Saturday, December 22, 2012

3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE

ஒரு ரசிகர், திரைப்படம் பார்க்கும்போது, தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து பார்த்தாலேயொழிய அந்த திரைப்படம் வெற்றிப்பெறாது...

இந்த 'மெய்மறந்து' என்னும் உணர்வை கொடுக்க, சினிமாவின் ஆதிகாலத்தில் பிம்பங்கள் உதவி வந்தது... பிறகு சத்தம், இசை, ஜாலம், வண்ணம், அதிலேயே துல்லியம் என்று மாறி மாறி பரிணமித்து வந்த சினிமாவில், சில ஆண்டுகளுக்கு முன் 3D என்னும் தொழில்நுட்பம் மேலும் ஒரு மைல்கல்-ஆக அமைந்தது... அந்த வரிசையில் தற்போது, HIGH FRAME RATE 3D (சுருக்கமாக HFR 3D) என்னும் மேலுமொரு தொழில்நுட்பம் தலைதூக்கியுள்ளது.

இதை முதலில் முயன்ற பெருமை, கிங்-காங், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களின் இயக்குனர் திரு.பீட்டர் ஜாக்ஸன் அவர்களை சேர்ந்துள்ளது...

இவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட THE HOBBIT திரைப்படம் HFR3Dயில் வெளியிட்டுள்ளார்.

Image

இந்த HFRஐப் தெரிந்துக் கொள்வதற்கு முன் FRAMES PER SECOND (FPS) பற்றி ஒரு சிறு விளக்கம் இதோ...

ஒருவர் கை அசைப்பது போல் ஒரு வீடியோ இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த கை அசைக்கப்படுவதை 24 ஃபோட்டோக்களாக எடுத்து, அந்த 24 ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் சேர்த்து ஓட்டிக்காட்டும்பொழுது, அந்த கை அசைவது போல் அந்த ஒரு விநாடியில் தெரியும்... இப்படியே ஒவ்வொரு விநாடிக்கும் 24 ஃபோட்டோக்கள் ப்ரொஜெக்டரில் ஓடும்... இந்த ஃபோட்டோக்களை FRAMES என்று அழைப்பார்கள்... இதை, 24FPS (Frames Per Second) என்று சொல்வார்கள்... ஆக ஒவ்வொரு திரைப்படமும் 24FPS என்ற விகித்ததில்தான் அகில உலகிலும் திரையிடப்பட்டு வந்தது... (டெலிவிஷனுக்கு தனிக்கணக்கு..)

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த HFR மூலம் ஒரு விநாடிக்கு 48 FRAMEகள் ஓடும்... 24ல் கிடைக்கும் துல்லியத்தைக் காட்டிலும் மேலும் துல்லியம் காட்ட விழையும் ஒரு புது தொழில்நுட்பம்.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது... சினிமா என்பது ஒரு நவீன நிழல் நாடகம்.. ஒரு 'மாயை' என்றுகூட சொல்லலாம். அந்த மாயையில் படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு டிரான்ஸ் நிலைக்கு கொண்டு சென்று கதை கூறி அவர்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும். அந்த மாயையிலிருந்து விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், அவர்களால் தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து போக முடியாது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த 48FPSல் காட்டப்படும் துல்லியம் சிறு சிறு துரும்புகளின் நிஜ வண்ணத்தை காட்டிவிடுவதால், ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்பவைப்பது சிரமமாகிவிடுகிறது. இப்படியிருக்கும்போது, ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தியை தங்கம் என்று நம்பவைக்க, திரையில் முடியாமல் போகிறது. பிறகு எப்படி மக்கள் படத்தில் லயிக்க முடியும்?

ஈஸ்ட்மேன் கலரில் வந்த சரித்திர படங்களுக்கும் தற்போது எடுக்கப்படும் சரித்திர படங்களையும் பார்க்கும்போது, ஈஸ்ட்மென் கலரில் இருக்கும் சரித்திர நம்பகத்தன்மை தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. (உதாரணம், கர்ணன் படத்தின் சரித்திரத்தன்மையையும், பொன்னர் சங்கர் படத்தின் சரித்திரத்தன்மை.. நான் படத்தின் தரத்தை ஒப்பிட்டு கூறவில்லை... தொழில்நுட்பத்தை மட்டுமே கூறுகிறேன்)

நான் 48FPSயில்  வெளியாகியிருக்கும் THE HOBBIT திரைப்படத்தை சத்தியம் சினிமாஸ்-ல் HFR3Dயில்தான் பார்த்தேன்... இந்த தொழில்நுட்பம் பிடித்துப்போனால் இதை நான் இயக்கவிருக்கும் அடுத்த 3D படத்தில் உபயோகிக்கலாம் என்ற ஆசைதான் காரணம்... ஆனால், இந்த HFR3Dயின் விளைவு, படம் பார்க்கும்போது சற்றே கவனச்சிதறலாய்த்தான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பட்டது...

இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், இந்த தொழில்நுட்பத்தை ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டபோது, சில பத்திரிகையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கவனச்சிதறலாய் பட்டுள்ளது... எனவே, இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான் இந்த HFR3D இருக்கிறது. ஆனால், இதை இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் பரிணாமம் என்றே கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் பழக மக்களுக்கு நிச்சயம் அவகாசம் தேவைப்படும் என்றும், இந்த முறையில் 3D படம் பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தேவையோ என்றுகூட குழப்பம் ஏற்படுகிறது...

நீங்கள் இந்த படத்தை HFR3D தொழில்நுட்பத்தில் பார்த்திருக்கிறீர்களென்றால், நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்...




Signature

Wednesday, December 12, 2012

300 ரூபாய்க்கு டைம் டிராவல் [குட்டிக்கதை]

Image

இரண்டு மாதமாய் சேர்த்து வைத்திருந்த எனது பாக்கெட் மணி மொத்தம் 300 
ரூபாய் சேர்ந்திருந்தது. 5ஆவது படிக்கும் எனக்குத்தான் தெரியும் 300 ரூபாய் சேர்த்து வைப்பது எவ்வளவு சிரமம் என்று...

அதை என் தெருவில் வசிக்கும் 'வாட்சு கடை' தாத்தாவிடம் கொடுத்தேன்.

அவர் 300 ரூபாயை 100 தடவை எண்ணிவிட்டு தன் கடைக்குள் அனுமதித்தார்

அங்கிருந்த சின்ன P.C.O. பூத் போன்ற அறைக்குள் நுழைந்தேன். மேலே இருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் ‘22, நவம்பர்  2012’ என்றிருந்தது

உள்ளிருந்தபடி திரும்பி பார்த்து கேட்டேன்...

'தாத்தா... நிச்சயமா நீ சொன்னது நடக்குமா தாத்தா..? முப்பது நாள் நான் முன் நோக்கி போய்டுவேனா..?'

'சந்தேகமா..?'

'இல்ல.. 300 ரூபாய்க்கு டைம் டிராவல் ரொம்ப சீப்-ஆ இருக்கே... அதான்..'

'எனக்கு இப்போதைய தேவை 300 ரூபா.. அது உனக்கு சீப்.. ஆனா எனக்கு அது ரொம்ப காஸ்ட்லி..’ என்றபடி, வாட்சு கடை தாத்தா  பூத்திற்குள் அனுப்பி கதவை சாத்திக் கொண்டார்

பிறகு, வெளியே ஏதேதோ சத்தம் கேட்டது...

திடீரென்று பூத்திற்குள், மின்னல் போல் வெளிச்சம் அந்த கடையெங்கும் நிரம்பி வழிந்தது.. பயந்து கண்களை மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் கண்திறந்து பார்த்தபோது... அந்த பூத்தின் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில்

21, டிசம்பர் 2012 என்றிருந்தது

ஆவலுடன் பூத் கதவை திறந்தேன்...

பூத்தின் வெளியே கடல்நீர்... சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கடல் நீர்... என் வீடு... தெரு.. ஏரியா.. எல்லாம் கடல் நீர் மூடியிருந்தது... என் பூத் எங்கோ அடித்துக் கொண்டு வரப்பட்டு கொஞ்சமாய்.. மிக கொஞ்சமாய் இருந்த நிலப்பரப்பில் நின்றுக் கொண்டிருந்தேன்... சுற்றி யாருமேயில்லை... மிதந்து வந்த செய்தித்தாள் பேப்பரில் கீழ்கண்ட வாசகம்

‘நாளை 21 டிசம்பர் 2012 எந்த ஆபத்தும் இல்லை - புயலோ.. .சுனாமியோ வாய்ப்பே இல்லை... வானிலை ஆராய்ச்சி மையம்’

Image Courtesy : http://london2005.medialint.com/


Signature

Thursday, December 06, 2012

Pirates of the பெட்ரோலியம்


Image

டிஸ்கி : கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நான் கண்ணார கண்டு அனுபவப்பட்டு எனது நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்களும் SAME BLOOD..! என்று கூறி என்னுடன் பகிர்ந்து கொண்ட  விஷயங்களின் தொகுப்பு... இதை பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களையும் உஷார் படுத்தலாமே என்று எழுதியது...

  • இது பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி குறிப்பிடும் பதிவல்ல...
  • உலக சந்தையில் பெட்ரோலை வைத்து நடத்தப்படும் உலக அரசியல் பற்றி குறிப்பிடும் பதிவும் அல்ல...
  • நமக்கு மிக அருகில் இருக்கும் பல பெட்ரோல் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி குறிப்பிடும் பதிவு...

'100 ரூபாக்கு போடுப்பா..' என்று 100 ரூபாய் தாளோடு வெயிலிலும், புழுதியிலும் வாடி வதங்கி வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து லாவகமாக ஏமாற்றும் PETROL GUN ஊழியர்ள் சிலரைத்தான் (அனைவரும் அல்ல..) இதில் PIRATES என்று குறிப்பிட்டிருக்கிறேன்...

பெட்ரோல் வங்கிகளில் வழக்கமாய் மீட்டரை வைத்து 10, 20 என்று திருடுவார்கள்... இது அனைவரும் அறிந்ததே... ஆனால் தற்போது நடைபெறும் நூதன திருட்டுகளின் மூலம், 10, 20 ரூபாய்க்குத்தான் பெட்ரோலே போடுகிறார்கள் மீதி பணம் முழுவதையும் ஏமாற்றுகிறார்கள். நான் 2006ஆம் ஆண்டு வங்கியில் லோன் போட்டு புது பைக் வாங்கிய சமயம் மேத்தா நகரில் SKYWALKக்கு அடுத்துள்ள இடதுபுற பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய் ஏமாற்றப்பட்டேன். அந்த சம்பவத்தை என் நண்பர்களுடன் பகிர, பலரும் இதே போல பல பங்க்குகளில் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறி 'ரெட் அலர்ட் மார்க்' செய்த பங்க்குகளை தெரிவித்தார்கள்... கிட்டத்தட்ட பல பங்க்குகள் அந்த லிஸ்ட்டில் உள்ளது தெரியவந்தது... அன்றிலிருந்து இன்றுவரை காராக இருந்தாலும், டூ வீலராக இருந்தாலும், மீட்டரில் ZERO காட்டாமல் பெட்ரோல் போட்டுக்கொள்வதே இல்லை...

இது எப்படி நடக்கிறது..? ஒரு உதாரணம், நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தால், ஏற்கனவே உங்களுக்கு முன்னாலிருப்பவருக்கு 50 ரூபாய் போட்டிருந்தால், மீட்டரை RESET செய்யாமல் உங்களிடம் பேச்சு கொடுத்தபடியே 51ல் ஆரம்பித்து 100 ரூபாய்க்கு போடுவார்கள். இதன்மூலம், பாதிக்கு பாதி அவர்களுக்கு லாபம்... இது அந்த பெட்ரோல் வங்கி முதலாளிக்கும் போய் சேருவதில்லை... அவர்களே பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

மோசடி ஊழியர்கள், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிமுறைகள்

பொதுவாய் சில பெட்ரோல் வங்கியில் ஊழியர்கள் கேப் அணிந்திருப்பார்கள்.... அந்த கேப்-ஐ வைத்து உங்களுக்கு முன்னால், சரியாக மீட்டரை மறைத்தபடி நின்று கொள்வார்கள். நீங்கள் அப்படி இப்படி அசைந்து கொடுத்து மீட்டரை பார்ப்பதற்குள் பெட்ரோல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

சில இடத்தில் PETROL GUN-ன் கருப்பு கேபிள் அந்த மீட்டரின் குறுக்கே ஓடி, மீட்டரை பார்க்க முடியாதபடி மறைத்திருக்கும்... இதனால், தோராயமாகத்தான் உங்களால் மீட்டரை கணிக்க முடியும்.

இன்னும் சில இடத்தில் மீட்டர் RESET ஆவது போல் பீப் சவுண்ட் கொடுக்கும் ஆனால் மீட்டர் RESET  ஆகாது... 'என்ன ZERO வரலை..?' என்று கேள்வி கேட்டால், மீண்டும் சரியாக RESET  செய்துவிட்டு, 'மீட்டர் பிரச்சினை சார்' என்று கூலாக பதில் கொடுப்பார்கள்...

இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நின்றிருந்தால்... உஷார்.... நிச்சயம் ஏதோ தப்பு நடக்கவிருக்கிறது என்பதை கவனித்து கொண்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

ஒருவர் PETROL GUNஐ டேங்க்கிற்குள் செலுத்தியதும் RESET செய்வது போல் பாவ்லா காட்டுவார்... அப்போது இன்னொருவர் வந்து உங்களிடம் காசு கேட்பார்.. நீங்கள் உடனே காசு கொடுத்துவிட்டால் சில்லறை கொடுங்கள்... ரவுண்டாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பேச்சை மாற்றுவார்... அல்லது உங்கள் வண்டியை புகழ்ந்து பேசியபடி நலம் விசாரிப்பார்.. இல்லையெனில், உங்கள் பைக்கில் பெட்ரோல் KNOBஐ சுட்டிக்காட்டி, 'PETROL KNOB திறந்தேயிருக்கு பாருங்க சார்.. அதை மூடிடுங்க..' என்று கூறுவார்.. வாடிக்கையாளரும் ஓரிரு செகண்ட் அப்படி இப்படி என்று கவனம் சிதறும் அந்த நொடிப்பொழுதில் கவனம் கலையும். இப்படியாக விதவிதமாய் பேசி உங்கள் கவனத்தை திசை மாற்றி... நீங்கள் சுதாரிப்பதற்குள் மீட்டர் ZERO வராமலே ஓட ஆரம்பித்துவிடும்...

ஒரு சில இடங்களில் ZERO பார்த்துவிட்டு பெட்ரோல் போட ஆரம்பித்தாலும் உஷாராக இருக்க வேண்டும்... 200 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால்... 40 ரூபாய்க்கு மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருப்பவர் உங்கள் கவனம் கலைப்பார்... பெட்ரோல் போடுபவர் உடனே மீட்டரை மீண்டும் ZEROஆக்கிவிட்டு உங்கள் வரிசையில் நின்றிருக்கும் அடுத்தவரை அழைத்துவிடுவார்... நீங்களும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாகிவிட்டது என்று நினைத்து நகர்ந்து விடுவீர்கள்... ஆனால், 40 ரூபாய்க்கான பெட்ரோல்தான் உங்கள் வண்டியில் இருக்கும்...

பைக்கில் அடிக்கும் கொள்ளைகள் இப்படியென்றால் இதில் அடுத்த கட்டம், காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் கொள்ளை அடிப்பது... காரணம், இதில் தொகை பெரியது... அதுவும் காரில் வருபவர்கள் காரிலிருந்து இறங்காமல் பெரும்பாலும் மீட்டரிலிருந்து சற்று தொலைவிலிருந்தபடி பெட்ரோல் போடுவதால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.
காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் 'மெம்பர்ஷிப் ப்ளான், ஆயில் சேன்ஞ் பற்றி பேசி கவனத்தை கலைக்க முயல்வார்கள்.

காரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...

உங்கள் வண்டியில் யாரிருந்தாலும், பெட்ரோல் போட்டுவிட்டு வரும்வரை பேசாமல் இருக்கும்படி கூறிவிடுவது நல்லது... பேசினால் கவனம் கலையலாம்..

இப்படி இவர்கள் கொள்ளையடித்து சம்பாதிக்கும் பணம் அந்தந்த பெட்ரோல் வங்கியின் முதலாளிக்கும் போய் சேர்வதில்லை.. இதை இந்த மோசடி ஊழியர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்து நடத்துவதால், எவ்வளவு ரூபாய் ஏமாற்றியிருக்கிறோம் என்ற கணக்கை அவரவருக்கு தெரிந்த சங்கேத பாஷையில் குறித்துக் கொள்கிறார்கள். அன்றைய நாள் இறுதியில் கலெக்ஷன் கணக்கெடுக்கும்போது, கொள்ளையடித்த பணத்தை தனியாய் எடுத்து பிரித்துக் கொள்கிறார்கள்.

பெட்ரோல் விலை அதிகம் என்று தெரிந்து வருத்தபடும் நாம், இவ்வளவு அதிக விலைக்கு நாம் போட்டுக் கொள்ளும் பெட்ரோல் முழுவதுமாய் நமக்கு வந்து சேருவதில்லும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் "சார் ZERO பாத்துக்கோங்க சார்.." என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...


Signature

Thursday, November 29, 2012

சன் டிவியில் "அம்புலி"

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு சன் டிவியில், நான் இயக்கியுள்ள 'அம்புலி' திரைப்படத்தை திரையிடுகிறார்கள்.

Image


அனைவரும் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்





Signature

Sunday, July 01, 2012

My Invitation to All Friends

Image
Image
Image



Signature

Monday, May 14, 2012

எனது கால்கட்டு...

வணக்கம் நண்பர்களே,

கடந்த 10ஆம் தேதி முதல் எனது பேச்சிலர் லைஃப்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது...

வாழ்க்கைத்துணைவியாய் 'பூஜா' என்ற மும்பை சேர்ந்த பெண்ணை (என் முறைப்பெண்தான்) கல்யாணம் செய்து கொள்ள நிச்சயிக்கபட்டுள்ளது... 

Image

Image

Image

Image


பூஜாவிற்கு தமிழ் தெரியாதாம்... ஒரு அழகான பெண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது...

கேரளாவில் அம்புலி ரிலீஸ் வேலைக்காரணமாய் சுற்றிக்கொண்டிருந்ததால் பலரையும் அழைக்க முடியவில்லை... மன்னிக்கவும்... திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை... முடிவானதும் அழைக்கிறேன்... திருமணத்திற்கு பதிவுலக நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துக் கொண்டு வாழ்த்தி விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, April 30, 2012

குறுங்கதைகள்... (தொகுதி #01)


Image

ஒரு முழு புத்தகமாய் நாவல்....

சில பக்கங்களில் சிறுகதை

ஒரு பக்கத்தில் ஒரு கதை...

இப்படி எத்தனையோ விதமாக கதைகளை நாம் படித்து ரசித்து வருகிறோம்... 'சில விநாடிக்கதை' என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... இதை யோசித்துப் பார்க்கும்போது சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் 'போஸ்ட் கார்டு கதைகள்' என்று ஒரு போட்டி வைத்திருந்தார்கள். அதில் வெற்றிபெற்ற கதைகள் பிரசுரமாகியிருந்தது... இன்று போஸ்ட் கார்டு செய்யும் வேலையை SMSகள் செய்து வருவதால்... SMS கதைகள் என்று ஒரு வடிவம் இருந்தால் எப்படி இருக்கும்... என்று தோன்றியது...

இன்று SMSகளில் எத்தனையோ வகையான விஷயங்கள் பகிரப்படுகிறது... சேட்டிங்... டேட்டிங், க்ரீட்டிங்ஸ்... ரெயில்வே, சினிமா, ஃப்ளைட் டிக்கெட் இப்படி பல... இதில் கதையும் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றவே... இணையத்தில் உள்ள பிரபல SMS சிலவற்றை தேடிப்பார்த்தேன்... அதில் ஏற்கனவே SMSகளில் சில குறுங்கதைகள் நகைச்சுவையுணர்வுடன் வந்துள்ளதை தெரிந்துக் கொண்டேன்... அவைகளை கீழே பகிர்ந்துள்ளேன்...

ஒரு கட்டுரையில் சுஜாதா அவர்கள் உலகின் மிகச்சிறிய திகில் கதை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்... அது  Fredric Brown என்பவரால் எழுதப்பட்ட 'Knock' என்ற சிறுகதை(?) 

-----------------------
Knock
The last man on Earth sat alone in a room. There was a knock on the door...
'உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் அமர்ந்திருக்க... யாரோ கதவை தட்டினார்கள்...'
-----------------------

இந்தளவுக்கு சிறிய வடிவில் போதுமான கதை விவரங்களை கூற முடியாததால்... இதற்கு அடுத்த கட்டமான Flash Fiction என்ற categoryக்கு வருவோம்... இதற்கு ஏகப்பட்ட விதிமுறைகளை கூறுகிறார்கள்... சரியாக 55 வார்த்தைகள்... 300 வார்த்தைகள் என்று நிறைய விதிகள் உள்ளது... நாம் விதிகளை சற்றே புறந்தள்ளி... முடிந்தவரை சுருக்கி... முடிந்தவரை நீட்டி கதை சொல்லி முயற்சித்து பார்த்தோமானால்... இது போன்ற கதைகள் ஒரு SMSல் கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக உள்ளது... நான் இண்டர்நெட்டில் தேடியபோது கிடைத்த ஒரு சில குட்டிக்கதைகள்...
---------------

தூதன்...
மரணப்படுக்கையிலிருக்கும் சைனீஸ் நண்பரை பார்க்க இந்திய தூதுவர் மருத்துவமனைக்கு வருகிறார்...

அவரிடம் சைனீஸில் ஏதோ உரக்க சொல்ல பிரயத்தனப்பட்டு அந்த சைனீஸ் இறந்துவிடுகிறார்.

இறுதி ஊர்வலத்தில் அவர் சொன்ன சைனீஸ் வாக்கியத்தை அருகிலிருப்பவரிடம் மொழிப்பெயர்த்து சொல்லுமாறு இந்திய தூதுவர் விசாரிக்க...

அதன் அர்த்தம்...

'நீ என் ஆக்ஸிஜன் குழாய்ல நின்னுட்டிருக்கே...'
--------------

டெடி
காதலன் காதலிக்கு ஒரு 'டெட்டி பொம்மை' பரிசளித்தான்

'நான் கேட்டது வெட்டிங் ரிங்தானே... இது எதற்கு..' என்று அந்த பொம்மையை தூக்கியெறிந்தாள்.

அதை எடுக்க போகும்போது சாலையில் அடிப்பட்டு காதலன் இறக்கிறான்

அந்த பொம்மையை கட்டிக்கொண்டு காதலி அழ... பொம்மையிலிருந்து ரெக்கார்ட் செய்யப்பட்ட பாட்டு ஒலித்தது...

I LOVE YOU... HERE IS THE WEDDING RING IN MY POCKET என்று திரும்ப திரும்ப பாடியது
--------------

கண்ணம்மா...
ஒரு இளைஞனும் ஒரு குருட்டுப் பெண்ணும் இணைபிரியா காதலர்கள்...

பெண்ணுக்கு யாரோ கண்தானம் செய்ய... பார்வை பெறுகிறாள்

அடுத்த நாள் காதலனைப் பார்க்க... அவன் குருடன் என்று தெரிய வருகிறது...

அவனது காதலை மறுக்கிறாள். கடிதம் எழுதிவைத்துவிட்டு காதலன் சென்றுவிடுகிறான்.

கடிதத்தில் 'என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்' என்று கிறுக்கலாய்...

--------------

இது போன்ற குறுங்கதைகளை, கதை என்று சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் ஒரு குட்டி சீக்வென்ஸ்-க்கு உண்டான அத்தனை தகுதிகளும் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இது போல் ரெகுலராக எழுதிப் பழகினால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது... இதன் முக்கிய அம்சம்... கடைசி வரியில்தான் கதை முழுதாய் புரிய வேண்டும்... கிட்டத்தட்ட ஹைக்கூ கவிதையைப் போல்..

ஃபிலிம் மேக்கிங் ஆர்வமுள்ளவர்கள்... இப்படிப்பட்ட குட்டி கதைகைள மொபைலிலோ... அல்லது ஹேண்டிகேமிராவிலோ படம் பிடித்தும் பழகலாம்...

நான் எனது முதல் படமான 'ஓர் இரவு'-ன் விளம்பரத்திற்கு இப்படி ஒரு சின்ன SMS முயற்சி செய்திருந்தேன்... அதன் குறுங்கதை வடிவங்கள் இதோ...

--------------

திகில் புத்தகம்
மழையிரவில் ஒரு பழைய புத்தக கடையில் ஒருவர் நுழைந்தார்...
'நல்ல திகில் புத்தகம் இருக்கா..?' என்று கேட்க, கடைகாரர் ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தார்...
'இது நல்லா திகிலா இருக்குமா..?'
கடைகாரர் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு
'நானே பல தடவ படிச்சிருக்கேன் சார்..' என்றார். ஆனால் வாடிக்கையாளர் இன்னும் நம்பிக்கை வராதவராய்... 'அப்படியா..? எத்தனை தடவை படிச்சிருக்கீங்க..?' என்று கேட்க
'சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை... செத்ததுக்கப்புறம் 7 தடவை...'
--------------

ராசியான டாக்டர்
ஒருவர் : நீங்கதான் எங்க கழக விழாவுக்கு இந்தமுறை சீஃப் கெஸ்ட்-ஆ வரணும்
டாக்டர் : அப்படியா.. நல்லது...
ஒருவர் : ஆமா சார்... எங்க கழக உறுப்பினர்களில் அதிகம் பேர் உங்களால வந்து சேர்ந்தவங்கதான் சார்.
டாக்டர் : அப்படியா...? ரொம்ப மகிழ்ச்சி.. உங்க கழகத்தின் பெயர்..?
ஒருவர் : ஆவிகள் முன்னேற்ற கழகம்...
--------------

எனது நண்பர் சொன்ன ஒரு சம்பவத்தை குறுங்கதையாக எழுதிப்பார்த்தேன்

பெஞ்சுமார்க்
ஜனரஞ்சகமான அந்த புறநகர் ஸ்டேஷனில் கூட்டம் வழிந்துக் கொண்டிருந்தது. ரயில் வர நேரமிருந்ததால் கால்கடுக்க நடந்து வந்த நான்... உட்கார இடம் தேடினேன்... எல்லா பெஞ்சும் ஹவுஸ் ஃபுல்

ஒரு பெஞ்சில் மட்டும் ஒரு நாய் தனியே படுத்திருந்தது... அருகில் நிறைய இடம் இருந்தது... உட்காரலாம் என்று சென்றால் மேலே ஒரு பலகை...

'இந்த பெஞ்சு... ரெயில்வே எம்ப்ளாயிசுக்கு மட்டும்'

நாய் என்னை முறைத்தது...
--------------

சிறுவயதில் நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தின் இன்னொரு குறுங்கதை வடிவம்...

வேடிக்கை
ரயிலுக்கு காத்திருந்தேன்.

எதிர் ஃபளாட்ஃபாரத்தில் ரயில் நுழைந்துக் கொண்டிருந்தது...

ஒரு ஆட்டுக்குட்டி தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க... காப்பாற்ற நினைப்பதற்குள் அந்த ரயில் ஆட்டுக்குட்டியை பதம் பார்த்து நின்றது.

வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் வெளியே தண்டவாளத்தில் குதித்தார்...

ஆட்டுக்குட்டியின் ஈரல் பாகம் தனியே விழுந்திருக்க அதை எடுத்து தனது பைக்குள் இருக்கும் டிஃபன் பாக்ஸில் வைத்துக் கொண்டு மீண்டும் ரயிலேறினார்...

ரயில் சங்கூதிக்கொண்டே கிளம்பியது...
--------------

அடுத்த ஒரு தொகுதியில் இன்னும் சில குறுங்கதைகளுடன் சந்திக்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Image Courtesy : http://www.ipernity.com


Signature

Tuesday, April 24, 2012

MicroFilms - "பேச்சி"


Image

Written and Directed by : RAM
Camera : SUJITH SARANG
Music : JAKES BEJOY
Editing & Grading : SREEJITH SARANG
Running Time : 12:56

கோயம்புத்தூரிலுள்ள எனது நண்பர் வசந்த் (Vaz zy)... பதிவரும்கூட... அவ்வப்போது அசத்தலான சிறுகதைகளை போட்டு ஆச்சர்யப்படுத்துவார்.... சில நாட்களுக்கு முன்பு அவரது தளத்தில் 'பேச்சி' என்ற ஒரு சிறுகதையை போட்டிருந்தார். திகில் கதைகளுக்கே உரித்தான தன்மைகளுடன் கூடிய அக்கதை வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் (பயமாகவும்தான்..!) இருந்தது.

அக்கதையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் அவரது நண்பர்குழுவுடன் இணைந்து 'பேச்சி' என்று குறும்பட வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இயக்கியவர் 'ராம்'...

கதைச்சுருக்கம்
வெற்றி, மனோஜ் என்ற இரு நண்பர்கள்... லீவில் வெற்றியின் கிராமத்து பண்ணைவீட்டிலிருந்து ஊருக்கு திரும்பும் போது மலைப்பாதையில் நிகழும் ஒரு திகில் சம்பவமே கதை...

இயல்பான நடிப்பில் சலிப்பும் கோவமும் பயமும் அலட்சியமும் கலந்து சுகாஷ்-ன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதே போல் அவரது உடன் வரும் நண்பராய் மனோஜ்-ம் சரியாகவே செய்திருக்கிறார். நடுவில் ஒரு குருட்டுப் பெண்ணின் அண்ணனாய் வரும் கதாபாத்திரத்தின் இண்ட்ரோ கொஞ்சம் Cliche... அதை மட்டும் வேறுவிதமாய் காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது...

சுஜித் சாரங்கின் கேமிராவில், திகில் படத்திற்கு உண்டான எல்லாக் கோணங்களிலும் படம் மிளிர்கிறது. அதுவும் மலைப்பாதையில் நடக்கும் கதை என்பதால் அந்த திகிலான ட்ராவல் அனுபவம் பார்ப்பவரை தொற்றிக்கொள்ளும்படி கோணங்கள் வைத்திருப்பதும் பாராட்டுக்குறியது. அந்த காட்சிகளுக்கு ஏற்ற கிரேடிங்க-ஐ நேர்த்தியாய் கையாண்டிருப்பது ஸ்ரீஜித் சாரங்கின் கைவண்ணம்...

இக்குறும்படம் பார்ப்பதற்கு ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படத்திற்கான ஓப்பனிங் சீன் போன்ற இம்பாக்ட் ஏற்படுத்துவதை நிச்சயம் உணர முடியும்.

படிக்கும்போது என் அகக்கண்ணில் நான் பார்த்த வடிவத்தை புறக்கண்ணில் காணக்கிடைக்க வைத்த 'பேச்சி' குறும்பட குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பேச்சி - ''மலைப்பாதை மர்மம்...''



போனஸ் செய்தி : இப்படத்தில் மந்திரவாதி ஒருவரை பற்றி சொல்லும்போது ஒருவர் திரையை உற்றுப்பார்த்துக்கொண்டு உறுமி அடித்துக் கொண்டிருப்பது போல் நடித்திருப்பார். அவர்தான் 'பேச்சி' சிறுகதை எழுதியவரும் எனது நண்பருமான 'வசந்த்' என்கிற Vaz zy... அவர் எழுதிய பேச்சி சிறுகதையை படிக்க இங்கே க்ளிக்கவும்... அந்த சிறுகதையில் இன்னும் பயங்கரமான க்ளைமேக்ஸ்...

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்...
உங்கள் விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் வழக்கம்போல் வாரிவழங்கி... இக்குழுவினரை ஊக்குவிப்பதை நாம் இப்படத்தை பார்ப்பதற்கு வழங்கும் சன்மானமாய் நினைப்போம். நன்றி...!
-----------------------------------------------------------------

குறும்படத்திற்கு ஹாரர் அல்லது த்ரில்லர் ஜானர் வகை கதைகள் நல்லதொரு தேர்வு என்று நான் நினைக்கிறேன். காரணம், ஒரு முழு திரைப்படத்தின் தாக்கத்தை ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்துவதற்கு த்ரில்லர் வகை கதைகள் நன்றாய் உதவும். மேலும் டெக்னிக்கல் விஷயங்களின் அதீத பங்களிப்புமிருப்பதால், ஒட்டுமொத்த குழுவினரின் நிபுணத்துவமும் பார்வையாளர்களுக்கு பரிச்சயப்படும். இது போல் உங்களுக்கு பிடித்த வித்தியாசமான குறும்படங்களையும் பரிந்துரை செய்யவும்.


Signature

Monday, April 23, 2012

அம்புலிக்கு நண்பர் கொடுத்த அவார்டு...

அம்புலி திரைப்படத்தின் இன்றைய 66ஆவது நாளில் நண்பர் ஒருவர் ஒரு குட்டி விருது கொடுத்துள்ளார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்று காலை ஃபேஸ்புக்கில் நண்பர் AG Sivakumar-ருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அவார்டு கொடுத்தார்... அது என்ன என்பதை கீழேயுள்ள உரையாடலில் நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்...

Ag Sivakumar : hi hareesh
---------------------------------
Haresh Narayan : Hi...
---------------------------------
Ag Sivakumar : i just want to share an incident that happened yesterday in escape cinemas
---------------------------------
Haresh Narayan : Yes pls...
---------------------------------
Ag Sivakumar : i went for mammootty's film cobra in escape.
---------------------------------
Haresh Narayan : Oh ok
---------------------------------
Ag Sivakumar : there i saw a kid with his parents near touch screen
ticket
---------------------------------
Haresh Narayan : Ok?
---------------------------------
Ag Sivakumar : his parents were keep on selecting the movie to go..john carter etc but the kid said "vendaam. vendaam. ambuli" but they did not listen the kid repeatedly said "naan dhaan solralla. ambulidhaan venum". i took a photo and will send it to your mail id imhareeshnarayan@gmail.com
---------------------------------
Haresh Narayan : Wow... So happy to hear it. Thanks to you for sharing...
---------------------------------
Ag Sivakumar : congrats for your team for making an impact on childrens.
---------------------------------
Haresh Narayan : I'm gonna share this ur very word in my blog
---------------------------------
Ag Sivakumar : ok. i will send the photo now.
---------------------------------
Haresh Narayan : Ya pls
---------------------------------
Ag Sivakumar : Mail has been sent
---------------------------------
Haresh Narayan : Thank You...
---------------------------------

இந்த உரையாடலை தொடர்ந்து அவர் அனுப்பிய இமெயில்...


வணக்கம் ஹரீஷ்,
நேற்று ஈஸ்கேப்பில் பெற்றோரிடம் அம்புலி பார்த்தே ஆக வேண்டும் என்று விடாமல் அடம் பிடித்த வாண்டின் படத்தை அட்டாச் செய்துள்ளேன். 
உங்கள் அணிக்கு வாழ்த்துகள்.
நன்றி,
சிவகுமார் 
madrasbhavan.com

Image


நன்றி... அந்த பெயர் தெரியாத குழந்தைக்கும்... புகைப்படவிருது கொடுத்த நண்பர் AG Sivakumarருக்கும்...

நண்பர் சிவக்குமார் மெட்ராஸ்பவன் என்ற வலைத்தளத்தில் எண்ணங்களை எழுதும் பதிவர்... அம்புலி வெளியான முதல் வாரம் படத்தை பார்த்து, நண்பர் ரஹும் கஸாலி மூலமாய் எனது செல்ஃபோன் நம்பரை தேடிப்பிடித்து சுமார் ஒரு மணி நேரம் படத்தைப் பற்றி பேசி பாராட்டினார். அவரது அன்பிற்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Signature

Monday, April 16, 2012

MicroFilms - "துவந்த யுத்தம்"


குறும்படங்கள்... ஹைக்கூ கவிதைகளைப் போன்றது... எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கப்படும் மைக்ரோ கலைவடிவங்கள்.

அதிலும் கூடுதல் சிரத்தை, அதீத நிபுணத்துவம் எல்லாம் கலக்கும்போது திரைப்படங்களுக்கு சவால்விடும் வகையில் சில குறும்படங்கள் அமைந்துவிடுவது பேராச்சர்யம்.

அப்படிப்பட்ட குறும்படங்களில் எனது பார்வைக்குவந்த சில படங்களை உங்களுடன் "Microfilms" என்ற பெயரில் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய படம்... 'துவந்த யுத்தம்...'



Image

Mini Profile
Written and Directed by : Ashoke Kumar
Camera : K.G. Venkatesh
Music : Karthikeya Murthy
Editing : M. Bala
Art : Rajaram
Lyrics : Subasri Priya
Running Time : 13:58

எனது நண்பரும், லஷ்மி மூவி மேக்கர்ஸ் திரு. சுவாமிநாதன் அவர்களின் மகனுமான அஷோக் குமார் இயக்கிய படம்... எனக்கும் இவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை... இவரும் என்னைப்போலவே ஐ.டி. துறையை துறந்து சினிமாவில் ஐக்கியமான துறவி...

இவர் எடுத்து முதல் குறும்படமான இந்த 'துவந்த யுத்தம்' படத்தை சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் எங்கள் குழுவினருக்கும் போட்டுக்காட்டினார்... இப்படத்தைப் பற்றிய எனது கருத்தை நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் பகிர வேண்டும் என்று ஆவல் இருந்துவந்தது... தற்போது இப்படத்தை Youtubeல் இவர் வெளியிட்டிருப்பதால் இது தக்க சமயம் என்று கருதுகிறேன்.

எதைப்பற்றிய படம்..?

திரைப்படங்களில் சமுதாய பிரச்சினைக்கு தீர்வு காண விழையும் அல்லது அலசும் திரைப்படங்கள் அன்றாடம் பெருமளவில் வெற்றிப்பெறுவதுண்டு... லஞ்சம், ஊழல், அரசாங்க அலட்சியங்கள் போன்றவைகளை பேசும் அப்படிப்பட்ட படங்கள் மக்களின் மனதினுள் இருக்கும் ஆதங்கத்தை பகிர்ந்து... அதற்கான தீர்வை கதாநாயகன் வழங்குவது போல் காட்டப்படும்போது மக்களுக்கு அப்படத்தின்மீது அபிப்ராயம் ஏற்படும்.

ஆனால், 2.30 மணி நேரம் காட்டப்படும் திரைப்படத்தில் அது சாத்தியம்... ஆனால், சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்களில் அத்தகைய சமுதாய உணர்வை தொட்டு அதில் வெற்றியும் பெறுவது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம்... அப்படிப்பட்ட சவாலான முயற்சியை எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் விருதும் குவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் அஷோக் குமார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

இவரது உணர்வை உள்வாங்கி இவருடன் இணைந்து உழைத்து வெற்றிக்கனி கண்ட இவரது குழுவினர்கள் அனைவருக்கும் இதே பாராட்டுகள் தகும்.

குறும்படம் என்பதால் இதன் கதைச்சுருக்கத்தை நான் கூறத்தேவையில்லை என்று நினைக்கிறேன். கதைப்பதைவிட கண்ணால் கண்டு தெரிந்துக் கொள்வதே சாலச்சிறந்தது...

நடிகர்கள் அனைவவரும் இயல்பாய் நடித்து உணர்வை பகிர்ந்துள்ளனர்...

இசை கார்த்திகேய மூர்த்தி... தரமான இசை.... இவரது பின்னனி இசையும், End Credits பாடலும் இப்படத்திற்கு பெரிய பலம்... குறிப்பாக கடைசியில் வரும் பாடலும், அதில இடம்பெறும் சுபஸ்ரீப்ரியாவின்  வைட்டமின் வரிகளும்...படத்தை மனதில் பதிவு செய்வது நிச்சயம்...

உப்புக்காற்று ஓவியமாய் வெங்கடேஷின் ஒளிப்பதிவு... பாலாவின் படத்தொகுப்பு, ராஜாராமின் கலை... என்று இதில் பங்குபெறும் அத்தனை டெக்னீஷியன்களும் விரைவில் வெள்ளித்திரைக்கு வரத்தகுதிபெற்ற வித்தகர்கள்... நிச்சயம் வருவார்கள்... வாழ்த்துக்களுடன் வரவேற்போம்...

ஏற்கனவே உள்ளூரிலும், வெளியூரிலும் பல்வேறு விருதுகளயும் பத்திரிகைகளின் பாராட்டுக்களையும் குவித்துள்ள இப்படம்... இன்னமும் விருதுகளையும் பார்ப்பவர்கள் நெஞ்சையும் அள்ளும் என்பது திண்ணம்...

துவந்த யுத்தம் : "கால்மணிநேர கடற்காவியம்"

----------------------------------------------------------------------------------

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்..!

வெளிநாடுகளில் இண்டிபெண்டன்ட் படங்களுக்கு Direct to DVD என்ற விசேஷ வியாபார உத்திகள் மூலம் தயாரிப்பு செலவை ஈட்டிவிடுவார்கள் (நல்ல லாபமும் உண்டு...) ஆனால், இங்கு எடுக்கப்படும் குறும்படங்களை வியாபார ரீதியாய் வெற்றிப்பெற வைக்க நம்மூரில் வழிமுறைகள் இல்லை (அல்லது மிகக்குறைவு) என்பது வருத்தத்திற்குறிய விஷயமே..!  எனவே, இலவசமாய் நாம் கண்டுகளிக்கும் குறும்படங்களுக்கு நம்மால் முடிந்த ஒன்றை செய்யலாம்... அப்படத்தைப் பற்றி ஒரிரு நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிரலாமே..!


Signature

Friday, April 13, 2012

IMPRESS ME... [சிறுகதை]


Image




---------------------------------------------------------
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்…”
---------------------------------------------------------

டீயில் இனிப்பு ரொம்ப அதிகமாக இருந்தது...

'டீ ரொம்ப நல்லாயிருக்கு..' என்று டீயுறிஞ்சிய கண்ணன், தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் த்ரியாவை பார்த்து பொய் சொன்னான்

அவனருகில் அமர்ந்திருந்த அன்பு (கண்ணனின் நண்பன்) கண்ணனைப் பார்த்து முறைத்தான்.

அவன் முறைப்பின் அர்த்தம் இது டீயா..? பாயாசம்னு வேணும்னா சொல்லு... நல்ல டீய நீ சாப்டதே இல்லையா என்று கேட்பது போல் இருந்தது

த்ரியா கண்ணனின் பாராட்டை பெற்றுக்கொண்டு 'அது நான் வைக்கல... எங்கம்மா செஞ்சது..' என்று அம்மாவை கண்காட்ட... அவள் அம்மா அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். கண்ணனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்

'தம்பி எப்படி..? டீ காஃபி ரொம்ப விரும்பி சாப்பிடுவாரோ..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனை எடை போட முயன்று கொண்டிருந்தார்.

'அதிகமில்ல சார்... ரொம்ப லிமிட்டா சாப்பிடுவான். அதுவும் ப்ரெண்ட்ஸ்ங்க நாங்க ரொம்ப கம்பெல் பண்ணும்போது மட்டும் லைட்டா சாப்பிடுவான் அவ்ளோதான்..' என்று கண்ணனின் நண்பன் அன்பு உளறினான்

'டேய்... அவர் டீ சாப்பிடுறபத்தி கேட்கறாருடா... நீ வேற ஏதோ சொல்லிட்டிருக்கே' என்று முகத்தில் அவசரமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு வருங்கால மாமனாரைப் பார்த்து அசடு வழிந்தான்.

பெண் பார்க்கும் படலம் கண்ணனுக்கு ரொம்ப புதிது... ஒரே சௌகரியம்.. த்ரியாவும் கண்ணனும் ஏற்கனவே காதலர்கள்... கண்ணன் வீட்டில் ஏற்கனவே சம்மதம்... த்ரியா வீட்டில்தான் இன்னும் இழுபறி... எனவே இன்று நடப்பது மாப்பிளையை மாமனார் பார்க்கும் படலம்... இன்றிவன் தேறிவிட்டால்... கல்யாணம் நிச்சயம்...

ஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாய் இல்லை... கண்ணன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். யார் முகத்தை பார்த்தாலும் அவனை எடை போடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்... யார் கண்ணையும் சந்திக்க தைரியமில்லாமல் டீ உறிஞ்சிக் கொண்டே அவர்கள் ஹாலில் இருக்கும் மீன் தொட்டியை பார்த்தான். அழகாக மீன்கள் கவலையில்லாமல் அங்குமிங்கும் பறப்பது போல் மிதந்துக் கொண்டிருந்தது... அக்காட்சி மனதை சற்றே லேசாக்கியது.

த்ரியா மிகவும் பதற்றமாய் இருந்தாள்...

தன்னைக்காட்டிலும் கண்ணனுக்கு அவள் முகம் பார்க்க கவலையாக இருந்தது... த்ரியாவை நிதமும் சந்தோஷமாய் பார்க்க நினைத்தவன், இன்று தன்னால் அவள் முகம் வாடிப்போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை...

இன்று என்ன நடக்குமோ என்று இருவரின் மனமும் போராடிக் கொண்டிருந்தன...

அங்கிருந்த மௌனத்தை அவன் நண்பன் அன்பு உடைத்தான்

'சார், வரப்போற ‘அப்ரெய்சல்’லருந்து கண்ணன் ரேஞ்சே தனி... கண்டிப்பா இவன்தான் டீம் லீடர்... ப்ரொமோஷன் நிச்சயம்' என்றான்

'இவர் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டா தம்பி..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனைப் பார்த்து கேட்டார்...

'ஆமா சார்..'

'உங்க பேரென்ன தம்பி..?' என்று அன்பை பார்த்து கேட்டார்

'சார் எ.. என் பேரு.. அன்பு..'

'நீங்க என்ன சம்பாதிக்கிறீங்க..?'

சொன்னான்

'நல்லது... உங்களுக்கு சிகரெட்... லிக்கர்... பழக்கமெல்லாம் உண்டா..?'

அன்பு திணறினான். திரும்பி கண்ணனைப் பார்த்தான்.

கண்ணன் சட்டென்று, 'உண்டு சார்.. ஆனா அவங்கிட்ட ஏன் இதெல்லாம் கேக்கறீங்க..?' என்றான்

'பழைய டெக்னிக்தான்... உன் நண்பனை பற்றி சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்... கேள்விப்பட்டதுண்டா..?' என்றார்

'ஆனா, பொண்ணை எனக்குக்குத்தானே கொடுப்பீங்க..?' என்று அசந்தர்ப்பமாய் கண்ணன் கேட்டுவைக்க... அவர் த்ரியாவைப் பார்த்தார்

த்ரியா மனதிற்குள் கண்ணனை திட்டிக் கொண்டாள் 'ஏண்டா அலையறே... ஒழுங்கா பதில் சொல்லு.. நான் உனக்குத்தான்' என்று சொல்லிக் கொண்டாள்

கண்ணன் சட்டென்று எழுந்தான்... 'பாத்ரூம் எங்கயிருக்கு..' என்று த்ரியாவைப் பார்த்து கேட்டான்... அவள் தன் அம்மாவைப் பார்க்க...

அவள், 'இப்படி வாங்க மாப்ள' என்றாள்…

மாப்ள... ஆஹா... கண்ணன் குளிர்ந்தான்... அவள் சுட்டிக்காட்டிய திசையில் சென்றான். கதவை தாழிட்டுக் கொண்டான். அழாத குறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நான் என் வாழ்நாளில் இப்படி சொதப்பியதில்லை... த்ரியாவிடம் காதல் சொல்லும்போதுகூட இப்படி பயந்ததில்லை... இந்த இண்டர்வியூ மட்டும் சுமூகமாக முடிந்தால்... நானும் த்ரியாவும் கணவன் மனைவி... நினைத்துப் பார்க்கவே டீயை விட இனிமையாக இருந்தது...  கடவுளே.. என்னால் முடியவில்லை... ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்து... வீட்டுக்கருகில் இருக்கும் கோவிலுக்கு பாத யாத்திரையாய் நடந்து வருகிறேன்... என்று மனதில் வேண்டிக் கொண்டான்.

மீண்டும் ஹாலில்...

த்ரியாவின் அப்பா 'நீங்க என் பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண மாதிரி என்னை இம்ப்ரெஸ் பண்ணவேயில்லையே தம்பி... அப்புறம் எப்படி..?' என்று தீவிர சிந்தனையுடன் கூறினார்.

'சார்.. நான் உங்க பொண்ணை நல்லா வச்சிப்பேன் சார்.. ஐ மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வச்சிப்பேன் சார்...' என்றான்... டேய் ஏண்டா உளர்றே என்று உள்ளுக்குள தன்னைத்தானே திட்டிக்கொண்டான்

'இல்ல தம்பி.. லவ் வேற.. லைஃப் வேற...' என்று அவர் கிட்டத்தட்ட இல்லை என்பது போல் பதில்கூறவே, கண்ணனுக்கு வயிறு கலக்கியது... அழுகை வரும்போலிருந்தது.. அருகிலிருந்த மீன் தொட்டியில் மீன்கள் அங்குமிங்கும் தாவித்தாவி அசாதாரணமாய் சுற்றியது... கண்ணனுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது...

ஹாலில் அனைவரும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு கலவரமாயினர்...

'டேய் தலை சுத்துறமாதிரியில்ல..?' என்றான் அன்பு... இவனுக்கு எப்படி தெரியும் என்று கண்ணன் எண்ணும்போது...

'என்னனங்க பில்டிங் ஆடுது' என்று த்ரியாவின் அம்மா கத்தினாள்... 

'ஹய்யோ... பூகம்பம்... பூகம்பம்...' என்று த்ரியாவின் அப்பாவும் கத்தினார்...

கண்ணன் உஷாரானான்... ஆமாம்... தனக்கு வந்த தலைசுற்றல் பூகம்பத்தால்தான் என்று தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டு எழுந்தான்...

'வாங்க... வெளிய போயிடலாம்..' என்று அங்கிருந்து அனைவரையும் துரிதமாய் ஃப்ளாட்டை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு தானும் வெளியே வந்தான்... அது 4ஆவது மாடிக்கட்டிடம்... மற்ற ஃப்ளாட்டுகளிலிருப்பவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர்...

'கீழே இறங்குங்க... சீக்கிரம் சீக்கிரம்..' யாரோ கத்தினார்கள்

அன்பு லிப்ட் பட்டனை அழுத்தினான்

'சார் லிஃப்டு வேண்டாம்... படியில இறங்கிப் போங்க...' மீண்டும் ஏதோ குரல்

'ஏன் சார்... லிஃப்ட் கவுந்துடுமா..?' அன்பு கேட்க

'இல்ல... இது கரண்ட் கட் ஆகுற டைம்...' என்று த்ரியா கூறிக்கொண்டே படியிறங்கினாள். கண்னன் துணிச்சலாய் அவள் கையைப் பற்றிக்கொண்டு அவளை கீழே இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.

அடப்பாவி தன்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கீழே ஓடுகிறானே... என்று அன்பு அவனைத் திட்டிக் கொண்டே இறங்கினான்.

படியில் இறங்கும்போதும் த்ரியாவின் அம்மா இன்னொரு ஃப்ளாட் ஆண்டியிடம் 'அதோ பொண்ணு கைய பிடிச்சிட்டு போறாரே... அவர்தான் மாப்ள..' என்று கூறிக்கொண்டிருந்தாள்...

அதற்கு அந்த ஆண்டி... 'அப்படியா.... பையன் என்ன பண்றான்' என்றாள்

அன்பு எரிச்சலுடன் 'பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டு இருக்கான்...' என்றதும் அந்த ஆண்ட்டி அன்பை பார்த்து முறைத்தாள்... 'சீக்கிரம் கீழே போங்க... அப்புறம் பேசிக்கலாம்' என்று எரிச்சலுடன் இறங்கினான்

அந்த அபார்ட்மெண்டில் இருந்த அனைவரும் வெளியேறினர்... இவ்வளவு பேரும் இந்த அபார்ட்மெண்ட்டில் இருந்தார்களா.... என்றெண்ணும்படி ஒரே கூட்டமாய் இருந்தது... அனைவரும் பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர்...

பபுள் டாப்பில் தண்ணீர் குலுங்கியதாம்... டேபிள் சேர் குலுங்கியதாம்... சில பொய்யர்கள், கட்டிலிலிருந்து அந்தரத்தில் 5 ஐடி தூக்கிப்போடப்பட்டார்களாம் இப்படி ஏகத்துக்கும் குரல்கள் காதில் விழுந்துக் கொண்டிருந்தது

ரோட்டில் ஓரமாக மூடியிருந்த கார்-ஐ சுட்டிக்காட்டி ஒருவர் உரக்கமாக... 'அங்க பாருங்க... கார் இன்னமும் ஆடுது...' என்றார்... உண்மைதான் கார் அசைந்துக் கொண்டிருந்தது. அனைவரும் சென்று தொட்டுப் பார்த்தனர்...

ஃபோன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் லைவ் அப்டேட் கொடுத்தார்

'சுமித்ரா தீவுல நிலநடுக்கமாம்..'

'சார் அது சுமத்ரா தீவு..'

'நானும் அதான் சொன்னேன்... சுனாமி வார்னிங்காமே...' என்றார்

இதைக்கேட்ட ஒரு கிழவர் 'அய்யோ சுனாமியா..? கண்ணா..?' என்று வானத்தை பார்த்து புலம்பினார்

‘சொல்லுங்க..’ என்று கண்ணன் திரும்பினான்.

‘உன்னையில்ல...’ என்று த்ரியா அவனை தன் பக்கம் திருப்பி பாவமாக பார்த்தாள்... கும்பலில் இருவரும் சற்று தள்ளியே நின்றிருந்தனர்... கண்ணன் இன்னமும் த்ரியாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். 

கண்ணன் அவளைப் பார்த்து 'ஹே சாரிப்பா..' என்றான்

'விடு கண்ணா பரவாயில்ல... நீ என்ன பண்ணுவே... அப்பாதான் பிடிவாதம் பிடிக்கிறாரே... '

'நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு... அவரை எப்படி இம்ப்ரெஸ் பண்றது..?' என்றான். இதற்குள் த்ரியாவின் அப்பாவும் அம்மாவும் இவர்களை நெருங்கி வந்தனர்

கண்ணன் அவரிடம், ‘ஆர் யூ ஆல்ரைட் அங்கிள்..’ என்று கேட்டான்

அவர் பதிலளிக்காமல் த்ரியாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்...

ரோட்டில் செல்பவர் அனைவரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள்

‘5 மணிக்கு சென்னையிலயும் சுனாமி வருதாம்..’ என்று யாரோ செல்ஃபோன் கேட்டு ஆருடம் சொன்னதும், கூட்டத்தில் முணுமுணுப்பு அதிகமாக கேட்டது...

‘ரோலண்ட் எமரிஃக் வாஸ் ரைட்... 2012 படத்துல காட்டுனதுதான் நடக்கப்போகுது‘ என்று ஒரு டீன் ஏஜ் பையன் ஆரம்பித்தான்...

‘பிரதர்... அது மாயன்ஸ் சொன்னது... நாட் எம்ரிஃக்...‘ என்று கண்ணன் மறுத்தான்

‘வாட்எவர்..’ என்று புலம்பியபடி அந்த விடலையன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று அனைவரையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்

‘என்னடா பண்றே.. விழுந்துடப்போறே..?’ என்று ஒருவர் அதட்டினார்

‘ஃபேஸ்புக்ல போடுறதுக்கு ஒரு ஃபோட்டோ..’ என்றான்

‘இந்தவாட்டி சுனாமி வந்தா 30 கி.மீ. கடல் வெளிய வந்துருமாம்... கிட்டத்தட்ட ஆவடி வரைக்கும் பீச் இருக்குமாம்..’ என்று ஒருவர் கிலி கிளப்பினார்

உடனே த்ரியாவின் அம்மா அவர் கணவனைப் பார்த்து... ‘ஏங்க, பேசாம உங்கம்மா வீடு ஒண்ணு ஆவடியில இருக்குல்ல... அங்க போயிடலாம்’ என்றாள்

‘டேய்... கவனிச்சியா... த்ரியாவை நீ கட்டிக்கிட்டா, அந்த பீச் ஹவுஸ் உனக்குத்தான்..’ என்று அன்பு கண்ணனின் காதோரம் கிசுகிசுத்தான்

ஒரு பெண்மனி திடீரென்று... ‘ஐயோ..?’ என்று கத்தினாள்...

‘என்னாச்சு..’

‘என் மாமியார் ரூம்லியே இருக்காங்க... பயத்துல நான் மட்டும் இறங்கி வந்துட்டேன்’ என்று அழுதாள்

‘நல்ல மருமகள்..’ என்று அன்பு சொல்லிக்கொண்டான்...

‘அடக்கடவுளே... அவங்களால இறங்க முடியாதே..! யாராவது போய் தூக்கிண்டு வாங்களேன்..?’ என்று கூறிய அந்த பெண் கூட்டத்தில் இளைஞனாய் இருந்த கண்ணன் பக்கம் திரும்ப

கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான். பலரும் இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

இம்ப்ரஸ் செய்ய இதுதான் நேரமோ.. என்று மனதில் நினைத்துக்கொண்டு

‘எந்த ஃப்ளாட்டு..’ என்றான்

‘9th ஃப்ளோர் ஃப்ளாட் நம்பர் N7’

‘ஓகே..’ என்று கண்ணன் வீரமாக கிளம்ப, த்ரியா அவன் கைகளைப் பிடித்தாள்

‘த்ரியா.. ஐ வில் பி ஃபைன்... டோண்ட் ஒர்ரி...’

‘வரும்போது அப்படியே என் ஃப்ளாட்லருந்து செல்ஃபோனையும் எடுத்துட்டு வந்துருங்களேன்... விட்டுட்டு வந்துட்டேன்’ என்றாள்.

அன்பு சிரித்தான். கண்ணன் அவனையும் இழுத்துக்கொண்டு ‘வாடா போலாம்...’ என்று வீரமாக அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான்.

அன்றுகாலைவரை கலகலவென்று இருந்த அந்த அபார்ட்மெண்ட்... இப்போது யாருமேயில்லாமல் கரண்ட்டும் இல்லாமல் காலியாக இருந்தது... படிக்கட்டில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்கள்

‘டேய் என்னை ஏண்டா இழுத்துட்டு வந்தே..’ என்று அன்பு கோவப்பட்டான்

‘த்ரியா அப்பாவை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணனும்டா...’ என்றான்

‘நீ உன் ஆளோட அப்பாவை இம்ப்ரெஸ் பண்றதுக்கு என்னை ஏண்டா உள்ளே இழுத்தே... பில்டிங் விழுந்தா மூணு பேரும் கம்ப்ரெஸ் ஆயிடுவோம்..’

‘மூணு பேரா..?’

‘மாடியில இருக்கிற ஆயாவையும் சேத்து சொன்னேன்..’

‘அவங்க ஆயா இல்லடா பாட்டி...’

‘ரொம்ப முக்கியம்... சீக்கிரம் ஏறு..’

ஒன்பதாவது மாடியில் ஃப்ளாட்டிற்குள் நுழைந்தனர்...

அறை திறந்தே இருந்தது...

டிவி ஓடிக்கொண்டிருந்தது... (இண்வர்டர் உபயம்)

டிவியில் LIVE என்று போட்டிருந்தது… கடல் அலை உயரே கிளம்பி ஊருக்குள் புகுந்து கார், பஸ், என எதையும் விட்டு வைக்காமல் துவம்சம் செய்ய… தொடர்ந்து வந்த அலைகள் மக்கள் கூட்டத்தை ஒரே வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு… என்று காட்சி படுமோசமாக தெரிய… 

அன்பு அதைப்பார்த்து பதறினான்... ‘போச்சுடா... 5 மணிக்கு வரவேண்டிய சுனாமி சீக்கிரமா வந்திடுச்சு போலருக்கு...’ என்றான்

கண்ணனும் உறைந்தான்... அடக்கடவுளே... த்ரியாவுடனான வாழ்க்கை வெறும் கனவுதானா...

டிவியில் ‘நேயர்களே இதே போல் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் மீண்டும் சுனாமி வரும் அபாயம் உள்ளது... இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 2004ல் சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒரு காட்சி..’ என்றான்

அன்பு கடுப்பானான்…

‘அதை ஏண்டா இப்போ காட்றீங்க... தியேட்டர்ல புதுப்படம் பொட்டி வரலைன்னா பழைய படத்தை போடுவாங்கல்ல.. அந்தமாதிரி போடுறாங்க பாரு’ என்று திட்டிக்கொண்டே அன்பு டிவியை அணைத்தான்... 

ஃப்ளாட்டில் கண்ணன் அங்குமிங்கும் தேடினான்... அறையில் பாட்டி கட்டிலில் படுத்திருந்தாள்...

‘இதோ இருக்காங்க.. அப்படியே தூக்கிடலாம் வாடா...’ என்று கண்ணன் அவளை தூக்க போக, பாட்டி கையிலிருந்து ஊசியால் கண்ணனின் கையில் குத்தினாள்

‘ஆஆ...’ என்று விலகினான்

‘என்னடா ஆச்சு..?’

‘குத்துறாங்கடா..? கையில ஊசியிருக்கு ‘ என்றான்

‘டேய்.. யாருடா நீங்க...’ என்று பாட்டி அதட்டினாள்

‘ஐயோ... பாட்டி.. நாங்க உன்னை காப்பாத்த வந்துருக்கோம்..’

‘தனியாய இருக்கிற பொம்பளை கிட்ட கலாட்டா பண்றீங்களா..?’

‘ஆமா... ஈவ் டீசிங் பண்றாங்க... பாட்டி உனக்கே இது ஓவரா இல்ல...’ என்று கண்ணன் அவள் கையிலிருந்த ஊசியை பிடுங்கி தூர எறிந்தான்

‘தூக்குடா பாட்டிய..’  என்று இருவரும் அவளைத் தூக்கி கொண்டு நடக்க...

பாட்டி அவர்களிடம், ‘டேய் இருங்கடா... 5 மணிக்கு டிவியில கைலாச யாத்திரை போடுறாங்க நான் பாக்கணும்..’ என்றாள்

‘5 மணிக்கு கைலாசத்துக்கே போய் பாக்கலாம் பாட்டி... சுனாமி வருதாம்...’ என்றான்

‘என்னடா உளர்றே...’ என்றாள்

‘உனக்கு என்ன வயசு பாட்டி..?’ என்று அன்பு கேட்டான்

'படிச்சவன்தானே நீ... பொம்னாட்டிகிட்ட வயசு கேக்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு..' என்றாள்

'என்ன ஒரு 90 இருக்குமா..'

‘அடப்பாவி 84தான்டா ஆறது...’ என்றாள்

‘டேய்... நம்ம ரெண்டு பேரு வயசை கூட்டினாலும் இவங்க வயசு வரலை... இவங்களை காப்பாத்துறதுக்கு நம்ம ரெண்டு பேரு உசுர பணயம் வைக்கணுமா..?’ என்றான்

‘டேய் பாவம்டா..’ என்று கண்ணன் கருணை காட்டினான்

திடீரென்று அன்பு கால்கள் குறுகுறுத்தது ஒருவிதமாக அதிர்ந்தது...

‘ஐயோ.. மறுபடியும்... ஆடுது... ஆடுது..’ என்று கத்தினான்

‘என்னடா... என்னாச்சு..’ என்று கண்ணனும் பதறினான்

‘சே.. சாரிடா, பேண்ட் பேக்கெட்ல மொபைல் வைப்ரேட் ஆச்சா... நான் பயந்துட்டேன்’ என்று அமைதியானான்

‘முட்டாப்பய..’ என்றாள் பாட்டி

இருவரும் நாலாவது ஃப்ளோருக்கு வந்தடைந்து த்ரியாவின் ஃப்ளாட்டில் நுழைந்தனர்... கண்ணன் த்ரியாவின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டான்

அந்த ஃப்ளாட்டின் மெயின் கதவில் ஏதோ வித்தியாசமான எல்க்ட்ரானிக் பூட்டு பொறுத்தப்பட்டிருக்க... அதை ஆர்வமாய் பார்த்த அன்பு ‘என்னடா லாக் சிஸ்டம் இது.. வித்தியாசமாயிருக்கு...’ என்று கூறியபடி கதவை மூடினான். பட்டென்று மிகத்தீவிரமாக அது மூடிக்கொண்டது...

‘என்னடா பண்ணே..?’ என்று கண்ணன் அதிர்ச்சியுடன் வந்து கதவை திறக்க முயல... திறக்க முடியவில்லை... அந்த எலக்ட்ரானிக் நம்பர் சிஸ்டத்தில் கால்குலேட்டர் நம்பர் பேட் போல் எண்களைக் காட்டியது...

‘அடப்பாவி... இது நம்பர் லாக்டா... நம்பர் தெரியாம துறக்க முடியாது...’ என்று கண்ணன் கோபமாக கத்தினான்

‘அழகான பொண்ணு இருக்கிற வீட்டுக்கெல்லாம் இப்போ நம்பர் லாக்-லாம் வைக்கிறாங்கன்னு எனகெப்படிடா தெரியும்..’ என்று அன்பு புலம்பினான்

‘5 மணி ஆச்சாடாப்பா..?’ என்று அந்த பாட்டி விபரீதம் புரியாமல் கேட்டது... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... திடீரென்று மீன் தொட்டி மீண்டும் ஆட்டம் கண்டது... சுற்றும் முற்றும் பார்க்க... ஹால் மீண்டும் அதிர்ந்தது.

‘அய்யோ... ரெண்டாவது ஷேக்... மறுபடியும் பூகம்பம்..’ என்று அன்பு கத்தினான். கண்ணன் அந்த கதவை திறக்க முயன்று முடியாதவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்... பால்கனி தெரியவே... ஓடிச்சென்று அதை எட்டிப் பார்த்தான். அந்த பால்கனி, கட்டிடத்தின் பின்பக்கத்தில் அமைந்திருந்தது... ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி... யாரையும் உதவிக்கும் கூப்பிட முடியாது... என்ன செய்யலாம் என்று பயந்த நிலையில் நின்றிருந்தான்..

இம்முறை ஆட்டம் அதிகமாக இருக்கவே... அன்பைப் பார்த்து ‘டேய் உள்ள இருக்கிறது ரிஸ்க்… தூக்குடா பாட்டிய..?’ என்றான்

…………………

அதே நேரம் வெளிப்புறத்தில்... இரண்டாவது முறையாக பில்டிங் அதிர்ந்துவிட்டு பிறகு அமைதியானதைப் பார்த்து வெளியே நின்றிருந்த அனைவரும் அய்யோ.. அய்யோ.. என்று அலறிக்கொண்டிருந்தனர்...

த்ரியாவும் பயத்தில் கிட்டத்தட்ட அழுதுக் கொண்டிருந்தாள்... 

'அழாதேம்மா... வந்துருவாங்க’ என்று அவள் அப்பா தேற்றிக்கொண்டிருந்தார்...

அதோ பாருங்க கார் இன்னும் ஆடுது... என்று மீண்டும் காரை வைத்து நிலநடுக்கத்தை அளந்து கொண்டிருந்தனர்.

‘இரண்டாவது தடவை ட்ரெமர் வர்றது ரொம்ப ஆபத்து... பில்டிங்க்கு உள்ள போனவங்களுக்கு என்னாச்சோ..?’ என்று ஒருவர் சங்கூதினார்...

‘ஐயோ... என் மாமியாருக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர் என்னை தொலைச்சிடுவார்...’ என்று பாசமான மருமகளும் புலம்பிக்கொண்டிருந்தாள்...

இதைப் பார்த்து மேலும் பொறுமையாயிருக்க மனம் வராமல், த்ரியா அருகிலிருக்கும் ஒருவரிடம் மொபைல் வாங்கி கண்ணன் நம்பருக்கு டயல் செய்தாள். லைன் கிடைத்தது

‘கண்ணா..?’

‘த்...த்... த்ரியா.. சொல்லு..?’

‘எங்கேப்பா இருக்க..? மறுபடியும் நிலநடுக்கம் வந்துச்சு... சீக்கிரமா வெளியே வா..?’ என்றாள்

‘ந... நான் பில்டிங்கலருந்து வெளியே வந்துட்டேன்... ஜஸ்ட் தட்... இ... இன்னும் லேண்ட் ஆகலை..’ என்றான்

‘என்னடா குழப்பறே..?’ என்றாள்

‘உ... உங்க.. ஏரியாவுல எவ்வளவு நேரம் கரண்ட் கட்...?’ என்றான்

‘இப்போ 4.40 ஆகுது... 5 மணிக்கு வந்துடும்...’

‘பெட்டர் 5 மணிக்கே வரட்டும்...’ என்றான்

‘ஏன் கேக்குறே..?’

‘ஏன்னா.. உங்க அபார்ட்மெண்ட் பவர் லைன்லருந்துதான் கி...கீழ இறங்கிட்டு இருக்கோம்..’ என்றான்

‘வாட்..?’

-------------

பாட்டியை கண்ணன் உப்பு மூட்டை போல் தூக்கியிருக்க... மூவரும் அந்த அபார்ட்மெண்டின் பவர் கனெக்ஷன் கொண்டு செல்லும் பைப்லைனில்... டூம் போன்ற பாதையில் இறங்கிக் கொண்டிருந்தனர்... இதற்குள் அங்கு த்ரியாவும் வந்து சேர அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும் வந்தடைந்தனர்... மேலே அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்

மணி 4.50...

‘கரண்ட் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு... சீக்கிரம் இறங்குங்க..’ என்று ஒருவர் கீழிருந்து கத்திக்கொண்டிருக்க...

கண்ணன் முதுகில் அமர்ந்திருந்த பாட்டி அவன் கழுத்தை இறுகப்பற்றியிருந்ததால் திணறினான்

‘பாட்டி... க... க... கழுத்து....’

‘ஏண்டா... நான் பாட்டுக்கு சிவனேன்னு ரூமுல படுத்துட்டிருந்தேன்... இந்த வயசுல என்னை தூக்கிட்டு போறியே நியாயமா..?’ என்றாள்

‘ஆமா பாட்டி... உன்னை கடத்திட்டு போய் கல்யாணமா பண்ணப்போறோம்... பேசாம வா..?’ என்று அன்பு அந்தரத்திலிருந்தே அதட்டினான்...

‘இன்னும் 8 நிமிஷம்தான் இருக்கு...’ என்று மீண்டும் தரையிலிருந்து குரல்

‘ஏன் சார்... யாரு சார் அது.. ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கிறது... இ... இங்க சொல்றதுக்கு பதிலா... E.B.ஆஃபீசுக்கு ஃபோன் ப.. பண்ணி சொல்லலாமில்ல..?’ என்று கண்ணன் கூறவே

‘அட ஆமால்ல... இ.பி. நம்பர் உங்கிட்ட இருக்காப்பா..’ என்று கீழே முணகல் கேட்டது...

‘சரியாப் போச்சு..’ என்று மீண்டும் இறங்க ஆரம்பித்தனர்...

ஒருவழியாக தரையைத் தொட்டு பாட்டியை பத்திரமாக இறக்கி விட்டதும்... பட் என்று சத்தத்துடன் கரண்ட் வந்தது... அனைவரும் தன்னையறியாமல் கைதட்டினர்...

மீண்டும் அனைவரும் கூடியிருந்த வெளிப்புற இடத்துக்கு வந்தனர்... வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லாமல் (பயம்தான்..) அனைவரும் அங்கேயே ஆளுக்கொரு திட்டிலும், மேட்டிலும் அமர்ந்தனர்...

‘சார் டீ..’ என்று ஒருவன் வந்து டீயை நீட்டினான்

‘வேண்டாம்ப்பா..’ என்று கண்ணன் மறுத்தான்

‘சார்... பாட்டிய காப்பாத்தியிருக்கீங்க... இந்த ரோட்லியே இன்னிக்கி நீங்கதான் ஹுரோ... உங்களுக்காகவே சூப்பரா செஞ்ச ஸ்பெஷல் சுனாமி டீ... சார்.. வேண்டாம்னு சொல்லாதீங்க...’

‘சுனாமி டீயா... ஹாஹ்ஹா...’ என்று சிரித்தபடி வாங்கி குடித்தான். அவனது வருங்கால மாமியார் போட்ட டீயை விட நன்றாகவே இருந்தது...

அன்பு அவனருகில் வந்தான்... ‘ஏண்டா... சும்மாயிருந்த பாட்டிய தூக்கி தோள்ல போட்டுட்டு வந்துட்டு... ஹுரோவா  நீ... இதை  வெளிய சொல்லாத…’ என்றான்

இப்போது த்ரியாவின் அப்பா வந்தார்...

‘தம்பி இங்க எதுக்கு உக்காந்துக்கிட்டு... அதான் ஒண்ணும் ஆபத்து இல்லன்னு ஆயிடுச்சே... வாங்க வீட்டுக்குள்ளேயே போய் பேசுவோம்...’

‘இருக்கட்டும் சார்... காலையிலியே உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன்... ரொம்ப சாரி சார்... ஆனா மறுபடியும் வருவேன் சார்... உங்களை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்... ஏன்னா எனக்கு த்ரியா ரொம்ப முக்கியம்’ என்று அவளையே பார்த்தான்

‘வரவேண்டியது நீயில்லப்பா நாங்கதான்... வாழ்கையே தற்காலிகம்னு ஆயிடுச்சி... இன்னிக்கி வராத சுனாமி வந்திருந்தா... நான் என்னத்தை கட்டிக்கிட்டு போயிருப்பேன்... சீக்கிரமே உங்கப்பா அம்மாவை பாக்க நாங்க வர்றோம்...’ என்று கூற... த்ரியா வெட்கப்பட்டாள்...

‘ஹே..!’ என்று சந்தோஷத்தில் கண்ணனும் குதித்தான்...

கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து அனைவரும் மீண்டும் கான்க்ரீட் கூண்டில் சென்று அடைப்பட்டுக்கொண்டதும்...

த்ரியாவும் கண்ணனும் மட்டும் அவர்களின் பைக் பார்க்கிங் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்...

சற்று தொலைவில் நின்றிருந்த அன்பு... ‘அதான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கள்ல... போதும் வாங்க கண்ணன் சார்..’ என்று அலுப்புடன் கூப்பிட

‘சரி.. நான் கிளம்புறேன்... பை குட்நைட்’ என்று திரும்பி திரும்பி பார்த்து வெட்கப்பட்டு கொண்டே அன்பு ஏறியிருந்த பைக்-ஐ வந்தடைந்தான்.

த்ரியா உள்ளே சென்று மறைந்தாள்

அன்பும், கண்ணனும் கிளம்பி போகும்போது...

அன்று அடிக்கடி ஆடிக்கொண்டிருந்த அந்த பூகம்ப கார்... மீண்டும் ஆடிக்கொண்டிருந்தது...

அந்த காரை இருவரும் ஆர்மவாக நெருங்க சடாரென்று அந்த கார் கதவு திறந்து கொண்டது... அதிலிருந்து ஒரு புடவை அணிந்த பெண் விறுவிறுவென்று நடந்து எதிரில் இருக்கும் இன்னொரு தெருவில் சென்று மறைந்துவிட... காருக்குள்ளிருந்து கண்ணாடியணிந்த ஒருவன் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து காரை மீண்டும் பூட்டிவிட்டு எதுவும் தெரியாதபடி நடந்து அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து சென்றான்...

அன்பு கண்ணனைப் பார்த்து ‘இப்ப தெரியுதா… ஏன் ஊருக்குள்ள பூகம்பம்லாம் வருதுன்னு..’ என்றான்

- நிறைவு -



Signature

Tuesday, April 10, 2012

எண்ணத்திரை : [அதிசுவாரஸ்யமானப் புதிர்ப்போட்டி]


மேஸ் கேம் (வழி கண்டுபிடிக்கும் புதிர்ப்போட்டி) விளையாடியிருக்கிறீர்களா..?

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... முயல் ஒரு மேல் மூலையில் இருக்கும்... கீழ்மூலையில் கேரட் துண்டு ஒன்று இருக்கும்... பசியோடிருக்கும் முயலுக்கு கேரட் துண்டை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று வினவப்பட்டு, இருவருக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாய் ஏக குழப்பத்தில் கோடுகள் இருக்கும்... கோட்டை வரைந்து பார்க்கும்போது சுற்றி சுற்றி எங்கோ போய் எங்கோ வந்து கடைசியில் மூச்சிரக்க முயல் கேரட் சாப்பிடும்...
(உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்)
Image



பிரபல எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங்-ன் நாவலைத் தழுவி 'தி ஷைனிங்' என்ற மிகச்சிறந்த த்ரில்லர் படம் ஒன்று வந்தது (டைரக்ட் : ஸ்டான்லி கூப்ரிக்). அதில் க்ளைமேக்ஸ் காட்சியில் கோடாரியுடன் துரத்தும் வில்லனிடமிருந்து உயிருடன் தப்பிக்க ஒரு தாயும் மகனும் ஒரு பூங்கா போன்ற அமைப்புக்குள் ஓடுவார்கள். அது ஒரு மேஸ் போன்ற அமைப்புடைய பூங்கா... ஓடும்போது முட்டுச்சந்து இருந்தால் திரும்பி வரும் வழியில் கொலைகாரனிடம் மாட்டிக்கொள்ளும் அபாயம் கொண்ட மேஸ் பூங்கா வடிவமைப்பு அது. அதைப் பார்க்கும்போது நமக்குள் இப்படி உண்மையிலேயே ஒரு மேஸ் அமைப்பில் மாட்டிக் கொண்டால் நாம் என்னவாவது என்ற ஒரு கிலி ஏற்படும்... அந்த கிலி இப்போது பட்டப்பகலில் உண்மையாகியுள்ளது. சென்னை மவுண்ட் ரோட்டில் நுழைந்து பாருங்கள் எங்கு போய் எங்கே வெளியே வரமுடியும் என்று தெரியாமல் நீங்கள் த்ரில்லாய் திணறுவது கியாரண்டி...

புதிதாய் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாதை இதுதான்...
Image

இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள
மேஸ் கேமிற்கும் வித்தியாசம்
மிகக்குறைவுதான் இல்லையா..?


Imageஇரண்டு வாரத்துக்கு முன்பு, ஒரு ரேடியோ பேட்டிக்காக  எங்கள் குழுவுடன் நடிக நண்பர் பாஸ்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அவரை பிக்-அப் செய்வதற்காக அவர் பணிபுரியும் ஐ.ஓ.பி பேங்க்-ற்கு (Mighty மவுண்ட் ரோடு கிளை) சென்றுக் கொண்டிருந்தோம். ஃபோனில் பேசும்போது அவர், '1.30 மணிக்கு நான் ரெடியா இருக்குறேன். நீங்க என்ன பண்ணுங்க..! பெங்களூர் போயிட்டு அப்படியே மவுண்ட் ரோடு வந்துருங்க... அதுதான் ஷாட் ரூட்' என்றார்.. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... இவர் ஏதோ விளையாடுகிறார் என்று அவரை பிக்-அப் செய்ய வழக்கமான வழியில் வந்து மவுண்ட் ரோட் நுழைய சென்றோம். அன்று காலைதான் மவுண்ட் ரோடு வழியெங்கும் விழிபிதுங்குவதுபோல் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.


அங்குசுற்றி... இங்குசுற்றி... ஒரு வழியாக அவர் ஆஃபீஸ் வாசலையடை அரை மணி நேரம் லேட்டானது... சாரி சொன்னதுக்கு... 'சாரியெல்லாம் எதுக்கு சார்..? நீங்க பேங்களூர் ரூட் வழியா வரலியா..!?' என்று சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். அப்போதுதான் அவர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்தது.

மெட்ரோ ரயிலெல்லாம் ஓகேதான்... பெட்ரோல் விற்கும் விலையில், அனைவரும் லைசன்ஸ் டெஸ்ட்டின் போது எட்டுப்போட்டு காட்டியது போல் சுற்றிக்கொண்டிருப்பது பார்க்க பாவமாய்த்தான் இருக்கிறது. இந்த புதுக்குழப்பங்களால், ஆம்புலன்ஸ் ஒன்று டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு கடக்க சிரமப்படுவதை கண்ணால் பார்த்தேன்.

ஆம்புலன்ஸ் எதிரில் இருக்கும் ஆஸ்பத்திரியை கண்ணில் மட்டுமே பார்த்துவிட்டு ஒன்வேயில் எங்கோ சுற்றிவிட்டு பேஷண்டை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் என்னவாவது..? கொடுமைதான். டிராஃபிக் போலீசையும் குற்றம் கூறுவதற்கில்லை... கத்தி கத்தி டிராஃபிக் க்ளியர் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். பூந்தமல்லி ஹைரோடில் சில வழிகள் இந்நேரம் முதல் இந்நேரம் வரை என்று போர்டு மாட்டி வைக்கப்பட்டுள்ளது... ஏக குழப்பம்.

பயணத்தின்போது 'எங்கே செல்லும் இந்த பாதை..? யாரோ யாரோ அறிவாரோ' என்று வண்டி ஓட்டுபவர்கள் ஏர்வாடி எக்ஸ்பரஷன் கொடுப்பதை பார்க்க முடிகிறது....


Signature

Monday, April 09, 2012

அபிராமி தியேட்டிரில் அம்புலி 50வது நாள்

அம்புலியின் 50வது நாளன்று ஆஃபீசில் கேக் வெட்டி கொண்டாடினோம்... 3D படம் என்பதால் கேமிராமேன் சதீஷ்.Gயைத்தான் கேக் வெட்ட சொன்னோம்... வெட்டினார்... அன்று காலையில் USலிருந்து வந்திருந்த எனது நண்பர் திரு.வசந்தராமன் அவர்களது பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்திக்கு குழுவாய் சென்று அவர்களிடம் ஆசி பெற்று வந்தோம்.

Image

Image

Image


மனதிற்கினிமையாய் மாலை திருப்போரூர் முருகர் கோவிலுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தபோது... உதவி இயக்குநர்கள் அனைவரும் குழுவாக போய் படத்தை பார்க்கலாம் என்று மாற்று யோசனை சொன்னார்கள். சரி 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று எஸ்கேப் தியேட்டரில்  4 மணியாட்டம் சென்று படத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து புக் செய்ய நினைத்தோம் 'ஹவுஸ் ஃபுல்' என்று காட்டியது.. சந்தோஷமாய் இருந்தது... அடுத்த அபிராமி தியேட்டிரில் 'P'ரோவில்தான் டிக்கெட் கிடைத்தது. 10 டிக்கட் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.

படத்தை 50ஆவது நாள்தான் பார்ப்பேன் என்று 'வேணி' என்ற எங்கள் குழுவின் தோழி ஒருவர் கூறியிருந்தார். ரிஸ்க் வேண்டாம் பார்த்துவிடுங்கள் என்று நாங்கள் முதல் வாரம் அழைத்ததற்கு... 'நிச்சயம் 50ஆவது நாள் படம் ஓடும் அப்போது பார்க்கிறேன்' என்று திண்ணமாக கூறியிருந்தார்... அவர் வாய் முகூர்த்தம் பலித்ததால், மறக்காமல் அவரையும் அழைத்திருந்தோம்.
அங்கும் ஹவுஸ் ஃபுல்லாக காட்சி துவங்கியது... கைதட்டல்கள்... ஜாலி கிண்டல்கள் என்று மக்கள் சந்தோஷமாக படம் பார்த்தது மனதிற்கு தெம்பாய் இருந்தது...

படம் முடிந்ததும் ரோபோ அபிராமி தியேட்டரின் ஹால் சூப்பர்வைஸர், ஹால் செக்யூரிட்டி, டிக்கெட் கிழிப்பவர், அரங்கில் டார்ச் அடித்து சீட் காட்டுபவர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் நண்பர்கள் என்று அனைவருடனும் நின்று குழுவாய் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

Image

Image

Image

ஹால் சூப்பர்வைஸருடன் பேசுகையில், 'நீங்கள் நிச்சயம் 100வது நாளுக்கும் இங்கேயே வரவேண்டும் அதுவே என் விருப்பம்' என்றார்... அவர் வாய் முகூர்த்தமும் பலிக்க வேண்டும். மேலும் அரங்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஹவுஸ்கீப்பிங் நண்பர்களுடன் வினவினோம்... அவர்களும் '50வது நாள் உங்கள் படம் ஹவுஸ்ஃபுல் ஆகுது.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன சார் பப்ளிக் ரெஸ்பான்ஸ் வேணும்... நாங்கதான் தினம் பாக்குறோமே கூட்டம் உங்க படத்துக்கு நல்லா வந்துட்டிருக்கு... இப்போ லீவுதானே... இன்னும் வருவாங்க பாருங்க...' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


Signature

Popular Posts