நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக.!

இனியாவின் இளஞ்சிவப்பு வானம் -சக்தி அருளானந்தம்

        ஒரு பூச்செண்டு தயாரிப்பதும் ஒரு பூச்சரம் தொடுப்பதும் வேறுவேறானது. இதை நாமறிவோம். பூச்சரம் தொடுப்பவரை விட பூச்செண்டு தயாரிப்பவருக்கு அழகியல் மற்றும் கலைத்திறன் வேண்டியிருக்கிறது. அவர் வடிவுடைய பெரிய இலைகளை அடிப்படையாக வைத்து கண் கவர் வண்ணங்களும் வடிவங்களுமுடைய பூக்களை ஒழுங்கமைத்து ஒட்டுமொத்த தயாரிப்பை பளபளக்கும் தாள் சுற்றி மதிப்பு கூட்டி நம்மிடம் தரும்போது மிகுந்த மகிழ்வடைகிறோம்.  தருபவரையும் பெறுபவரையும் ஒருங்கே மகிழ்வூட்டுகிறது அந்த பூச்செண்டு.

        தோழர் சக்தி அருளானந்தம் தன் முகநூல் பக்கத்திலும் பரவலான அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் தம் கவிதைகளை அவ்வப்போது பதிவிட்டு வருபவர். சிதறிக் கிடக்கும் பூக்குவியலாய் இருந்த அவற்றை தம் நான்காவது தொகுப்பாக ‘இனியாவின் இளஞ்சிவப்பு வானம்' என்றொரு தொகுப்பாக வசந்தா பதிப்பகம் மூலம் நமக்கு கையளித்துள்ளார். 

         சில கவிதைகள் நயமானவை. சில ரசமானவை; சில திறமானவை; சில கணமானவை; சில அழகானவை; சில வளமானவை; சில சிந்தை கிளர்த்துபவை; சில செயலூக்கம் தருபவை... விதவித மணம்; விதவித குணம்.
 
       “ஒரு கவிதைத் தொகுப்பைப் புரட்டுவது என்பது தாள்களைப் புரட்டுவதோ அச்சு வரிகளைக் கண்களால் தடவுதலோ இல்லை. படைப்பாளியின் எந்த உணர்வு எழுதத் தூண்டியதோ அதனைப் பற்றுவதே வாசக வெற்றி” என்பார் கவிஞர் இன்குலாப்.
 
       இனியாவின் இளஞ்சிவப்பு வானத்தில் வலம் வந்த போது என்னுள் பளீரிட்ட நட்சத்திரங்களை உங்களுக்கும் வெளிச்சமிடுவதில் எனக்கும் பெரு உவகை.

          தொகுப்பைப் புரட்டிய நான் ‘கனவு மகளும் விடுதலைக் கனவும்' கவிதையில் கண்கள் பளிச்சிட நிதானித்தேன்.  பெண் குழந்தையை சீராட்டி பாராட்டி தங்கக் கூண்டிலடைத்து வயிறு நிறைத்து, வளர்ந்ததும் வாலிப வயதில் தக்கதொரு மணவாளன் தேடி ஒப்படைத்து ‘அப்பாடா' என கடமையாற்றிய நிம்மதிப் பெருமூச்செறிவதும் அல்ல பெற்றோர் பொறுப்பு என்பதை கம்பீரமாக  ஒலிக்கிறது கவிதை.
 
‘உங்கள் அதிகாரத்தின் மீதான அவள் கேள்விகள்
 உங்களுக்கு எரிச்சலூட்டலாம்
 உங்கள் எரிச்சலின் உச்சம்
 அவள் பக்க நியாயத்தின் உயரம்'

        மனித வல்லூறுகளிடமிருந்து தப்பிக்க பெண்குழந்தைகளை வலுவேற்றும் வார்த்தைகள்.

        நிர்பயாக்களும் ஆசிபாக்களும் அவர் தூக்கம் தொலைத்த இரவுகளில் இக்கனவுப் பெண் கற்பனையில் கவிஞர் ஆசுவாசமடைந்திருக்கலாம்.

          ‘மணிசார்' கவிதையின் நாயக நாய் ஒரு அதிகாரப் பதவிக்காரனிடம்  அடிபட்டு செத்தது படிப்போர் மனசைப் பிழிகிறது. நெடுநேரம் அடுத்த பக்கம் புரட்ட மனசின்றி மனக்கண்ணில் மணி சார். தெருக்காரர்களின் ஒட்டுமொத்த காவலைக் குத்தகை எடுத்தாற்போல் தன் வயிறு நிரப்பிய மிச்சம் மீதி உணவின் நன்றிக்கு பங்கம் வைக்காத மணிசார், தனக்கொரு கேடு வந்தபோது தன்னைச் சொந்தம் கொண்டாட, பாதுகாக்க ஒருவருமில்லை என்ற வேதனையில் முக்கலின்றி முனகலின்றி அடிவாங்கி உயிர்விட்டது மனசைக் கீறிவிட்டது சக்தி. நிதர்சனத்தின் கொதிப்படங்க நேரமெடுக்கிறது. உங்களின் இன்னொரு கவிதை வரிகள் உதவிக்கு வருகின்றன,
 
துளித்துளியாய் திரள்கிறது சோகம்
 துளித்துளியாய் திரள்கிறது கோபம்
 துளித்துளியாய் திரள்கிறது கண்ணீர்

       இதன் கடைசி வரியான ‘துளித்துளியாய் திரள்கிறது வஞ்சம்' என்ற முடிப்பு அதனை தனிக் கவிதையாக்கி வேறொரு திறப்பைத் தருகிறது வாசகனுக்கு. ஆம். உடையும் பானையின் விரிசலின் துவக்கம் உடைந்தபோது ஏற்பட்டதா என்ன?!
 
        இனியா பற்றிய கவிதைகளின் அவளின் ‘மெளனம்' என்னை வசீகரித்தது. சாலையோரவாசிகளின் மழைக்காலம் பற்றிய அவளது அக்கறை அக்கினிக் குஞ்சு போல மலைப்பிஞ்சு போல விதைக்குள் ஒளிந்த விருட்சம் போல அவளது உயரம் காட்டியதால்.

          காலங்காலமாய் பெண் குழந்தைகள் அப்பா விரும்பிகள். ஆயிரம்தான் அம்மா உன்னதமாயிருந்தாலும் பெண்ணுக்கு அப்பா தான் முதல் நாயக பாவனை. அப்பாபோல கணவன் வாய்க்க, அப்பா போல மகன் பிறக்க, அப்பா போல் பேரன் அமைய ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாள் முழுதும் அப்பாவின் பாவனையை உடனிருத்திக் கொள்ள விரும்புவது அவளின் உரிமைக்குரிய முதல் ஆண் என்பதாலோ... ‘அப்பாவும் நானும்' கவிதை உணர்வைத் தொடும் உன்னதம். 

 ‘பலங்களும் பலவீனங்களும் நிறைந்தவர் தான்
 எல்லா அப்பாக்களைப் போல
 அவர் இருந்தபோது அவர் பலவீனங்களே
 என் கண்ணில் பட்டன
 எல்லாப் பிள்ளைகளையும் போல'
 
       உங்கள் ‘தெருப்பாடகன்' கவிதையை ஒரு பதாகையாக்கி தன் முன் நிறுத்தி  செவிப்புலன் இருப்போர்தம் ஆன்மாவுக்கு இசையுணவு அளிக்கும் தன்மானமிக்க இசைக்காரன் நிச்சயமாக தம் பசியாற்ற ஊதியம் பெற்று மகிழ்வான் சக்தி. 

 ‘அவனுக்குள் இன்னும் மிச்சமிருக்கும் 
 இசை மொத்தமும் பெற 
 அவன் உயிர்த்திருக்க
 அவனெதிரிலிருக்கும் தட்டில்
 உங்கள் அன்பை விட்டுச் செல்லுங்கள்' என்ற முடிப்பு வரிகளுக்காக மற்றுமொரு அன்புப் பூச்செண்டு தங்களுக்கு. 

         ‘சாம்பலுதிர்த்த தணலென /  சோம்பலுதிர்த்த சூரியன் சுடர்ந்தெழுந்தான்' என்ற ‘அலையலையாக' கவிதையில் வரும் வரிகள் கவியரங்கச் சாயலில் அழகுசந்தம் சக்தி!

        ஒரு இலையுதிரும் தருணம் விவரித்த'இலையுதிர்காலம்' கவிதை வெகு நயம்.

        ‘ஆடும் பாம்பே, இருத்தல், நிரந்தரம், துளித்துளியாய், கால மயக்கம், பிழைப்பு, நம்பிக்கை, தாகம் போன்ற நான்கைந்து வரிக் கவிதைகள் செறிவான அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளன. 
 
        தொலைத்து விட்ட கடலை மறந்து ஆறுகள் ஏரிகள் குளங்களை மறந்து தொட்டிக்குள் மகிழ்ந்திருக்கப் பழகிய மீன்களைப் போன்றே மனித வாழ்வும் தம் விழுமியங்கள் பலவும் அழிந்தும் மறைந்தும் இருப்பதிலும் கிடைப்பதிலும் நிறைவடையப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது எனத் தோன்றியது ‘நீந்த மறந்த மீன்கள்' கவிதையை வாசித்த போது. 

         “நீல மலைத்தொடர் தானே நீலமலையாக இருக்கிறது
         வெண்மேகங்கள் தாமாகவே வெண்மேகங்களாக இருக்கின்றன” என்றொரு ஜென் கவிதை பேசும். ஆம். காணும் நம் கண்களுக்குத்தான் வண்ண பேதமும் எண்ண பேதமும். 

        போலவே, சக்தியின் கவிதைகள் வாழ்வின் சகதியில் நாளும் மலரும் தாமரைப்பூக்கள். 

குறிப்பு:
      வழமை போல் தன் ஓவியங்களால் தொகுப்பை மெருகேற்றி உள்ளமைக்கு தனித்த பாராட்டுக்கள் பெறுகிறார் மதிப்புநிறை சக்தி!
   
 நூற்பெயர்: இனியாவின் இளஞ்சிவப்பு வானம்
ஆசிரியர்: சக்தி அருளானந்தம்
வெளியீடு வசந்தம் பதிப்பகம், தாரமங்கலம்
நூலாக்கம்: உதயக்கண்ணன்
பக்கங்கள்: 80
விலை:      ரூ. 70/-
Share on:

தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு

பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது
பெருவரமன்றோ உயிர்தனைக்  காக்க...

பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின்
அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும்
பெற்றோர் மனப்பாங்கில் 
அறநூல்கள் நம்மை வழிநடத்தும்
தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல்

அறிவை விரிவு செய்ய 
குரங்குப் பிடியாய் 
நூல்பல கற்க
கற்றபடி நிற்க 
விழைந்திடு மனமே

உடும்புப் பிடியாய் அறத்தொடு நிற்க 
உறுதிநாம்  கொண்டிட
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கம் ஒழிந்திடும்

திருடனைப் பிடித்து
தண்டனை கொடுத்து
திருந்தி வாழ்ந்திட வாய்ப்பும் தந்திட
தயார் நாம்... 
அவன்?

பிடிசோறும் இன்றி
பட்டினிப் பாட்டில்
திருடத் துணிந்தவன்
விலையாய் கொடுப்பது
உயிராய் இல்லாதிருக்கட்டுமே... 
உலகின் அழிவு தள்ளிப் போகும்

புகைப்பிடிப்பவன்
தனக்கு மட்டுமன்றி
சுற்றியிருப்போர்க்கும்
பற்ற வைக்கிறான்
நோய் நெருப்பை

எல்லோரும் ஒருநாள்
பிடிசாம்பலாக அல்லது
மண்ணோடு மண்ணாக...

தண்ணீர் பிடித்து
தாகம் தணிப்பது மாறி
சொட்டுநீரால் உதட்டை ஈரப்படுத்தும்
நாள் நெருங்கி விட்டதோ...!

கைப்பிடி அவலில்
உயிர் தரித்திருப்பர்
கைப்பிடி விதையில்
உலகு தழைக்கும்
கைப்பிடித்தவர்
இறுதிவரை துணை
கற்றது கைப்பிடிமண் அளவு
பிறர் கைப்பிடியில்
கூடாது நம் சிண்டு

நாடி பிடித்திடும்
வைத்தியர் உணர்வர்
மேனியுறும் இன்னல்
பேச்சில் பிறர் நாடி
பிடித்திடும் சமர்த்தர்
தன்காரியப் புலியாவர்

உழுதவன் நெல்லை
சாக்கில் பிடித்து
அழிந்த விலைக்கு விற்கும்போது 
ஒட்டுமொத்த உலகை
சபித்தே ஆற்றுவான்
எரியும் வயிற்றை

மாசக் கடைசியில்
கையிருப்பு தேய்ந்திட
இழுத்துப் பிடித்து
இழுத்துப் பிடித்து
தளர்ந்து சலிக்குது
இல்லற வண்டி

நம்பியவன் துரோகமிழைத்தால்
கேள்வி கேட்டு அவன் சட்டையைப் பிடி
இலட்சியப் பாதையில் தடைகள் இடர்ப்பட
விடாதே பிடி வெற்றி பெறும் வரை ஓயாதே

உறவும் நட்பும் விலகாதிருக்க
பசைபோல் அன்பை
சேர்த்துப் பிடி

ஆள்வோர் சட்டம்
கிடுக்கிப் பிடி
திணறித் தவிக்கும் சாமானியனுக்கு 
வரிகள் பலவும்
இரும்புப் பிடி

எதிர்பார்ப்பது நழுவும் போதெல்லாம்
நம்பிக்கையை விடாதே பிடி!

 - நன்றி: சாந்தா தத்
                 நிறை
                இலக்கிய இதழ்
             





Share on:
Image


 தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான்.
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது
அப்பாவிடமா? அம்மாவிடமா?"
“அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி
கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன்
ஒளிர்விழிகளால் புன்னகைத்து
எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!

அப்பாவின் கம்பீரம் மகளின் பிரம்மிப்பு
அப்பாவின் புன்னகைதான் மகளின் பூரிப்பு
அப்பாவின்  பண்பாடு மகளுக்கு வழிகாட்டி
அப்பாவின் குணமெல்லாம் மரபணுவாய் மகளிடம்.

தந்தைகரம்பற்றி தள்ளாடி நடந்தமகள்
பிந்தைவாழ் கடலில் பெருநீச்சல் பழகிட
சிந்தை பொலிவுற செந்தமிழ்க் கல்விபெற
தள்ளிவாழ முதற்சூழல் மேற்கல்வி, விடுதிவாசம்
பிரிதலும் கூடலும் அன்புபெருக்கிற்று இருவருக்கும்.

வளர்ந்த மகளுக்கு வாழ்க்கைத் துணை தேடும் பெருவிழைவில்
நாள்பார்த்து கோள் பார்த்து நல்லனவெல்லாம் தேர்ந்து
தான்பார்த்த வாலிபனை ஊர்கூட்டி மணமுடித்து
இணைந்தவர்கள் வைத்த அடி ஏழில்
தன்பிறவிப் பயன் துய்த்து
விழிகசிய தழுதழுத்து விடைபெறும் தன்குலமகளை
வழியனுப்ப மொழியற்று
தலையசைக்கும் தருணமதில் தளர்வுற்று
உயிர்சோரும் தகப்பன்களின்
உணர்வதை உணர்த்திட
உணர்-வதையையுணர்த்திட
எம்மொழியிலுமோர் சொல்லில்லை!
எம் மொழியிலும் ஓர் சொல்லில்லையே!!

இதுநாளும் தன் ஆதாரமான மகள்
இன்னொருவன் மனைக்குத் தாரமாக அலங்கரிக்க
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் எனக்கென்னும்-
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் என எண்ணும் தந்தைமனம்
பின்னாளில் அவளுமோர் தாய்மைப் பேறடைய
மறுபடியும் மகளுக்கோர் வாய்ப்பு வரும்
தந்தை கரம் பிடித்து தள்ளாடி நடைபயில.

பத்துமாதங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த
கர்ப்பிணியின் மடியிறங்கி  மகவுபெறும் நாளும் வர
மகவீன்ற தன்மனைவிக்காய் மகப்பேறு அறைவெளியே
தவித்தலைந்த பழங்கால- பழம் கால நினைவுகளோடு
தள்ளாடித் தள்ளாடி தனித்தலையும் தகப்பனின் மனக்கிடங்கில்
உள்ளோடிக் கிடக்கும் வாட்டம் ஒருகோடி...

வெள்ளப் பெருக்கெடுத்த மதகுடைந்து பீறிட்டாற்போல்
 செல்லமகள்பெற்ற சிறுமகவைப் பரவசமாய் சிரம்தாழ்த்திக்  கையேந்தி
கேசத்துப் பொய்-மையோடு பூரிப்பைக் காட்டிட
வாய்நிறைந்த பல்லோடிருந்த அப்பாவின் கம்பீரம்
மெல்லக் குழைந்து தாத்தாவான கணம்
அடடா...வெகு அற்புதம்... அழகின் உயர் உன்னதம்.

தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

காதலித்துக் கைபிடித்த காரணம் பொறாது எங்கள்
வாழ்விணையை வசந்தத்தை ஆள்வைத்து அடித்து மாய்த்த
கொடும் சாதிவெறியில் மனம் பிழன்றயெம் பெற்றோரை
தள்ளி வைத்தோம் அடியோடு. இனியெங்கள் தந்தை யார்?
தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

எல்லோருக்கும் தந்தையே எம் இறையே
மகள்களின் கடவுளான தந்தைகள் சாத்தானாகிப் போனது ஏன் ?!

குறிப்பு: கவியரங்கத்தில் எழுதி வாசித்த  எனது கவிதை.
நன்றி: கண்ணதாசன் பிறந்தநாள் விழா, 
              'இலக்கியச் சங்கமம்', நெய்வேலி.











Share on:
Image

 

ஒரு வயதில் காது குத்துவது வழக்கம்

அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்

மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.


அம்மாவைப் பெற்ற பாட்டி

சிவபதவியடைய

துளையில்லாக் காதுகளை

அமுக்கும் தோடு அலங்கரித்தது.


புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு

காது குத்தல் சிலாக்கியம் என

மனை தேடித் தேடி அலுத்து

கட்டிய வீடும் அமையாமல்

காரணங்கள் பெருகி

ஒன்பதில் தான் குதிர்ந்தது 

பத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து

ரெண்டு வேளை விருந்தொடு

தம்பி பெண் காதணி விழா.


காலை உணவில் பூரி கட்டாயம்

மதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று

மதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்

அப்பாவும் அம்மாவும் திட்டமிட்டனர்.


‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்

குளிர்பானம் சளிபிடிக்கும் என்பாய்

ஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்

வரப்போகும் உறவுக்கும் நட்புக்கும் 

இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதா?'

நானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா?

தொணதொணக்கிறாள் விழா நாயகி.


ஒரு சிணுங்கலில்லை; அழுகையில்லை

முகம் கூட சுருக்கவில்லை

பத்தர் வேலை முடித்தபின்

பட்டுப்பாவாடையுதறி

மாமா மடியிலிருந்து எழுந்தவள்

வந்த விருந்தினர்கள் சூழ

புகைப்படக்காரர் சொன்னபடி 

கேட்டு ஒய்யாரமாக ஒத்துழைத்தாள்.


‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'

‘நல்ல பொண்ணு!'

பெருமை பொங்க சொன்ன அப்பா

தழுவி உச்சி  முகர்ந்தார்.


மதிய விருந்து முடியும் வேளையில்

அம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க

கையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.

பந்தி முடிந்த அவசரத்தில் 

இலையோடு குப்பைக்குப் போனது அது.


தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்

மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை 

கண்ணீராய் பெருகியோடுகிறது...

அதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.

ஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும். 


Share on:

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..
.
நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும்.

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
.
01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
.
02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
.
03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
.
04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
.
05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
.
06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."
.
07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
.
08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
.
09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
.
10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
.
11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
.
12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
.
13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
.
14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
.
15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!
.
16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
.
17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
.
18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
.
19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
.
20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
.
21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
.
22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"
.
23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!
.
24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
.
25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...

நன்றி : முகநூல்

Share on:

Image

             “மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே!”  இப்படிச் சொல்ல வண்ணதாசன் அன்றி வேறு யாரால் முடியும்?!

                 விதைகள் முளைக்கவும் மொட்டுக்கள் மலரவும் மலர்கள் கனியவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கும் பிரபஞ்ச சக்தியின் மறுவுருவாய், ஒவ்வொரு பெண்ணும் குடும்ப அமைப்பின் ஆணிவேராய்.

                ஆண் என்னும் பித்தளையோ, குடும்பம் எனும் செப்புக் குடமோ, சமூகம் எனும் வெண்கலமோ எதுவானாலும் பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி இவை  யாவும் பயன்படுத்த முடியாமல் உபயோகமற்று விடும் என்கிறார் நம் தோழி ஹுசைனம்மா.

பெண்சாதி....

                மனிதர்கள் ஆண், பெண் என இரு சாதியாகிறார்கள்.  ‘இட்டார் பெரியோர்; இடாதோர் இழிகுலத்தோர்'என்ற முன்னோர் வாக்கும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
                “பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. சாதி, தந்தை சார்ந்து வருகிறது. ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது. அவனுக்கு பெருமையைத் தருகிறது. கெளரவத்துக்காக பெயருக்குப் பின் சாதிப் பெயர் சேர்ப்பவர்களும் ஆண்களே.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிகக் கீழான நிலையிலும் இருக்கிறாள். இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் சாதிதான். இந்த ஆழ்மன உளைச்சலால்தானோ துணிந்து கலப்புத் திருமணம் செய்கிறாள்! பெருகி வரும் கலப்புத் திருமணங்களின் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் துவங்குகிறது.
                தன் ஆதங்கங்களை காது கொடுத்துக் கேட்கவும் ஆளற்றுப் போய்தான் கோயில்களையும் பலவகை தெய்வங்களையும் பரிகாரங்களையும் பிரார்த்தித்து சுமை குறைக்க அலையாய் அலைந்து தவிக்கிறாள். ஓரறிவு ஈரறிவு உயிர்களைவிடவும் சந்தோஷம் குறைந்தவளாகிறாள்.” நண்பர் சண்முகவேல் சொல்வதையும் நாம் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.
               
                “இந்த உலகம் ஆண்களுக்கானது. அதில் பெண்களுக்கான இடம் கழிப்பறை போல... அவர்களின் கடன்களைக் கழிக்க...” தன் சிறுகதையொன்றில் பாரதிக்குமார் சொல்லிச் செல்வது நம் சிந்தையை கிள்ளிச் செல்கிறதல்லவா...!

                பெருகி வரும் விவாகரத்து செய்திகள் ‘பெண்கள் முன்பு போலில்லை' என்ற அங்கலாய்ப்பை முதியோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆம்! உண்மைதான்! கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, சாராயம், சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளைக் காரணம் காட்டி வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்கள் இன்று இல்லைதான்!
                பணியிடங்களில் ஆண்-பெண் நட்பு விபரீதமாகி விடுகிறது பலநேரங்களில். வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வு இன்றி அல்லல் படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல். ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும் போது விளைவுகள் பெண்ணுக்கு எதிரானதாகவே முடிகின்றன. அவதூறு தொடங்கி பலாத்காரம் வரை ஏமாற்றத்தை ஈடு செய்ய வக்கிர மனம் பரிதவிக்கிறது.
       பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக்கிளம்பியபடிதான். மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது. 

     வாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்தந்த நேரத்துக்கான வலியின் ரணம்தான். ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம் ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது” மேலாண்மை வகுப்புகள் எடுக்கும் மோகன்ஜி  சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.


                “இன்பங்களை விட துன்பங்களே; செல்வத்தை விட வறுமையே; புகழ்மொழிகளை விட ஏமாற்றங்களே மனித ஆற்றலை வெளிக் கொணர்கின்றன”  சுவாமி விவேகானந்தர் கூட இதைத் தான் சொல்லியிருக்கிறார். மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.


      சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும்  துணிவுதான் வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. 
     படிப்பும் வேலையும் பெண்ணுக்கு சுய மதிப்பை வழங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற ஒன்று இருந்ததென உணரும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருகின்றன.

     எந்த ஆடும் வயது முதிர்ந்து நோயுற்று இறப்பதில்லை; எந்தப் பெண்ணும் வாழ்நாளெல்லாம் நிம்மதியுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காலகட்டத்தில் சிக்கல்கள். நிதானித்து முடிச்சவிழ்ப்பவர்கள் நினைக்கத் தக்கவர்களாகின்றனர். ‘பெண்ணாகப் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி' எனும் வரிகள் அச்சமூட்டினால், ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனும் வரிகள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.



                ஆறாம் அறிவுடன் பிறந்த நாம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை, நிகழ்வுகளை அவதானித்தபடியே வாழ்கிறோம். வாசிக்கும் பழக்கத்தால் பல செய்திகளும் நம்முள் வசப்படுகிறது. மொழியெனும் பெரும் ஊடகத்தால் சக மனிதர்களுடன் அளவளாவி பலவற்றை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வாழ்ந்திருக்கும் சொற்ப காலத்தில் உடல் நோயற்றிருக்கவும் மனம் கவலையற்றிருக்கவும் உயிர் பிறருக்கு உதவியாயிருக்கவும் முயலலாம். இதில் ஆணென்ன பெண்ணென்ன? 

      அன்பே அனைவருக்கும் பொது.

# மகளீர்  தின வாழ்த்துக்கள்! 

Share on:
  • ← Previous post
Image
  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers

Image
Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • Image
    பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • Image
    சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • Image
    ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • Image
    அக்ஷ்ய பாத்ரம்
    Image
    நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....
    1 day ago
  • Image
    கீதமஞ்சரி
    Image
    டிங்கோ கொலைகள் (2)
    5 weeks ago
  • Image
    முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    1 month ago
  • Image
    CrUcifiXioN
    Image
    Gemini and me!
    5 months ago
  • Image
    சிவகுமாரன் கவிதைகள்
    Image
    சீட்டுக்கவி
    9 months ago
  • Image
    திண்டுக்கல் தனபாலன்
    Image
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • Image
    ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • Image
    சமவெளி
    Image
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • Image
    VAI. GOPALAKRISHNAN
    Image
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Image
    Thanjai Kavithai
    8 years ago
  • Image
    வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • Image
    அழியாச் சுடர்கள்
    Image
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    8 years ago
  • Image
    வானவில் மனிதன்
    Image
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • Image
    ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • Image
    கோவை2தில்லி
    Image
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • Image
    செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    9 years ago
  • Image
    ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • Image
    அடர் கருப்பு
    Image
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • Image
    சைக்கிள்
    Image
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • Image
    வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    Image
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    10 years ago
  • Image
    ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • Image
    கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • Image
    நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • Image
    இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • Image
    வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates

Advertisement
Advertisement