என்னைப் பற்றி

செவ்வாய், ஜூன் 22, 2010

பாலில் ஊறிய செல்பேசி

காலையில் சுறுசுறுப்பாக வீட்டை தூய்மை படுத்தி, குளித்து கால் சட்டை, மேல் சட்டை உடுத்து சட்டைப் பையில் பேனா, செல்பேசி அணிந்து கொண்டு காலை உணவுக்கு வழி தேட ஆரம்பித்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து வைத்தது இருந்தது.

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் வழக்கப்படி காய்ச்சிய பால் இறக்கி கிண்ணத்தில் ஆறிக் கொண்டிருக்க, அடுப்பில் ஒன்று கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் சப்பாத்தி சுடும் கல் போட்டு விட்டு, சப்பாத்தி போடும் கட்டையில் உருண்டைகளை விரிக்க ஆரம்பித்தேன். முதல் சப்பாத்தி கல்லில் ஒழுங்காக போய்ச் சேர்ந்தது.

இரண்டாவதை கட்டையில் வைத்து விட்டு நிமிர்ந்தால் தொலைபேசி அடித்து நின்றது. கூப்பிட்டவர்கள் காலை வேளையில் தொந்தரவு வேண்டாம் என்று திரும்பி அழைக்கும் போது அழைக்கட்டும் என்று ஒரே மணி ஒலிக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தார்கள் (என்று நினைக்கிறேன்).

அந்தப் பொறுமை இல்லாமல் உடனடியாக திருப்பி அழைத்து முகத்துக்கும் தோளுக்கும் நடுவில் செல்பேசியை இடுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துத் தொடர்ந்தேன். கூடவே சப்பாத்தி இடுவதையும் நிறுத்தவில்லை, கல் காய்ந்து அடுத்த சப்பாத்தி தயாராகி விட வேண்டுமே! கை அசைவில் உடல் அசைவில் செல்பேசி நழுவி (அவசரப்படாதீர்கள்) தரையில் விழுந்தது. எதிரில் பேசியவர்கள் என்ன நினைத்தார்களோ, அவசர அவசரமாக எடுத்து மீண்டும் இடுக்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தேன், கை வேலையும் நிற்கவில்லை.

இந்த முறை விழுந்தது நழுவி சூடான பால் பாத்திரத்துக்குள் விழுந்தது. உடனடியாக எடுக்கும் அளவுக்கு பால் ஆறியிருக்கக் கூடவில்லை. இடுக்கி தேடி தொலைபேசியை வெளியில் எடுத்துப் பார்த்தால் காட்சி சன்னலில் வெள்ளையாக ஒரு புகை மூட்டம் தெரிந்தது.

ஒரு தடவை மழையில் நனைந்து கொண்டே பாலபாரதியைப் பார்க்கப் போயிருந்த போது, 'நனைந்திருந்த செல்பேசியை உடனே அணைத்து, மின்கலனை நீக்கி தண்ணீர் போக காய வைத்து விடுங்கள்' என்று சொன்னார். 'தண்ணீர் மின்சுற்று எதிலாவது புகுந்தால் எல்லாம் புகைந்து போய் விடலாம் என்று அந்த முன்னெச்சரிக்கை, நன்கு காய்ந்த பிறகுதான் மின்கலனையோ மின்னிணைப்பையோ இணைக்க வேண்டும். '

அந்த நினைவில், வெளியில் எடுத்த செல்பேசியைத் தண்ணீரில் ஒரு முறை காட்டி விட்டு, மின்கலனை கழற்றி, முன்பக்க மூடியையும் நீக்கி வைத்து விட்டேன். இருக்கிற நிலைமையில் இது வேறு செலவு வைக்கப் போகிறதா என்ன?

செல்பேசியின் தொலைபேசி பட்டியலில் 200 எண்கள் சேமித்து வைத்திருக்கும் வசதி இருந்தது. இப்போது எத்தனை எண்கள் இருக்கின்றன? சேவை அட்டையிலும் 200 எண்கள் வசதி இருக்கிறது. அதனால் எதில் எந்த எண் சேமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது (அதைப் பார்க்கும் வசதி இந்தக் கருவியில் இல்லை), இரண்டும் சேர்ந்து ஒரே பட்டியலாகத்தான் தெரியும்.

இப்போ யார் யார் எண்களை இழக்கப் போகிறோம்? ஈரம் காய்ந்த பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பிக்குமா என்று எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன. பாலில் விழும் போது பேசிக் கொண்டிருந்தவர் அவரிடம் கோபித்துக் கொண்டு இணைப்பைத் துண்டித்து விட்டதாக நினைக்கலாம். (அவர்களது எண் சேமித்து வைத்திருக்கவில்லை).

அப்படி கோபிக்கும்படியான பேச்சுத்தான் நடந்து கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்தால் மழுப்பி விட்டு வைத்திருப்பேன். இப்போது திரும்ப அழைக்கும் வாய்ப்பும் இல்லை. மின்கலனை கழற்றி விட்டதால் மீண்டும் கருவி உயிர் பெற்றாலும் வந்த அழைப்புப் பட்டியல் எல்லாம் மறைந்திருக்கும்.

11 மணிக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கப் போக வேண்டும். ஓரிரு மணி நேரம் காய்ந்து விட்டதே என்று மின்கலனை பொருத்த முயன்றால், NOKIA என்று ஒரு மின்னு மின்னி விட்டு காட்சி சன்னல் வெறுமையாகி விட்டது. 'இன்னும் சில மணி நேரம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். இப்போ மின்கருகல் நடந்து விட்டது போலிருக்கிறதே' என்று நொந்து கொண்டு, அலுவலக நண்பரின் செல்பேசியை இரவல் வாங்கி, சேவை அட்டையைப் பொருத்திக் கொண்டேன்.

செல்பேசி உயிர் பெறும் வரை வரும் அழைப்புகளை இன்னொரு எண்ணுக்கு அனுப்பும் சேவையை செயல்படுத்த முயன்றால் வோடபோன் காலை வாரி விட்டது. கடைசி வரை அதைச் செயல்படுத்தவே முடியவில்லை.

மதியம் திரும்பி வந்து, மின்விசிறிக்குக் கீழே வைத்திருந்த கருவியின் பாகங்களை இணைத்துப் பார்த்தால் உயிர் வந்தே விட்டது. பாலும், நீரும் உலர்ந்து போய் வழக்கமாக இயங்கும் நிலை திரும்பி விட்டிருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அணைத்துப் பிரித்து காய வைத்து, இரவிலும் பிரித்து போட்டு தூங்கி காலையில் பொருத்தினால் எதுவும் நடக்காதது போல இயங்க ஆரம்பித்தது.

நினைவுச் சின்னமாக ஒரு மேகம் போல திரையின் ஒரு பகுதியில் தெரிகிறது. திறந்து துடைத்துக் காய வைக்கும் தேவை இருக்கிறதோ!

2 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

சிவா,
எண்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் சைபர் தனிமையாய் உணர நேரிடும்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

நூற்றுக்கணக்கான எண்களை ஒரேயடியாக இழந்தால் கொடுமையாகிப் போய் விடும். இன்னொரு இடத்திலும் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்