஆய்வுக்குறியது, ஆனால் பனை சார்ந்த “முறம்” குறிஞ்சி நிலப் பகுதி வாழ் புலியினை விரட்ட பயன்பட்டிருக்கிறது. ஐவகை நிலங்கள் நமக்கு உண்டென்றால் ஐவகை நிலத்திலும் பனை ஏதோ ஒருவகையில் தன்னை இணைத்துகொண்டிருக்கிறது என்பதுவே நான் நேரில் கண்ட உண்மை.

தமிழ் மொழியே பனையினை மையமாக கொண்டு வளர்ந்த மொழி தான். பல்வேறு வார்த்தைகள் பனையிலிருந்து கிளைப்பதை நம்மால் உணரமுடியும். நமது நிலம், நமது வடிவமைப்புகள், நமது வார்த்தைகள் நமது கலாச்சாரம் அனைத்தும் பனை சார்ந்த ஒரு வாழ்வின் எச்சம் தான். அவைகள் குறித்த ஆய்வுகளோ சீரான பதிவுகளோ நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் பனையால் நமக்கு அவைகளைத் திருப்பித்தர இயலும்.

மனித குல வரலாற்றில் இன்றியமையாத ஒரு தாவரமாக நம் பனை மரத்தினைக் கொள்ள இயலும். அதனை இழித்து பேசுவோர் ஏறிய ஏணியினை எட்டி உதைக்கும் மனோபாவம் கொண்டவர்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விதம் மன பிறள்வுகள் கொண்டோரை கருணையுடன் நோக்கும் தன்மை நம்மில் பெருகவேண்டும். பனை சார்ந்த ஒரு மாற்று தரப்பாக அவர்கள் இருந்துவிட்டு போகட்டும் என்பது தான் எனது விருப்பம். இந்த மாற்று தரப்பினைத் தாண்டி  முன்னேறும் பனை படை வீரர்களே நமக்குத் தேவை. பனை அதனை தெரிவு செய்யும்.

இறுதியாக பனை குறித்து  பேசுகையில் பனை மரத்தினை எதோ மந்திர வித்தைக் காட்டும் மரம் என முன்னிறுத்தும் பாங்கினையும் நாம் ஒழிக்க வேண்டும். பனை மரம் நமது எதிர்காலத்தில் எவ்விதம் பயன்மிக்கதாக இருக்கும் என்பதை நமது மரபிலிருந்து கண்டடைய வேண்டுமே ஒழிய வீணான கற்பனை தகவல்களை உலவவிடுவதை தவிர்க்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக பனை சார்ந்த பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன். பனை சார்ந்த முன்னெடுப்புகள் எப்போதும் இல்லாத அளவிற்கு  முன்வரிசை பிடிப்பதை நானே பிரமிப்புடன் பார்க்கிறேன். இதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தில் நாம் சந்திக்கும் வறட்சி தான். மரங்களை நட்டு வளர்த்திய பல்வேறு அமைப்புகள், கோடைக் காலத்தில் அவைகளை பராமரிப்பதில் உள்ள சிரமத்தை களத்தில் உணர்ந்தவர்கள். பனை வளர்ப்பது எளிது என்பது மட்டுமல்ல நீர் மேலாண்மைக்கும் உகந்தது என்பதை கண்டுணர்ந்தவர்கள்.  உலகில் வருடம் முழுவதும் உணவுதரும் வேறு ஒரு மரம் உண்டா? உணவோடு கூட புழங்கு பொருட்களை வழங்கும் வேறு மரங்கள் உண்டா? தமிழகம் என்று மொழி வாரியாக தன்னை குறுக்கிக்கொள்ளாதபடி மூன்று கண்டங்களில் பரவி விரிந்து சாதி மதம் இனம் கடந்து பயனளிக்கும் மரம் உண்டா? இல்லை என்பது தான் பதில்.

ஆனால் ஒன்று உண்டு, நவீன வாழ்வில் பனை அளவு புறக்கணிக்கப்பட்ட தாவரம் மற்றொன்றில்லை. பனை சார்ந்த ஆய்வுகள் மிக மந்தமாக நடைபெற்று அவைகளும் இன்று இல்லாமற் போய்விட்டன. உலகளாவிய ஒருங்கிணைந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் வலிமையான அமைப்புகளும் நம்மிடம் இல்லை. இலங்கையைச் சார்ந்த கோவூர் பனை குறித்து சொல்லும்போது, “பனை மிகவும் பயனுள்ள மரம் தான் ஆனால், வணிக ரீதியாக  பார்க்கையில் பனையிலிருந்து கிடைக்கும் அத்தனைப் பொருட்களுக்கும் மலிவான ஒரு மாற்று சந்தையில் இருக்கிறது”. அவ்வகையில் பனை மரமானது தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சக்திகளாலும் புறம்தள்ளப்பட்டும் அவைகளைப் பொறுட்படுத்தாமல் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றே நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.

இன்று பனை மரத்தினை நாயக வழிபாட்டு மனநிலையுடன் அணுகும் ஒரு புது தலைமுறை எழுந்துள்ளது. ஆனால் நமது தேவை ஆய்வுள்ளம் கொண்ட இளம் தலைமுறை.  அத்தனை துறைகளிலும் பனை சார்ந்து ஆய்வு செய்ய வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. இன்னும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து அவரும் அறியவில்லை என்பது தான் வேதனை. இதற்கிடையில் நிறுவப்படாத உண்மைகளுக்கு எதிராக பதில் கூற  களமிறங்கியிருக்கும் அறிவாளிகளுக்கு என்ன பதில் சொல்லுவது?

தெருச்சண்டை மனநிலையுடன் இருப்பவர்களைக் காண கூட்டம் கூடுவது இயல்பு. அக்கூட்டம் சண்டை நடைபெறவில்லையென்றால் கலைந்துவிடும். பனை சார்ந்து நிகழும் இந்த உலகளாவிய எழுச்சி காலத்தின் கட்டாயம். பனை தனக்கானவர்களை தெரிந்துகொள்ளும். தன்னை வெட்ட வருபவர்களையும் அணைக்கும் அன்னை அது.

உலகெங்கிலும் விவசாயம் பழகின நிலங்கள் கூட நாளடைவில் மிகப்பெரும் சூழியல் சீர்கேடுகளை அடைந்துள்ள நிலையில் நிலத்தின் தன்மையினை சிறிதும் மாற்றாமல் இருக்கும் நிலப்பகுதி பனை தொழில் இயங்கும் பகுதிதான். பனையேறி எனும் சூழியலாளனை விட வேறு சிறந்த சூழியலாளர் இருக்கின்றனரா என்ன?

அருட்பணி. காட்சன் சாமுவேல்
ராயல் பாம்ஸ், ஆரே மில்க் காலனி, மும்பை
9080250653, [email protected]

 

பின்னல்கள் – 11

பிப்ரவரி 13, 2021

பின்னல்கள் – 11

சம்பு 

நான் 2003 ஆம் ஆண்டு இறையியல் கல்வி நிறைவுசெய்தபோது திருச்சபையில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்தேன். அப்போது எனது சகோதரி மாலத்தீவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் ஏதேனும் ஒரு  வேலையில் இணைந்துகொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றேன். மிக அழகிய சுத்தமான இடம் தான் மாலத்தீவு. அங்கே,  நான் சுவைக்க விரும்பும் மீன்கள் அனைத்தும் எனது கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் நீலம், பசுமை குறைவு, நிலமின்மை, பனையின்மை என எனக்கு பல ஒவ்வாமைகள். அங்கிருந்து திரும்பவேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் இருந்துகொண்டிருந்தது. அந்த வெறுப்பு என் பார்வையில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே தென்னை ஓலைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி அதனைக் கோர்த்து ஒற்றை தடுக்காக மாற்றி கடைகளுக்கு சாய்வாகவும், தட்டியாகவும் அமைத்திருந்தார்கள். “க்கும்… பின்னத்தெரியாத்த பயலுவ…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களுக்கும் பின்னல்கள் உண்டு என்பதனை அந்த இரண்டு மாத காலத்திற்குள்ளேயே அறிந்துகொண்டேன்.

Image
மாலத்தீவிலுள்ள தென்னை ஓலை வீடு

2017 முதல் 2019 வரை நான் எனது இறைப்பணியில் இருந்து விடுபட்டு பனைபணியே இறைப்பணி என்ற நோக்கோடு தமிழகம் முழுவதும் வெறிகொண்டு பயணித்தேன். தமிழகத்தில் வழக்கொழிந்துபோன பல்வேறு பொருட்களை மீட்டெடுக்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கனன்றுகொண்டிருந்ததால், பார்க்கும் பனை சார்ந்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் கண் முன்னால் மறைந்துபோன பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டுப்பெற  முயற்சிப்பேன். அப்படிக் கிடைக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அலைந்து திரிந்து காணாமற்போன பொருளை எப்படியும் மீட்டுவிடுவேன். ஒரு பொருள் குறித்த நினைவு மட்டுமேக்கூட அந்த மக்களுக்கு இருக்குமென்றால் அதனை மீட்பதில் பெரிய சிரமமில்லை என்பதே நான் அறிந்த உண்மை.

பின்னல்கள் குறித்த தேடுதலில் பின்னலே இன்றி செய்யப்படும் பொருட்கள் பலவற்றை இதுகாறும் பார்த்திருக்கிறோம். பட்டை, பீப்பீ, தோண்டி, விசிறி என அவைகள் யாவும் பனை ஓலையின் வடிவத்தை சாதகமாக மாற்றி ஓலையின் தன்மை பெரிதளவில் மாற்றத்திற்குள்ளாகாமல் செய்யப்படும் பொருட்களாகும்.

பனை ஓலையில் பின்னலே இன்றி இன்று நம்மை வந்து அடைந்திருக்கும் மற்றொரு பொருள் தான் சம்பு என்ற மழை அணி. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் என்ற ஊரில் வாழும் திரு. பாண்டியன் எனும் நண்பர்  இதுகுறித்து எனக்கு தகவல்களைக் கொடுத்து சம்புவை மீட்டுருவாக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திகொண்டார். திரு கல்யாண சுந்தரம் (63) என்ற பெரியவர், சம்பு செய்வதில் வல்லவர். பண்டியனின் மாமா தான் இவர்.  நரசிங்கனூரைச் சார்ந்த பல்வேறு மக்களுக்கு சம்பு செய்யும் அறிவு இருந்தாலும், அனைவரும் அதனை கைவிட்டுவிட்டனர். இந்த அறிவினை தன் நெஞ்சில் ஒரு கனலாக எடுத்துச் சுமந்தவர் கலியாண சுந்தரம் மட்டுமே.

Image
திரு கலியாண சுந்தரம் சம்பு தயாரிக்கும்போது

பின்னல்கள் சார்ந்து சம்புவில் ஏதும் காணப்படவில்லை என்றாலும் பின்னல்களுக்கான ஒரு அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. ஓலைகளின் பயன்பாட்டு வரலாற்றில் மிக தொன்மையானதும், மழைக் காலங்களுக்கு உகந்த  ஒரு பயனுள்ள பொருளான சம்புவினை சற்றே நெருங்கி உணர்வது நல்லது.

Image
குரும்பர் கொங்காணி

உலகம் முழுக்க மழையணிகள் கற்காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மழையணிகள் செய்வது வழக்கம். வைக்கோல், மூங்கில், மரப்பட்டைகள், தோல் என அவைகள் விரிவடைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சூழலில் கிடைக்கும் பொருட்களின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்திருக்கிறார்கள். 

Image
நேபாள மழையணி

தென்னை ஓலைகளுக்கும் பனை ஓலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தவுடனேயே இவைகளில் தெரியும் வித்தியாசமான வடிவ அமைப்புகள் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டியவைகள். தென்னை மட்டையில்  ஓலைகள் தனித்தனியாக நடுநரம்பிற்கு இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். (Pinnately Compound) பனை ஓலையோ நடுநரம்பின் இருபுறமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விசிறியைபோல இருக்கும். (Palmately Compound). உலகம் முழுவதும் பின்னல்களுக்கான ஆரம்ப பணி என்பது  இலக்குகளை தனித்தனியாக  பிரித்தெடுப்பது தான். ஓலைகளைப் பிரித்து எடுப்பதை இணிந்து எடுப்பது என்றே குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள். தென்னை மட்டையில்  பிரிந்திருக்கும் ஓலைகளை தனித்தனியாக இணிந்து எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை ஆனால் ஒன்றாக இணைந்திருக்கும்  பனை ஓலைகளைப் பிரிப்பது குறித்த புரிதல் ஆதி குடிகளுக்கு சற்றே வேறுவகையான ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

Image
கர்னாடகாவிலுள்ள கூர்க் பகுதியில் மழையணி

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. அவ்விதமாகவே அவைகள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்றைய பொருட்களாக நம்மை வந்து எட்டியிருக்கின்றன. இவைகளின் தொன்மம் சார்ந்த கதைகள் கூட இப்படிநிலைகளை விளக்கும்படியாக சுவைபட அமைந்திருக்கின்றன.

ஆதியில் பனை ஓலைகள் இப்போது காணப்படுவது போன்று இணைந்து இருந்ததில்லை. காளி தனது பிள்ளைகளுக்கு பனையேறக் கற்றுக்கொடுக்கிறாள். அவர்கள் பனை ஏறும்போது முதல் பதனீர் தனக்கு கொண்டுவரும்படி கூறி ஒரு ஓலையை வெட்டி போடச் சொல்கிறாள். பதனீர் பருக, பிரிந்து இருந்த ஓலைகளை ஒன்றிணைக்கும் வேளையில், அங்கே ஒருவர் வந்து உனது பிள்ளைகள் உனக்கு கொடுக்குமுன்பே பதனீர் அருந்துகிறார்கள் என கூற, கீழிருந்து காளி பார்க்கையில் சொட்டுகின்ற பதனீர் தெறித்து அங்கே இருந்த காளியின் பிள்ளையின் வாயில் பட, காளி கோபத்துடன் பனை ஓலைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதாக ஒரு கதைப் பாடல் உண்டு. ஆகவே பிரிந்திருக்கும் ஓலைகளை இணைக்கும் வழிமுறைகளை காளியின் பிள்ளைகளும் முன்னெடுத்திருப்பார்கள் என நாம் உணரலாம்.

Image
மழையணியின் பயன்பாடு

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும்  தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும்போது அது பல்வேறு முயற்சிகள் மற்றும் தோல்விகள் வழியாக நிகர்செய்யப்படுகிறது. பனை ஓலைகளை பின்னும் தொழில் நுட்பத்தினை மானிடர் அறிவதற்கு முன்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று சீராக அடுக்கப்பட்டு கோர்க்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மணிகளை கோர்க்கும் முறைமை கி மு 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது  போன்ற தகவல்கள் அகழ்வாய்வுகளில் வெளிப்படுகின்றன  . அப்படியான ஒரு அலங்காரத்திற்கு முன்பே பயன்பாட்டு முக்கியத்துவம் கிளைத்திருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். 

பனை ஓலைகளின் அமைப்பினைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். பனை ஓலைகள் என்பவை இலக்குகளின் தொகை. அவ்விதம் இணைத்திருக்கும் ஓலைகளை தனிதனி இணுக்குகளாக பிரித்து எடுத்துப் பார்த்தால் அனைத்து இலக்குகளுக்கும் நடுவில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கும். அதனை ஈர்க்கில் என்பார்கள். குமரி மாவட்ட வழக்கச் சொல்லின்படி அதனை ஈக்கல் அல்லது ஈக்கு என்று தான் அழைப்பார்கள். ஈர்க்கிலோடு ஒரு அரை செ மீ அகல ஓலையை சேர்த்து கிழித்தால் அதனை மூரி என்று விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிடுகிறார்கள்.

Image
மழையணி அணிந்துகொண்டு பணி செய்வது

ஈக்கல் ஓலைகளை விட பல மடங்கு உறுதியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நீள ஊசியினை நினைவுறுத்தும் அமைப்பு கொண்டது. நீரில் நனைத்து பயன்படுத்தினால் சற்றே கயிறு போன்ற நெகிழ்வுதன்மையுடன் உறுதியும் கூடியிருப்பது. ஈக்கலின் பயன்பாடு குறித்து தேடத் துவங்கினால் அது நம்மை தொல்பழங்காலத்தில் கொண்டு சென்றுவிடும்.

பனை சார்ந்த பொருட்கள் எப்படி ஒரு சூழலில் உருபெற்று வந்ததோ அதுபோலவே பல்வேறு சூழல்களினால் ஒருசில பனை சார்ந்த பொருட்கள் மறைந்தும் போயின.  அவைகளை நாம் வழக்கொழிந்து போன பொருட்கள் என்கிறோம்.  ஒரு பொருள் வழக்கொழிவதற்கு பல்வேறு புறக்காரணங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானது நவீன வாழ்க்கை முறை. 

Image
மழையணியுடன் இடையர் சிலை

அதுபோல பனை சார்ந்து பொருட்கள் செய்கிறவர்கள் குறித்து எந்த குறிப்புகளும் புத்தகங்களில் இருக்காது. எங்கோ ஏதாவது ஒரு பத்திரிகையில் பனை சார்ந்த பொருட்களைக் குறித்து வருகின்ற செய்திகளை தொகுப்பதும் எளிதல்ல. அப்படியே சேகரித்தாலும் அவைகள்  தமிழகத்தில் இருந்த பொருட்களில் பத்திலொன்றைக்கூட அவைகள் குறிப்பிட்டிருக்காது. பெரும்பாலும் ஊர்களைக் குறிப்பதுடன் அவைகளும் தங்கள் பங்களிப்பை நிறுத்திவிடும்.

ஓலைகளை அப்படியே வைத்து தயாரிக்கும் பட்டை மற்றும் தோண்டி இவைகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். சம்பு செய்யும் முறை இவைகளை விட வித்தியாசமானது. ஓலைகளை தனித்தனி இலக்குகளாக பிய்த்து அதன் பின் அவைகளை இணைத்து செய்யும் தொழில் நுட்பம் சார்ந்தது. மிக அடிப்படையான ஒரு வடிவமைப்பு. ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருங்கி இருக்கும்படி அடுக்கி, இணைக்கும்படியாக பனை ஈர்க்கில்களையே பயன்படுத்துவார்கள். இவைகள் அடிப்படையில் ஒரு தடுக்காக பயன்படும். இதனோடு ஈச்ச மட்டைகளை இணைத்து பலப்படுத்தி, அவைகளை குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

Image
மழையணியுடன் இடையர் சிலை

சம்பு ஒரு சிறந்த மழையணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். தொல்பழங்காலத்தின் மழை கோட் என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால் வரை உடலை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டு தன்மையிலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.  உலகின் பல்வேறு நாடுகளில் மழையணியாக சம்புவை ஒத்த வடிவங்களில் பலர் மழையணியினைச் செய்வது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாக பயன்பட்ட ஒரு வடிவம் இது என்று பனை மரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் குறிப்பிடுவார்கள். இன்று சம்புவினை தொழில் முறையாக செய்தால் ரூ150திலிருந்து ரூ200 வரைக்கும் விற்க இயலும். கிராம மக்களுக்கு குடையினை விட சிறந்த வடிவமைப்பு இதுதான்.

நவீன வாழ்வு தான் இவ்வித அறிதல்களையும் வாழ்க்கைமுறைகளையும் சிதறடித்தது. ஒரு சம்பு செய்ய 60 ரூபாய் ஆகும் சூழலில் வெறும் 50 ரூபாய்க்கு குடை கிடைத்தது ஆகவே சம்புவினை விட நவீனமாக காணப்பட்ட குடைக்கே  மதிப்பு கிராம மக்களிடம் பெருகியது ஆகவே உடல் உழைப்பால் செய்யும் சம்புவினை அப்படியே மறந்துவிட்டனர்.

முதலில் பெரிய பனை ஓலைகளாக தெரிவு செய்து பனை மரத்திலிருந்து மட்டையைத் தவிர்த்து ஓலையாகவே கழித்து எடுப்பார்கள்.  காலையிலேயே வெட்டிய ஓலையினை மாலை வரை வாட விடுவார்கள். மாலை வேளையானதும் ஓலையினைச் சுருக்கு பிடித்து வைத்துவிடுவார்கள்.  பின்னர் தடுக்கு செய்ய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு இலக்காக கிழித்து நீர் தெளித்து கட்டி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை 3 மணிக்கு பெண்கள் எந்து தடுக்கு தைப்பார்கள். ஒரு சம்பு செய்ய 7 தடுக்குகள் ஆகும். அப்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 தடுக்குகள் வரை பெண்கள் செய்வார்கள். தடுக்குகளை மூரி வைத்து தைப்பார்கள். ஈர்க்கிலோடு இணைந்திருக்கும் பகுதியினை ஆண் மூரி என்றும் ஈர்க்கில் இல்லாத எதிர்பகுதியை பெண் மூரி எனவும் குறிப்பிடுவார்கள்.

பனை ஓலை பொருட்களைச் செய்யும்போது பிற தாவரங்களின் பொருட்கள் உள்நுழைவது ஒரு முக்கியமான இணைவாக இருக்கிறது. அது எவ்விதமான தாவரங்கள் அப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றன என்பதன் அடையாளம் ஆகும். சம்பு செய்கையில் ஈச்சங் கசங்கினை பயன்படுத்துவதைப் பார்த்தேன். கசஙு  என்ற வார்த்தை ஓலைகளை நீக்கிய ஈச்ச மட்டையினை குறிப்பிடும் வார்க்ட்தையாக இருக்கிறது.  இவ்விதமாக சேகரிக்கப்பட்ட ஈச்சங் கசங்குகளை இரண்டாக கிழித்து பக்குவமாக காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ளுவார்கள். இவைகளை தேவையான நேரத்தில் எடுத்து நீரில் ஊறபோட்டு மீண்டும் இரண்டாக கிழித்து விடுவார்கள். இவைகளில் நீளமாக வருகிற கசங்கினை  மடிச்சி போடுற கசங்கு என்றும், குட்டையாக வருகிற கசங்கை ஒடிச்சி போடுற கசங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அகணி (பனை மட்டையின் உட்புறமிருக்கும் நார்) நாரை கிழித்து கோணி ஊசியில் நுழையும் அளவிற்கு மெல்லியதாக எடுத்து அதனைத் தைப்பார்கள். அகணியில் பிரித்தெடுக்கும் நாரினை சரடு என்றே குறிப்பிடுகிறார்கள். தடுக்கையும் கசங்கையும் இணைத்து கட்டுவதற்காக அகணி சரடு பயன்படும். கோணி ஊசியில் சரடை கோர்த்து தைப்பார்கள். அந்த தையலுக்கு ஒரு முடிப்பு இருக்கும். ஒரு கசங்கிற்கு நாலு தையல் என்ற வீதம் உறுதியாக சம்புவினை கட்டி முடிப்பார்கள்.

 கொண்டைப்பகுதி செய்கையில் ஒருவரால் கட்ட இயலாது. பொதுவாக ஆணும் பெண்ணும்  இணைந்தே கட்டுவார்கள்.  இவ்விதமாக குடும்பமாக இணைந்து செய்யும் பனை பொருட்கள் தமிழகத்தில் இன்றுவரை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் காணப்பட்ட முறம் கூட இன்று குடும்பமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து செய்யும் ஒரு வடிவம் தான்.

சம்புவினை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவு காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும், பனி, மழை போன்றவைகளிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்திவந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இறைக்கும் மோட்டார் மீது கவிழ்த்து வைக்கவும் கூட இது பயன்பட்டிருக்கிறது. நவீன காலத்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட  அழிவு, நமது வாழ்விலிருந்த்து சில கலைஞர்களை அப்புறப்படுத்தியிருக்கிறது என்பது உறுதி.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சம்புவிற்கு ஒத்த ஒரு பொருள் குமரி மாவட்டத்தில் உண்டு என தனிப்பட்ட முறையில் என்னிடம்  கூறியிருக்கிறார்கள். அதன் பெயர் காமணம். காமணம் குறித்து நான் அனேகரிடம் கேட்டும் என்னால் அது குறித்து மேலதிக தகவல்களை சேகரிக்க இயலவில்லை. இப்படியிருக்கையில் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் “ஆமை” என்று ஒரு கதை எழுதினார்கள். அதில் புலையர் பெண் ஒருத்தி கொரம்பை என்கிற என்கிற பனை ஓலை மழையணிக்குள் ஆமைபோல வாழ்ந்து மறைந்த கதை அவர்கள் வழிமரபினரால் நினைவுகூறப்படும் வகையில் எழுதியிருந்தார். இக்கதையில் காணப்படும் விவரணையின்படி “தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.” மேலும் “நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து… அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க. அப்படி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்”.

இவ்விதமான பொருட்களின் படமோ அல்லது நினைவுகளோ என்னால் இன்றுவரை சேகரிக்க இயலவிலை. எப்படியும் இவைகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்திருக்கும். கடந்த 100 ஆண்டுகளுக்குள்  சமூகத்தட்டில் மிகவும் கீழ்நிலையில் இருந்ததாலோ என்னவோ, வயல் வேலைச் செய்யும் புலையர்கள் வாழ்வில் காணப்பட்ட இந்த பொருளினை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லைப் போலும். பனைக்கென இப்போதும் ஓரியக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், பனையின் நிலையும் இவ்விதம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் பலரைக் கேட்டும் இது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எனக்கு மிகவும் அறிமுகமான பனை ஓலைக் கலைஞரான குமரி மாவட்டத்தின்  மொட்டவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களிடம் விசாரிக்கையில்  அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பெயர் கொங்காணி என்றார். நான் அயர்ந்துவிட்டேன். எத்தனைப் பெயர்கள்தான் இந்த மழையணிக்கு?

சம்பு என்ற தாவரத்திலும் இது போல் மழையணி செய்திருப்பார்களோ? அல்லது கோரை புல்லில் இதற்கு இணையான மழையணி செய்திருப்பதால் கொரம்பை என பெயரிடப்பட்டதா தெரியவில்லை.

இணையத்திலிருந்து ஒருசில படங்கள் கிடைத்தன. சம்புவைப்போன்ற எதோ ஒரு மழையணி அணிந்திருக்கும் படங்களை இடையர் சிலைகள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியானால் வயல் வேலைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, இடையர்களது வாழ்விலும் சம்புவின் இடம் முக்கியத்துவம் பெறலாகின்றது. அதனை நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பனை சார்ந்து கொடாப்பு எனும் பிரம்மாண்ட அமைப்பை ஆட்டு குட்டிகளில் பாதுகாப்பிற்காக செய்கிறவர்கள் இடையர்கள். சமீப காலமாக பனை மரக்கள் குறித்து சங்க இலக்கியம் கூறுவது என்ன என்று தேடுகிற ஒரு கூட்டம் எழும்பியிருக்கிறது. உண்மையிலேயே பனை சார்ந்த பொருட்களின் புழக்கத்தை தேடி கண்டுபிடித்தால் அது சங்க இலக்கிய வாழ்வில் நமது பனை சார்ந்த அறிதல்கள் குறித்து மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மழையணி என்ற இந்த பொருள் எனது வாழ்வில் நான் மீட்டெடுக்கவேண்டிய தமிழர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாகவே நான் உணருகிறேன் ஆகவே இதன் தேடுதலை எனது கைக்கு எட்டிய சம்பு மூலமாக துவங்குகிறேன்.

பனைமுறைக் காலம் 3

பிப்ரவரி 13, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

Image
போதகர் ராஜாமணி மற்றும் மித்திரனுடன்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

Image
வசாய் கோட்டை – நன்றி இணையதளம்

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

Image
நன்றி இணையதளம்

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

Image
Kerala – The land of Palms என்ற நூலிலிருந்து

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றல் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Image
கள்ளுகடை

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

Image
திருவருட்சாதனங்கள் – அப்பமும் திராட்சை ரசமும் (நன்றி: இணையதளம்)

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. செல்லும் வழி எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

Image
இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 7

பிப்ரவரி 12, 2021

புனித கால்கள்

மறுநாள் (09.10.2020) ஜெனோபின் ஷானுடைய பிறந்த நாள். கடந்த வருடம் குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நான் குமரி மாவட்டம் வரும் வாய்ப்பு கிட்டியது.  என்னோடு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்ற ஆந்திராவைச் சேர்ந்த அருட்திரு ஜேம்ஸ் விக்டர் எனது பணியால் ஈர்க்கப்பட்டு என்னை தென்னிந்திய திருச்சபையின் போதகர் கூடுகைக்காக அழைத்திருந்தார். தென்னிந்திய திருச்சபையினைச் சார்ந்த அனைத்து பேராயங்களிலுமிருந்து சுமார் 600 போதகர்கள் கன்னையாகுமரியில் குழுமியிருந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நான் அழைக்கப்பட்டிருந்தது பெரும் பேறு. அவர்களோடு திருச்சபையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பேராயர்கள் என பெரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. அடித்தள பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகர் தனது அனுபவங்களைப் பகிர வேண்டிய நிலையில் பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விளக்க எனக்கு ஒரு அமர்வு கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்பதை உறுதி செய்தபின்பு, வந்திருக்கும் போதகர்கள் அனைவருக்கும் பனை விதைகளை அளிக்கலாம் என முடிவு செய்தேன். மும்பையிலிருந்து விமானத்தில் பனை விதைகளை எடுத்துவர இயலாது, ஆகவே, பால்மா மக்கள் இயக்கத்திடம் விதைகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பனை விதைகளைத் தருகிறோம் என்றார்கள். ஆனால் எனக்கு மற்றொரு யோசனை தொன்றியது.

Image
பனை மரத்தைப் பற்றியேறும் பனையேறி

தூத்துக்குடி பேராயத்தைச் போதகர் ஜான் சாமுவேல் எனக்கடுத்த நிலையில்  பனை சார்ந்து பல முன்னெடுப்புகள் செய்யும் ஒரு தனித்துவமான  போதகர். பனையேறிகளை கனம் பண்ணும் நிகழ்வு என்று அவர்களுக்கு சால்வை அணியும் நிகழ்வை அவர் நடத்தினார். பனை ஓலையில் பொருட்களைச் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்தபடியிருந்தார். பனை விதைகளை பனை ஓலையில் பொதிந்து கொடுக்க இயலுமா என அவரிடம் கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் அய்யா என்றார்கள். அதற்கான பொருட் செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

மும்பையில் நான் பனை விதைகளை வழங்குகையில் கடைபிடிக்கும் வழிமுறை என்பது வித்தியாசமானது. ஒரு அட்டைபெட்டியின் வெளிப்புறம்  முழுக்க, பனை சார்ந்த தகவல்களை நிரப்பி அச்சிட்டு, அதனுள் பனை குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு சிறு பிரதி ஒன்றையும் இணைத்தே மக்களுக்கு கொடுப்போம். அது மும்பை போன்ற பெருநகரங்களில் பனை குறித்த புரிதலற்றவர்களுக்கு ஒரு அறிமுகத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால், நமது பணம், பெருமளவில் பனை சாராத மக்களிடம் சென்று சேரும். இவ்வித அட்டைப்பெட்டிகள் செய்வதனால் எவ்வகையிலும் பனை சார்ந்த மக்கள் பயன் பெறப்போவதில்லை. ஆகவே தமிழக சூழலில், பனை விதைகளை பனை ஓலைக்குள் பொதிந்து கொடுத்தால், அதன் மூலமாக அனேக ஓலைக் கலைஞர் பயன் பெறுவார்கள் என எண்ணினேன். சில்லு கருப்பட்டிக்கு எப்படி பனை ஓலைகளைப் பொதிவார்களோ அதுபோல பனை விதைகளை பொதிந்துதர அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ மாமன்ற பொதுசெயலாளர் அறிவர். ஆசீர் அவர்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வந்திருந்தார். பனை விதைகள் சில்லுகருப்பட்டிபோல் பொதிந்து விதை பரவலுக்காக எடுத்துவரப்பட்டதை கண்டு மகிழ்ந்துபோனார். அன்றைய நிகழ்ச்சியில் அவர் அதனைக் காட்டி பேசினார். இந்திய திருச்சபை வரலாற்றில் பனை எங்குமே முதன்மைப்படுத்தப்பட்டது இல்லை.  ஆசீர் அவர்கள் பனை சார்ந்த எனது பயணத்தினையும் போதகர்கள் ஏன் பனை சார்ந்த முன்னெடுப்புகளையும் தங்கள் ஊழியத்தினூடாக செய்வது அவசியம் என்பதனையும் அன்று குறிப்பிட்டார். நெய்யூர் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த  பனை மரங்கள் இன்று மாயமாகிப்போனதும் அதனைச் சார்ந்து வாழ்ந்த பல்லுயிர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ நிலங்களைச் சுற்றி பனை வேலியாக அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தான் பரவசமடைந்தது என அவர் பனை சார்ந்த முக்கியத்துவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரிடமும் ஆளுக்கொரு பனை விதைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி நடந்த கன்னியாகுமரி சி எஸ் ஐ (C S I) தேவாலயத்தின் வாசல்களின் அருகில் பனை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் எனது நண்பனும் புகைப்பட கலைஞருமான ரங்கிஷ் அவர்களைச் சந்தித்தேன். “ஓய், காலைல டியோசிசன் ஆஃபீஸ் பக்கம் போயிருந்தேன்” என ஒரு சம்பவத்தை விளக்கினார். பனை ஓலை பெட்டியை வைத்திருந்த ஒரு பெண்மணி, இன்னொருவரிடம்  மிகவும்  வருத்தப்பட்டு பேசிகோண்டிருந்திருக்கிறார்கள். “ஆனாலும் இப்படி ஏமாத்தப்பிடாது, நாலு பெட்டி எடுத்துட்டு வந்தேன், வீட்டுல வந்து பார்த்தா சில்லு கருப்பட்டிய காணேல, பனங்கொட்டைய உள்ள வெச்சி ஏமாத்தியிருக்கினும்”. என்றவர், “அப்பவே நினைத்தேன், காட்சன் ஊருக்குள் தான் நடமாடுகிறான்” என்றபடி என்னைப் பார்த்தார். எனக்கு சிரிப்பு தாளவில்லை…, பனை விதைகள் தான் கொடுக்கிறோம் என்ற அறிவிப்பை கேட்காத எவரோ ஒருவர், சில்லு கருப்பட்டி இலவசமாக கிடைக்கிறது என அள்ளி எடுத்து சென்று ஏமாந்திருக்கிறார்.   

Image
குமரிப் பேராயர் A R செல்லையா அவர்களுக்கு பனை விதை வழங்குகிறேன்.

ஜெனோஃபின் பிறந்த போது மாமனாராக நான் அவனுக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். கிலுகிலுப்பைகள் வழங்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் எனது பனை பயணத்தில் பயலை உள்ளிழுப்பதாகாது. அனேக குழந்தைகளுக்கு நான் பனை ஓலையில் தடுக்குகள் செய்து கொடுத்திருக்கிறேன். ஆகவே, தனித்துவமான ஒரு பனையோலை பொருளை அவனுக்கு பரிசளிக்க விரும்பினேன். எனது இரு சக்கர வாகனத்தில் இருக்கைகளை அமைத்துத் தந்த மொட்டைவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களைத் தொடர்புகொண்டு பனை ஓலையில் ஒரு அழகிய தொட்டில் ஒன்றைச் செய்து கொடுப்பீர்களா எனக் கேட்டேன். மகிழ்ச்சியோடு சரியென்றார்கள். ஆகவே, அதனையும் எடுத்துச் சென்று பிள்ளை காணும் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே இருந்து நான் குழந்தையுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். அந்த புகைப்படம் “உலகிலேயே முதன் முறையாக ஓலை தொட்டிலை அறிமுகப்படுத்திய குடும்பம்” என பதிவாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தார்கள்.

Image
முதல் பனையோலைத் தொட்டில்

இந்த ஓலைத்தொட்டிலை நான் பதிவுசெய்தபோது ஒரு நண்பர் எரிச்சல் மேலிடும் தொனியில் “நாங்களும் சிறு வயதில் இதனைப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். அதற்கு காரணம், “நீ தான் அனைத்தையும் கண்டடைந்திருக்கிறாய் என இறுமாப்பு கொள்ளாதே, நாங்கள் பயன்படுத்தி தூக்கி வீசியதை தான் இன்று நீ  உனக்கானதாக முன்வைக்கிறாய் என்ற எள்ளல் நிறைந்த பதிவு அது”. உண்மை என்னவென்றால், பனையோலைத் தொட்டில் என நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஓலைக்கடவத்தின் சற்றே மாறுபட்ட வடிவம் தான். அதற்கு மிகப்பெரிய அறிவோ, திறமையோ தேவையிலை.  கடவத்திற்கு நான்கு புறமும் சரி சமமாக ஓலைகளை அடி வைத்து பின்ன வேண்டும். பனை ஓலைத் தொட்டிலுக்கு, ஒருபுறம் நீளமாகவும் மற்றொருபுறம் குறுகலாகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி பகுதிகளில் ஆட்டுபெட்டி செய்பவர்கள், அல்லது தக்காளி கூடை செய்பவர்களுக்கு இவ்வித செவ்வக அமைப்பு அறிமுகமானதுதான், ஆனால் குமரி மாவட்டத்தில், இவ்வித பின்னல் முறைகள் கிடையாது. மாத்திரம் அல்ல, எங்குமே குழந்தைகளை இப்படி ஓலைப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்ட வரலாறு கிடையாது.  எங்கள் ஊரில் குழந்தைகள்  அங்காங்கே ஊர்ந்து சென்றுவிடாதிருக்க, கடவத்திற்குள்  கடல் மணலை நிரப்பி, உள்ளே விட்டுவிடுவார்கள். கடல் மண் இருப்பதால் கடவம் எச்சூழலிலும் மறிந்துவிழாது. குழந்தைகளும் அந்த மென் மணலில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவைகளை பார்த்தபடி விளையாடும்.

ஆபிரகாமிய வம்சத்தாராகிய எபிரேயார்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில், பிறக்கும் ஒவ்வொரு எபிரேய குழந்தையையும்  நைல் நதியில் வீசிவிடவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்துவந்த மருத்துவச்சிகளுக்கு கூட குழந்தைகளைக் கொல்லும் உரிமைக் கொடுக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் தான், லேவி குடும்பத்தில், யோகெபேத் கருவுற்று ஒரு குழந்தையினை பெற்றபோது அந்த குழந்தையினை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அதற்கு அப்புறம் அவள் அந்த குழந்தையை தனது வீட்டில் ஒழித்து வைக்க கூடாமல், அழகான நாணற்பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் கீல் போன்றவைகளை பூசி, நைல் நதியில் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு என்ன சம்பவிக்கபோகிறது என்பதை கண்காணிக்கும்படியாக குழந்தையின் சகோதரி அதற்கு காவல் இருந்தாள். அப்போது பார்வோனின் மகள் அப்பகுதியில் குளிக்க வந்து  அழகான அந்த குழந்தையினை தானே வளர்க்க முடிவு செய்தாள். எபிரேய மக்களுடைய மிகப்பெரிய தலைவனான மோசேயுடைய வாழ்வின் துவக்கம் அப்படி ஒரு எளிய நாணற்பெட்டியில் துவங்கியது ஆச்சரியமானது.  நாணற்பெட்டிக்கு இணையாக பனையோலைப் பெட்டி எழுந்துவரும் காலம் ஒன்று வெகு விரைவில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Image
பார்வோனின் மகள் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்போது

திருமறையில் நாணற்பெட்டி செய்து அதில் கிடத்திய குழந்தை மிகப்பெரியவனாகியது வரலாறென்றாலும், இதுவரை பனை ஓலையில் எவருமே தொட்டில்கள் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏன் அப்படி? குழந்தைகளை தூளியில் போட்டு தூங்கவைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. இது கிராமபுற மக்களுக்கு மிக எளிமையான வழி. வசதியுள்ளவர்கள் மர தொட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் பனை நார் இட்ட தொட்டில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓலை பெட்டியில் குழந்தைகளைக் கிடத்துவது என்பது எவரும் கைக்கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

பனை ஓலைத் தடுக்குகளில் குழந்தைகளைக் கிடத்துவதே வாடிக்கையானபடியால், மிகப்பெரிய அளவில்  செலவாகும் ஓலைகள் குறித்த கரிசனை இருந்திருக்கலாம். குறிப்பாக, வறுமை சூழ்ந்த அக்காலங்களில், தங்களை ஒடுக்கி தான் பனை சார்ந்த தொழிலாளர்களால் இயங்க முடிந்தது. வீட்டில் செய்யப்படும் கடவங்களை பிறருக்கு கொடுத்துவிடுவதே பொருளீட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும்போது, இவ்வகை முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் எண்ணியிருக்கலாம். அக்காலங்களில் ஓலை கடவத்திற்குள், குழந்தையினை படுக்க வைப்பது என்பது நினைத்துப்பார்க்கவியலா ஒன்று என்பது தான் உண்மை. கோழியை பிடித்து கடவத்திற்குள் கமத்திப் போடுவது தான் அன்றைய வழக்கம். நான் ஓலைப்பெட்டியினை அறிமுகப்படுத்தும்போதே, குடும்பத்தினருக்குள் ஒருவித விலக்கம் தென்பட்டது.  குழந்தையை யாராவது கடவத்திற்குள் போடுவார்களா என்ன? என்று தான் சிலர் கேட்டார்கள். வேறு சிலர், ஒரு தொட்டில் செய்ய பணமில்லையா என்று ஏளனமாக சிரித்தனர்.  இத்தனைக்கும் அனைவரும் பனங்காட்டிற்குள் புரண்டு வளர்ந்தவர்கள் தான்.  பனையோலை தொட்டிலை நான் வழங்கிய பின்னும், குழந்தைக்கான வேறு தொட்டில்  குடும்பத்தினரால் வாங்கப்பட்டது. பொடியன் பனை ஓலை தொட்டிலில் படுக்க விரும்பவில்லை என வியக்கியானமும் பின்னர் சொல்லப்பட்டது. ஆக, பிடிவாதத்துடன் பயலை பிடித்து கடவத்திற்குள் கிடத்தி இது தான் உலகத்திலேயே முதல் பனை ஓலைத் தொட்டில் என பிடிவாதமாக ஒரு புது பொருளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

Image
சமையலும் கற்று மற

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உணவு தயாரிப்பு,  சர்வதேச சமையல் கற்ற எனது ஜெகன் மச்சான் முன்னின்று நடத்த, கரண்டியை பிடித்து நான் உதவி செய்தேன். போதகர்கள் வந்து ஜெபிக்க அன்று மதிய விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்ட கிறிஸ்தவ சடங்குகள் சற்று வித்தியாசமானவை. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு முன்னால் ஒரு வாழை இலையை பரப்பி, அதில், உணவு, பணம், பழங்கள், மற்றும் திருமறை, பாட்டு புத்தகம், பிற புத்தகங்கள், தங்க சங்கிலி, தங்க  வளையல் என சில பொருட்களை போட்டுவிடுவார்கள். குழந்தை அவைகளில் எதனை முதலில் எடுக்கிறதோ அவ்விதமாகவே குழந்தை வளரும் என்பது பெரியவர்களின் முடிவு. எல்லா குழந்தைகளும் இவ்வித முடிவுகளை பொய்யாக்கிக்கொண்டே இருக்கின்றன.

Image
முதல் பிறந்தநாள் சடங்கு

அன்று மாலையில் தானே நான் சென்னை செல்வதற்கான பேருந்து பயணச்சீட்டினை எடுப்பதற்காக மார்த்தாண்டம் சென்றேன். கருங்கல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் நட்டாலம் என்றொரு சிறிய ஊர் இருக்கிறது. நட்டாலம் என்பது, குமரி மாவட்டத்திலுள்ள மிகவும் வளமான ஒரு பகுதி. வற்றாத குளம் ஒன்று உண்டு. வயல் நிறைந்த பகுதிகளில் இன்று வாழை மற்றும் கிழங்குகளை பயிரிடுகிறார்கள். இவ்வூரின் மேடான பகுதிகளில்  இன்றும் ஆங்காங்கே பனை மரங்கள் நின்றுகொண்டிருப்பது பனை இம்மண்ணின் மக்களுடன் உறவாடிய மரம் என்பதனை கோடிட்டு காட்டுகிறது. நட்டாலத்தில் தான் குமரி மாவட்டத்தின் முதல் மறை சாட்சியான தேவசகாயம் பிள்ளை அவர்கள் பிறந்தார்கள். இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் நினைவாக ஒரு இல்லத்தினை அவர் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கட்டியெழுப்பியிருக்கிறது. அதன் அருகில் ஒரு பனை மரம் நிற்பதைப் பார்த்து அதனை படம் பிடித்தேன்.

Image
புதிதாக கட்டப்பட்ட தேவசகாயம் பிள்ளை நினைவு இல்லம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேப்டன் யுஸ்டேசியஸ்  டி லெனாய் (Eustachius De Lannoy) மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, கிறிஸ்தவத்தினை தழுவியபோது லாசரஸ் என பெயர் மாற்றிக்கொண்டவர். திருவிதாங்கூர் பகுதி மக்களால் தேவசகாயம் பிள்ளை என்று இன்று நினைவுகூறப்படுபவர்.  திருவாங்கூர் சமஸ்தான அரசர்களால் துன்புறுத்தப்பட்டு ஆரல்வாய் மொழி என்ற பகுதியிலுள்ள பனை சூழ்ந்த காற்றாடி மலைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது 400 ஆம் அகவை தினம் வெகு விமரிசையாக கோட்டாறு மறை மாவட்டத்தால் கொண்டாடப்பட்டது.  அன்று அவர் போப் பெனடிக்ட் அவர்களால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” (Beatified) என சிறப்பு நிலை பெற்றார். 2020ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் தேவசகாயம்பிள்ளை அவர்கள் மரித்த பின்பு அவர் மூலமாக நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை ஏற்றுக்கொண்டார். இவையனைத்தும் தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதர் பட்டம் பெறும் தகுதியுடையவராக அவரை மாற்றுகிறது.

Image
தேவசகாயம் பிள்ளை

கத்தோலிக்க திருச்சபையின் சில வழக்கங்கள் மிகவும் தொன்மையானவைகள். அவைகளில் கால்களைக் கழுவுதல் என்து இயேசுவிடம் சென்று சேரும் அளவிற்கு அது நீண்ட மரபைக் கொண்டது ஆகும். முற்காலங்களில் போப் அவர்கள் தனக்கு கீழ் இருக்கும் உயர் மட்ட தலைமை  குருக்களில் 12 நபர்களை தெரிந்துகொண்டு அவர்களது கால்களை கழுவுவது வழக்கம். இவ்வித வழக்கம் வெறும் சடங்குகளின் தொகையாக மாறிவிட்டது என கருதியபடியால் போப் பிரான்சிஸ் அவர்கள் புதுமையான முறையில் இச்சடங்கினை முன்னெடுக்கத் துவங்கினார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்களின் கால்களை கழுவும்படியாக தெரிவு செய்தல், அகதிகள், மாற்று சமயத்தினர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என அவரது தெரிவுகள் கத்தோலிக்க திருச்சபை பார்த்திராத அளவிற்கு புதுமையானதும் புனிதமானதும் கூட.   

கால்களைக் கழுவுதல் என்ற சடங்கின் மீது எனக்குள்ள தனி ஈடுபாடு நிமித்தமாக  நானும் இச்சடங்கினை கடைபிடிக்க விரும்பினேன். திருச்சபைக்குள் இதனை கடைபிடிக்க இயலாது ஆகையால், திருச்சபைக்கு வெளியே இதனை நிகழ்த்த ஆசைப்பட்டேன். எனது எண்ணங்கள் எல்லாம் பனை ஏறுகிறவர்களைக் கண்டு அவர்கள் கால்களைக் கழுவி, அவர்களுக்கு பணிவிடை செய்யும் இயேசுவின் போதனையின் சிறப்பியல்புகளை காண்பிக்கவும், கூடவே எனது அன்பின் வெளிப்பாடாக, புத்தாடைகள் எடுத்து கொடுக்கவும், நான் விரும்பினேன். என்னால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. பிற இடங்களில் மக்கள் தங்கள் கால்களை என்னிடம் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கால்களை காண்பிக்க மெறுப்பதற்கான காரணங்கள் பல உண்டு. சில வேளைகளில், கால்களைக் கழுவுபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, சில நேரங்களில் இவ்வித சடங்குகளின் பொருளின்மை என வரிசைபடுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது கால்களில் இருக்கும் காயங்களை அவர்கள் வெளியே காட்ட விழைவதில்லை என்பதே உண்மை. தங்கள் வாழ்வு இவ்விதமொரு சிதைவுற்ற ஒன்றுடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  எப்போதும் அவர்கள், மக்களது வாழ்வை சுவைகூட்டுபவர்கள் என்ற பெருமிதம் கொண்டிருப்பதினாலேயே தங்கள் கால்களை மறைக்கிறார்கள் என நான் பொருள் கொள்ளுவேன். அவர்கள் நிலையில் இவ்விதமான நிலைப்பாடு சரியென்றாலும், அவர்களின் குரலாக ஒலிக்கின்ற நமக்கு அவர்களது காயங்கள் தாம் முக்கிய குறியீடாக, அவர்களின் தியாக சின்னமாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

Image
பனையேறியின் கால்கள்

பனையேறிகளுடைய கால்கள், காயங்களால் நிறைந்தவை. அவைகளை அவன் ஒரு வீரனுக்குரிய பெருமையென கருதியிருந்தாலும், இன்னொருவரிடம் காண்பிக்க அவன் விழைய மாட்டான். தழும்புகளைக் காட்டி தனது தியாகத்தை நிலைநிறுத்தும் செயலை ஒரு பனையேறி எப்போதும் செய்ய துணிவதில்லை. அது அவனது வீரத்திற்கும் அவனது உழைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதி என்பதாகவே அவன் எடுத்துக்கொள்ளுவான். அவனது மவுனத்தை இயலாமை என சிலர் புரிந்து கொண்டு, பனையேறிகளுக்கான குரலை வெளியில் கேட்கக்கூடாதபடி செய்துவிட்டனர்.

Image
காய்த்துப்போயிருக்கும் பனையேறியின் கைகள்

பனையேறியின் கால்களில் இருக்கும் காயங்களுக்கு சற்றும் குறையாமல் அவர் கைகளிலும் உடலிலும் காயங்களும் தழும்புகளும் இருக்கும். காயங்கள் அவர்கள் வாழ்வில் அனுதின அனுபவம் தான். அந்த காயங்களை அவர்கள் பெரிதுபடுத்தியிருந்தால், அவர்களின் துயரம் இன்று உலக அளவில் சரியான அளவில் முன்வைக்கப்பட்டிருக்கும். பனையேறிகளின் வியர்வை பேசுபொருளாயிருக்கும் அளவிற்கு அவர்கள் கால்கள் பேசுபொருளாயிருந்தது இல்லை. அவர்கள் கால்களும் அவர்தம் உடலில் இருக்கும் காயங்களுமே அவர்கள் சூழியலின் பங்காளர்கள் என உரத்துக் கூறும் அடையாளங்களாகும்.

Image
கால்களைக் கழுவி முத்தமிடும் போப்

என்னைப்பொறுத்த வரையில் போப் அவர்கள் பனையேறிகளின் கால்களை கழுவவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையினை நான் போப் அவர்கள் மீது திணிக்க இயாலாது என்பதால் தான் முதன் முறையாக அவ்வித முன்னெடுப்பை நான் மேற்கொண்டேன்.

திருமறையில் இயேசு கால்களைக் கழுவும் நிகழ்ச்சி மிக உக்கிரமானது. இயேசு வாழ்ந்த காலத்தில் கால்களைக் கழுவும் பணி அடிமைகளுக்குரியது. குரு என்றும், ரபி என்றும், கடவுளின் மகன், இஸ்ரவேலை மீட்கும் மேசியா என்றும் உயர் பட்டங்களை தாங்கி நின்ற இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவுதல் சீடர்களுக்குள்ளேயே துணுக்குறலை ஏற்படுத்தியது. பேதுரு என்ற சீடன் அவரைப் பார்த்து நீர் எனது கால்களைக் கழுவக்கூடாது என விலகி நிற்க இயேசு அவனிடம் உனது கால்களை நான் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை என்கிறார்.

எனது நீண்ட நாள் கனவு என்பது பனையேறிகள் கால்கள் கழுவப்படவேண்டும் என்பது தான். கத்தோலிக்கத் திருச்சபை, இன்று இந்தியாவில், இருக்கும் பனையேறிகளின் கால்களைக் கழுவ முற்படுவார்கள் என்று சொன்னால், அதுவே நாளை வாத்திகன் பனையேறிகளின் கால்களைக் உற்று நோக்க வழிவகை செய்யும். உடைந்து உருக்குலைந்திருக்கும் பனையேறிகளின் கால்கள் மிகப்பெரும் ஆன்மீக பிண்ணணி கொண்டவை. அழகிய கால்கள் எப்படி கடுமையான உழைப்பின் பயனாய் வளைந்துவிடுகின்றன எனவும், காய்ப்பு பிடிக்கிறது எனவும், பாளம் பாளமாக கீறிப்போய் கிடக்கிறது எனவும் எந்த இலக்கியமும் பதிவுசெய்யாத நமக்கடுத்த வாழ்வனுபவம். பனையேறிகளின் உருக்குலைந்த கால்களுக்காக எந்த திருச்சபையிலும் மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படவில்லை என்பதுவே கசப்பான உண்மை.

சிறிய கால்களே அழகுமிக்கவைகள் என்னும் சீன பாரம்பரியத்தினை விரிவாக பலர் பதிவு செய்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு முதல் சமூகத்தில் மிக உயரிய இடத்திலிருந்த சீமாட்டிகளுடைய கால்களை ஆறு வயது முதல் கட்டி, காலின் பயனே அற்றுப்போகப்பண்ணும் ஒரு முறைமையினைக் குறித்து இருபதாம் நூற்றாண்டில் டங்கன் என்கிற கிறிஸ்தவ மிஷனெறி குறிப்பிடுகிறார். பெண்களை எப்படி அழகு என்ற போர்வையில் சமூகம் அடக்கி ஆள்கிறது எனவும், பெண்கள் இதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் விரிவாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆனால் பனையேறிகள், பனை மரத்தினை பற்றி பிடித்து ஏறும்பொது அதிலிருக்கும் சிலாம்புகள், பனையின் புறப்பகுதியில் இருக்கும் சில சொரசொரப்பான பகுதிகள், கால்களில் ஏற்படுத்தும் காயங்களையும், பற்றிபிடிக்கும் விதமாக கால்கள் வளைந்து உருக்குலைவதும், நமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அசிங்கமான இத்தொழிலை விட்டு வெளியே வருவதுவே தீர்வு என முடிவெடுத்து விட்டாலும், இன்றும் தங்கள் கால்கள் பனையை பற்றியிருக்க, தங்கள் கைகள் பனை மரத்தை அணைத்திருக்க, நமது வாழ்வில் பனையேறிகள் இன்றும் சுவைகூட்டியபடியே இருக்கின்றார்கள்.

Image
கால்களைக் கட்டிவிடுவதால் ஏற்படும் பாதிப்பு

எவரொருவர், பனையேறியின் கால்களையும் கைகளையும் அணுகி பார்த்தாலும், அத்தாய்மையின் கரத்தை பார்த்து அவரது உள்ளம் விம்முவது உறுதி. பனையேறி தனது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெருமளவில் அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் ஒரு பண்பட்ட சமூகம், அவன் கடந்து வந்த பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்கி, அவன் வழிகளை செவ்வை செய்வது சிறந்த சேவையாக இருக்க முடியும்.

அவ்வகையில், போப் அவர்கள், பனையேறிகளின் கால்களைக் கழுவும் ஒரு தினம் அமையுமா என நான் எண்ணிப்பார்க்கிறேன். போப் அவர்கள் இதுவரை பார்த்த கால்கள், காலணிகள் இட்டு நடமாடிய மென் கால்கள் மட்டுமே. வெறுங்காலுடன், பனையேறும் பனையேறிகளின் கால்களும் கரங்களும் அவருக்கு இயேசுவின் சிலுவைக் காட்சிகளை மீட்டெழுப்பும். இவ்விதம்  எற்படுத்தும் ஓர் நிகழ்வு கூட, உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை.

பனையேரிகள் என்றவுடனேயே, நாம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறோம், ஆனால், இந்தியா முழுக்க பனை ஏறிக்கொண்டிருக்கும் சமூகங்கள் பல இருக்கின்றன. பழங்குடியினர், நாடோடிகள் உட்பட இந்திய சமூகத்தில் பலரும் பனையேரிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 12 பனையேறிகளை அழைத்து , கால்களைக் கழுவும் சடங்கு ஒன்றினை நிகழ்த்தினால், அது எப்படியிருக்கும்? ஆம், அது தான், 21ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஒரு திருப்புமுனை கணமாக இருக்கும். திருச்சபை ஏன் பனை சார்ந்த மக்களுக்காக தங்களை அர்பணிக்கவேண்டும் என்பதனை போப் அவர்களின் இச்செயல் உறுதிப்படுத்தும். 

பனையேறிகளின் காயங்கள் நமக்கு திருமறையின் ஆழ்ந்த படிமங்களை வெளிப்படுத்துவதாக நான் உணருகிறேன். இயேசுவின் சிலுவைக் காயங்களுக்கு ஒத்தவைகள் அவைகள். நமது வாழ்வு சுவைப்பட அவர்கள் தங்கள் உடலை வருத்த ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் காயங்கள் பின்னே இருக்கும் சோக கதைகள் இதுவரை தொகுக்கப்படாத காப்பிய தருணங்களைக் கொண்டது. பனையேறிகளின் காயங்கள் வெறுமனே காயங்கள் அல்ல, அவைகள் நமது வாழ்வை செறிவூட்ட பனையேறிகள் ஏற்றுக்கொண்ட விழுப்புண்கள். போர்க்களத்தில் ஏற்படும் புண்களை விட இவ்வித வடுக்கள் தான் இன்று நமது வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் அழகிய தழும்புகள். இத்தழும்புகள் குறித்த பெருமையோ சிறுமையோ எதுவும் திருச்சபையிலோ பொதுவெளிகளிலோ பேசப்படவில்லை. அந்த மவுனம் கலைக்கப்படவேண்டும்.

பனையேறிகள் வாழ்வில் இன்னும் பல சோகங்கள் அரங்கேறி வருவது பொதுவெளிகளில் பேசப்படுவது இல்லை. கல்வி அறிவு பனையேறிகளுக்கு இல்லாததாலும், அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை எளியவர்கள் என வெளிப்படுத்துவதாலும்,  காவல்துறையின் அராஜகம் பனையேறிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதும் வரலாறு. கள் இறக்கினால் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையினை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர். காவல்துறை, போலி மது விற்கிறார்கள் என போலியாக வழக்கு பதிவு செய்து, பனையேறிகளை கைது செய்வதும், அவர்கள் பயன்படுத்தும் மண் கலயங்களை உடைத்துப்போடுவது, பனை மரங்களில் பிற பனையேறிகளை ஏறவைத்து பதனீர் சொட்டிக்கொண்டிருக்கும் பாளைகளை தறித்துப்போடுவது, சில வேளைகளில் பனையேறிகளை அடித்து துன்புறுத்துவது ஏன் கை கால்கள் முடமாகும் அளவிற்கு அவர்களை குற்றுயிராக்குவது என ஈனச் செயல்கள் செய்திருக்கிறார்கள்.

Image
ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கோரும் தருணத்தில்

இன்று உலகில் எங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் பொதுவெளியில் நாம் கொதித்தெழுகிறோம். ஆனால் காலம் காலமாக அடக்குமுறைக்குள் வாழ்ந்து தான் கற்ற தொழிலினை இவைகளினூடே எடுத்துச் செல்லும் பனையேறி எவ்வித சலனமுமின்றி தனது பணியை தொடர்ந்துகொண்டிருப்பது நம்மை பதை பதைக்க வைப்பது. இவ்வித சூழலில் பனையேறிகளிடம் வாங்கிய லஞ்சப் பணத்தினை காவல்துறை நாலத்தனையாக திருப்பிக் கொடுக்கவேண்டும். பனையேறிகள் வாழ்வில் காவல்துறை செய்த அனைத்து பிழையீடுகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் அரசு, பனையேறிகளுக்கு  இதுமட்டும் செய்யத்தவறியவைகளுக்கும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கும் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு நிகழ்ந்த துயரத்தை விஞ்சும் கதைகள் இங்கே உண்டு, ஆனால் அவைகளைப் பேசும் உள்ளங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டது தான் சோகம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 6

ஜனவரி 19, 2021

பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

Image
முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

Image
ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

Image
மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

Image
சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

Image
கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

Image
சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

Image
சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

Image
பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

Image
குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

Image
பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 5

ஜனவரி 16, 2021

பனை கலைஞர் மாவட்டம்

சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம்  உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய  பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன். 

பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின்  பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும்  454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

Image
தங்கப்பனைக் கொண்டு வழங்கிய குடுவை பயிற்சி

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன்  இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது.  அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

Image
பனம்பழங்கள் உணவிற்காக சுடப்படுகின்றன

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம்.  இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால்,  உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

Image
பனம்பழம் உண்பதற்காக வேகவைக்கும் முறை

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

Image
முதல் பனம்பழம் ஸ்குவாஷுடன் ஜேக்கப்

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

Image
பனம்பழம் ஸ்குவாஷ் பயிற்சி வழங்கு பால்ராஜ்

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.  புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.

அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.

குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம்.  குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

Image
வழக்கொழிந்துபோன பனையோலை குடுவை பயிற்சி வழங்கிய தங்கப்பன் பயிற்சியாளர்களுடன்

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.

தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.

அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.

மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த  இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.

சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம். 

Image
கடவம் முடையும் பாலம்மாள்

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே  பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.

ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல,  தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.

கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

Image
சிறிய கடவத்தினை நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பாலம்மாள்

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.

“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.

கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.

ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.

இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.

சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.  

அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.

உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.

நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 4

ஜனவரி 12, 2021

ஓலைகளினூடாக

கேரள தமிழ்நாடு எல்கையான களியக்காவிளை வந்தபோது தடுத்து  நிறுத்தப்பட்டோம். எட்டு வயது மித்திரனைத் தவிர அனைவரும் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பரிசோதனை முடிந்து புறப்படும்போது நள்ளிரவு ஒரு மணி. மூன்று நாளைக்கு பிறகு தான் முடிவு வரும் என குறுஞ்செய்தி வந்தது.

காலை என்னைத் தேடி பொறியாளர். சேவியர் பெனடிக்ட் அவர்கள் வருவதாக சொல்லியிருந்தார். சேவியர் அவர்கள் பனை மீது தீரா விருப்பு கொண்டவர்கள். பல சர்வதேச பயணங்களை மேற்கொண்டவர். உலகிலுள்ள பல்வேறு வகையான பனைகளை மட்டுமே தேடி தேடி சேகரித்து தனது  தோட்டத்தில்  நட்டு பராமரித்தவர்.. தற்போது பழவேற்காடு பகுதிகளில் உள்ள பரதவர் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் மூலமாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். நான் பனை சார்ந்து இயங்குகிறேன் என்றால் அவர் அதனை விட பலமடங்கு வீரியமாக பழவேற்காடு குறித்து இயங்குகிறவர்.  நான் தமிழகம் வருகிறேன் என்றவுடன் அவரது தென் மாவட்ட பயணங்களோடு கன்னியாகுமரி பயணத்தையும் இணைத்துக்கொண்டார்.  அன்று காலை கார் முழுக்க தனது பயணத்தில் சேகரித்த பனை பொருட்களை எடுத்து வந்திருந்தார் சேவியர். கன்னிப்பெட்டி என்ற ஒரு அழகிய பெட்டியை எனக்கு பரிசாக கொடுத்தார்.

Image
சேவியர் தென் தமிழகத்தில் தாம் சேகரித்த பனை ஓலை/ நார் பொருட்களுடன்

கன்னிப்பெட்டி குறித்து நான் 20 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். மார்த்தாண்டம் சந்தையில் பனை ஓலைகள் சேகரிக்கச் சென்றபோது அங்கே இவ்வித பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருமண வாழ்வினை எட்டுமுன் ஒரு பெண் இறந்துபோனால், இவ்விதமான கன்னிப்பெட்டியில் துணிகள் மற்றும் சில பூஜைக்குரிய பொருட்களை வைத்து அதனை உறவினர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுக்கும் வழக்கம் இன்றும் தென் மாவட்டங்களில் இருக்கிறது.

சேவியர் எடுத்துவந்த கன்னிப்பெட்டிகள் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகின்ற ரகம் என்பதை நான் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டேன். மிகவும் நேர்த்தியாக பின்னப்படுகின்ற இவ்வகை பெட்டிகள் விலை மலிவானவை. 250 ரூபாய்க்குள் இப்படியான ஒரு பெட்டியினை நாம் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாங்க முடியும். அப்படியானால் தயாரிப்பவர்களுக்கு 100 ரூபாய் கிடைப்பதே அபூர்வம்.

கன்னிப்பெட்டியின் பின்னல் இரட்டை அடுக்கானது. சற்றே அகலமான சாரோலைகளைக்கொண்டு உட்புற பின்னலும் மெல்லிய குருத்தோலைகளும் வண்ணமேற்றிய ஓலைகளையும் கொண்டு வெளிப்புறமும் பின்னப்பட்டிருக்கும். உட்புற பின்னல் கூட்டல் வடிவிலும் வெளிப்புற பின்னல் பெருக்கல் வடிவிலும் இருப்பது இவ்வித கலைஞர்களுக்குள் உறைந்திருக்கும் பின்னல் திறமைகளுக்கு சான்று. மிக நேர்த்தியாக, சர்வதேச தரத்தில் விளிம்பு கட்டப்பட்டிருக்கும். கைப்பிடியானது பெட்டியின் அடிப்பகுதி வழியாக வந்து பெட்டிக்கு மேற்புறம் எழுந்து நிற்கும். இந்த பெட்டிக்கு கீழ்புறம் இருப்பதைப் போன்ற வடிவில் மேற்பகுதியில் சிறிய அளவில் பின்னி மூடி இட்டிருப்பார்கள்

கன்னிப்பெட்டிகள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்றே நினைக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய பெண்மணி ராஜாவூர் பகுதிகளில் இவ்வித கன்னிப்பெட்டிகள் செய்வதாக கேள்விப்பட்டு ஓரிருமுறை அவர்களை சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். நமது நாட்டார் மரபுகளில் இஸ்லாமியரின் பங்களிப்பு இணைந்திருக்கிறது என்பது நமது பண்பாட்டின் விரிவை விளம்பும் சான்று. சமயங்களுக்கிடையில் இருந்த நல்லுறவுகளை எடுத்தியம்பும் பனை அனைத்து சமயங்களுக்கிடையிலும் ஒரு சமாதான தூதுவராக நிலைநிற்கிறது. குமரி மாவட்டத்தில் பின்னப்படுகின்ற இந்த கன்னிப்பெட்டி பார்வைக்கு சாதாரண மூடிபோட்ட பெட்டியைப்போலிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர்  சென்றிருந்தபோது அங்கும் ஒரு கலைஞர் கன்னிப்பெட்டி செய்திருந்தார். வடிவநேர்த்தியில்  குமரிமாவட்டத்திற்கும் இதற்கும் பெருத்த ஒற்றுமைகள்  இருந்தன. ஒரு சில சிறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இவ்வித வித்தியாசம் என்பது மாவட்டத்திற்கான வித்தியாசம் என நாம் புரிந்துகொண்டாலும், பனை ஓலைகள் பரந்துபட்ட தமிழக  காலாச்சார சடங்குகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

சேவியர் கொண்டுவந்த  பனை ஓலைப் பொருட்களின் வகைகளைப் பார்க்கும்போதே அவர் தமிழகத்தின் எப்பகுதிகளையெல்லாம் கடந்து வந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிந்தது. அவர் வைத்திருந்த ஒரு அழகிய கோழி குஞ்சுகளை இட்டுவைக்கும் பெட்டி என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் அதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வடிவிலான படத்தை நான் பார்க்கவும் செய்திருக்கிறேன், ஆனால், அதனை யார் தயாரிக்கிறார்கள் என என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது உற்சாகத்தைப் பார்த்து சேவியர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஆம்,  அவர்களின் தாராள குணத்திற்கு அளவே கிடையாது.  நான்  தான் வேண்டாம் என்றேன். இதனை தயாரிப்பவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்தது. குருத்தோலை ஈர்க்குகளால் கட்டில் பின்னல்கள் போல் அறுகோண வடிவில் பின்னப்பட்ட அந்த கூடு ஒரு, அழகிய கலைப் படைப்பு. குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் பிற பகுதிகளிலோ காணக்கிடைக்காதது. இவ்வித கோழி குஞ்சுகளை விடும் கூடுகள் செய்யும் ஒரே ஒரு பாட்டி திசையன் விளையில் இருகிறார்கள் என்ற குறிப்பையும் சேவியர் எனக்குக் கொடுத்தார். இவ்வித கலைஞர்களே நமது  தேசிய சொத்து என்ற எண்ணமே என்னுள் எழுந்தது.   இவ்வித தனித்துவ திறன் மிக்க கலைஞர்களை  எவ்வகையிலும் எவரும்  பொருட்படுத்துவதில்லை.

Image
கோழிக்குஞ்சுகளை அடைக்கும் பனை ஈர்க்கில் கூடு

நான் அவருக்கு ஆரே தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையிலிருந்து எடுத்து வந்த அட்டைபெட்டியில் குமரி மாவட்ட பனை விதையைக் கொடுத்தேன். ஜாஸ்மின் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு மரத்திலிருந்து எடுத்த விதை அது. கருப்பு காய்ச்சி ரகம். ஒவ்வொரு பழமும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சிலர் இதனை யாழ் விதை எனக் கூறுவார்கள். பெயர்கள் எப்படியிருந்தாலும், இது யாழ் விதை அல்ல என்பதே எனது எண்ணம். குமரி மாவட்டம் மட்டுமல்ல, மும்பை பகுதியில் கூட இவ்வித பெரிய பழங்களை நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலி அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி, பகுதிகளிலெல்லாம் மூன்று கிலோவைத் தாண்டிய பனம்பழங்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய தேங்காயைப் பார்க்கும்போது, அது யாழ்பாண தேங்காய் என கூறப்படுவதால், பனம்பழங்களிலும் ஒரு யாழ் பனம்பழத்தை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

Image
பனை விதை பெட்டியினை சேவியர் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு, நான் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளநீர் ஒரு டாலர் மட்டுமே. அந்த தேங்காய் மிக மிக பிரம்மாண்டமானது. இந்தியாவில் அதற்கு இணையான தேங்காய்களை நான் பார்த்ததே இல்லை.  அது போலவே, பர்மா சென்றிருந்த போதும் நானும் எனது குக்கி பழங்குடியின நண்பன் மாங்சா ஹோப்கிப்பும்  (Mangcha Haopkip)  இணைந்து  ஒரே இளநீரை பகிர்ந்து குடித்தோம். இந்தியாவில் காணப்படும் இரண்டு மிகப்பெரும் தேங்காய்களிற்கு இணையானது அங்கு விற்கப்படும் ஒரே தேங்காய். அப்படியானால் இலங்கைக்கும் நமக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே இப்பெயர் சூட்டல் இருக்கிறது என நான் கருதுகிறேன். மேலும் பனை மரத்திற்கு யாழ்பாணம் என்பது ஒரு மைய்யம் கூட.

Image
கருப்பு காய்ச்சி பனம்பழம்

சேவியர் அவர்களுக்கு மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தது. பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைக் குறித்து அவர் கேள்விபட்டிருக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை இங்கே நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையினால், அந்த அலுவலகத்திற்குள் உரிமையோடு செல்லுவேன். ஆகவே அந்த அலுவலகத்திற்கு முதலில் செல்ல தீர்மானித்தோம்.

பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் 1975ஆம் ஆண்டு பனைத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கத்தை மார்த்தாண்டம் பகுதிகளில் ஆரம்பித்தார். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்ற மாபெரும் இயக்கம்,  பனை தொழிலாளர்களது வாழ்வில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்படியாக துவங்கப்பட்டது. மிக நுண்மையாக பனை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவைகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் பனை தொழிலாளர்களுக்கு பதனீர் காய்ச்சுவதற்கு விறகு என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் போதுமான விறகுகள் கிடையாது. அச்சூழலில், பிற மாவட்டங்களிலிருந்து லாரிகளில் விறகுகளை வர வைத்து தேவையானவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது.

பேராயர் உலக கிறிஸ்தவ மன்றத்தின் தலைவராக இருந்தவர். ஆகவே அவரால் சர்வதேச உதவிகளைப் பெற முடிந்தது. உலகில் எங்குமே நிகழாத பனை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி, அவர்களுக்கான உதவிகள், மற்றும் புது தொழில்நுட்பங்களை கண்டடைந்து அவர்கள் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல பேராயர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பனைத் தொழிலாளர்களது மரணம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் நிரந்தர ஊனம் மற்றும் சமூகத்தின் பார்வையில் இழிவாக காணப்பட்ட அன்றைய சூழல்  பேராயரது சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூடவே பனைத் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் இருந்த அங்கீகாரமற்ற சூழ்நிலை இவர்கள் வாழ்வை மாற்றினால் ஒழிய இவர்களை மீட்கவியலாது என்ற எண்ணத்தை பேராயர் அவர்களுக்கு கொடுத்தது.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தொண்ணூறுகளின் மையப்பகுதிகளில் “வளர்ச்சி” என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தன. அன்றைய சூழலில் பனை அது சார்ந்து வாழும் மக்களுக்கு ஒரு கால்விலங்கு என கணிக்கப்பட்டதும் அவ்விலங்கினின்று உதறி மேலெழுவதுமே அன்றைய சவாலாக இருந்தன. ஆகவே பனையேறிகள் பனைத் தொழிலை விட்டு வெளிவருவதற்குண்டான கடனுதவி போன்றவைகளை மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளார்ச்சி இயக்கம் முன்னெடுத்தது. பனை மர தொழிலாளர்களை சிறு பெட்டிகடைகள் வைக்கவும், பழைய குடிசை மற்றும் சிதிலமடைந்த வீடுகளை மாற்றி நவீன வீடுகளை கட்டிக்கொள்ளவும், கல்வியில் உயர பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் செய்து அவர்கள் பொருளியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தார் பேராயர்.

Image
பனையோலையில் செய்யப்பட்ட பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் படம்

இந்த பணியில் அவர்கள் நிர்தாட்சண்யம் இல்லாமல் பனை மரங்களை கைவிட்டனர். அதற்கு காரணம் பனையா மனிதனா என்கிற கேள்வி முன் பேராயர் தன் தேர்வை வைக்கவேண்டிய சூழலில் இருந்தார். அதாவது, பனை சார்ந்த வாழ்வு சமூக அங்கீகாரத்தையோ பொருளியல் நன்மையையோ கொடாது என அறிந்தபோது, பனையையும் பனைத்தொழிலாளர்களையும் பேராயர் அவர்கள் பிரித்தார். பனை மரங்கள் பனையேறியின்றி வீணாக நிற்பதைக் கண்டவர்கள் அதனை வெட்டிவிட்டு வீடுகளை வைக்கவோ, ரப்பர் தோட்டம் வைக்கவோ அல்லது தென்னை மரங்களை வைக்கவோ முன்வந்தனர். அன்றையகுறைந்த வருமானம் மற்றும் சமூகத்தில் தாழ்வாக பார்க்கப்பட்ட பனையேறிகளுக்கு பேராயர் வழங்கிய திசை சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் பனைகள் கைவிடப்பட்டு அழியும் என்பது அவர் எண்ணிப்பார்த்திராதது.

பேராயர் அவர்களை நான் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதன் முறையாக சந்தித்தேன். எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்கள் என்னிடம், பேராயர் சாமுவேல் அமிர்தம் வந்திருக்கிறார்கள் நீ  அவரை சந்திப்பது நல்லது என்றார். கல்லூரி முன்பு இருக்கும் புல்தரையை சுற்றி செல்லும் சாலையில் தனது ஊன்றுகோலோடு பேராயர் நடந்துகொண்டிருந்தார், நான் அவருடன் இணைந்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பனை ஓலையில் நான் செய்த விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டைகள், புத்தக குறிப்பான், மற்றும் அழகிய பனை ஓலையாலான ஃபைல் ஒன்றையும் காண்பித்தேன்.  அனைத்தும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னவர், இவைகள் நமக்கு சோறு போடாது என்றார். எனக்கு “பக்”கென்றது. ஆனால் அவர் என்னிடம், நீ இப்போது படி, பிற்பாடு இவைகளைக் குறித்து நாம் பேசலாம் என்றார்.

பேராயர் அவர்கள் பதநீரை பாட்டிலில் அடைப்பது எப்படி என  ஜெர்மனி தேசத்திலிருந்து  அறிஞர்களை இங்கே அழைத்து வந்து,  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் இரண்டு முறை பனை ஏறுவதற்கு பதிலாக ஒருமுறை ஏறிவிட்டு பதனீரை மேலிருந்து ஒரு குழாயில் பனைமரத்தின் அடிப்பகுதி வரை கொண்டுவந்து அதனை சேகரிக்கும் வழிமுறைகள் என பலவற்றை பரிசோதித்து பார்த்தவர். குமரி கேரளா எல்லையில் இருக்கும் கோட்டவிளை என்ற தோட்டத்தில் புகையில்லா பதனீர் காய்ச்சும் அடுப்பு ஒன்றை மாதிரியாக இன்றும் வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முறையாக விஞ்ஞான முறையில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது.  உலகமயமாக்கலில், பனை தொழில் பின்தங்கியே இருக்கிறது என புரிந்ததால் தான் அவர், பனை தொழிலை விட்டு வேறு வகையில் மக்கள் பொருளியல் மற்றும் சமூக உயர்வை அடைய உதவினார்.

எண்பதுகளில் பனை சார்ந்து சர்வதேச தளங்களில் பெரும் வீச்சுடன் இயங்கிய அறிஞரான Dr. T. A. டேவிஸ் அவர்களும், “பனையும் வறுமையும் இணைந்தே இருக்கும்” (Palmyra and poverty goes together) என்றார். இவைகள் இரண்டையும் நான் ஒன்றாக இணைத்தே நான்  புரிந்துகொள்ள  முயற்சிக்கிறேன். அதாவது பனை சார்ந்த எந்த நிறுவனமும் அமைப்பும் பனை தொழிலாளர்களை கைத்தூக்கிவிட இயலாது என்பது தான் உண்மை. பனை தொழிலாளர்கள் வைத்த எந்த கோரிக்கையும் இதுவரை  எந்த அரசாலும் செவிகூரப்பட்டதும் இல்லை. ஏனென்றால், சந்தை பொருளாதார காலகட்டமான இன்றும்  கூட பனையேறிகள் தங்கள் தொழில் அடிப்படையில் ஒரு பழங்குடியின சமூகமாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்களை சமூக அடையாளப்படுத்துதலில்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இச்சமூகம் ஏற்றுகொண்டுள்ளது. ஆகவேதான் பனையேறுகிறவர்களுக்கு எது தேவை என இங்கிருக்கும் மக்களால் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. பழங்குடியினர் வாழ்வில் நிலம் மற்றும் அவர்களது உரிமைகளை எப்படி கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டுமோ அப்படி பார்ப்பது மட்டுமே இவ்வித மக்களின் விடுதலைக்கான துவக்கமாக அமையும்.

பனை மரங்கள் மீதான உரிமை பனையேறிகளுக்கு வேண்டும். அவர்கள் அதிலிருந்து பெறும் எவ்வித பொருட்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. பனைத்தொழில் சார்த்த விற்பனை உரிமையும் அவர்களிடம் இருக்கவேண்டும். அல்லது அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இவைகளை முன்னெடுக்கவேண்டும். இப்படி இருந்தாலே எதிர்காலத்தில் பனை சார்ந்து வாழும் மக்கள் ஏதேனும் நற்பயன் பெறுவார்கள். இன்று கூட தமிழகத்தில் பனையேறிகளைச் சுரண்டிப் பிழைக்கும் பெரு முதலாளிகள் உண்டு. தங்கள் கோட்டைக்குள் பனையேறிகளை சிறை வைத்து மிககுறைந்த கூலி கொடுத்து மனசாட்சியே இல்லாமல் பனையேறிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பனையேறிகளை காக்கும் வழிமுறை என்பது விரிவாக ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது.   சேகரிக்கும் பொருளாதாரத்தை வாழ்வியலாக கொண்ட ஒருவனை சந்தை பொருளாதார வாழ்வு நோக்கி நகர்த்துவது என்பது கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்று. மிகுந்த கரிசனையுடன், இதன் நுண்மைகளை விளங்கிக்கொண்டாலொழிய பனையேறிகள் வாழ்வில் எவ்வித நன்மைகளும் விளையாது என்பது தான் உண்மை.

பனை சார்ந்த பொருளாதாரம் என்பன போன்ற பேச்சுக்கள் இன்று அனாயாசமாக பேசப்படுகின்றன. இவைகள் யாவும் ஒரு இடைத்தரகரின் நோக்கில் பேசப்படுகின்றதே ஒழிய, உண்மையான பனை பொருளியல் என்பது என்ன? அது கிராம சூழலில் எப்படி இயங்கும் என்பது போன்றவைகளை ஆராய்வது இல்லை. பெரும்பாலும் பனை சார்ந்த பொருட்கள் நகரத்திலும்  வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளுக்காகவே  காத்திருக்கிறது. இதற்கு நேரெதிராக கள், உள்ளூர் சந்தையின் பலத்தையும் பனையேறிகளின் விடுதலையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. கள் என்கிற ஒற்றை பொருளிற்கான விடுதலை பனை சார்ந்த பிற பொருட்களை தடையின்றி தாராளமாக பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலை இன்று நாம் எப்படி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது? இரண்டு வழிகள் எனக்கு தென்படுகின்றன. ஒன்று நமது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. பனை மரம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எவ்வித பொருள் முதலீடுமின்றி உடனடி வேலை வாய்ப்பை வழங்க வல்லது. இரண்டாவதாக, பனை சார்ந்த வாழ்க்கை முறை நமது பிற தேவையற்ற நவீன சார்புகளை தவிர்க்கும். அவ்வகையில் மிகப்பெரிய அளவில் நமது செலவினங்களை மிச்சப்படுத்தலாம். மேலும், இன்று பனை சார்ந்த  உணவுகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது ஆகவே இத்தொழிலில் இறங்கும் இளைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இருக்கிறது. கலப்படமில்லா இவ்வித உணவுகள் நமது சமூகத்தின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.   நமது இளைஞர்கள் பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கூட எடுத்துக்கொள்ளவேண்டாம். வீட்டின் அருகில் நிற்கும் ஓரிரு மரங்களில் ஏறி வீட்டு தேவைக்கென பதநீரோ கள்ளோ இறக்கினால் போதும். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும்.

நாங்கள் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்க வளாகத்திற்குள் சென்றோம். அலுவலகம் அமைதியுடனிருந்தது. திரு சந்திரபாபு அவர்களை சந்தித்தோம். நான் சேவியர் அவர்களை அறிமுகப்படுத்தினேன்.  சேவியர் அவர்களுக்கு பனை சார்ந்த பொருட்கள் மீதான விருப்பமிருந்ததால் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின்  கைவினை பிரிவு நோக்கி சென்றோம். அங்கே தற்பொழுது பனை ஓலையில் தொப்பி செய்யும் ஒரு சிறு அலகு மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் சேவியர் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதன் பொறுப்பாளராக இருக்கும் திருமதி ராணி அவர்களை எனது சிறு பிராயம் முதல் நான் அறிவேன். அவர்கள் தேவையான தொப்பிகளை எடுத்து காண்பித்தார்கள். 

இங்கு செய்யப்படும் தொப்பி வெளிநாட்டு கெளபாய் தொப்பிகளைப் போன்றது. அதற்கான பெரும் சந்தை இருக்கின்றது. கொரோனாவினால் அனைத்தும் முடங்கிவிட்டன என ராணி அக்கா சொன்னார்கள். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வர வைக்கும்படியாக மூன்று அளவுகளிலும், மெக்சிகன் வடிவில் மிக பிரம்மாண்டமான தொப்பிகளும் இங்கே செய்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு முறைமை இங்கே கைக்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம். ஓலைகளை சன்னமாக வகிர்ந்து சடையாக பின்னிக்கொள்ளுவார்கள். அவைகளை மீட்டர் கணக்கில் வாங்கி சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் தையல் எந்திரத்தில் வைத்து தைத்து அழகிய தொப்பியாக மாற்றிவிடுவார்கள். இவ்வித செயல்பாடு என்பது கலை நுணுக்கம் வாய்த்தது அல்ல, ஆனால் சந்தையின் தேவைகளை விரைந்து சந்திக்க இயலும்.

குமரி மாவட்ட மீனவர்களில் பலர் இதனை அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். கடலுக்குள் செல்லும்பொது இவ்வித தொப்பிகள் வெயிலிலிருந்து மீனவர்களை காக்கும் ஒன்றாக இருக்கிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றூலா பயணிகள் இதனை அதிகமாக வாங்கிச் செல்லுகிறார்கள். தயாரிக்கும் இடத்தில்  சுமார் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இவ்வகைத் தொப்பிகள் மிகவும் மலிவானவைகள்.

பனை சார்ந்த பொருட்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்திருக்கிறதைக் காண்கிறோம். ஆனால் அவைகள் மிகவும் ஆபத்தானவை என நான் கண்டுகொண்டேன். இன்றைய சந்தை தேவை என்னவாக இருக்கிறது என்றால் வண்ணம் மிக்க பனையோலை பொருட்கள் தான். வெகு சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான பனைஓலை நுகர்பொருட்கள் என்பவை ஒற்றைமுறை பயன்பாட்டிற்கானது. அழகென காணப்படவேண்டும் ஆகையால் குருத்தோலைகள் கோருவது. ராமநாதபுரம் முதல் தமிழகத்தின்  பிற பகுதிகளில் வெட்டப்படும் பனை மரங்களில் இருந்து தான் இன்று பெரும்பாலான ஓலைகளின் தேவை சந்திக்கப்படுகிறது. இவைகள் எப்படி ஒரு நீடித்த வாழ்வியலை ஏற்படுத்தும்?  நெகிழிக்கு மாற்றாக இங்கே பனை ஓலைகள் முன்வைக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஏனென்றால், பனைஓலையில் வாங்குகின்ற பொருட்களை விசிறிவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது, நெகிழியைப்போல நம்மால் எப்போதும் பனை ஓலைப் பொருட்களை விசிறிக்கொண்டிருக்க இயலாது. அதன் பயன்பாடு எப்போதும் அப்படி இருந்ததில்லை.

பனை சார்ந்த பொருட்களை பனையேறிகள் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து அறிந்துகொண்டால், நாமெல்லாம் பனை சார்ந்த பொருட்களை புனிதம் மிக்கதாக கருதி அவைகளை பாதுகாப்போம். அவைகளை எவ்விதம் கையாளவேண்டும் எனவும் தேவையின்றி அவைகளை  வீணடிக்கமாட்டோம். நான் அறிந்த பனை ஓலைப்பாய் கலைஞரான தங்கப்பன் அவர்கள் ஒரே பனையோலைப் பாயினை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். கருங்கல் பகுதியை அடுத்த காட்டுவிளையைச் சார்ந்த பனையேறும் செல்லையா அவர்கள் தான் தயாரித்த வெற்றிலைப் பெட்டியினை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறார். பதனீர் எடுத்துவரும் குடுவைகளை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிப்பது பனையேரிகளுக்கு வாடிக்கை. ஆழ்ந்து நோக்குகையில், நமது பாரம்பரிய பொருட்கள் யாவும் நமது அன்றாட பயன்பாட்டில் இணைந்திருப்பதாகவும் சூழியலை மாசு படுத்தாததாகவும் நீடித்து உழைக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படி, ஒரு பொருளை பயன்பாட்டு பொருளாக ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. தமிழகம் இன்று ஆண்டுக்கணக்கில் வைத்து பராமரிக்கும் ஒரே பொருள் முறம் தான். இன்று பிளாஸ்டிக் முறத்தின் வரவால் பனையோலை முறம்  தயாரிப்பவர்களது வாழ்வு மிகப்பெரும் அடியை சந்தித்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு முறத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. முறம் இல்லா சமையலறை என்கிற அளவிற்கு நவீன வாழ்க்கை மாறிவிட்டது. இவைகள் யாவையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்க்கையில், பனை சார்ந்த கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது தெரியும்.

அப்படியானால் இன்று தயாரிக்கப்படும் ஓலைபொருட்களை நிறுத்திவிடவேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனேயே இன்று அப்படி செய்ய இயலாது. அப்படி செய்வது சரியுமாகாது. சற்றே நிதானித்து எதிர்காலத்திற்கான பொருள் என்ன என எண்ணி மக்களின் வாழ்வில் என்றும் இணைத்திருக்கும் பொருட்களை அறிமுகப்படுத்தி பனை பொருட்கள் அன்றாட வாழ்வில் நிலைபெறச் செய்வதே நமது கடமையாகிறது. எனது தொப்பி, திருமறை பை போன்றவைகள் அவற்றையே வலியுறுத்துகின்றன. பனை ஓலையுடன் பனை நார் இணைந்துகொள்ளும்போது அப்பொருள் அமரத்துவம் பெறுகிறது.

சேவியர், தான் எதிர்பார்த்தது போல மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பிரம்மாண்டமாக இல்லை என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். செயல்பாட்டளவில் அது குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திய ஒரு நிறுவனம், இன்று அதன் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 3

ஜனவரி 5, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

Image
போதகர் ராஜாமணியுடன் மித்திரனும் நானும்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.\

Image
வசாய் கோட்டையில் பனை

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

Image
Kerala – the Land of Palms

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

Image
திருவிதாங்கூர் பகுதி சாலையோரங்களில் பனைமரங்கள்: Kerala The land of Palms

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றால் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Image

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

Image
நன்றி: இணையதளம்

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அக்கா சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். தொற்று நோய்க்கான எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பயண சீட்டைச் சரிபார்த்து எங்கே செல்லவேண்டும் என்றும், ஆவணங்களை சரிபார்த்து விலாசத்தை வாங்கிகொண்டு விட்டுவிட்டார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. அக்கா இருக்குமிடம் நோக்கி செல்லும் வழியில் எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

Image
இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653

பனைமுறைக் காலம் 2

திசெம்பர் 21, 2020

பனை இரயில்

இரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட இருந்தாலும் சீக்கிரமாக வந்துவிட்டோம்.  இரயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இரயிலுக்குள் ஏறிய பின்பு தான் காலை உணவு. உணவுகளை எடுத்து வந்த பெரிய ஓலை பை ஜாஸ்மின் செய்தது.  இளவரசி கற்றுக்கொடுக்க ஜாஸ்மின் மட்டுமல்ல திருச்சபையின் பல குழந்தைகள் பனையோலைப் பொருட்களை செய்து பழகினர். இவ்விதமான பின்னல்கள் பொறுமையாக செய்யவேண்டியது ஆகும். ஒரே விதமான பின்னல்களை மீண்டும் மீண்டும் செய்வது பெருமளவில் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், நுணுக்கங்களை தேடி கண்டடைவோருக்கு, அதில் கூடி வரும் நேர்த்தி அளிக்கும் பரவசம் அளவில்லாதது. இளவரசி அவ்வகையில் திறன்மிக்கவளும் பொறுமைசாலியும் கூட. பனை ஓலையை தொடமாட்டேன் என்ற ஜாஸ்மின், மெல்ல ஓலையின் பால் தனது கவனத்தை திரும்பியதற்கு இளவரசியின் பயிற்றுவிக்கும் திறன் ஒரு முக்கிய காரணம்.

Image
ஜாஸ்மின் செய்த பனையோலைப் பை

இரயிலில் அமர்ந்தவுடன் எனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டேன். உணவு கூடைகளை ஓரிடத்தில் வைத்தேன். நான் எங்கும் எடுத்துச் செல்லும் பனை ஓலையால் செய்யப்பட்ட திருமறை பையினையும் தொங்கவிட்டேன். ஒவ்வொன்றும் அதற்கான இடத்தைப் பெற்றபோது அழகாகவே இருந்தன.  இவ்விதமாக அடுக்கியபோது ஏன் இந்திய அளவில் பனை ஓலைகளாலான பொருட்களை சேகரித்து அவைகளை ஒரு இரயில்  கண்காட்சியாக வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. எவரோ வைப்பது என்ன நானே எனக்கான இரயில் கண்காட்சியை அமைக்கிறேன் என்று எண்ணியபடி என்னிடமிருந்த ஓலைப் பொருட்களை இரயிலில் ஆங்காங்கே வைத்து நிறைவு கொண்டேன்.

Image
உணவுபொருட்களை எடுத்துச் சென்ற பை

இளவரசி எனக்கு செய்து கொடுத்திருந்த தொப்பி மிக அழகானது. முதன் முறையாக நான் அதனை கண்டபோது வாரி அனைத்துக்கொண்டேன். அது எனது வாழ்வின் அங்கமாகிப்போகும் என அப்போது நான் சற்றும் நினைத்திருக்கவில்லை. முகம்மது என்னை பல கோணங்களில் இந்த தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறான். அதில் ஒன்றை நான் முகநூலில் பகிர்ந்தபோது எனது சித்தப்பா “வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிட்டார்கள். எனக்கு இரத்தம் தேவையில்லாமல் கொதித்தாலும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனது தொப்பியை குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் பார்த்தால் இது என்ன “கடவத்தை கமத்தி வெச்சிருக்கு” என்றே ஏளனமாக சொல்லி கடந்து செல்வார்கள். பார்ப்பதற்கு அகலமான பின்னல்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த எளிய தொப்பி குறித்த பின்னணியத்தை ஒருவர் அறிந்தால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

பலர் கலந்துகொண்ட பனை ஓலைப் பயிற்சியில் இளவரசி இரண்டாம் நாள் தான் கலந்துகொண்டாள். ஆறு நாள் நடைபெற்ற அந்த பயிற்சியில், பிறரை விட சிறப்பாக கற்று தேறினாள். ஓலையின் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தமைந்தது. பனை ஓலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டதா இல்லை, திறமையே உருவான அவள் பனை ஓலையில் தனது கலை வாழ்வைக் கண்டடைந்தாளோ தெரியவில்லை. சொந்தமாக தனக்கென ஒரு செல்பேசி இல்லாதவள், தனது தந்தை வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து  அவரது செல்பேசியை வாங்கி, அதில் காணப்படும் பல்வேறு பனையோலை பொருட்களை பிரதியெடுக்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான் ஒருநாள் அழகிய காலணி ஒன்றைச் செய்து காண்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த காலணி எனக்கு பிடித்துப்போயிற்று. பனையோலையிலேயும் பனம் பத்தையிலேயும் காலணி போட்டு செல்லவேண்டும் என்பது எனது வெகுநாளைய விருப்பம். முற்காலங்களில் பனை ஓலையிலேயே எளிய மனிதர்கள் காலணிகளை செய்து புழங்கியிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட எனது சகோதரி அவ்விதமான காலணிகளை மார்த்தண்டம் சந்தைக்கு பொருட்களை சுமந்துவரும் எளிய மனிதர்கள் போட்டிருப்பதை தான் பார்த்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இவ்வித காலணிகள் நிமிடத்தில் செய்யகூடியது. ஒருநாள் பயணத்திற்கானது. அது போலவே முட்காடுகளில் இருந்து தங்கள் கால்களைப் பாதுகாக்க பனையேறிகள் இவ்விதமான பனை ஓலை செருப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் தங்கியிருக்கையில், எங்கள் வீட்டின் அருகில் அருணாச்சலம் எனும் பெரியவர் எனக்கு அவ்விதமான ஒரு செருப்பை செய்து கொடுத்தார். அந்த செருப்பை போட்டுக்கொண்டு நாகர்கோவில் வரை போய் வந்தேன். அதைக் குறித்து இந்துவில் நான் எழுதியபோது, தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வித செருப்பு கிடைக்குமா என்று ஒரு சித்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு கேட்டார். நமது வாழ்க்கையில் நாம் இழந்தைவகளுள் அனேகம் நமது வறட்டு கவுரவத்தால் தான். பிறர் நம்மைக்குறித்து  என்ன நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் இழந்தைவைகள் அதிகம். பனை சார்ந்த பொருட்கள், நமக்கு அதிக செலவு வைக்காதவைகள். சூழியலை மாசு படுத்தாதவைகள். ஒருவகையில், பனை சார்ந்த பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், அதன் மூலமாக  தோல் பதனிடும் ஆலைகளின் பெருக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம். நமது நிலம் கெட்டுப்போயிருக்காது. எண்ணற்றோர், வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

பாரம்பரியமாக இங்கே தயாரிக்கப்பட்ட பனையோலை  செருப்பிற்கும் இளவரசி தயாரித்த செருப்பிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தென் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓலைகள் பாய்போல சமதளமாக பின்னப்பட்டு பனை நார் கொண்டு வார் அமைக்கப்பட்டிருக்கும். இளவரசி செய்ததோ படகு போன்ற ஓர் வடிவம். தனியாக வார் தேவைப்படாமல் கால்களை பின்னல்களுக்குள் நுழைக்கும் ஒரு அமைப்பு. நாம் தற்காலங்களில் அணியும் கட் ஷூவை ஒத்திருந்தது. ஆகவே இது ஒரு இந்திய தயாரிப்பு போல் இல்லாதத்தால், எங்கிருந்து இதனைக் கற்றாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் ஒரு ருஷ்ய இணையதளத்தை காண்பித்தாள். அரண்டுபோனேன். அப்படியே ஓலைகளில் பின்னப்பட்ட அழகிய காலணிகள் செய்யப்பட்டிருப்பதைப் அந்த தளத்தில் பார்த்தேன். நம்பவே முடியவில்லை! ருஷ்யாவில் எப்படி ஓலைகள் கிடைக்கும்? ஆகவே எந்த இயற்கைப் பொருளைக் கொண்டு அதனை தயாரித்திருக்கிறார்கள் என தேட ஆரம்பித்தேன். 

ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளில் பாஸ்ட் (Bast) வகை காலணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இவைகள் டிலியா (Tilia) வகை மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தின் வெளிப்புற பட்டையை  நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பட்டைகளை உரிந்து இதனைச் செய்கிறார்கள். ருஷ்ய மொழியில் ஒரு ஜோடு என்பதை “லாப்டி” என்றும் ஒற்றைச் செருப்பை லாப்டோ என்றும் அழைக்கிறார்கள்.  இவைகள் ஏழைகளாலும் குடியானவர்களாலும் பயன்படுத்தப்பட்டதாலும், இதன் வாழ்நாள் குறுகியதாலும், பின்னாளில் வசை சொற்களாகவும் பயன்பட்டன. அது அப்படித்தான், உலகெங்கும் திறன் மிக்கவர்களை வசை சொற்களால் அழைப்பது என்பது மேட்டுக்குடித்தனம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலம் அது.

Image
ருஷ்யாவில் தயாரிக்கப்படும் பாஸ்ட் மரப்பட்டையில் தயாரிக்கபடும் காலணிகள்

ஒவ்வொரு மனிதனும் இவ்வித காலணிகள் செய்ய கற்றிருப்பர். பெரும்பாலும் ஆண்களே இதனைச் செய்வர். பெண்கள் யாரேனும் செய்யக் கற்றிருந்தால் குடும்பத்தில் அவர்களுக்கு பெருத்த மரியாதை இருக்கும் என்பதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் இவைகளை செய்ய கற்றுக்கொள்ளும்போது முதல் காலணியை நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை நீரில் கலக்கி அவர்களுக்கு குடிக்க கொடுப்பார்களாம். இவ்விதமாக செய்வது கற்பவரை மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர் ஆக்குகிறது. மேலும், பல்வேறு பழமொழிகள் ருஷ்ய வாழ்வில் கலணிகள் பின்னுவது மிகவும் எளிதான ஒன்று என்பதையே சுட்டி நிற்கின்றன.

பழைய காலணிகளை வேலியோரத்தில் தொங்கவிடும் வழக்கம் கூட அங்கே இருக்கிறது. அனைத்து தீய சக்திகளும் அண்டாமல் இருக்க இவ்விதம் செய்யும்வழக்கம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். இவ்விதம் செய்யும் காலணிகளை குப்பையில் போடமாட்டார்கள் என்பதே அவைகளை செய்வோர் அவைகளுக்கு அளிக்கும் மரியாதை என்பதாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வித செருப்புகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவ்வித காலணிகள் செய்யக்கூடிய பழைமையான மர அச்சு தொல்லியல் நிபுணர்களால் கண்டடையப்பட்டிருக்கிறது. சுமார் 4900 வருட பழைமையான இவ்வித அச்சு, பழங்காலத்தில் எப்படி இதனை பயன்படுத்தி காலணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்க்த்டும். உலகம் முழுக்கவே தாவரங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வெறுங்கால்களை கொண்டு நடக்க சிரமமாக இருந்தபோது இவ்வித கண்டுபிடுப்புகள் எழுந்க்டிருக்கலாம். புதிய கற்காலத்தைச் சார்ந்த இவ்வித காலணிகளின் பயன்பாடு, தமிழகத்திலும், இந்திய நிலப்பரப்பிலும் இருந்திருக்கலாம் என்பதை தெளிவுற உணர்த்துகின்றன. பனையோடு கூடிய தொடர்புகள் நமக்கும் பனை ஓலை காலணிகள் பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதை விளக்குவதாக அமைகிறது.

இவ்விதம் மரப்பட்டைகளில் செய்யும் செருப்புகளோடு அவர்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வேறு சில பொருட்களையும் தயாரித்து பயன்படுத்த துவங்கினர். அவைகளில் பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் பையும், தொப்பியும் மிக முக்கியமானவைகள். இளவரசி, அங்கிருந்து தான் இந்த தொப்பியைக் கண்டடைந்தாள்.

Image
பனையோலை தொப்பியும் பனையோலை திருமறை பையும் இரயிலில் அழகுற காட்சிபடுத்தியபோது

அது மாத்திரம் அல்ல இந்த தொப்பிக்கு வேறு ஒரு முக்கியத்துவம் கூட இருக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் நாம் காணும் நான்கு முக்கு கொண்ட பெட்டி அல்ல இது. இதற்கு 12 முக்குகள் இருக்கின்றன. அதுவே இதனை சிறப்புக்குறிய ஒன்றாக முன்னிறுத்துகிறது. பனை ஓலைகளில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு சூத்திரம் கொண்டது. பெரும்பாலும் ஒன்றுபோல தென்பட்டாலும், இவைகளுக்குள் ஒரு சில மாறுதல்கள் காணப்படும். அது புதியவர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  அந்த திடீர் திருப்பங்களுக்கு புதியவர்கள் திகைத்து நின்றுவிடுவார்கள். ஆனால் பழகியவர்களுக்கு அது ஊட்டி மலைப்பாதை போல. ரசித்து ஓட்டலாம். இளவரசி எதைச் செய்தாலும் அது திகைப்பூட்டும் அளவிற்கு அழகுடனிருக்கும். எப்படி இதனைச் செய்தீர்கள் எனக் கேட்டால், “அது ஈசிதான் பாஸ்ட்ரைய்யா” என்பாள். ஆனால் முதல் முறையாக எனக்கு அவள் செய்து தந்த தொப்பியைக் காட்டி கேட்டபோது “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றாள். இளவரசிக்கே சிரமமாக இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருமுறை நான் ஒரிசா சென்றபோது அங்கிருந்த துறவிகள் வாழ்வில் பனையோலைகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.  ஒரு ஜாண் அளவேயுள்ள ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் கயிற்றினை நுழைத்து, அவர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  சிறிய நீள்சதுரமான பெட்டி. அங்கிருந்த துறவிகளிடம் பழைமையான ஒரு பெட்டியை வாங்கி அதைப்போல செய்ய இயலுமா என குமரி மாவட்டத்திலுள்ள சில நண்பர்களைக் கேட்டேன். அனேகருக்கு தெரியவில்லை. இறுதியாக பல்வேறு வகைகளில் முடையும் திறன்கொண்ட பெண்கள் அமைப்பு ஒன்றைக் கண்டு அவர்களிடம் இதைப்போல் செய்துகொடுங்கள் எனக்கோரினேன்.  அவர்கள் பலவாறாக முடைந்து பார்த்துவிட்டு, இயலாது என கைவிரித்துவிட்டார்கள். ஏன் என நான் கேட்கவே “முக்கு எங்கே திருப்பவேண்டும் எனத் தெரியவில்லை” என்று தான் கூறினார்கள்.  அப்போதுதான் மொட்டைவிளை செல்லையா தாத்தாவைப் பார்த்தேன். எனது எம் எஸ் எல் 8537 புல்லட் வாகனத்திற்கு இருக்கையினைச் செய்து கொடுத்தவர் அவர்.   செய்துவிடலாம் என்றார். குமரி மாவட்டத்தில் இவ்விதமான ஒரு வடிவம் இதற்கு முன்பு இருந்ததில்லை. அவர் முயன்று  இவ்விதமான ஒரு அழகிய துறவிப்பெட்டியினைச் செய்து கொடுத்தார். மீண்டும் ஒரு தருணத்தில், இது போல செய்ய சிரமப்பட்ட அதே  பெண்களுக்கு இதனை எப்படி செய்ய வேண்டும் என சிறு கணக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் இலகுவில் பிடித்துக்கொண்டனர். அது அப்படித்தான், ஒவ்வொரு பொருளைச் செய்யவும் அதற்கான சூட்சுமம் இருக்கின்றது.

நான் பார்த்தவரையில்  பெரும்பாலும் பாரம்பரிய பொருட்கள் செய்யும் எவருமே மூன்று பொருட்களுக்கு மேல் செய்வதில்லை. பல பொருட்கள் செய்யத் தெரிந்திருந்தாலும், ஒன்றிரண்டு பொருட்களுக்குள் அவர்கள் தயாரிப்பவை நின்றுவிடும். ஏனென்றால், வேகம் தாம் இதில் முக்கியம். குறைவான கூலி கிடைக்கையில், வேகமாக செய்து கொடுக்கும் பொருட்களால்தான் ஏதேனும் குறைந்தபட்ச சம்பாத்தியத்தை இவர்களுக்கு உறுதி செய்யும். மேற்கத்திய நாடுகளைப்போல் தனித்த வடிவமைப்புகளுக்கான மதிப்பு இங்கே கிடையாது. பனையோலைக் கலைஞர்களை ஏமாற்ற முடியுமா? அல்லது சுரண்டிக்கொழுக்க முடியுமா? என்று அலைகின்ற மக்களே அதிகம்.

ஆகவே தான் நான் பனை ஓலைப் பொருட்களை விற்பனை செய்வதை முன்னிறுத்தாமல், பனை சார்ந்த பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். பனையோலைப் பொருட்களைச் செய்கிறவர்கள், அதில் உறைந்திருக்கும் திறன் சார்ந்த “மதிப்பை” உணர்ந்தார்கள் என்றால், பனை ஓலைகளை விலைகொடுத்து வாங்கி காப்பாற்றும் செயலைவிட அதன் ஆழ்ந்த கலைதன்மையை அறிந்து பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விழைவார்கள்.

என்னிடமிருந்த  ஒவ்வொரு பொருளையும் எடுத்து நான் இரயிலில் வைத்து அழகு பார்த்தேன். பனை இரயில் என்பது எப்படி இருக்கும்? என எனது கற்பனையை ஓட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பனை ஓலை கைவினைஞர்களை தெரிவு செய்து அவர்களை இணைத்து எடுத்துச் செல்லும் ஒரு இந்திய பயணமாக அது இருக்கவேண்டும் என எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் செய்யும் பாரம்பரிய பொருட்களை வைக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டி ஒதுக்கப்படவேண்டும். அந்த பெட்டிகளில் ஒவ்வொரு பொருளின் அருகிலும் அப்பொருளினைக் குறித்த சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். முடிந்தால், பல்மொழிகளில் அந்த பொருள் குறித்த ஒலிக்கோர்ப்பு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். கண் தெரியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வாய் பேசாதவர்களுக்காக பனை சார்ந்த கலாச்சாரத்தை விளக்கும் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கலைஞர்கள் ஓலையில் பொருட்களை செய்து காட்சிக்கு வைப்பது சிறப்பாக இருக்கும்.   ஒரு உணவு பெட்டி, பனை உணவுகளை விற்கும்படியாகவும், ஒரு பெட்டி பனையோலை சார்ந்த பொருட்களை விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மிகப்பெரிய இலாபம் கிடக்கவில்லை என்றாலும், இவ்வித முயற்சிகள் இரயில்வே துறை தனது சமூக பங்களிப்பாக சூழியலுக்காகவும் சமூக நல்லைணக்கத்திற்காகவும், கிராமிய பொருளியலை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய துணைக் கண்டத்தின் பல்முனைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். அவ்வகையில் இரயில்வே மிகப்பெரும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவதால்,  துண்டுபட்டுகிடக்கும் சமூகங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க இயலும். காலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.

ஓலைச் சுவடிகள் முதல் இன்றைய நவீன பயன்பாட்டிற்கான பொருட்கள் வரை வைக்கப்பட்டிருக்கும் ஒரு இரயில் இயக்கப்படுமென்றால், பனை மரங்களைக் காக்கும் ஒரு பணியினை இந்திய இரயில்வே சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது எனக் கொள்ள இயலும். பரீட்சார்த்த முறையில் ஒரிரு பெட்டிகளை மட்டுமாவது இணைத்து ஏதேனும் ஒரு மாநிலம் இவ்வித முயற்சிகளை முன்னெடுக்கலாம். தமிழகம், ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற இடங்கள் வெள்ளோட்டத்திற்கு தகுதியானவைகள். இரயில் பெட்டிகளில் ஒவ்வொரு மாநில பனையேறிகள் குறித்த படங்களும், பெரும்பான்மையாக காணப்படும் பனை சார்ந்த பொருட்களை காண்பிக்கும் படங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் பெட்டிகளை அமைக்கலாம். சிறப்பு இருக்கைகளையும் படுக்கைகளையும் பனை நார் கொண்டு அமைக்கலாம்.  மூன்று வருடம் மட்டும் முன்னெடுக்கும் இவ்வித முயற்சிகளால் இந்திய நிலம் முழுக்க பனை ஓலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் அதே வேளையில் நெகிழிக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாகவும் இந்திய இரயில்வே இவைகளை செய்யலாம். கூடவே பனை விதைகளை வழங்கவும் இரயில்வே நிலங்களுக்குள் பனை விதைகளை நடுவதற்கும் இவ்வித இரயில்கள் பயன்படக்கூடும்.

தற்பொழுது சர்வதேச சுற்றுலா வீழ்சியடைந்து இருக்கும் சூழலில் இவ்விதமான உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பது பயன் தரும் ஒன்றாக இருக்கும். காதி, அந்தந்த மாநில சுற்றுலாதுறை மற்றும் இரயில்வே இணைந்து இந்திய நிலமெங்கும் பரவி விரிந்திருக்கும் கலைஞர்களை முன்னிறுத்திக் கூட இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்கலாம். இயற்கை சார்ந்தும் பாரம்பரிய அறிவு சார்ந்தும் இயங்கும் எண்ணம் கொண்டவர்கள் பெருகியிருக்கும் சூழலில் இவ்வித யாத்திரைகள் நவீன புண்ணிய யாத்திரைகளாக கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பனை சார்ந்த பொருட்களை எனது பயணத்தில் எடுத்துச் செல்லுவதை முக்கியம் என கருதுகிறேன். ஏனென்றால், எனது பயணத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே எனக்கு இப்பொருட்கள் புதிய நண்பர்களையும், நான் செல்லும் இடங்களில் இருக்கும் பனை சார்ந்த மக்களுடன் ஒரு நெருக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பனை ஓலைகளை என்னுடன் எடுத்துச் செல்லும்போது அது ஒரு அறைகூவலாக மாறிவிடுகிறது. பிறருக்கும் அப்படியான ஒரு வாழ்கைமுறை மீது பிடிப்பு ஏற்பட இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கிறது.

Image
நான் மித்திரன் மற்றும் ஆரோன், பனையோலை தொப்பியுடன் இரயில் பயணத்தில்

இன்றைக்கு கிடைக்கும் பல்வேறு பனை ஓலைப் பொருட்கள்  பெரும்பாலும் அழகு பொருட்களாகவே முன்னிறுத்தப்படுகிறது. அவைகளில் காணப்படும்  ஒரே பிரச்சனை என்னவென்றால், இவ்வித அழகு பொருட்கள் நெடுநாள் பயன்பாட்டிற்கு உரியதாக இல்லாமல், மேஜை அலங்காரமாக அமர்ந்துவிடுகிறதைப் பார்க்கிறோம். இவ்விதமான பொருட்களை விட, அன்றாடம் பயன்பாட்டில் நிலவும் பொருட்களே தேவையாக இருக்கின்றன. அதுவே பனை சார்ந்த ஒரு இயக்கம் புத்தெழுச்சியுடன் எழும்புகிறது என்பதை வெளிப்படுத்தும்  குறியீடாக அமையும். 

இரயில் பன்வேல் என்ற இரயில் நிலையத்தைக் கடக்கும்போது ரசாயினி எப்பொழுது வரும் என ஆவலுடன் வெளியே பார்த்தபடி வந்தேன். பன்வேல் மும்பையின் எல்லை. அதனைத் தொடர்ந்து வருவது சிறு நகரங்களும், கிராமங்களும் காடுகளும்தான்.  பசுமையான மலைகள் சூழப்பட்ட இடங்களில் பனை மரங்கள் நெடிந்துயர்ந்து நின்றுகொண்டிருந்தன. ரசாயினி நடை மேடையில் நின்ற பனை மரத்தை நான் கவனிக்கவில்லை. வெட்டிவிட்டார்களோ? இல்லை நான் தான் சரியாக பார்க்கவில்லையோ? ஆனால் அங்கிருந்த பனைமரத்தைச் சுற்றியிருந்த ஆலமரம் அப்படியே விரிந்து பரந்து இருந்தது. ரசாயினி எனது பனை மரச் சாலையின் துவக்கம் என்பதால் அதனைக் கடந்து செல்லும்போது எனக்குள் குதூகலித்து குழந்தையாவதை தடுக்க இயலவில்லை.

Image
ரசாயனி இரயில் நிலையத்தில் பனைமரத்தை சுற்றியிருக்கும் ஆலமரம்

பனை மரத்தில் பற்றிப்பிடிக்கும் மரங்கள் அனேகம் உண்டு. ஆலமரம் அரசமரம் என அனைத்துமே ஃபைகஸ் (Ficus) குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரே பகுதிகளிலும் இவ்விதமாக மரங்களுக்குள் ஏற்படும் பிணைப்புகளை அதிகம் காண முடிந்தது. ஏனென்றால் பனை மரங்கள் பயன்பாட்டை விட்டு விலகும்போது அவைகளைப் பற்றிப்பிடிக்கும் மரங்கள் நிலைகொள்ளுவதை தவிர்க்க இயலாது. மரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இவ்வித தன்மைகள் இடத்தை பேணிக்கொள்ளவும், நமது உள்ளூர் மரங்களை இணைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும். 

பென் (Pen) என்னும் இடம் வரைக்கும் பனை மரங்கள் எங்களுடன் இணைந்து வந்துகொண்டிருந்தன அதன் பின்பு பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன.

மறுநாள் காலை இரயில் மங்களூரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கீழிறங்கி பார்த்தபோது தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. காலை  பொழுது அத்துணை மகிழ்வளிக்கும் ஒன்றாக மாறிவிடும் என நான் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. நான் பெங்களூரில்  ஐந்து வருடங்கள் படித்திருந்தாலும்  கர்நாடகாவில் பனை மரங்களை பெருமளவில் காண இயலவில்லை. பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் இரயில் வழித்தடத்தில் கோலார் பகுதியைக் கடக்கும்போதுதான்  பனை மரங்கள் காணப்படும். நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் ஓசூர் வரும் வழியிலும் பனை மரங்ளைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் கர்நாடகாவில் பெருமளவு பயணிக்காததால் பனை மரங்கள் எங்கே அதிகமாக இருக்கின்றன என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. மங்களூரின் அமைப்பு நாகர்கோவிலை ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே இக்காலை காட்சி பனை மரங்கள் இங்கே செழித்திருக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. இப்படி பனை மரங்கள் செழித்திருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவும், ஒவ்வொரு பயணியும் ஒரு பனை விதை நடுவதற்கான இடத்தையும் இரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பது மிகப்பிரம்மாண்ட சூழியல் பங்களிப்பை முன்னிறுத்துவதாக  அமையும். வெறும் இரயில் என்று தான் இல்லை, கப்பலோ, விமானமோ, பேருந்தோ அல்லது சிற்றுந்தோ பனை விழிப்புணர்வுக்காக எதுவும் பயன்படலாம். இவ்விதமான ஒரு விழிப்புணர்வு, வரும் நாட்களில் பனை மரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

Image
மங்களூர் இரயில் நிலையத்தில் பனை மரங்கள்

பனை விதைகளை நான் கொடுப்பது குறித்து எனது அமெரிக்க தோழி பேராசிரியர். விட்னி இப்படி எழுதியிருந்தார்கள். உனது தொப்பி எனக்கு ஜானி ஆப்பிள்சீட் (John Appleseed) என்ற மனிதரை நினைவுறுத்துகிறது உனக்கு அவரைத் தெரியுமா என்றார். சத்தியமாக எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே “யார் அவர் எனக் கேட்டேன்”. எனக்கு ஒரு ஒளிப்பட இணைப்பை அளித்துவிட்டு  அவரைக் குறித்து சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள்.  ஜாண் சாப்மான் (John Copman) என்ற ஜானி ஆப்பிள்சீட், கையில் ஒரு ஆப்பிள் விதைகளாலான பை, மற்றொரு கையில் திருமறை, மேலும் அவரது தலையில் சமைப்பதற்கான பாத்திரத்தை தொப்பி போல கவிழ்த்து வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர். அமெரிக்காவில் உணவு பஞ்சத்தை உணர்ந்து ஆப்பிள் விதைகளை மக்கள் குடியேறும் பகுதிகளை கணித்து விதைத்த ஒரு மகான்.  இப்படி ஒரு மனிதர் இருந்தாரா அல்லது கற்பனைக் கதையா என்று சொல்லுமளவு அவரது வாழ்வு நாட்டுபுற கதைகளுடன் இணைந்தே இருக்கிறது.

ஜானி ஆப்பிள்சீட் பாடும் பாடல்

நீ தான் அவர். நீ செல்லுமிடங்களுக்கு பனை விதைகளை எடுத்துச் செல்லுகிறாய் இல்லையா? எனச் சொன்னார்கள். திடீரென அவர்கள் இப்படி சொன்னவுடன் நான் அயர்ந்துபோனேன். இப்படியான ஒரு பொருத்தப்பாட்டினை நான் எப்போதும் எண்ணியிருக்கவில்லை. ஒரு கையில் திருமறையும் மற்றொருகையில் பனை விதையும் இணைகோடுகளாகவே செல்லுவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இறைப்பணி என்பது பலவேளைகளில் எவ்வித சூழியல் பிரக்ஞையுமற்ற அற்பணிப்புமற்ற மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது.   அதில் சூழ்ந்திருக்கும் ஆபத்து நாம் உணராதது.

ஒரு காலத்தில் பனையேறிகள் குறித்து ஏளனமாக பேசிய சமூகம் இன்றுதான் கண்திறந்து பார்க்கிறது. பனை சார்ந்து இயங்கியவர்கள் காணாமல் போனதால் நமது உணவு பழக்கங்கள் மாறிப்போய்விட்டது. ஊரே இணைந்து இனிப்பு கருப்பட்டி தயாரித்தபோது இல்லாத சர்க்கரை நோய் நம்மை இன்று அச்சுறுத்துகிறது. ஊருக்குள் பெருகியிருக்கும் நோய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியிருக்கிறது.

இப்பயணம் எனக்கு முன்னால் எதனை முன்வைத்திருக்கிறது  என நான் உண்மையிலேயே அறியேன். ஆனால் கண்டிப்பாக பனை சார்ந்து இயங்கும் மக்களைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். ஏனென்றால், இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை ஆகவே, எப்படியாவது இவர்களை முன்னிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இன்று நாம் செய்யக்கூடுவது அது மட்டும்தான். 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தைவிட, தற்பொழுது பனை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பனை விதைப்போர், சேகரிப்போர் எண்ணிக்கை பலமடங்காக கூடியிருக்கிறது. பனை ஓலைப் பொருட்களைச் செய்யும் ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள். கருப்பட்டிக்கான விலை அதிகரித்திருக்கிறது. இதனை உயிர்ப்புடன் வைக்கவேண்டிய கட்டாயம் நம்மைச் சூழ இருக்கிறது என கண்டுகொண்டேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

[email protected] / 9080250653


Design a site like this with WordPress.com
தொடங்கவும்