எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 01, 2026

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17

 திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு



திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 17 க்கான பட முடிவு


அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

குத்து விளக்குக் கோலம் க்கான பட முடிவு   குத்து விளக்குக் கோலம் க்கான பட முடிவு
பொங்கல் பானை கோலம் போடலாம்.  ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது.  அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான்.  அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள்.  குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.

                 பொங்கல் பானை கோலம், க்கான பட முடிவு  பொங்கல் பானை கோலம், க்கான பட முடிவு

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள்.  மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது.  இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன  பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள்.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!= அம்பரம் என்றால் வானம் என்ற பொருள் மட்டுமில்லாமல் கடல், ஆடை, படுக்குமிடம் என்றும் வருகிறது. இங்கே எது பொருத்தம் என்று பார்த்தால் ஆடை பொருந்தும்னு நினைக்கிறேன். நந்தகோபன் அறம் செய்கிறானாம். அதுவும் எப்படிப்பட்ட அறம்? ஆடை, ஆபரணங்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், பசித்தவருக்குச் சோறு அளித்தல் என பலவகைப்பட்ட தானங்களையும் அளிக்கிறான். அதுவும் மனிதருக்கு முக்கியமான நீர், உணவு, ஆடை மூன்றையும் அளிக்கிறான். இப்படிப்பட்ட திவ்யமான கொடைகளைச் செய்யும் நந்தகோபனே , எழுந்திரப்பா என்கிறாள் ஆண்டாள்.

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!= ஆயர்குடிப் பெண்கள் அனைவருமே வஞ்சிக்கொடி போன்ற மென்மையான தேகம் படைத்தவர்கள் அவர்கள் அனைவரிலும் கொழுந்தைப்போன்ற மிக மென்மையான தேகம் படைத்த யசோதையே, அவளை குல விளக்கு என்றும் கூறுகிறாள். ஆயர் குலமே அவளால் பெருமை அடைந்ததன்றோ? ஆயர் குலத்து விளக்கான கண்ணனைப் பாலூட்டித் தாலாட்டி, குளிப்பாட்டிச் சீராட்டி வளர்த்தவள் அன்றோ? பெற்றவள் ஆன தேவகிக்கும் கிடைக்காத மாபெரும் பேறைப் பெற்றவள் குலவிளக்கல்லாமல் வேறு என்ன? எங்கள் பெருமாட்டியே, யசோதா, அதென்ன அறிவுறாய்?? கண்ணனின் தாயல்லவா அவள்? கண்ணன் அவளுக்கு எத்தனை முக்கியம்? அத்தகைய கண்ணனை ஆயர்குலப் பெண்களுக்காகத் தரச் சொல்லிக் கேட்கிறாள். எங்கள் கஷ்டத்தைப் பெண்ணான நீயே புரிந்து கொள்ளவேண்டாமா தாயே! கண்ணனை எங்களோடு அனுப்பி வைப்பாய்!

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!= இங்கே வரும் அம்பரம் வானத்தையே சுட்டும். அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமான் என்கிறாள் ஆண்டாள். மஹாபலியிடம் தானம் கேட்ட கதை ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? தானம் தந்தேன் என்று மஹாபலி தாரை வார்க்கும் நீரைப் பெற்றுக்கொள்ளும் முன்னே ஒரு காலானது விண்ணையும் தாண்டி ஏழு உலகங்களையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி ஓங்கிக் காலை வைத்து உலகளந்த உத்தமன் என்று கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய உத்தமனே எழுந்திரப்பா! என்கிறாள். ஆனால் கண்ணனோ பலராமன் அருகே படுத்திருக்க அண்ணனைக் கட்டிக்கொண்டல்லவோ படுத்திருக்கிறான்?? அடடா? மறந்துட்டோமே,

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!=கருநீல நிறக் கண்ணனை அணைத்துப் படுத்திருக்கும் பலராமனோ சிவந்த நிறம் படைத்தவன். செம்பொன்னைப் போல் சிவந்த அவன் திருப்பாதங்களைப் பார்த்துக்கொண்டே அத்தகைய பொலிவு படைத்த பாதங்களை உடைய பலராமா, பலதேவரே, எங்கள் செல்வரே, உன் தம்பியோடு தூங்குகிறாயே? தம்பியையும் எழுப்பிட்டு நீயும் எழுந்திரப்பா என்கிறாள்.

இங்கே கண்ணனே உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என ஏற்கெனவே ஆழ்வார் கூறியபடி கண்ணனே எங்களுக்கு ஆடை, கண்ணனே எங்களுக்குச் சோறு, கண்ணனே எங்களுக்குத் தண்ணீர் என்று கூறி இருப்பதாயும் பொருள் கொள்ளலாம். இப்படி அனைத்திலும் கண்ணனைக் காணும் ஆண்டாளைப்போல் பட்டத்திரி கூறுவது:

த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயமிதம் த்ரயக்ஷரஸ்யைக வாச்யம்
த்ரீஸாநாமைக்ய ரூபம் த்ரிபிரபி நிகமைர் கீயமாந ஸ்வரூபம்
திஸ்ரோவஸ்த்தா விதந்தம் த்ரியுகஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்த விஸ்வம்
த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹமநிசம் யோக பேதைர்பஜே த்வாம்

மஹாவிஷ்ணுவே முக்குணங்களின் வடிவானவர். மூவுலகையும் அவரே தோற்றுவிக்கிறார். ஓங்காரப் பொருளும் அவரே. மும்மூர்த்திகளும் அவருள்ளே அடக்கம். மூன்று வேதங்களும் அவரைப் போற்றுகின்றன. மூன்று அவஸ்தைகளையும் அவரே அறிவார். மூன்று யுகங்களிலும் அடுத்தடுத்து அவதரிப்பவரும் அவரே. இவரே மூன்று அடிகளால் இவ்வுலகையும் அளந்தார். மூன்று காலங்களிலும் மாறுபடாதவர் இவரே. இப்படி மூன்று என்ற எண்ணிக்கையுடன் கூடிய இவருக்கு என் மூன்று யோகங்களாலும் நமஸ்காரம்.

படங்களுக்கு நன்றி கூகிளார்!

Wednesday, December 31, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16

  திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு   திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு


திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.

கோலம், க்கான பட முடிவு   கோலம், க்கான பட முடிவு
                                                                                       
கோலம், க்கான பட முடிவு


படங்களுக்கு நன்றி கூகிளார்

கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும்,  அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும்  வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.  துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.

 கண்ணனின்  இருப்பிடமோ வைகுந்தம்.  அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.  வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.  நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள்.  குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான்.  ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.

மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!

அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.

நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.

கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.

மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்
தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி
பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ

ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!

 இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் முன் கூட்டிய   இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

கீதா & சாம்பசிவம்

இன்றைய பதினாறாம் நாள் பதிவை நான் இணையத் தளத்தில் கவனக்குறைவால் நேற்றே ஏற்ற முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும். :(

நாளை பிறக்கப் போகும் புத்தாண்டிற்கு நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள். 

Tuesday, December 30, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15

 திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு


திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!


கிளி கோலங்கள், க்கான பட முடிவு கிளி கோலங்கள், க்கான பட முடிவு
           

 கிளி கோலங்கள், க்கான பட முடிவு யானை கோலங்கள் க்கான பட முடிவு

 யானை கோலங்கள் க்கான பட முடிவு

கோலங்கள், திருப்பாவைப் படங்களுக்கு நன்றி கூகிளார்!

தோழியைக் கடுமையாக அழைத்தும் அவள் வரவில்லை.  ஆகையால் கிளியைப் போல் மழலை பேசுபவளே என அழைக்கிறாள்.  ஆனால் இப்போது தான் கண் விழித்த அந்தத் தோழி இதையே கடுமையாகப் பேசுவதாய்க் குறை கூறிவிட்டு, என்னை மட்டும் தான் எழுப்புகிறீர்கள்.  எல்லோரும் வந்துவிட்டனரா எனக் கேட்க வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றனர் தோழியர். இங்கே வல்லானைக் கொன்றானை என்பது குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றதைக் குறிக்கும்.  மாற்றாரை மாற்றழிக்க என்பது தன் எதிரிகளை எல்லாம் கண்ணன் அழித்ததைக் குறிக்கும்.

தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன் என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள்.  அதோடு இரு தரப்பாரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலுடன் தோழியை அழைப்பது முடிந்தும் விடுகிறது.


எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!

சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும்.

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடைஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள்.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,


வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்.

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே.

இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.

இப்படி பகவான் நாமத்தின் மகிமை பற்றி பட்டத்திரி கூறும்போது இவ்வுலகையே படைத்த விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லாமல் அவனிடம் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்கிறார்.

ஹே லோகா விஷ்ணுரேதத் புவநமஜநயத் தந்ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்த்ரஸ்த்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம்
நீஹார ப்ரக்க்ய மாயா பரிவ்ருத மநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யைக த்ருப்தாஸ்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே

இந்த உலகை சிருஷ்டித்தது அந்த மஹாவிஷ்ணு தான், மக்களே, இதை யாருமே புரிந்துகொள்ளவில்லையே; அவன் உருவம், ரூப செளந்தர்யம் இத்தகையது என எவராலும் விளக்கமுடியாமல் இருக்கிறது. அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்.