UYIRI

Nature writing in Tamil

Archive for November 2022

நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

நீலகிரி நெட்டைக்காலி Nilgiri Pipit Anthus nilghiriensisVulnerable

Image
Nilgiri Pipit. Photo: P Jeganathan, CC BY-SA 4.0, via Wikimedia Commons

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் உச்சியில் (சுமார் 1500- 2000மீ உயரம் வரை) உள்ள புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. வெளிர் மஞ்சள் நிற உடலில் பழுப்பு வரிகளைக் கொண்டிருக்கும் சிறிய பறவை. புற்களினுடே நடந்து அல்லது ஓடிச் சென்று இரைதேடும்.

மலையுச்சிப் புல்வெளிகளில் சாலை அமைத்தல், அதிக அளவில் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines) அமைத்தல், பரவும் வந்தேறித் தாவரங்களின் (Invasive Alien Plants) பெருக்கம், வாழிடம் துண்டாதல், சீரழித்தல் காரணமாக இவை ஒரு காலத்தில் காணப்பட்ட இடங்களில் இருந்து மறைந்தும், இப்போது இருக்கும் இடங்களிலும் மேற்சொன்ன காரணங்களால் எண்ணிக்கையில் குறைந்தும் வருகின்றன. மலையுச்சிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.

Written by P Jeganathan

November 30, 2022 at 10:00 am

காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

காஷ்மீர் பூச்சிபிடிப்பான் Kashmir Flycatcher Ficedula subrubraVulnerable

Image
Kashmir Flycatcher. Photo: Bhargav Dwaraki, CC BY-SA 3.0, via Wikimedia Commons.

இமயமலைத் தொடரில் குறிப்பாக ஜம்மு காஷ்மிர் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் (சுமார் 1800-2300 மீ உயரத்தில்) இவை குளிர் காலத்தில் அங்கிருந்து தெற்கு நோக்கி வலசை வருகின்றன. தமிழ்நாட்டில் ஊட்டியை அடுத்த  பகுதிகளில்  இவை வலசை வரும் காலங்களில் பொதுவாகக் காணலாம். இவை மேலும் தெற்கு நோக்கி இலங்கைக்கு வலசை போகின்றன. இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் காடழிப்பு, வாழிடம் சீரழித்தல் மலையுச்சிகளில் நிலவும்  காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பாதிப்புகளுக்குக் ஆளாகக்கூடும்.

Written by P Jeganathan

November 29, 2022 at 10:00 am

சோலைச் சிட்டு White-bellied blue robin

with 2 comments

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

சோலைச் சிட்டு White-bellied blue robin Sholicola albiventrisVulnerable

Image
White-bellied blue robin. Photo: Kalyan Varma, CC BY-SA 4.0, via Wikimedia Commons

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலையுச்சியில் உள்ள (1000மீ – 2200மீ) சோலைக் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பாலக்காடு கனவாய்க்குக் தெற்கே உள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே தென்படும். நீலகிரி மலைப்பகுதியில்  தென்படும் நீலகிரி சோலைச்சிட்டு (Nilgiri Blue Robin Sholicola major) ஒரு காலத்தில் இப்பறவையின் உள்ளினமாக (sub species) கருதப்பட்டது. ஆனால், மரபியல் சார்ந்த (Genetic) இனவரலாற்று (Phylogenic) ஆராய்ச்சியின் விளைவாக நீலகிரி சோலைச்சிட்டு தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.

இதன் உடல் முழுவதும் கரு நீல நிறத்திலும், வயிறும் வாலடியும் வெள்ளை நிறத்திலும், உடலின் பக்கவாட்டுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் இருக்கும். நெற்றியில் வெள்ளைக் கீற்று இருக்கும். சோலைச்சிட்டு பொதுவாக சோலைக்காடுகள் அதனை ஒட்டி அமைந்துள்ள காடுகளில் உள்ள ஓடையோரப் பகுதிகளில் தென்படும். இதன் குரல் இனிமையாக இருக்கும்.

இவற்றின் வாழ்விடங்களான சோலைக்காடுகள் மற்றும் அதனை அடுத்த பகுதிகள் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக (வனப்பகுதியில் சாலைகள் அமைத்தல், நீர்மின் திட்டங்கள், ஓரினத் தோட்டப் பயிர்களுக்காக வனப்பகுதிகள் திருத்தி அமைக்கப்படுதல் முதலான) திருத்தியமைக்கப்படுவதால் இவற்றின் வாழிடம் சீரழிவுக்குள்ளாகியும்,   ஆபத்துக்குள்ளாகியும் உள்ளது. ஆகவே இவற்றின் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகின்றது.

Written by P Jeganathan

November 28, 2022 at 10:00 am

பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush

with 2 comments

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

பொதிகைமலை சிரிப்பான் Ashambu Laughingthrush Montecincla meridionalisVulnerable

Image
Ashambu laughingthrush. Photo: Seshadri.K.S, CC BY-SA 3.0, via Wikimedia Commons

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் தென் கோடியில் உள்ள பொதிகை மலைப் பகுதியின் உச்சிகளில் மட்டுமே தென்படும் அரிய ஓரிடவாழ்வி. இவை குரலெழுப்பும் விதம் சிரிப்பதைப் போலிருப்பதால் இப்பெயர் பெற்றன. இதற்கு முன் இவை Kerala Laughingthrushன் (கேரளா சிரிப்பான்) உள்ளினமாகக் கருதப்பட்டது. எனினும் மரபியல் சார்ந்த, இனவரலாற்று ஆராய்ச்சியின் விளைவாக இது தற்போது தனி இனமாக அறியப்படுகிறது.

இவை மலையுச்சிப் பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளில், மழைக்காடுகளில், அதனையடுத்த தேயிலை தோட்டங்கள் முதலிய பகுதிகளில் தென்படுகின்றன. குறுகிய பரவல், வாழிட இழப்பு மற்றும் சீரழித்தல்,  மலையுச்சிகளில் நிலவும்  காலநிலை (Climate Change) மாற்றம் ஆகிய காரணங்களால் இவை அதிக   பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.

Written by P Jeganathan

November 27, 2022 at 10:00 am

மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul

with 2 comments

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

மஞ்சள்தொண்டை சின்னான் Yellow-throated Bulbul Pycnonotus xantholaemusVulnerable

Image
Yellow-throated Bulbul. Photo: Kalyan Varma, CC BY-SA 4.0. via Wikimedia Commons

இந்தியாவில் மட்டுமே குறிப்பாக, தென்னிந்தியாவில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. புதர்களும், கரடு முரடான பாறைகளும் நிறைந்த இடங்களிலும் அதனையடுத்த வனப்பகுதிகளிலும் இவை அதிகம் தென்படும். அத்தி மரங்கள் பழுத்த நிலையில் அவற்றை உண்ண இப்பறவைகள் வருவதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (பெரும்பாலும் அடிவாரப் பகுதிகளில்) கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் (செஞ்சிக் கோட்டையில்) இவற்றை எளிதில் காணலாம். புதர்க்காடுகளை அழித்தல், பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தல், வாழிடத்தைச் சீரழித்தல் முதலான காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.

Written by P Jeganathan

November 26, 2022 at 10:00 am

கருமீசை புல்குருவி Bristled Grassbird

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

கருமீசை புல்குருவி Bristled Grassbird Chaetornis striataVulnerable

Image
Bristled Grassbird. Photo: Gnanaskandan Kesavabharathi via eBird/Macaulay Library

உயரமான புற்களும், புதர்களும் உள்ள இடங்களிலும், புற்கள் உள்ள  ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் தெராய் நிலப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் (இமய மலை அடிவாரப் பகுதி) இவற்றைப் பொதுவாகக் காணலாம்.  இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே தென்படும் இவை, தமிழ் நாட்டிற்கு வலசை வருகின்றன. இவை இங்கே இருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே சென்னையை அடுத்த பகுதிகளில் இவை பதிவு செய்யப்பட்டன (பிப்ரவரி-ஏப்ரல் முதல் வாரம் வரை).  இவை வாழுமிடங்களை விவசாயத்திற்காகத் திருத்தி அமைத்தல், புல்வெளிகளைச் சீரழித்தல், அபரிமிதமாகக் கால்நடைகளை மேய்த்தல் போன்ற காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

Written by P Jeganathan

November 25, 2022 at 10:00 am

பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird

with 4 comments

தமிழ்நாட்டின் அற்றுப் போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

பட்டைவால் புல்குருவி Broad-tailed Grassbird Schoenicola platyurusVulnerable

Image
Broad-tailed Grassbird. Photo: Peshaveas, CC BY-SA 4.0, via Wikimedia Commons

கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலையுச்சி புல்வெளிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வி. இவை பரவியிருக்கும் பகுதிகளில் பல்வேறு  மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதாலும், ஓரினப்பயிர்களுக்காக அழிக்கப்படுவதாலும், பரவும் வந்தேறித் தாவரங்களால் வாழிடம் கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்தும், சுருங்கியும் போவதாலும், வாழிடங்கள் துண்டாகிப்போவதாலும், இவை ஆபத்துக்குள்ளான பறவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

Written by P Jeganathan

November 24, 2022 at 10:00 am

வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

வெண்பிடரி பட்டாணிக்குருவி White-naped Tit Machlolophus nuchalisVulnerable

Image
White-naped tit. Photo: Dhaval Vargiya, CC BY-SA 4.0, via Wikimedia Commons

இந்தியாவில் மட்டுமே தென்படும் சிட்டுக்குருவியைவிடச் சிறிய பறவை. இவை ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், கடைசியாக தமிழ்நாட்டில், குறிப்பாக சத்தியமங்கலம், மசினகுடி ஆகிய பகுதிகளில்  தொடர்ச்சியற்றுப் பரவியுள்ளன. இவை இருக்கும் இடங்களில் கூட அரிதாகவே தென்படுகின்றன. இவை பொதுவாக புதர்க் காடுகளில் (வட மாநிலங்களில்), ஆற்றோர இலையுதிர்க் காடுகளிலும், புதர்க் காடுகளிலும் வசிக்கின்றன (தமிழ்நாட்டில்). அண்மையில் இவை சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாழிடம் அழிக்கப்படுவதாலும், சீர்கெட்டுப் போவதாலும், ஏற்கனவே தொடர்ச்சியற்று பரவியிருக்கும் இவற்றின் வாழிடம் மென்மேலும் பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களால் துண்டாகிப் போவதாலும் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

Written by P Jeganathan

November 23, 2022 at 10:00 am

கருந்தலை மீன்கொத்தி Black-capped Kingfisher 

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

கருந்தலை மீன்கொத்தி Black-capped kingfisher Halcyon pileataVulnerable

Image
Black-capped Kingfisher. Photo: Soumyajit Nandy, CC BY-SA 4.0, via Wikimedia Commons

தலை கறுப்பு. மார்பு மற்றும் கழுத்தைச் சுற்றி வெள்ளை நிறம் காணப்படும். உடலின் பக்கவாட்டிலும், வயிற்றுப் பகுதியும் செங்கல் பழுப்பு நிறம். அலகு பவள நிறம். இறக்கை, மேலுடல், வால் ஆகியவை ஊதா நிறம். தோள்பட்டையில் கறுப்பு நிற இறகுகள் இருக்கும். பறக்கும்போது இறக்கைகளில் உள்ள கறுப்பு நிறமும், வெள்ளைத் திட்டும் தெளிவாகத் தெரியும். பொதுவாக, கடலோரப் பகுதிகளில், குறிப்பாக அலையாத்திக் காடுகளில் தென்படும்.

இவை கொரியா, சீனா, வடக்கு இந்தோசீனா ஆகிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அக்டோபர்-நவம்பர் முதல் இந்தியா, இலங்கை, மியன்மார், மலேசியா, அந்தமான்-நிக்கோபார் தீவுகள், சுண்டா தீவுகள் முதலிய பகுதிகளுக்கு வலசைவந்து, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் திரும்பிச் செல்கின்றன.

இவை ஆறுகளின், ஓடைகளின் மணற்பாங்கான அல்லது மென்மையான மண்ணைக் கொண்ட, சரிவான அல்லது செங்குத்தான கரையோரங்களில் வங்கு குடைந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக இவை இனப்பெருக்கம் செய்யும் இதுபோன்ற வாழிடங்கள் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் (கரைகளை உயர்த்தி காங்க்ரீட் இடுதல் போன்ற செயல்பாடுகள்) வருவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்துள்ளது. மீன் வளர்ப்புக் குட்டைகள், பழத்தோட்டங்கள் முதலிய இடங்களின் மேலே (பறவைகளும், வௌவால்களும் வருவதைத் தடுக்க) கட்டிவைக்கப்படும் வலைகளில் சிக்கியும் இவை இறந்துபோவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written by P Jeganathan

November 22, 2022 at 10:00 am

இருவாச்சிகள் Hornbills

with one comment

தமிழ்நாட்டின் அற்றுப்போகும் அபாயத்தில் உள்ள பறவைகள்

இருவாச்சிகள் Hornbills

இருவாச்சி, இருவாசி, இருவாயன் என அறியப்படும் இந்தப் பறவைகள் உருவில் பெரியவை. இவை மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் தென்படும். அத்தி வகைப் பழங்களை (Ficus or Figs) விரும்பி உண்ணும். காட்டுப் பகுதிகளில் உள்ள பல வகையான பழங்களை உட்கொண்டு அவற்றின் விதைகளை பல்வேறு இடங்களுக்குப் பரப்புவதால் இவற்றை ஆங்கிலத்தில் ‘Farmers of the forest’ (காடுகளின் உழவர்கள்) என்பர். இருவாச்சிகளின் இனப்பெருக்கம் செய்யும் பண்பு அலாதியானது. பெண் பறவைகள் மரங்களில் உள்ள பொந்துகளில் புகுந்துகொண்டு  முட்டையிட்டு குஞ்சு பொரித்த  பின்னர் தான் வெளியே வரும். அதுவரை ஆண் பறவை பறந்து திரிந்து உணவு தேடி அதற்குக் கொடுக்கும். இந்தியாவில் ஒன்பது வகையான இருவாச்சிகள் உள்ளன.

பெரிய இருவாச்சி Great Hornbill Buceros bicornisVulnerable

Image
Great Hornbill. Photo: Angadachappa, CC BY-SA 4.0, via Wikimedia Commons

இந்தியப் பறவைகளிலேயே மிகவும் எழிலார்ந்த பறவைகளில் ஒன்று பெரிய இருவாச்சி. கறுப்பு உடலும், இறக்கையும், அதில் வெள்ளை, மஞ்சள் திட்டுகளும், மஞ்சள் கழுத்தும், வெள்ளையான வாலில் கறுப்புப் பட்டையும் இருக்கும். இவை அத்திப்பழங்களை விரும்பி உண்ணும். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த  காடுகளில் தென்படும். பொதுவாக ஜோடியாகத் திரியும். கூடுவைக்காத காலங்களில் கூட்டமாக ஓரிடத்தில் அடையும். காடுகளில் உள்ள பெரிய உயர்தோங்கிய மரங்களில் உள்ள இயற்கையான பொந்துகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். பெரும்பாலும் ஒரு பருவத்துக்கு  ஒரு முட்டையே இடும். பெண் பறவை மரப்பொந்துக்குள்  சென்று அதன் வாயிலை எச்சம், பழங்கள் முதலியவற்றைக் கொண்டு, தனது அலகு மட்டும் வெளியே தெரியும்படி அடைத்துவிடும். ஆண் பறவை இந்தக் காலங்களில் சுற்றியலைந்து இரை தேடி அடைகாக்கும் பெட்டைக்கு உணவூட்டும். முட்டை பொரிந்து குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்த பிறகு பெட்டையும் கூட்டைவிட்டு வெளியே வந்து கூட்டின் வாயிலை (குஞ்சின் அலகு மட்டும் வெளியே நீட்டும் அளவிற்கு வைத்து) சரிசெய்யும். பின்னர் ஆணும் பெட்டையும் சேர்ந்து கூட்டுக்குள் இருக்கும் குஞ்சு நன்கு வளரும்வரை அதற்கு உணவூட்டும். பறக்கும் அளவிற்கு வளர்ந்த பின் இளம்பறவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும். பின்னர் சில காலம் இது தனது பெற்றோர்களுடன் பறந்து திரிவதைக் காணலாம்.

காடழிப்பு, வாழ்விடச் சிதைவு, முக்கியமாக காடுகளில் உள்ள பெரிய மரங்களை வெட்டுவதாலும், திருட்டு வேட்டைகளாலும்  இவை அருகி வருகின்றன.

சோலை இருவாச்சி Malabar gray hornbill Ocyceros griseusVulnerable

Image
Malabar Grey Hornbill (Left- Female, Right-Male). Photo: Vivekpuliyeri, CC BY-SA 3.0, via Wikimedia Commons

சாம்பல் நிற உடலும், அடர்ந்த வெண் புருவமும், பெரிய வளைந்த அலகும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும்   ஓரிடவாழ் பறவை. ஆண் பறவையின் அலகு ஆரஞ்சு நிறத்திலும், பெண் பறவை வெளிரிய மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மற்ற இருவாச்சிகளின் அலகின் மேல் இருக்கும் தொப்பி போன்ற அமைப்பு இவற்றுக்குக்  கிடையாது. இவை அத்திப்பழங்களை விரும்பி உண்ணும்.

இரண்டு தனிப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் விளைவால் இவை எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவருவது தெரியவந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 2004-05இல் செய்யப்பட்ட இருவாச்சி கணக்கெடுப்பில் இருந்ததைவிட 2017-18இல் அவற்றின் அடர்வு (density), குறைந்துபோனதாக அறியப்பட்டது. பின்னர் மக்கள் அறிவியல் திட்டங்களின் முடிவுகளிலும் இதே போக்கு தென்பட்டது. தோட்டப் பயிர்களுக்காக (தேயிலை, காபி, ஏலம் போன்ற) இவை வசிக்கும் வனப்பகுதிகளை அழிப்பது, இவை கூடுகட்ட ஏதுவாக உள்ள பெரிய மரங்கள் குறைந்துவருவது, வாழிடம் துண்டாதல் போன்றவை இவை எண்ணிக்கையில் குறைவதற்கான காரணங்களாக  இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் இவை குறைவதற்கான சரியான  காரணம்  இன்னும் முழுவதுமாக ஆராயப்படவில்லை. ஆகவே இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Written by P Jeganathan

November 21, 2022 at 10:00 am

Design a site like this with WordPress.com
Get started