Posts Tagged ‘Chromolaena’
பூஞ்சை இல்லை என்றால்…
பூஞ்சைகளும், காளான்களும் இல்லையென்றால் இந்த பூமியே இல்லையெனலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா? சரி, பூஞ்சைகள் இல்லையெனில் என்னவாகும் என்பதற்கு சில எளிமையான உதாரணங்களைப் பார்ப்போம். இட்லி, தோசை, தயிர் இதெல்லாம் கிடைக்காது, நாம் வளர்க்கும் பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் உரம் கிடைக்காது. ஏன் அப்படி? அரிசியையும், உளுந்தையும் நீர் விட்டு அரைத்து மாவாக்கி மூடி போட்டு சமையலறையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு காலையில் பார்த்தால் அது பொங்கி வழியுமே அது எதனால் தெரியுமா? பாலை காய்ச்சி அதில் ஒரு கரண்டி தயிரை ஊற்றிவைத்தால் மறுநாள் மேராகவோ, கட்டித் தயிராகவோ இருக்கிறதே எப்படி? மந்திரமோ, மாயமோ இல்லை. எல்லாம் நுண்ணுயிரிகளின் செயல். பூஞ்சைகளும் அதில் அடக்கம். ஈஸ்ட் (Yeast) கேள்விப்பட்டிருபீர்கள். அது கண்ணுக்குத் தெரியாக பூஞ்சையன்றி வேறில்லை. இவை புளிக்க அல்லது நொதிக்க (fermentation) வைத்தால் தான் நமக்கு இட்லியும், தோசையும்.
இறந்ததை உண்டு வாழும் இவை தாவர வகையும் இல்லை, விலங்கிலும் சேர்த்தியில்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி. பூஞ்சைகளும், காளான்களும் இச்சூழலமைப்பின் மிக முக்கிய அங்கமாகும். எனினும் இவை ஆற்றும் பணி வெளிப்படையாகத் தெரிவதில்லை. காளான்கள் நைட்ரஜன் சுழற்சி மற்றும் இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மட்க, அழுகச் செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன. இவ்வுலகில் உள்ள 90%க்கும் மேற்பட்ட தாவரங்கள் அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்திக்கும், வளமில்லா மண்ணிலும் செழித்து வளரவும் அவற்றின் வேர்களில் வாழும் காளான்களைச் சார்ந்துள்ளன.
நாள்பட்ட உணவுப்பண்டங்களை கெடவைக்கும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய, வடிவமற்ற, பொடி போல் இருப்பவற்றை நாம் பூஞ்சைகள் அல்லது பூசணம் என்றழைக்கிறோம். இவற்றில் சில மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் தரும் பண்புள்ளவை. மண்ணில், மரத்தில், கட்டைகளில், சானங்களில் வித விதமான வடிவத்திலும், வண்ணங்களிலும் வளர்பவை காளான்கள் என்கிறோம். பூஞ்சைக்காளான்கள் (Fungi) என்றும் போதுவாக அழைக்கிறோம். இயற்கையாக வளரும் இவற்றில் சில வகைகள் நமக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கும் அனைத்துமே உண்ணத்தகுந்தவை அல்ல. இவற்றில் சில நஞ்சுள்ளவை. நாம் கடைகளில் வாங்கி சமைக்கும் சிப்பிக்காளான்கள், குடைக்காளான்கள் அனைத்தும் பயிர் செய்யப்படுபவை. நாம் மருந்தாக பயன்படுத்தும் பெனிசிலின் கூட ஒரு வகையான பூஞ்சையே. ஆகவே காளான்கள் இல்லாவிடில் இவ்வுலகே இல்லை எனலாம்! ஈஸ்ட், குடைக்காளான்கள் என பல இலட்சக்கணக்கான காளான்கள் இவ்வுலகில் இருந்தாலும் இவற்றில் சிலவகையே தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை.
கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகளின் அழகை நுண்ணோக்கி வழியாகத்தான் பார்த்து ரசிக்க முடியும். ஆனால் காளான்கள் பல வண்ணமயமான, அழகிய, விசித்திரமான வடிவங்களுடன் இருக்கும். காளான்களின் இனப்பெருக்க முறை விசித்திரமானது. நாம் வெளியில் காணும் (குடை, சிப்பி, பந்து, கோப்பை வடிவ) பகுதி முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய விதைத் துகள்கள் அல்லது வித்துக்கள் (Spores) வெளியிடப்படுகின்றன.
பொதுவாக இவ்வித்துக்கள் காற்றின் மூலமே பரவினாலும், சில வேளைகளில் காளான்கள் வெளியிடும் வாசனையால் கவரப்படும் பூச்சிகளாலும் பரவுகின்றன. இந்த இழைகள் (Hyphae) பின்பு கிளைவிட்டு வளர்கின்றன. இரு வகையான வித்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது (- வகை, + வகை). வேறு இடங்களுக்குப் பரவிய இந்த வித்துக்கள் தனித்தனியே இழை போன்ற தோற்றத்தில் வளர்கின்றன. பிறகு தகுந்த சூழலில் – வகை இழையும், + வகை இழையும் ஒன்று சேர்ந்து நாம் வெளியில் காணும் காளானின் தொடக்க வடிவத்தை (Primodium) அளிக்கின்றன. இது வளர்ந்து பின்பு வித்துக்களை தோற்றுவிக்கிறது.
பூஞ்சைக்காளான்கள் இல்லாத இடமே இல்லை. மண்ணில், கடலில், நாம் சாப்பிடும் பண்டங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட. அறிவியளாளர்களின் கூற்றுபடி உலகில் இதுவரை குறைந்தது 100,000 முதல் 250,000 வகையான பூஞ்சைக்காளான்கள் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 27,000 வகையான பூஞ்சைக்காளான்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்கப்படாதது எத்தனையோ.
பூஞ்சைக்காளான்கள் ஊட்டச்சத்துள்ள ஈரமான, கொஞ்சம் சூடான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவற்றிற்கு தாவர இலைகளில் உள்ளது போல் உணவு தயாரிக்க பசுங்கனிகங்கள் கிடையாது. ஆகவே, இவை பெரும்பாலும் மற்ற உயிரினங்களின் மீதே சாறுண்ணியாக வாழ்கின்றன. சில உயிரினங்களுடன் ஒத்து வாழவும், வேறு சில அவை வாழும் உயிரினங்களில் வாழ்ந்து அவற்றை சாகடிக்கவும் செய்கின்றன.
இந்த உலகிலுள்ள பெரும்பாலான உயிரினங்கள் பூஞ்சைக்காளான்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. சில வகையான எறும்புகளுக்கும் குறிப்பிட்ட வகையான பூஞ்சைக்காளான்களுக்குமிடையே உள்ள தொடர்பு ஆச்சர்யமளிக்கக்கூடியது. மத்திய அமெரிக்க நாடுகளில் தென்படும் ஒரு வகையான எறும்புகள் இலைகளை வெட்டி அவற்றின் கூட்டுக்குள் கொண்டு போய் சேமிக்கும். இவற்றை இலைவெட்டி எறும்புகள் என்பர். இந்த எறும்புகள் இலைகளையும், பழங்களையும், மலர் இதழ்களையும் மென்று சிறு சிறு துகள்களாக்கி பின் தமது உடலில் இருந்து சுரக்கும் ஒரு வித வேதிப்பொருளை கலந்து இத்துகளை கூழ் போல் ஆக்குகின்றன. இந்த கூழில் இவை பூஞ்சையைப் பயிர் செய்கின்றன. இப்பூஞ்சையும் இக்கூழை உரமாக்கி நன்கு வளர்ந்து ஊட்டச்சத்து மிகுந்த ஒரு வித குமிழை தனது உடலின் ஒரு பாகமாக உருவாக்குகிறது. இக்குமிழே (Gongylidia) அக்கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளுக்கும் பிரதானமான உணவு. அட்டமைசீஸ் (Attamyces) எனும் இவை வளர்க்கும் பூஞ்சைக்காளான் இந்த எறும்புக்கூட்டைத் தவிர வேறு எங்குமே வளர்வதில்லை.
கார்டிசிப்ஸ் (Cordyceps) இன பூஞ்சைக்காளான்கள் கொஞ்சம் விசித்திரமானவை. இவை மற்ற உயிரினங்களின் மீது ஒட்டுண்ணியாக வாழும். அது வாழும் உயிரினத்தின் (பெரும்பாலும் பூச்சிகள்) மூளையினுள் சென்று அவ்வுயிரினத்தின் குணத்தையும், செயலையும் தன்போக்கிற்கு மாற்றியமைக்கும் திறன்வல்லது. இப்படிச் செய்தே தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த வேளையில் அது குடிகொண்டிருக்கும் பூச்சியானது உயிரிழந்திருக்கும். கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் இதுதான் இயற்கையின் நியதி. ஒன்று உயிர் வாழ வேண்டுமானால் மற்றொன்று மாளவேண்டும்.
சில வகை குடை காளான்களைக் மழைக்காலங்களில் அதிகம் காணலாம். கோப்ரைனஸ் (Coprinus) இன குடை காளானின் வித்து கரிய நிறத்தில் இருப்பதால், முன்னொரு காலத்தில் அவ்வித்தைச் சேமித்து எழுதும் மையாக பயன்படுத்தினார்கள்.
ஒம்பலோட்டஸ் (Omphalotus) இனக்காளான்களை கும்மிருட்டில் தூரத்திலிருந்து பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். காரணம் மின்மினிப்பூச்சிகளைப் போலவே இரவில் பச்சை நிற ஒளியை உமிழும் தன்மை கொண்டவை (Bioluminescent).
சயாதஸ் (Cyathus) இன காளான் ஒன்றுக்கு ஆங்கிலத்தில்,”Bird nest Fungus” என்று பெயர். பறவையின் கூட்டைப்போன்ற வடிவமும், அதனுள்ளே வித்தினைக் கொண்ட உருண்டையான முட்டை போன்ற உறுப்பினைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு இப்பெயர். இது தன் வித்தினை பரப்பும் விதமே அலாதியானது. முட்டை வடிவிலமைந்த வித்தினைக் கொண்ட பைகள் சுருள்வில் (spring) போன்ற காம்பினால் கீழே இணைக்கப்பட்டிருக்கும். இப்பையின் மீது மழைநீர் விழும் போது அது தெரித்து சுமார் 2 அடி தூரத்திற்கு மேலெழும்பி அருகிலுள்ள (இலையிலோ, கிளையிலோ) பொருட்களின் மீது இச்சுருள்வில் காம்பின் உதவியால் ஒட்டிக்கொண்டு, தகுந்த சூழலில் வித்தினைப் பரப்பும்.
என்னதான் வெவ்வேறு வடிவங்களில், நிறங்களில் இருந்தாலும் பூஞ்சைக்காளான்களை எளிதில் இனங்காண்பது கடினம். விதவிதமான காளான்களைக் காண மழைகாலமே உகந்தது. அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மழைக்காடுகளின் தரையில், ஈரமான சருகுகளுக்கிடையேயும், சாய்ந்து விழுந்த மிகப்பெரிய மரங்களின் மீதும், உயிருள்ள மரத்தின் தண்டிலும் என பலவிதமான வாழிடங்களில், பலவிதமான காளான்களைக் காணலாம். அப்படி ஆனைமலைப்பகுதியில் பார்த்து படம் பிடித்து, அவற்றை இனம் கண்டு ஒரு சிறிய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை கீழ்கண்ட இணைய முகவரியிலிருந்து இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்
http://ncf-india.org/publications/53
இனிமேல் பூஞ்சைக்காளானைப் பார்த்தால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்தானே என்று இளக்காரமாக நினைக்காமல், அவை ஆற்றும் மகத்தான பணியை நினைவில் கொண்டு அவற்றின் அழகை ரசிப்போம்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 15. புதிய தலைமுறை 25 அக்டோபர் 2012
களைகள் ஓய்வதில்லை….
எனது கல்லூரி நாட்களின் போது காட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் ஒரு அழகிய காட்சியைக் காண நேர்ந்தது. கொடி ஒன்று மரத்தின் மீது படந்து முழுவதுமாக மூடியிருந்தது. மரத்தின் இலைகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருந்தது, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. இக்காட்சியை கூட வந்த ஒரு காட்டுயிர் விஞ்ஞானியிடம் காட்டிய போது அவரது முகமே மாறிப்போய், என்னைப்பார்த்துச் சொன்னார், ”அந்தக் கொடியால் அந்த மரம் செத்துக்கொண்டிருக்கிறது, அதன் மேலுள்ளது மைக்கேனியா (Mikania micrantha) எனும் பொல்லாத களைக்கொடி,” என்றார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல் நாம் பார்க்கும் அழகான தாவரங்கள், அனைத்துமே நல்ல தாவரங்கள் அல்ல, ஒரு சில மிகவும் கொடியவை என்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். மனிதர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியவைகளை மட்டும் தான் பலருக்குத் தெரியும். உதாரணமாக பார்த்தீனியம். ஆனால், இந்தியக் கானகத்தின் பல பகுதி பலவகையான களைகள் மண்டிப் புறையோடிப் போயிருக்கிறது.
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையினர், தாவரவியலாளர்கள் இவர்களிடம் போய் லான்டனா (Lantana), மைக்கீனியா (Mikania), வெடெலியா (Wedelia), யூபடோரியம் (Eupatorium), ஸ்காட்ச் புரூம் (Scotch Broom) க்ரொமொலினா (Chromolaena) எனும் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். இத்தாவரங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அவர்கள் முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆபத்தானவை என்று சொன்னால் ஒரிடத்தில் நிலவும் இயற்கையான சூழலுக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும், இதனால் மனித குலத்திற்கும்.
Invasive Alien Species என்றழைக்கப்படும், மேற்சொன்ன களைத்தாவரங்கள் அனைத்துமே வந்தேறிகள். அதாவது நம்மண்ணுக்குச் சொந்தமில்லாதவை, உலகின் வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை. இந்தக் களைகளுக்கெல்லாம் உள்ள ஒரு பொதுவான குணம், மிக விரைவில் அபரிமிதமாகப் பெருகி, அது வளரும் இடத்திலுள்ள இம்மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமல் அந்த இடத்தையே ஆக்கிரமித்து விடுவதுதான். இவை இவ்வாறு மண்டிப்போவதால் அவை பரவும் இடங்களில் உள்ள இயற்கையான சூழலே மாறிப்போகும். பல இடங்களில் அப்பகுதியில் தென்படும் தாவரங்களை இக்களைகள் முற்றிலிமாக அற்றுப்போகவும் செய்கின்றன. இதனால் ஏற்படும் சூழியல் சீர்கேட்டினை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை மீளமைத்து பழையை நிலைக்குக் கொண்டுவது மிகவும் கடினமான காரியம்.
பரவும் வந்தேறிகள் பெரும்பாலும் மனிதர்களாலேயே ஒரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குப் பரவின. அழகாக இருக்கிறதென்று வேறு இடங்களிலிருந்து இங்கே கொண்டு வந்து வளர்க்கும் போது அவை வந்த இடத்தில் பரவ ஆரம்பித்துவிடுகின்றன. சில வேளைகளில் நம்மை அறியாமலேயே விதைகள் காலணிகளில் ஒட்டிக்கொண்டோ, வேறு விதமாகவோ பரவுகின்றன.
உண்ணிச்செடி எனப்படும் Lantana camara மத்திய அமெரிக்காவைச் பூர்விகமாகக் கொண்ட புதர்ச் செடி. கொத்துக் கொத்தாக பூக்கும். ஒரே கொத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, ரோஜா நிறம், வெள்ளை என பல வண்ணங்கள் இருக்கும். தண்டில் முட்களுடன் இருக்கும். சில நகரங்களில் வேலிகாக இச்செடியை வைத்திருப்பார்கள். கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் (Botanical Garden) பல நாடுகளிலிருந்தும் மரம், செடிகளை எடுத்து வந்து வளர்ப்பார்கள். அப்படிக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த உண்ணிச்செடி. இச்செடியின் பழங்களை நம் நாட்டுப் பழம் தின்னும் பறவைகள் சாப்பிட்டு இதன் விதையைப் பரப்பி இன்று இது நாடு முழுவதும் உள்ள காட்டின் கீழ்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இச்செடிகள் மண்டியிருக்கும் சில பகுதிகளில் யானைக்கூட்டம் கூட புகுந்து செல்லமுடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும். கோடையில் காய்ந்து போகும் இது காடுகளில் தீப்பிடிக்கும் போது எளிதில் பற்றி இது இருக்கும் பல இடங்களுக்கும் எளிதில் பரவி சேதம் விளைவிக்கும்.
நாம் நன்கு அறிந்த இன்னொரு களைச்செடி ஆகாயத்தாமரை எனப்படும் Water hyacinth. குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளில் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் பரவியிருக்கும். இதன் பூர்வீகம் பிரேசில். நீர்பரப்பு முழுவதும் இது மூடியிருப்பதால் சூரிய ஒளியும், ஆக்சிஜனும் நீரினுட்புகமுடியாமல் போவதால் கீழேயிருக்கும் பல மீன்களும் வேறு பல நீர்வாழ் உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. இதனால் அந்நீர்ச்சூழலில் பல்லுயிரியம் குறைந்தும், அழிந்தும் போகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு புகைவண்டியில் நீங்கள் போயிருந்தால் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் இருபுறமும் பச்சைநிறத்தில் கோரைப் புல்லைப் போல நீண்டு வளர்ந்திருக்கும் செடியைப்பார்க்கலாம். மஞ்சள் வண்ணத்தில் பூப்பூக்கும். இச்செடியை இவ்வூர் மக்கள் கோத்தகிரி மலர் என்றழைக்கிறார்கள். இங்கு இச்செடியை வேலிக்காகவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள். இச்செடியே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளிலுள்ள புல்வெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது ஸ்காட்ச் புரூம் (Scotch Broom). ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் வசித்த போது அவர்கள் நாட்டில் வளரும் இச்செடியை கொண்டு வந்து அழகிற்காக நட்டு வைத்ததன் விளைவுதான் இது.
உலகின் 36 கொடிய வந்தேறிப் பரவும் செடிகளில் 7 இந்தியாவில் தென்படுகிறது. வாழிடம் சிதைந்து போதல், திருட்டு வேட்டை போல பரவும் வந்தேறிகளும் பல்லுயிரியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு முக்கியக் காரணியாகும். ஒரு சில நாடுகளில் பரவும் வந்தேறிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்காகவுமே பல கோடிகளை செலவிடுகின்றன. அன்டார்டிகாவிற்கு அப்பகுதிக்குச் செந்தமில்லாத பலவிதமான விதைகள் சுற்றுலாவினர், ஆராய்ச்சியாளர்களின் காலணிகள் மூலமாகவே கொண்டுசெல்லப்படுவது சமீபத்தில் அறியப்பட்டது. இந்தக் களைகளின் தொல்லையால் அவதிப்படும் நாடுகளைப் பார்த்து ஒரு சில நாடுகளில் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு வேறு நாடுகளிலிருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளின் பொருட்களில் ஏதெனும் விதைகள் இருக்கிறாதா என சுத்தமாக பரிசீலனை செய்து விட்டுத்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். முக்கியமாக சுற்றுலாவினர் அணிந்து வரும் காலணிகளை கழற்றி விட்டு அங்கு சுற்றித்திரிய அவர்களே கொடுக்கும் காலணிகளைத்தான் அணிந்து செல்ல வேண்டும்.
ஓரிடத்திலுள்ள பல்லுயிரியத்திற்கு (Biodiversity) இது போன்ற களைத் தாவரங்கள் மட்டுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில விலங்குகளும், பறவைகளும் தான். உதாரணமாக சிட்டுக்குருவிகள். இவை அமெரிக்காவிற்கு மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு, அபரிமிதமாகப் பெருகி இப்போது அந்நாட்டிலுள்ள சில பறவைகளுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டுள்ளன.
நாடு விட்டு நாடு போகும் தாவரங்கள் தான் களைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. உள்நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலிருந்து அதாவது (புல்வெளி, மழைகாடு, புதர் காடு போன்ற) இயற்கையான சூழலில் இருந்து வேறோர் வாழிடத்திற்கு கொண்டு செல்லப்படும் தாவரங்கள் கூட களைகளாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஓரிடத்திலிருந்து மனிதர்களால் வேறோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தாவரங்கள் அனைத்துமே களைகளாக இருப்பதில்லை. உதாரணமாக புளிய மரம். இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டாலும் இம்மரம் பரவி நம் நாட்டு கானகத்தை ஆக்கிரமிக்கும் பண்பு இதற்கில்லை.
இப்பொழுதெல்லாம் அழகான பூவையோ, மரத்தையோ பார்த்தால் இது இந்த வாழிடத்திற்குச் சொந்தமானது தானா? இது களைத்தாவரமா? என்றெல்லாம் யோசனை செய்து பகுத்தறிந்தே ரசிக்கத் தோன்றுகிறது. அழகுதான் ஆனால் ஆபத்தாயிற்றே!
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 12. புதிய தலைமுறை 27 செப்டம்பர் 2012















