என்னைப் பற்றி

செவ்வாய், ஜூன் 19, 2012

சாரமற்ற இடுகை


நேரம் காலை 6.18, ஜூன் மாதம் 19ம் தேதி.

நேற்று முழுவதும் தூங்குவதிலும் படிப்பதிலும், அதிலும் பொழுதுபோக்கு படிப்பதிலும் கழிந்தது. இன்றைக்கு ஏற்றுக் கொண்ட துரத்தப்படும் பணிகளை முன்னிட்டு அந்த சோம்பல் கட்டத்திலிருந்து விடுபடும் கட்டாயம். எழுந்து உட்கார்ந்து நாட்குறிப்பு எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

நேற்று காலையில் எழுந்திருக்கும் போது தாமதமாகவே எழுந்தேன். இரவு 12 மணிக்குத்தான் தூங்கப் போயிருந்தேன். எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு இணையத்தில் ஏதோ செய்ததாக நினைவு.

குளித்து விட்டு பைகளை கட்டி வைத்தேன். துணிகளை துணிப்பையில், கணினி முதலானவற்றை கணினி பையில். காலையில் போகும் போது எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது. ஆறே முக்காலுக்கெல்லாம் புறப்பட்டேன். நல்ல வேளையாக மேல் வீட்டில் எழுந்திருந்தார்கள்.  எங்கும் வெளியில் போகிறார்களா என்று விசாரித்துக் கொண்டேன்.

நடந்தே அய்யப்பன்தாங்கல் வந்து சேர்ந்தேன். வழியில் காயத்ரி உணவு விடுதியில் ஒரு டீ. ஏதாவது தயாராகியிருந்தால் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தும் எதுவும் தயாராகியிருக்கவில்லை. டாஸ்மாக்குக்கு வெளியில் ஒரு குடிமகன் ஒரு நாயை செல்லமாக அடித்துக் கொண்டிருந்தார், அதுவும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்துக்குள் போய் 17M வண்டியில் உட்கார்ந்து கொண்டேன். நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். வண்டி கிளம்பும் அடையாளம் தெரியவில்லை. 10 நிமிடம் கழித்து புறப்பட்ட 37Gயில் ஏறிக் கொண்டேன்.

வழியில் சில நிமிடங்கள் கண்ணயர்ந்து கொண்டேன்.
உள்ளே போய் மினிமீல்ஸ் சீட்டு வாங்கி கொடுத்து உட்கார்ந்திருக்கும் போது அவரது தொலைபேசி.

நான் மினிமீல்சை முடித்து விட்டு நடந்து கேசவர்த்தினி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அய்யப்பன்தாங்கல் போகும் 37G யில் ஏறிக் கொண்டேன்.

இப்போது இறங்கி பார்த்தால் ஆட்டோ எதுவும் இல்லை. நடந்தே போய்ச் சேர்ந்தேன். மேல் வீட்டுக் காரர் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் வந்து திறந்து விட்டு சாவியையும் கையில் கொடுத்தார். மேலே போய், கழிவறைக்குப் போய் விட்டு, அதன் பிறகு தூக்கம்.

ஒரு மணி நேரத்துக்கு கொஞ்சம் குறைவாக தூங்கி விட்டு எழுந்து கை கால் முகம் கழுவி விட்டு பைகளை எடுத்துக் கொண்டேன். 3 மணிக்குப் பிறகுதான் புறப்பட்டேன். மெயின் தெருவுக்கு வரும் போது கடந்து போன ஆட்டோவை கை காட்டி நிறுத்து ஏறிக் கொண்டேன். 40 ரூபாய் வாங்கிக் கொண்டார்.

அய்யப்பன் தாங்கலில் சாலையை கடக்க தேவையில்லாமல் இந்த பக்கமாக வந்த 49Aல் ஏறிக் கொண்டேன். இறங்கி ஆட்டோ பிடித்தேன். ஆட்டோ ஓட்டுனரின் கையில், முழங்கை முழுவதும் உராய்த்து ஆறி வரும் புண்களாக இருந்தது. எங்கோ விழுந்திருக்கிறார். இரு சக்கர வண்டியில் போகும் போது விழுந்து விட்டாராம். ஆட்டோ ஓட்டுவது போலவே நினைத்து இரு சக்கர வண்டியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறார்.  


ஹாட் சிப்ஸ் அருகில் இறங்கிக் கொண்டேன். எதிரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கப் பார்த்தால் கொஞ்சம் வரிசை நின்றிருந்தது பேருந்தில் ஏறி வடபழனி வந்து விட்டேன். முனியாண்டி விலாஸ், அல்லது சரவண பவன் என்று நினைத்துக் கொண்டே சரவண பவனுக்குள் இருக்கும் ஆந்திரா வங்கிக்குள் போனால் பணம் தர மறுத்து விட்டது. ஆற்காடு சாலையில் நடந்து சிட்டி பேங்க ஏடிஎம்மிலும் அதே கதைதான். தொலைபேசி நிலவரத்தைச் சொல்லி ஒரு வேளை கோயம்பேடு எஸ்பிஐ எந்திரத்திலும் பணம் கிடைக்கவில்லை என்றால் அவர் கோயம்பேடு வந்து பணம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். 

வடபழனி பேருந்து நிறுத்தத்திலிருந்து பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். ஒரு தெலுங்கு பெண் ஒரு நுழைவாயில் முன்பாகவே நிறுத்தி விட நானும் இறங்கிக் கொண்டேன். ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்கு போய் பணம் எடுத்தால் கிடைத்து விட்டது. ஆனால் மற்ற வங்கி கார்டுகள் அங்கு செயல்படவில்லையாம். கொஞ்ச நேரத்துக்கு முன்பு நெட்வொர்க் செயல்படாமல் இருந்ததாக பாதுகாவலர் சொன்னார். அதன் பிறகு சரி செய்து வங்கிக்குள் மட்டும் செயல்படும் படி செய்திருப்பார்கள். எவ்வளவு பெரிய பொறுப்பு இதை பராமரிப்பவர்களுக்கு!

உள்ளே போய் 102வை விட்டு விட்டு 529 தருமபுரி பேருந்தில் ஏறிக் கொண்டேன். மூன்று பேர் இருக்கையின் நடைபாதை பக்கம். அருகில் இருந்த இருவர் இருக்கையில் ஒரு கருப்பு இஸ்லாமியரும் அவரது மனைவியும், ஓட்டுனருக்கு நேர் பின்பக்க இருக்கையில் கைக்குழந்தையுடன் உட்கார்ந்திருந்த தாய் குழந்தையை அவரது அம்மாவிடம் விட்டு பின்னால் இருந்த இருவர் இருக்கையில் தனியாக இருந்த பெண்மணியை இடம் மாற்றிக் கொள்ள வேண்டினார். அவர் நகரவில்லை.

பேருந்து புறப்பட்டு நகர்ந்து வெளியில் வந்தது, கோயம்பேடு-மதுரவாயல் சாலைக்குள் நுழைந்து, ஏதோ உராயும் சத்தம் கேட்டதை இறங்கி சரி செய்தார்கள். அதன் பிறகு பூந்தமல்லி வழியாக போனது. ஒரு பையன் ஏறினான். கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும். நடுவில் உட்கார வைத்தால் தோள்களை இடித்துக் கொண்டிருந்தான்.

வேலூருக்கு 11.30க்கெல்லாம் வந்து விட்டது. இறங்கி பகிர்வூர்தியில் ஏறி கோபாலபுரத்தில் இறங்கினேன். இரவு 12 மணிக்கும் குடிதண்ணீர் பிடித்து போய்க் கொண்டிருந்தார்கள் பெண்கள். வீட்டுக்கு வந்து உடை மாற்றி, கணினியை இயக்கினேன். சிறிது நேரத்துக்குப் பிறகு தூங்கப் போனேன்.

நேற்றுக் காலையில் எழுந்திருக்கவும் தாமதம். ஆம்பூர் போக வேண்டாம் இங்கிருந்தே வேலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். ராணிப்பேட்டையும் போகப் போவதில்லை. எழுந்து சோர்வாகவே இருந்தேன். பேசி ஐபி வாங்கிக் கொண்டேன். அதே போல அழைத்தால் அவர் எடுக்கவில்லை. என்ன பிரச்சனை என்று தெரிந்து கொண்டேன். அதே shipment delete பிரச்சனைதான்.

பணம் கணக்கில் சேர்ந்திருக்கவில்லை, சேவை வரி எடுத்து விட்டிருந்தார்கள். அரை கப் அரிசியை வேக வைத்து கஞ்சியாக்கிக் கொண்டேன். அந்த தண்ணீரில் காம்ப்ளான் கரைத்துக் கொண்டேன்.

ஞாயிறு, ஜூன் 17, 2012

சகடம்


நேரம் காலை 5 மணி 18 நிமிடங்கள். ஜூன் 17, 2012.

நேற்று காலையில் புரண்டு புரண்டு படுத்து 7 மணி வரை தூங்கினேன். வேலை எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. நாட்குறிப்பு எழுதுவது, நாளுக்கான வேலைகளை திட்டமிடுவது, எழுத்து அல்லது மொழிபெயர்ப்பு அல்லது தொழில்நுட்ப பணிகள் எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. காலைக் கடன்களை முடித்து விட்டு கணினியை இயக்கி இணையத்தில் இணைந்தேன்.

அதன் பிறகு குளித்து, தியானம் செய்து விட்டு புறப்பட வேண்டியதுதான். பசிக்கு வாங்கி வைத்திருந்த குட்டே பிஸ்கட்டை காலி செய்தேன். ஒரு பாக்கெட். முந்தா நேற்றே பெரிய பாக்கெட் வாங்கியிருந்தால் இன்றைக்கும் உதவியிருந்திருக்கும். செய்யவில்லை. இப்போது பசிக்கத்தான் செய்கிறது. நேற்று இரவு  சாப்பிடாமல் புறப்பட்டு வந்திருந்தேன். ஒரு டம்ளர் மோர் மட்டும் கொடுத்தார்கள்.

குளித்து தியானம் முடித்து விட்டு 1 மணி நேரம் வேலை செய்யத் திட்டமிட்டிருந்தேன். புறப்பட்டு வீட்டைப் பூட்டி மேலே சாவியைக் கொடுக்கப் போனேன். வீட்டுக் காரர் குளித்து விட்டு துண்டுடன் உலாவிக் கொண்டிருந்தார். வீட்டு அம்மா வந்து சாவியை வாங்கிக் கொண்டார்கள்.

கீழே இறங்கி மெயின் ரோடு நோக்கி நடையைப் போட்டேன். வழியில் காயத்ரி உணவகத்தில் காலை உணவு. ஒரு செட் பூரி, இரண்டு கல் தோசை, ஒரு டீ. மொத்தம் 21 ரூபாய். பூரி ஒரு செட் 15 ரூபாய், கல் தோசை ஒரு செட் 20  ரூபாய், டீ- 6 ரூபாய். வெளியில் வந்து நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். கூடவே ஜூனியர் விகடனும். நித்யானந்தா பச்சை உடை உடுத்து அட்டையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கவரப்பட்டு.

பஸ் டெப்போவுக்கு போகாமல் சாலையின் இந்தப் பக்கமே நின்று கொண்டேன். ஒரு பகிர்வு ஊர்தி வந்தது.  ஏற்கனவே முன் இருக்கையில் ஒரு வயதான அம்மாவும், பின் பக்கம் மூன்று பெண்கள் ஒரு புறம், இரண்டு ஆண்கள், ஒரு பெண் மறுபுறம் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பெண் மற்ற பெண்களுடன் சேர்ந்து கொள்ள, நான் ஏறி உட்கார்ந்தேன். சிறிது தூரத்திலேயே ஆண்களிலும் நான்காவதாக ஒருவர் ஏறிக் கொண்டார்.

போரூர் ஸ்டேட் பேங்க் எதிரில் நிறுத்தச் சொல்லி இறங்கினேன். 15 ரூபாய் வாங்கினார். வங்கிக்குள் போய் பணம் செலுத்தும் படிவத்தை எடுத்து நிரப்பி காசோலையை உள்ளே போட்டேன். வங்கி செயல்பாடுகளுக்கான மேலாளர் முன்பு பார்த்த அதே பெண்மணிதான். வெளியில் வந்து சாலையைக் கடந்து நின்றால் பகிர்வூர்தி ஒன்று இருக்கைகள் நிரம்பி போனது. அதற்கு பின்பு வந்த வண்டியில் ஏறிக் கொண்டேன். பின்புறம் இரண்டு அடுக்காக உட்காரும் வசதி. மேல் அடுக்கில் உட்கார்ந்து கொண்டேன். அருகிலேயே இன்னொரு அம்மா சிறுமியுடன் ஏறினார்கள். அந்தக்குழந்தை கையில் பை, தண்ணீர் பாட்டில் என்று சுழன்று கொண்டிருந்தது. நவநாகரீகமான ஒரு இளம் பெண் ஏறினாள். கொஞ்ச தூரத்துக்குப் பிறகு செல்பேசியில் இந்தி அல்லது ஏதோ வட இந்திய மொழியில் பேச ஆரம்பித்தாள்.

ராமாபுரம் பாலத்துக்கு முன்பு நந்தம்பாக்கம் கிளைக்கு முன்பு இறங்கிக் கொண்டேன். போரூர் கிளை 9 மணியிலிருந்தே செயல்படுகிறது. இவர்கள் 10 மணி என்று நினைக்கிறேன். பார்க்கவில்லை. உள்ளே போய் காசோலையை, படிவத்துடன் இணைத்து பெட்டியில் போட்டேன். அதற்குள் ஒரு வங்கி உதவியாளர் வந்து உட்கார அவரிடம் கேட்டு முன்பு செலுத்திய படிவத்துக்கான துணைத்தாளை எடுத்துக் கொண்டேன்.

இப்போது பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன். சாலை நிறுத்தத்திலேயே நின்ற பேருந்தில் ஏறி கிண்டி சீட்டு எடுத்தேன். 5 ரூபாய் என்று நினைவு. கிண்டியில் இறங்கி நடக்கும் போது அழைத்தேன்.  ஒரு நாள் வேலூருக்கு வரும்படி அழைத்தேன். ஜூலையில் வருவதாகச் சொன்னார்.

தரையடிப் பாதை வழியாக சாலையைக் கடந்து ரயில் நிலையத்துக்கு வந்தேன். நீண்ட வரிசை நின்றிருந்தது. நடுவில் இருந்த வரிசையில் நின்றேன். உயரமான ஒரு பெண், தனது கணவனுடன் வந்து பக்கத்து வரிசையில் நின்றாள். அந்த வரிசைதான் வேகமாக நகர்ந்து போனது. சில நிமிடங்களுக்குப் பிறகு நான் நின்ற வரிசை தேங்கி நிற்பதாகத் தோன்றேன். வரிசை மாற்றிக் கொண்டேன். சீட்டு கொடுக்கும் ஜன்னலை அணுகும் போது தானியங்கி எந்திரத்தில் ஏதோ கோளாறு என்று ஒருவர் முறையிட உள்ளே இருந்த பெண் வெளியில் வந்தார். கிண்டியிலும் சரி, மாலையில் சென்ட்ரலிலும் சரி டிக்கெட் கொடுப்பதற்கு  பெண்கள். புதிதாக எடுக்கப்பட்டவர்களா அல்லது தற்காலிக ஊழியர்களா என்று தெரியவில்லை. நிச்சயமாக தன்னம்பிக்கையும், உறுதியும் தெரிந்தது, அதனால் நிரந்தர ஊழியர்களாகத்தான் இருக்க வேண்டும்.

தாம்பரம் வந்து இறங்கி சாலையைக் கடந்து, ஸ்ரீராம் கடையில் ஒரு கவர் வாங்கிக் கொண்டேன். அப்படியே நடந்து வசந்த பவன் உள்ளே போனேன். பூக்கடை பாதையைக் கடந்து போனேன்.

அங்கிருந்து நடந்தே திரும்பி வந்தேன். சரியான இடத்தில் வலது புறம் திரும்பி வீடு இருக்கும் தெருவுக்கு வந்து சேர்ந்தேன். எப்போது போனாலும் முகம் மலர வரவேற்பது அவங்கதான். கொஞ்ச நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். 

பருப்பு வறுபட்டு, அரைத்து, சிறுபயறு துவையல் அரைத்து விட்டார், வத்தல் வறுத்தாகி விட்டது. அண்ணன் வரும் போதும் வழக்கம் போல பல விஷயங்களை பேசினோம். மாம்பழத்தை வெட்டி சாப்பிட்டோம். சாப்பிட உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டோம். கறுப்பன், புலியன் என்று இரண்டு பூனைகள், புலியன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தொலைபேசி மாலை திட்டத்தை உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு விடை பெற்றுப் புறப்பட்டேன். நடந்து மெயின் ரோடுக்கு வந்தேன். பேருந்து எதுவும் வாகாக கிடைக்கவில்லை. ஆட்டோ ஒன்று நிறுத்தி அண்ணா நகர் போகும் பேருந்து நிலையத்தில் விடச் சொன்னேன். 70 ரூபாய் கேட்டார். 

இந்த 70 ரூபாய், ரத்னா கபேயிலிருந்துர கடற்கரைக்கு 40 ரூபாய், கடற்கரையிலிருந்து சென்ட்ரலுக்கு 70 ரூபாய், பழவந்தாங்கலில் இருந்து 30 ரூபாய், பழவந்தாங்கலிலிருந்து பட் ரோடுக்கு 80 ரூபாய் என்று 290 ரூபாய்கள் ஆட்டோவிற்கு செலவாகின. காலையில் பகிர்வூர்திகளில் 25 ரூபாய்.

114 தடத்தில் ஏறிக் கொண்டேன். விரைவுப் பேருந்து, திருமங்கலம் சீட்டு எடுத்துக் கொண்டேன். 1 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆகிறது. தாம்பரத்திலிருந்து திருமங்கலம் வருவதற்கு. இறங்கி சாலையைக் கடந்து 13ம் மெயின் ரோடு அருகில் வந்தேன்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பேருந்தில் ஏறினோம். அண்ணா சதுக்கம் போகும் பேருந்து. நிறையவே பேசிக் கொண்டே போனோம்.

திருவல்லிக்கேணி சங்கீதா அருகில் இறங்கி நடந்து ரத்னா கபே வந்தோம். ஆளுக்கொரு பிளேட் சாம்பார் இட்லி, அதைத் தொடர்ந்து ரவா தோசை. சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்தோம். கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.

இருட்டவும் ஆரம்பித்திருந்தது. தொலைபேசி 1 மணி நேரத்தில் வருவதாகச் சொன்னேன். கொஞ்ச தூரம் நடந்து பார்த்து விட்டு ஆட்டோ பிடித்து பார்க் ஸ்டேஷன் வந்தோம். நான் ரயில் நிலையத்துக்குள் போனேன். ரயிலில் நிறைய இருக்கைகள் இருந்தாலும், ஏறுவதும் நிறைய பேர் இருந்தார்கள். நின்று கொண்டுதான் போக வேண்டியிருந்தது. 

8 மணிக்கு பழவந்தாங்கல் போய் விட்டேன். கீழேயே வந்து காத்திருந்தார்கள். பேசிக் கொண்டே போனேன். சரளமாக பேசினாள். 9 மணிக்கு புறப்பட்டேன். என்னை ரயில் நிலையத்துக்கு அருகில் விட்டான். 

அடுத்த நிறுத்தம் ராமாபுரம், அடுத்தது முகலிவாக்கம், அடுத்தது போரூர். எங்கும் தாமதமில்லாமல் வந்து விட்டார். அய்யப்பன்தாங்கலில் ஆட்டோ பார்த்தால் எதுவும் இல்லை. விறு விறுவென்று நடையைப் போட்டு 10 மணிக்கு வந்து விட்டேன். கீழே இருந்து மணியை அடித்தால் யார் என்று கேட்டு மேலேயிருந்து பையில் சாவியை கீழே இறக்கினார்கள். சாவியை எடுத்து திறந்து கொண்டு போய் விட்டேன்.

ஏதோ சுமை தாங்காமல் மின்சாரம் தடைபட்டது. 20 நிமிடங்கள் தியானத்துக்குப் பிறகு தூங்கினேன். மின்சாரம் வந்து மின்விசிறி ஓட ஆரம்பித்து விட்டது. 

4 மணிக்கு விழிப்பு வந்தாலும் 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். இப்போது எழுத்து இதை முடிக்கும் போது 6.20 ஆகியிருக்கும். முகம் மழித்து, குளிப்பதற்கு 6.45. புறப்பட்டு விட வேண்டியதுதான்.  7 மணிக்கு அய்யப்பன்தாங்கல். பேருந்தில் ஏறி கோடம்பாக்கம். 7.30க்குப் போய்ச் சேர்ந்தால் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வியாழன், ஜூன் 14, 2012

திட்டங்கள்


ஜூன் மாதம் 14ம் தேதி. நேரம் 7.15. காலையில் 4.30க்கு எழுந்து விட்டேன். நேற்று இரண்டாவது பாதியில் நிறைய சொதப்பி விட்டு பல மனத்தாங்கல்களை உருவாக்கிக் கொண்டு படுத்து தூங்கியது. பாயின் மீது படுக்கை விரிப்பு விரிக்காமல் தூங்கியிருந்தேன். காலையில் எழுந்து பார்த்தால் பாய் 45 டிகிரி திரும்பியிருந்தது.  அமைதியில்லாத ஆழமில்லாத தூக்கம்.

காலை அற்புதமாக இருந்தது. வெளியில் மொட்டை மாடியில் உலாவி விட்டு வந்தேன். வழக்கு எண் 18/9க்கு எழுதி வைத்திருந்த குறிப்புகளை வினவு விமர்சனத்தில் பின்னூட்டமாக வெளியிட்டேன். நேற்று மாலை அதை செய்ய முயற்சிக்கும் போது இணைய இணைப்பு முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு தூங்கிப் போனேன்.

இதை முடித்து விட்டு குளித்து, தியானம் செய்து காலை உணவு சாப்பிட வேண்டும். அதன் பிறகு  வேலை, ஆQ மொழிபெயர்ப்பு,  மின்னஞ்சல்கள்  என்று வரிசையாக வேலைகள் இருக்கின்றன. இன்றாவது சோம்பலில் திளைத்து விடாமல் நாள் முழுவதும் உருப்படியாக கழிக்க வேண்டும். 

நாற்காலி, மேசையிலிருந்து இறங்கி தரையில் தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து விட்டேன். மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் மின் இணைப்பு தேவையில்லை, எழுதுவதற்கு சுட்டியும் தேவையில்லை, அதனால் தரையில் உட்கார்ந்தும் எழுதலாம் என்று இறங்கி விட்டேன். அடுத்த கட்டம் கண்கள் கனத்து, உடல் சோர்ந்து தூக்கம் வருதல், நேற்று முழுவதுக்குமான சோம்பேறித்தனத்தின் தாக்கம் அப்படித்தான் இருக்கும். 

நேற்று காலையில் நித்தியானந்தாவைப் பற்றி ஆர்த்தி ராவ் என்ற பெண் வெளியிட்டிருக்கும் காணொளியைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து நீயா நானாவில் சாரு அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வையும், அதில் லெனின் கருப்பன் கலந்து கொண்டு தனது செயல்களை விளக்கியதையும் பார்த்தேன். சாருவின் மனைவிக்கு தீராத நோயை நித்தியானந்தா தீர்த்து வைத்தாராம். 

கர்நாடகாவின் பாஜக அரசு, கடைசியில் பொறுக்க முடியாமல் நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறது. உலகளாவிய வலைப்பின்னல், பெரும் பண பலம் இவற்றை வைத்துக் கொண்டு தனது வாதத் திறமையையும் அறிவையும் பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் அழித்து விடும் திறமை அந்த அயோக்கியனிடம் இருக்கிறது. சாரு நிவேதிதாவும் அந்தக் கருத்தைத்தான் சொல்லியிருந்தார். ஞானியின் திண்ணை சந்திப்பில் அவர் கலந்து கொண்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். நல்ல கூட்டம் போயிருக்கிறது அதற்கு, பெண்களின் எண்ணிக்கைதான் மிக மிகக் குறைவு.

நித்தியானந்தா விவகாரத்திலும் ஆசிரமத்தில் வசிக்கும் சன்யாசிணிகள் நித்தியானந்தாவை ஆதரித்தே தீர வேண்டும். இல்லை என்றால் அவர்களும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படார்கள் என்று ஆகி விடும். இருதலைக் கொள்ளி எறும்பு போன்றதுதான் அவர்களின் நிலை.

இப்போது அவர் மாட்டியிருக்கும் வழக்கு சாதாரண சட்ட ஒழுங்கு வழக்குதான். ஒரு பத்திரிகையாளரை தாக்கியதாக, அதுவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக வழக்கு. அதிலிருந்து எளிதாக வெளியில் வந்து விடுவார். ஆனால் இந்துத்துவ சக்திகளைப் பொறுத்த வரை அவரை கைது செய்து நிரந்தரமாக சிறைக்கு அனுப்புவதுதான் நல்லதாக இருக்கும். மதுரை ஆதீனத்தை கைப்பற்றுவதற்கும், ஆதீன/மடங்களுக்கு இந்த ஆள் ஏற்படுத்தி வரும் கெட்ட பெயரை சரி செய்வதற்கும் அது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

அந்த ஆளின் ஆசிரமங்களையும், மடங்களையும் வேறு யாராவது கைப்பற்றி நடத்த ஆரம்பிக்கலாம். நீயா நானாவில் பேசிய இளம்பெண்ணின் முகம்தான் நினைவில் ஆடுகிறது.

இன்று இவற்றை முடித்து விட்டு நாளைக்கு காலையில் சென்னை கிளம்ப வேண்டும். வெள்ளிக் கிழமை காலையில், அதாவது நாளைக் காலையில் நேராக அய்யப்பன்தாங்கல் போய் பைகளை வைத்து விட்டு போரூர் வங்கியில் காசோலை போடுதல், அப்படியே நந்தம்பாக்கம் கிளைக்கு போய் சேவை வரி கட்டி விட வேண்டும். இதை முடித்து விட்டு நேராக தாம்பரம். இரவுக்கு அய்யப்பன்தாங்கல் திரும்பி விட வேண்டும். 

சனிக் கிழமையும் பார்த்து விட்டு அப்படியே மாலையில்  மெரினா கடற்கரைக்கு பார்க்க போகலாம்.

திங்கள் கிழமை ஆம்பூரில் போய் அவர்களுக்கான அறிக்கையை செய்து கொடுத்து விட வேண்டும். செவ்வாய்க் கிழமை அலுவலகத்தில் வேலை - புதன் கிழமை ராணிப்பேட்டை போக வேண்டும். வியாழக் கிழமையும், வெள்ளிக் கிழமையும் வேலூரில் ஞாயிற்றுக் கிழமை சென்னை.

இப்படியாக அடுத்த வாரமும் நாகர்கோவில் போவது நடக்காது. அதற்கு அடுத்த வாரம் மாத இறுதியில்தான் போக வேண்டும்.

வேலையை தொடர வேண்டுமா அல்லது விட்டு விடலாமா? இரண்டரை மணி நேரம் கூடுதல் வேலை செய்ததற்கு 9 டாலர் ஊக்கத் தொகை அளித்திருக்கிறார்கள்.

பிஸ்கட் எடுக்கப் போகும் An outline history of china என்ற புத்தகத்தை பார்த்தேன். இதைத் தவிர ஓப்பியம் போர்களிலிருந்து மே 4 இயக்கம் வரை என்ற நூலைப் பார்த்து என்னை சீன வரலாறு குறித்து எழுதச் சொன்னார். அதை படித்துக் கரைத்துக் குடித்திருப்பேன் என்று நினைத்திருப்பார். 

நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 8 ஆண்டுகள் மட்டும் பழகிய நினைவுகள் எல்லா பொருத்தமான நேரங்களிலும் வந்து விடுகின்றனவே, ஏன்? மோர் தாளித்தால் நினைவு, ஏதாவது கறியில் கொத்தமல்லி போட்டால் நினைவு.

ஒரு வகையில் தலையிடலும், நான் பேசியதும் நல்லதாகவே முடிந்திருக்கின்றன.  கடந்த 3 மாதங்களில்தான் நிறைய மாற்றங்கள். நமது மனதில் வைத்திருக்கும் கோளாறுகள், சுமைகள் நமது பேச்சையும், நடத்தைகளையும், முடிவு எடுத்தலையும் பாதிக்கின்றன. எண்ணப் போக்குகளை ஒழுங்கு செய்து கொள்ளும் போது நமது நடத்தைகளும் பொருத்தமாக ஒழுங்குபட்டு, வாழ்க்கை மேம்படுகிறது. 

வழக்கு எண் திரைப்படம் பற்றிய கருத்துக்கள். 


இறுதி காட்சியில் தினேஷ் என பையனுக்கு என்ன ஆகிறது, அமைச்சர் எப்படி எதிர் வினை செய்கிறார் என்பதை எல்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை. பெண் வழக்கறிஞர்கள் ஜோதியை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பதும், காவல் துறையின் வன்மும், ஜோதியின் போர்க்குணமும் சரியாக காட்டப்பட்டிருக்கின்றன. 

கூகுள் பிளஸ் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அதை விட்டுத் தொலைக்க வேண்டும். அது படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஸ்லாஷ்டாட் படிப்பது குறைந்திருக்கிறது. இணையத்தில் இணைவது மின்னஞ்சல் பார்ப்பது, கூகுள் ரீடரில் கட்டுரைகளை பார்ப்பது, பணி தொடர்பான தேடல்கள் இவற்றுக்காக மட்டும் இருக்க வேண்டும். வாசிப்பதும் பார்ப்பதும், பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை மட்டும் போதுமானது.

திங்கள், ஜூன் 11, 2012

திரைப்படங்கள்


நேரம் ஆறு மணி ஐந்து நிமிடங்கள். ஜூன் மாதம் 11ம் தேதி, 2012ம் ஆண்டு.

நாட்குறிப்பு எழுதியும் சில நாட்கள் ஆகி விட்டிருக்கின்றன. சனிக் கிழமை காலையில் புறப்பட்டு சென்னைக்குப் போக வேண்டும். ஆறரை மணிக்கு தாம்பரத்தில் இருக்க வேண்டும். ஆனால் போய்ச் சேர்ந்தது 7 மணிக்குத்தான். காலையில் 2 மணிக்கு எழுந்து விட்டேன்.இரவில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். டெஸ்டிங் பிரிவை முற்றிலுமாக நீக்க முடியவில்லை என்றும் நான் எழுந்ததும் அதை செய்து விட வேண்டும் என்றும். அதை செய்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் இணையத்திலும் மேய்ந்து கொண்டிருந்தேன். அதை தவிர்த்திருக்கலாம்.

முகம் மழித்து குளித்து விட்டு பையில் ஒரு நாளைக்கான மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். கணினியை எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் நல்லதாகவே போனது. நாள் மிக மிக நீண்ட நாளாக இருந்தது. 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பி வந்து சேர்ந்தேன்.

பகிர்வூர்தியில் பேருந்து நிலையம். முதலில் காஞ்சிபுரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பார்த்தால் அரசு பேருந்துகள் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு தனியார் பேருந்து நின்றது. இந்த பக்கம் சென்னை பேருந்துகள் பகுதிக்கு வந்தால் ஒரு சேலம் பேருந்து நின்றிருந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். இது இன்னொரு சொதப்பலான முடிவு. ஓட்டுனர் ஒரு வாய்ச் சொல் வீரர் மட்டும்தான். பேருந்து 3.50க்கு பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தது. 5.30க்கு பூந்தமல்லி போய் விட வேண்டும் என்று திட்டம். 5.45க்காவது போய் விட முடியுமா என்று பார்க்க வேண்டும்.

வண்டி இழுத்து இழுத்து ஓடிக் கொண்டிருந்தது. 6 மணி ஆகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, பூந்தமல்லியை நெருங்கும் போது ஒரு சில கிலோமீட்டருக்கு முன்பிருந்தே ஏதோ எரியும் வாசனை வந்தது. வெளியிலிருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டேன். பேருந்து ஓடும் போது தொடர்ந்து இந்த வாசனை வந்தால் பேருந்துக்குள்தான் ஏதோ நடக்கிறது. யாராவது புகைபிடிக்கிறார்களா என்று பார்த்தால், புகை பிடிப்பது போன்ற வாசனை அல்ல, துணி எரிவது போன்ற வாசனை. அரை தூக்க மயக்கத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் ஓட்டுனர் பேருந்தை ஓரம் கட்டினார். முன்பக்கம் எஞ்சின் மூடியைத் திறந்து பார்த்தார். அதற்கு மேல் நிறைய பைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல் வரிசை இருக்கையில் ஒரு பெண் கைக் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார்.

உள்ளே ஏதோ எரிந்து கொண்டிருந்தது. மேலே அழுத்தம், உள்ளே வெப்பம் என்று தீப்பிடித்து விட்டிருக்கிறது. தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டாம் என்றார் ஓட்டுனர். அப்படியே குச்சியால் தள்ளி விட்டு அணைத்தார்கள்.  பாதி பேர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார்கள். ஓட்டுனரும் நடத்துனரும் நகரவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டது பேருந்து.

பூந்தமல்லியில் வந்து பார்த்தால் பேருந்துகளின் வருகை அடையாளமே தெரியவில்லை. இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். முன்பே வேலூரில் ஆனந்த விகடன் வாங்கியிருந்தேன். 66 சாதாரண பேருந்து வந்தது. அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். தாம்பரத்துக்கு 8 ரூபாய் சீட்டு. எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று மெதுவாக போய்க் கொண்டிருந்தது.

குன்றத்தூர் அருகில் வந்தால் பேருந்தில் ஏதோ கழன்று விட்டது என்று ஓட்டுனர் நடத்துனர் இறங்கி சுற்றி வர ஆரம்பித்தனர்.  இறங்கி பின்னால் வந்து சொகுசு விரைவுப் பேருந்தில் ஏறினேன். அதில் 13 ரூபாய் சீட்டு. அதுவும் வண்டலூர் போகும் வண்டி. ரயில் நிலையம் தாண்டி கொண்டு விட்டார்கள்.

வீட்டுக்கு நாளைக்கு போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆட்டோவில் ஏறி மெப்ஸ் அருகில் இறங்கிறோம். நான் வாசலில் காத்திருக்க அவர் இன்னொரு ஆட்டோவில் உள்ளே போனார். திரும்பி வருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. முதலில் இறங்கிய பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சாலையைக் கடந்து இந்த பக்கம் உட்கார்ந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாவலர் வந்து எழுப்பி விட்டார். 

3 மணிக்கு முன்பு புறப்பட்டேன். சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போகிறேன் என்று சொன்னவரை மறுத்து ஆணியில் தொங்க விட்டுப் போகச் சொன்னேன். அதுதான் வினையாக முடிந்தது. 


நடக்கும் போது வந்த ஆட்டோவில் ஏறி. 30 ரூபாய் வாங்கிக் கொண்டார். 37Gல் ஏறி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சீட்டு எடுத்தேன். ஆனால், நேரத்தையும் வேகத்தையும் பார்த்து வடபழனியில் இறங்கி பகிர்வூர்தியில் கோயம்பேடு போக ஏறினேன். ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன். கோயம்பேடு கல்யாண மண்டபம் அருகில் இறங்கி 15Fல் ஏறினேன். அமைந்தகரை சீட்டு எடுத்துக் கொண்டு அண்ணா ஆர்ச் தாண்டி நெல்சன் மாணிக்கம் சாலை போகும் நாலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். 

நல்ல தண்ணீர் தாகம், சாலையைக் கடந்து அம்பா ஸ்கைவாக் அருகில் வந்தேன். முன்பக்கம் இருந்த திறந்தவெளிப் பூங்கா பாழடைந்து கிடந்தது. உள்ளே நுழைந்து நகரும் படிக்கட்டுகளில் நகர்ந்து மேல் மாடிக்குப் போய்ச் சேர்ந்தேன். திரைப்பட அரங்கின் வாசலிலேயே காத்திருந்தார். ஏற்கனவே சீட்டு வாங்கி விட்டிருந்தார். அரங்குக்குள் போவதற்கு முன்பு ஒரு லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் ஏதோ எலுமிச்சம் பழ சாறு வாங்கிக் கொண்டோம். திரைப்படத்துக்குப் போக நல்ல கூட்டம், அரங்கு நிறைந்திருந்தது.

வழக்கமான மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களைப் போல வசதியான இருக்கை, பெரிய திரை, குளிரூட்டப்பட்ட அரங்கம். சத்யம் அரங்குக்கு ஒரு முறை போனேன். எக்ஸ்பிரஸ் அவன்யூவிற்கு கஹானி படம் பார்க்கப் போனேன். இப்போது வழக்கு எண் 18/9 பார்க்க அம்பா ஸ்கை வாக்.

இதற்கிடையில் தென்மேற்கு பருவக் காற்று படம் உதயம் தியேட்டரிலும், சேவற் கொடி படம் சாந்தி காம்ப்ளெக்சிலும் பார்த்தேன்.

நிறைய விளம்பரங்கள், பட முன்னோட்டங்கள். முக்கிய காட்சி ஆரம்பம் என்று திரையில் செய்தி சொன்ன பிறகு விஸ்வரூபம் டிரைலர் போட்டார்கள். அதைத் தொடர்ந்து வழக்கு எண் 18/9.

வாழ்க்கையில் நடக்காத எதையும் காட்டாமல், நடக்கும் ஒவ்வொன்றையும் காட்டுவதுதான் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வரையிலான காட்சிகள். ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு போகிறோம், பொருட்களை வைக்கும் இடத்தில் சீருடை அணிந்த ஒரு பாதுகாவலர். அவரை கடந்து போய் விடுகிறோம். அவரிடம் பேசினால் அவருக்குப் பின்னால் பொய்த்துப் போன விவசாயம், கவனிக்காத குழந்தைகள் என்ற சோக பின் வரலாறு இருக்கும். அவருடன் ஒரு நாள் முழுவதும் இருந்து பார்த்தால் அவர் சாப்பிடுவதும், தூங்குவதும், வேலை செய்வதும் துயரக் காட்சிகளாக விரியும்.

அதைத்தான் நடைபாதை உணவுக் கடைக்கார பையனை பற்றி காட்டுகிறார்கள் படத்தில். கடன் வசூலிக்க வரும் கந்து வட்டி தலைவர்களின் வெள்ளுடை கிராமத்து வறுமையின் மத்தியில் கார்ட்டூன் படத்தின் நடுவில் வரும் ரியல் கேரக்டர் போல தெரிவதும், முறுக்கு கம்பெனியில் பையன் வேலைக்குப் போவது, அப்பா அம்மா இறந்து வேலையை விட்டு ஓடி சென்னைக்கு வருவது, சென்னையில் மயங்கி கிடப்பவனை தண்ணீர் தெளித்து எழுப்பி இட்லி வாங்கி கொடுக்கும் ரோஸி அக்கா, சாப்பாட்டு மூட்டைகளுடன் மதிய உணவை பற்றி கவலைப் பட்டுக் கொண்டே பசியில் மயங்கிக் கிடப்பவனை புறக்கணித்து தள்ளி போகின்றவர்கள், அவனை சாப்பாட்டுக் கடைக்காரரிடம் வேலைக்கு சேர்த்து விடும் ரோசி அக்கா, சாப்பாட்டுக் கடைக்காரர் என்று ஒவ்வொருவரும் சென்னையின் தெருக்களில் நாம் தினமும் சந்திப்பவர்கள்தான்.

அருகிலுள்ள குடிசைப் பகுதியிலிருந்து அடுக்கு மாடி உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பு வீட்டில் வேலைக்கு வரும் ஜோதி. அவளுடன் உரசல்களில் மாட்டும் இந்த சோத்துக் கடைபையன். ஜோதியின் அம்மா வசவுகளையே தனக்கும் தனது பெண்ணுக்கும் கவசமாக வைத்திருப்பது, ஜூனியராக வேலைக்குச் சேரும் சின்னச் சாமி என்று கதை ஜெட் வேகத்தில் சூடு பிடிக்கிறது. இவர்களில் ஒருவர் கூட நாம் பார்க்காத நபர் என்று சொல்ல யாராலும் முடியாது. இதற்கு ஊடாக ஜோதி வேலை பார்க்கும் வீட்டின் பள்ளியில் படிக்கும் சிறுமியின் முகம் வந்து போகிறது. இன்னும் சில சந்திப்புகளுக்குப் பிறகு வேலு இன்ஸ்பெக்டரிடம் சொல்வதான விபரங்கள் முடிந்து இடைவேளை.

வேலுவுக்கு வரும் காதல் வேலை செய்யும் ஜோதி மீதுதான். அதே பாதையில் தினமும் சைக்கிளில் கடந்து செல்லும் ஆர்த்தி மீது அவனுக்கு கவனமே திரும்புவதில்லை. அவள் சைக்கிளில் வேகமாக போவது ஒரு நடைமுறை இடைவெளியாக இருந்தாலும் இருவருடைய வர்க்க வேறுபாடுதான் முதன்மையானது.

இடைவேளைக்குப் பிறகு இன்ஸ்பெக்டரிடம் கதை சொல்ல வருகிறார் ஆர்த்தி. ஜோதி மீது அமிலம் வீசியதற்கு வேலுவை விசாரித்தது போலவே இன்னொரு பையனையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி நடந்த விபரங்களை சொல்கிறார். அந்த பையன் வீட்டுக்கு வந்து பாடம் சந்தேகம் கேட்பதாக சொல்லி பழக ஆரம்பித்தது, சைக்கிளில் தானும் வந்து நெருங்க முயற்சித்தது, பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தது, அதற்கு போக முடியாமல் ஒரு நாள் வெளியில் போக சம்மதித்து கிழக்கு கடற்கரை சாலைக்கு உணவு விடுதிக்குப் போனது, கடலில் விளையாடி உடை எல்லாம் நனைந்து அறையில் உடை மாற்றி விட்டு திரும்புப் போது, அவன் மீது நல்லெண்ணம் நிறைந்திருந்தது, காரில் அவனது மொபைலில் அவன் இவளை எடுத்து வைத்திருந்த காணொளிகளைப் பார்த்து அவனது உள் நோக்கம் புரிந்து உறவை துண்டித்துக் கொண்டது, அதன் பிறகு அவன் இவளை பழி வாங்க காரால் இடிக்க வந்தது என்று சொல்லி அவன்தான் தன் மீது ஊற்ற வந்த அமிலத்தை ஜோதி மீது ஊற்றியிருக்க வேண்டும் என்கிறாள்.

இன்ஸ்பெக்டர் குமாரவேல் இப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மிதுன் வீட்டுக்கு தொலைபேசினால் அவனது அம்மா எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே துண்டித்து விடுகிறார். அதன் பிறகு போனை எடுக்கவில்லை. கடுப்பான அவர் இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் செய்கிறார். வந்தவுடன் அடாவடியாக பேசி, மிரட்டி, பையன் மீது கொலை முயற்சி, தாக்குதல், ஆபாச படங்களை உலாவ விடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுகிறார்.

அதன் பிறகு அமைச்சன் மூலமாக ஜெயலட்சுமியுடன் பேரம் பேசி 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மிதுனை போக விட்டு விட்டு வேலுவை கொண்டு வந்து அடித்து, நயவஞ்சகமாக பேசி குற்றத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். அதற்கு மாறாக, ஜோதியின் முகத்தை சரி செய்து விட பணம் ஏற்பாடு செய்தவாக சொல்கிறார். அவனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு பணத்தை தான் எடுத்துக் கொள்கிறார்.

சின்னச் சாமி மூலமாக எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்ட ஜோதி அதே கோர்ட் வாசலில் இன்ஸ்பெக்டர் குமார வேல் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு பிடிபட்டு சிறைக்குப் போகிறார்.

கடைசி அரை மணி நேர படம் மிகவும் நாடகத்தனமானது. இந்திய கோர்ட்டுகளில் இவ்வளவு விரைவாக வழக்கு நடப்பதும் தீர்ப்பு வருவதும், தவறான தீர்ப்பு திருத்தப்படுவதும் நடைமுறைக்கு முரணானது. வேலு சிறைக்குப் போவதும், குமார வேல் அமைச்சருடன் பேசுவது, ஜோதி வேலுவை கொண்டு போகும் வேனை தொடர்ந்து போவதும் இத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதன் பிறகு சினிமா ஆரம்பித்து விடுகிறது.

படம் விடாமல் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. சாப்பாட்டுக் கடை ஊழியர்களையும், மெட்ரோ ரயில் தொழிலாளர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்பு நிலை மனிதர்கள் என்று சொல்ல தப்பித்து விடுகிறார்கள் இலக்கிய வாதிகள். இவர்கள்தான் 80% இருக்கிறார்கள் சமூகத்தில். அவர்கள் மொழியில் பார்த்தால் விளிம்புகளே 80%, 20% மையம் தடித்துப் போய் கிடக்கிறது.

ஒரு சமூகத்தின் குறுக்கு வெட்டை படம் பிடித்து, கண்ணாடியில் பிரதிபலித்துக் காட்டுவதுதான் சிறந்த கலை. அத்தகைய கலைஞராக, உழைப்பாளியாக பாலாஜி சக்திவேல் நிமிர்ந்து நிற்கிறார்.

படம் பார்த்து விட்டு கோயம்பேடு வந்து வடபழனி வந்து ஆட்டோவில் வந்தேன். சாப்பிட்டு விட்டு அய்யப்பன்தாங்கலில் கொண்டு விட்டான். கேட்டுகள் பூட்டியிருந்தன. கிளம்பி அய்யப்பன் தாங்கல், பூந்தமல்லி, கோயம்பேடு என்று வேலூர் திரும்பினேன். 3 மணிக்கு வேலூர். 4 மணி வரை வழக்கு எண் 18/9 படத்தின் விமர்சனங்கள், விபரங்களை படித்துக் கொண்டிருந்தேன். நேற்று பல வீடியோக்களை பார்த்தேன். நேற்று முழுவதும் தூக்கம்.

மாலையில் Salt of the Earth  என்ற படத்தைப் பார்த்தேன். 1950களில் எடுக்கப்பட்ட படம். பெண் உரிமைகளைப் பற்றிய படம். இதைத் தாங்க முடியாமல் தணிக்கை, அடக்கு முறை, ஒதுக்கி வைத்தல் என்று செய்திருக்கிறது, பேச்சுரிமையும், கருத்துரிமையும் நிறைந்திருந்த அமெரிக்க முதலாளித்துவ சமூகம். கருப்பு வெள்ளையில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் அந்த சுரங்க நகரின் கஷ்டங்களை கண் முன் கொண்டு வந்தார்கள். பிக்கெட்டிங் என்றால் என்ன என்று முதல் முதலாக தெரிந்து கொண்டேன். வேலை நிறுத்தம் என்றால் பந்தல் போட்டு முன்னால் உட்கார்ந்து கொள்வதில்லை. தொழிற்சாலையின் முன்பு வட்டமாக சுற்றி நடந்து கொண்டே இருக்கிறார்கள். யாரும் கடந்து போகக் கூடாது, முடியாது.

மோர் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வந்தேன். ஜூஸ் குடித்து முடித்து விட்டேன். இரவில் தயிர் வைத்து பொங்கியிருந்த சோற்றை முடித்துக் கட்டினேன்.

புதன், ஜூன் 06, 2012

அநியாய உலகம்


ஜூன் மாதம் 6ம் தேதி, 2012ம் ஆண்டு. நேரம் காலை 4 மணி 55 நிமிடம்.

சுமார் 10 நாட்கள் ஆங்கிலத்தில் நாட்குறிப்புகள் எழுதி விட்டு இன்று எழுத ஆரம்பிக்கும் போதே தன்னையறியாமல் சரளமாக தமிழில் நாளும் தேதியும் நேரமும் குறித்து விட்டேன். தமிழிலேயே எழுதலாம். ஆங்கிலத்தில் தட்டச்சும் போது நிமிடத்திற்கு 40 சொற்கள் வேகம் இயல்பாக வருகிறது. தமிழில் 30க்கு சற்று அதிகம் அவ்வளவுதான். தமிழ் தட்டச்சு விசைப் பலகை முறை இன்னமும் சிறப்பாக செய்ய முடியலாம் என்று சொல்லலாம். ஆனால் எந்த முறையாயிருந்தாலும் பழக்கம் அதிகமாகும் போது வேகம் அதிகமாகும். ஆங்கில தட்டச்சு விசைப்பலகையும் மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இருக்கிற வடிவமைப்பில்தான் நாம் பழகி அடித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நிமிடத்திற்கு 10 சொற்கள் வேகத்தில் அடிப்பவர்களும் உண்டு, நிமிடத்திற்கு 45 சொற்கள் வேகத்தில் அடிப்பவர்களும் உண்டு.

இன்றைய நிகழ்ச்சி நிரலை கவனமாக போட்டுக் கொள்ள வேண்டும். நேற்று திட்டமிட்ட எதையுமே செய்யவில்லை. எதையுமே என்பதில் ஒரு திருத்தம் வேண்டும். பெரும்பாலானவற்றை செய்யவில்லை. அவசரமாக செய்தே தீர வேண்டிய சமைத்தல், சாப்பிடுதல், கடைக்குப் போய் பொருள் வாங்கி வருதல் இவை நடந்து விட்டன.  துரத்தலால் பணிகளும் வேகம் பிடித்து முடிந்து விட்டன. ஆனால், முதன்மை பணிகளான,  முன்னுரிமை கொடுக்க வேண்டிய வேலைகள் நகரவே இல்லை. நேற்று நகரவேயில்லை என்று சொல்லும் போது ஒரு திருத்தம் வேண்டும். இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு வேலை நடந்திருக்கிறது.

இப்போது 5 மணி ஆகிறது. இது முடியும் போது 6 மணி ஆகி விடும். துணிகளை ஊற வைக்க வேண்டும். இதை முடித்தவுடன் கட்டுரைக்கான  குறிப்புகளை எடுக்க வேண்டும். அதற்கு 1 மணி நேரம். 7 மணிக்கு உலாவப் போய் நாளிதழ், பால், முட்டை வாங்கி வர வேண்டும். 7.30க்கு துணி துவைப்பு, குளியல், தியானம், முகம் மழிப்பு. 8.30 ஆகி விடும். 8.30க்கு காலை உணவு தயாரித்து சாப்பிட்டு விட்டு 9 மணி முதல் 10 மணி வரை கட்டுரையை எழுத வேண்டும். 10 மணிக்கு புறப்பட்டு வாலாஜா, ராணிப்பேட்டை, விஜயம். அங்கு கெமிக்கல் தரவுகளை சரி பார்த்து, பர்ச்சேஸ் ஆர்டர் சரி செய்து கொடுத்து விட்டு, மற்ற தேவைகளையும் கவனிக்க வேண்டும். முடிந்தால் காசோலையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

மதியம் 3 மணி வாக்கில் பேச வேண்டும். அவர் இருந்தால் போய் சந்திக்க வேண்டும். அதில் 3 மணி நேரம் போனாலும் 7 மணி வாக்கில் திரும்பலாம். இல்லை என்றால் 5 மணி வாக்கில் வீடு.

வியாழன், வெள்ளிக் கிழமைகளில் எங்கும் போக வேண்டாம். சனிக்கிழமை காலை 2 மணிக்கு எழுந்து 3 மணிக்கு பேருந்து பிடித்தால் 5 மணிக்கு பூந்தமல்லி, 6 மணிக்கு தாம்பரம் போய் விடலாம். அதை முடித்து விட்டு போய் சந்திக்க வேண்டும். அவன் உண்மையில் கொஞ்சம் புண்பட்டுத்தான் இருப்பான். நேற்று தொலைபேசி பேசினான். அலுவலகத்துக்குப் போகும் வழியில். எல்லோருக்குமே வாழ்க்கையில் நெருக்கடிகள் பெருமளவு ஏறி விட்டிருக்கின்றன.

மாலையில் நான்  பேசினேன். பல முறை பேசியும் தொலைபேசியை எடுக்கா விட்டாலும் இந்த முறை அழைத்ததும் எடுத்து விட்டார். மாமல்லபுரம் பயணம் பற்றிய புகைப்படங்களை பகிர்ந்திருப்பதை குறிப்பிட்டேன். தவறாமல் போய் பின்னூட்டம் போட்டு விட்டு வந்திருக்கிறார்.

இப்போது மார்க்சின் தஸ் கேபிடல் ஆய்வுக்கு வருவோம். உபரி மதிப்பை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொள்வதால் சந்தையில் வாங்கும் சக்தி பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறை, எடுக்கப்பட்ட உபரியை முதலாளிகள் சரியான இடத்தில் செலவழித்தால் சரிக்கட்டப்பட்டு விடும். ஆனால் ஒவ்வொரு சுற்றிலும் அப்படி முதலீடு செய்யும் போது அதிக லாப தேடல், அதன் மூலம் இன்னும் கூடுதல் முதலீட்டு தேவை என்று விஷச் சுழற்சியாக மோசமாகிக் கொண்டே போகிறது. 

1. மூலதனம் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
2. அவர்கள் நினைத்தால்தான் முதலீடு நடக்கும், சந்தை உற்பத்தியான அனைத்து பொருட்களையும்  வாங்கித் தீர்க்க முடியும்.
3. முதலாளிகள் லாப நோக்கம் உடையவர்கள்.  லாபம் அதிகம் கிடைக்கும் இடங்களில்தான் முதலீடு செய்வார்கள். இல்லா விட்டால் முதலீடு செய்ய மாட்டார்கள்.
4. அப்படி அதிக லாப தேடல், இன்னும் உபரி மதிப்பை உறிஞ்சி இன்னும் அதிக முதலீட்டை வேண்டுகிறது.

முதலீடு செய்யும் போது சமூகத்திற்கு எது தேவை என்று இல்லாமல் எதில் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்த்துதான் முதலீடு செய்கிறார்கள். லாபம் அதிகம் கிடைப்பதுதான் சமூகத்திற்கு மிகச் சிறந்த வெளிப்பாடு என்று முதலாளித்துவம் கற்பிக்கிறது. மூலதனம் இருப்பதில் அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் செலுத்தப்படும் போது வீணாகாமல் செயல்படுகிறது. இதனால் என்ன நடக்கிறதென்றால், புதிய புதிய தேவைகள், புதிய புதிய இடங்களை இழுத்துப் போடுதல், இயற்கை வளங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துதல் என்று பல விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

நஷ்டமடைந்து மூடப்படும் தொழில்கள் அதீத உற்பத்தி சிக்கலை ஓரளவு தவிர்க்க உதவலாம், ஆனால் அவை சமூகத்தின் வளங்களை வீணாக்குவதை இன்னும் மோசமாக செய்கின்றன. யாருக்கும் தேவையில்லாத இடத்தில் முயற்சிகளை குவித்து ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றன.

சமூகத்துக்கு தேவையான பொருட்களும் சேவைகளும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முதலாளித்துவம், சந்தை போட்டி அடிப்படையிலான முதலாளித்துவம், சமூகத்தின் தேவையை தனி நபர் தேவையாக சுருக்கிக் கொள்கிறது. அந்த தனி நபர் தேவைகளை செயற்கையாக அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கிறது. சமூக ரீதியான உற்பத்தி, தனிநபர் அளவிலான நுகர்வு என்ற முரண்பாட்டை வந்தடைந்திருக்கிறோம்.

நேற்று காலையில் கண் விழிக்கும் போதே காலை 6 மணி. நன்கு தூங்கி விட்டிருக்கிறேன். வெளியில் எட்டிப் பார்த்தால் பழைய வீட்டுக்கு முன்பு செடி பாதுகாப்புக் கம்பியை பொருத்திக் கொண்டிருந்தார். அவருக்கு வாடகை கொண்டு தர வேண்டும். முதலில் பல் தேய்த்து, டாய்லெட் போய் விட்டு சட்டை போட்டுக் கொள்ளலாம். அதன் பிறகு கொட்டைகளையும், காம்ப்ளானையும் தயாரித்துக் கொண்டேன். பாடல் ஒன்று ஒலிக்க விடும் போது வந்தார். அதற்குள் கஞ்சி வேகப் போட்டிருந்தேன். 

கீழே போய் வாடகை பணம் கொடுத்தேன்.  மேலே வந்து இன்னும் பழைய பாடல்களை ஒலிக்க விட்டேன். 5 நாட்களில் 2 GB இன்னும் தீர்ந்து விடவில்லை. 10 GB என்று பார்க்கும் போது ஒரு நாளைக்கு 300 MB பயன்படுத்தலாம். த கிட் படம் பார்த்தது, மென்பொருள் புதிய பதிப்புகளை தகவிறக்கியது இரண்டும் கொஞ்சம் கணிசமான இடத்தை எடுத்துக் கொண்டன.

கஞ்சி குடித்து விட்டு இணையத்திலேயே இருந்தேன். யூடியூபில் சார்லி சாப்ளினின் தி கிட் படத்தை முழுமையாக பார்த்தேன். அதன் நடுவில் அழைத்தான். அலுவலகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார். நான் அவனை அழைத்த போது பெங்களூரில் இருந்தானாம். அவனுக்கும் கொஞ்சம் தர்ம சங்கடம் இருந்தது, சமாளித்துக் கொண்டோம். வழக்கம் போல அவன் வேலைகள், எனது வேலைகள், கிளினிக் வேலைகள் என்று பேசினோம்.

வெளியில் விடியல் பிரமாதமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வானத்தில் மேகக் கீற்றுகள் ஆரஞ்சு நிறமாக வண்ணம் தீட்டப்பட்டிருக்கின்றன. அந்த பின்னணியில் இரண்டு தென்னை மரங்கள் அசையாமல் நிற்கின்றன. அவற்றுக்கு முன்பு வீட்டு மாடிகள், இந்த மாடியின் துணி காயப் போடும் கம்பி  தாங்கி. அனைத்தும் விடியலின் மங்கலான புதிய வெளிச்சத்தில். உண்மையில் இவற்றைப் பார்ப்பது மனதுக்கு குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இன்னும் 22 நிமிடங்கள் இருக்கின்றன. மொபைலில் மின்கலன் இன்னும் சார்ஜ் ஆகி முடியவில்லை. இன்னொரு நல்ல மொபைல் வாங்க வேண்டும்.

குளித்து விட்டு தியானம், அதைத் தொடர்ந்து சமையல். முதலில் சோற்றுக்கு உலை வைத்து, முட்டைகளை அவிய போட்டேன். தேங்காய் திருவி அவியலுக்கு அரைத்துக் கொண்டேன். சின்ன வெங்காயம் உரித்துக் கொண்டே உலை கொதித்ததும் அரிசி களைந்து போட்டேன். சுடு நீரில் டாங் பொடி கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன். உள்ளிகளை உரித்து முடித்த வுடன் முட்டையை இறக்கி சட்டியை வைத்தேன். எண்ணெயில் கடுகு தாளித்து உள்ளிகளை வதக்கி தேங்காய் அரைத்த விழுதை சேர்த்தேன். அது நன்கு வேக வேண்டும்.

உருளைக் கிழங்குகளை தண்ணீரில் வைத்திருந்தேன். தோல் ஊறி நீக்குவதற்கு எளிதாக இருக்க வேண்டும். அப்படித்தான் இருந்தது. 5 நிமிடங்கள்தான் ஊறியிருக்கும். இதை தவறாமல் செய்ய வேண்டும். உருளை தோல் சீவி வெட்டுவதற்கு முன்பு முட்டைகளை தோல் உடைத்து வெட்டி வைத்தேன். சோறும் வெந்து விட்டிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு, அந்த அடுப்புக்கு சட்டியை மாற்றினேன். அதன் பிறகு சட்டியிலிருந்து குழம்பை கிண்ணத்துக்கு ஊற்றி அதன் பிறகுதான் முட்டை துண்டுகளை சேர்த்தேன். சட்டியைக் கழுவி விட்டு உருளைக் கிழங்கு வேகப் போட்டு விட்டேன்.

சோறு வடிப்பதில் நன்கு பழக்கம் ஏற்பட்டு விட்டது. மூடுவதற்கு பானையின் பொருத்தமான ஒரு மூடி, கவிழ்ப்பதற்கு அதே அளவிலான ஒரு பாத்திரம், அண்டை கொடுக்க ஒரு பொருள்.  மூன்றுமே இருக்கும் பாத்திரங்களிலேயே சரியாக அமைந்து விட்டன.

பொரியல் வேகும் போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்துக்கு நடு நடுவே போய் கிண்டி கொடுத்துக் கொண்டேன். 1 மணி நேரம் எழுதிய பிறகுதான் எழுந்து சாப்பிடப் போனேன். முதல் சோற்றுக்கு பருப்புப் பொடி. வாங்கி வைத்திருந்த மாங்காய் ஊறுகாயில் எண்ணெய் ஒரு மாதிரி நாற்றம் அடித்தது. அதை ஒரு தட்டில் பரப்பி வெயிலில் வைத்தேன். மதியம் வரை அது வெயிலில் காய்ந்தது. இப்போது மணமும் சுவையும் நன்றாக இருக்கின்றன, ஊறுகாய்க்கு பாதுகாப்பு காய வைப்பது, உப்பு சேர்ப்பது. எண்ணெயில் வதக்குவதும் தண்ணீரை வெளியில் கொண்டு வந்து ஆவியாக்குவதுதான். அதன் மூலம் கிருமிகள் வாழ முடியாமல் செத்து போய் விடுகின்றன.

இன்னும் கரண்ட் போகவில்லை. சரியாக 6 மணிக்குப் போகும்.

சாப்பிட்டு விட்டு 2வது மணி நேர எழுத்து. அது முழுவதும் எழுதப்படவில்லை. கடைசி 20 நிமிடங்கள் இணையத்துக்குள் போய் விட்டேன். பணம் கணக்கில் சேர்ந்து விட்டதாக கலெக்சன் என்று காட்டியிருந்தார். இந்திய ரயில்வேயில் பதிவு செய்வதற்கு எல்லாம் காத்திருப்போர் பட்டியல்தான். பேருந்தில் போய்க் கொள்ள வேண்டியதுதான். இது வரை ஒரு முறை கூட வேலூரிலிருந்து நாகர்கோவில் அல்லது நாகர்கோவிலிலிருந்து வேலூருக்கு நேராக போகவில்லை. முதல் முறை நேரடி பேருந்தில் ஏறிய போது மதுரையில் இறங்கிக் கொண்டேன். இந்த முறை அங்கிருந்து வரும் போது திருவண்ணாமலையில் இறங்கிக் கொண்டேன். இரண்டுமே வீட்டுக்குத் தெரியாமல் போன இடங்கள்தான்.

கடன்கள் அடைந்து கொண்டே வருகின்றன.  வரிசையாக கொடுத்தாகி விட்டது. இன்று வரும் பணத்திலிருந்து தர வேண்டும். அடுத்த வாரம் சேவை வரி கட்டி விடலாம்.

திட்டமிட்டபடி கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தேன். வரும் வழியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஆனால் வீட்டில் இருந்தது. வீட்டுக்கு வந்து முதல் வேலையாக தேங்காய் துருவி துவையல் அரைத்துக் கொண்டேன். அதன் பிறகு வேலைகள். பிளாக் குரோமில் சரியாக தெரியாமல் இருப்பதை சரி செய்தேன். தலைப்பு பகுதியில் மாற்றங்களை செயல்படுத்த வேண்டும். மொத்த நிரலும் தகவிறக்கிக் கொண்டாகி விட்டது. வடிவமைப்பு மாற்றங்கள் செய்து கொண்டால் போதுமானது. 

1802 சொற்கள் எழுதியிருக்கிறேன். சிறப்பு முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே 30 சொற்கள் நிமிடத்துக்கு என்ற வேகத்தைப் பிடித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் தட்டச்சி பழகுவது இங்கு வேகம் அதிகமாவதற்கும் உதவத்தான் செய்கிறது. இரவு 10 மணி வரை அதை செய்து விட்டு 11 மணிக்கு விக்கிபீடியாவில் இறங்கினேன்.

ஞாயிறு, மே 27, 2012

தலைப்பு தோன்றவில்லை


ஏப்ரல் 27, 2012. காலை நேரம் 3 மணி 30 நிமிடங்கள்.

ஞாயிற்றுக் கிழமை சளி பிடிப்பதற்கான கிருமியை உள்ளே விட்டேன். தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடையில் பாதாம்-புரூட் மிக்சர் குடித்து விட்டு பேருந்தில் ஏறியதும் தொண்டையில் வலி ஆரம்பித்தது. ஞாயிற்றுக் கிழமையும் திங்கள் கிழமையும் அதற்கான அறிகுறிகள் தெரிந்தன. திங்கள் கிழமை ராணிப்பேட்டைக்கு போக வேண்டியிருந்ததை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் முடித்துக் கொண்டேன். செவ்வாய் கிழமை தும்மல்களோடு போனது. புதன் கிழமை மாலை நல்ல மழை. சுமார் 1 மணி நேரம் அடித்து பெய்ததில் வெப்ப நிலை வெகுவாக குறைந்திருந்தது. தும்மல், மூக்கு அடைப்பு தொடர்ந்தது. நேற்றும் அதே தாக்கம்தான்.

கணினியில் உட்கார்ந்து இணையத்தில் இணைந்தால் டுவிட்டர், கூகுள் பிளஸ் இரண்டிலும் போய் என்னென்ன சமீபத்திய செய்திகள் என்று பார்க்கும் பழக்கம் நிறையவே நேரத்தையும் மன ஆற்றலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தொலைக்காட்சியை இயக்கி விட்டால் அது விரும்பும் நிகழ்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருப்பது போல, விளம்பரமும், தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியும் நமக்குள் புகுத்தப்படுவது போல, அதனால் அது முட்டாள்களின் பெட்டி என்று அழைக்கப்படுவது போலத்தான் இந்த டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்.

இணையத்தில் வினை புரிவதும், எதிர்வினை பெறுவதும் இந்த சமூக வலைத்தளங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் நன்கு யோசித்து ஆய்வு செய்து போடப்பட்ட உள்ளடக்கம்தான் இணையதளங்களில் கிடைத்தது. அதன் பிறகு வந்த வலைப்பதிவுகளுக்கும் குறைந்த பட்ச உழைப்பு தேவைப்பட்டது. டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்சுக்கு அப்படி எந்த உழைப்பும் தேவைப்படாமல் திடீரென்று தோன்றும் பொறிகளை பகிர்ந்து கொள்வது மட்டும் போதுமானதாக இருக்கிறது.

இப்போது பரவலாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் இடியட் பாக்ஸ் போல செயல்படுகின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நமது வட்டத்தில் உள்ளவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் நம் முன் குவிக்கப்படுகின்றன. நாம் வினை செய்வதை விட வெளியானதை உட்கொள்வதுதான் அதிகமாகி விடுகிறது. மிக அதிகமாக எழுதுபவர்கள் கூட எழுதுவதை விட படிப்பது அதிகமாக இருக்கிறது. படிப்பது பிரச்சனை இல்லை, எதைப் படிக்கிறோம் என்பதில் சிக்கல்.

பேஸ்புக்கை ஏற்கனவே விட்டிருந்தேன். டுவிட்டரையும், கூகுள் பிளஸ்சையும் நான்கு நாட்களுக்கு ஒதுக்கி வைத்ததில் பெரிய இழப்பு எதுவும் தோன்றவில்லை. ஏதாவது பொருளைப் பற்றி தேடும் போது சீரியஸ் கட்டுரைகளை படிக்க முடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்லாஷ் டாட்டில் படிக்க நேரம் கிடைத்தது.

இணையத்தில் இணையாமல் கணினியில் வேலை செய்யும் போது கவனத்தை திசை திருப்பவது மேசைக் கணினி விளையாட்டுகள். சாலிட்டேர் என்ற சீட்டு விளையாட்டு மாற்றி மாற்றி விளையாடக் கூடியது. அதை இயக்கி விளையாடிக் கொண்டிருப்பேன். ஏதாவது வேலை செய்யும் போது போர் அடிப்பது போல தோன்றினால் உடனடி நிவாரணத்துக்கு சாலிட்டேர் இருக்கும். அதே மாதிரி டெட்ரிஸ் போன்ற இன்னொரு விளையாட்டும் பீடித்திருந்தது. வேலை மட்டும் ஏன் போர் அடிக்கிறது? மாற்று செயல்பாடு இல்லை என்றால் வேலையையே தொடர முடிகிறது என்று இந்த நான்கு நாட்களில் தெரிந்தது. நான்கு நாட்களில் இந்த மேசைக்கணினி விளையாட்டுக்களையும் கை விட்டேன்.

இணையத்தில் தொழில் நுட்பம் தொடர்பான மடற் குழுக்கள், விவாத தளங்களில் முன்பு நிறைய படித்துக் கொண்டிருப்பேன். அது மாதிரி தளங்களுக்கு நேரம் கிடைக்கும்.

நான்கு நாட்களில் இப்படியாக கணினியில் நேரம் கொல்வது நின்று போனது. வெளி உலகில் கதைப் புத்தகங்கள் படித்தேன். ஜலதோஷத்துக்கு நிவாரணமாக தூங்கி ஓய்வெடுத்தேன். செய்ய மலைப்பாக இருந்த பல வேலைகளை ஆரம்பித்து சிலவற்றை முடிக்கவும்,  சிலவற்றை பெருமளவு முன்னேற்றி செல்லவும் முடிந்தது. இன்னும் அது போல ஒதுக்கி வைத்திருக்கும் நீண்ட கால திட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. இனி வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக செய்யலாம்.

நேற்று காலையில் 4 மணிக்கு எழுந்து 1 மணி நேரம் இணைய பணிகளை செய்து கொண்டிருந்து விட்டு 5 மணிக்கு உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் பசித்தது.

செவ்வாய் கிழமை அரைத்த மாவு இன்னும் இருந்தது. அது பொங்கி வரவும் இல்லை. பக்கத்து கடையில் வாங்கிய உளுந்து சரியில்லை என்று தோன்றியது. இனிமேல் இங்கு வாங்கக் கூடாது. மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு தேங்காய் திருவி, பொரி கடலை, பூண்டு, மிளகாய் பொடி, புளி போட்டு துவையல் அரைத்துக் கொண்டேன். நான்கைந்து தோசை சுட்டு சாப்பிட்டேன்.

மறுபடியும் படுத்து தூங்கி விட்டேன். ஏற்கனவே முன்னிரவில் சாப்பிடாமல் சீக்கிரமே படுத்து நீண்ட நேரம் தூங்கியிருந்தேன். ஜலதோஷ கிருமியுடன் போராட ஓய்வும் சக்தியும் வேண்டும் போலிருக்கிறது. கிட்டத்தட்ட 8 மணி வரை படுத்திருந்து விட்டு எழுந்தேன். உட்கார்ந்து வேலையை தொடர்ந்தேன். சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக போனது.

நடுவில் தொலைபேசி அழைப்பு. சென்னையில் இருக்கிறாராம். காரில் போய்க் கொண்டே பேசுகிறார். conversion optimization பற்றிய காணொளிகளை பார்த்து விட்டாயா என்று கேட்டார். அது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

அதன் பிறகு மீதியிருந்த தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோறு, துவையல், மாங்காய் வைத்து அதையும் சாப்பிட்டு முடித்தேன். வேலையை தொடர்ந்தேன். 11 மணிக்கு  அழைத்தார். அவர்கள் நிறுவன உரிமையாளர் வந்து விட்டாராம். நாளைக்கு வருகிறேன் என்றேன். ஒரு நாள் இன்னும் ஓய்வு எடுத்து விட்டால் ஜலதோஷத்துக்கு மறு வாய்ப்பு கொடுக்காமல் இருக்கலாம் என்று நினைத்தேன். இன்றே வந்து விடுங்கள், இரண்டரை மணிக்கு வந்து விடுங்கள் என்று சொல்லவே அதற்கு தயாராக ஆரம்பித்தேன்.

துவைத்து வைத்திருந்த சட்டைகள், பேன்டை தேய்க்க வேண்டும். அதற்கு கணிசமான நேரம் பிடித்தது. முகம் மழிக்க வேண்டும். அதற்கான பிளேட் மிக மிக மழுங்கி போயிருக்கிறது. அதை வைத்தே ஒப்பேற்றி விட்டேன். அதன் பிறகு குளியல், தியானம். மதிய உணவு வீட்டில் செய்து கொள்ளலாமா என்று யோசித்தாலும் நேரம் இல்லாமல் விட்டு விட்டேன். கொடுக்க வேண்டிய புரபோசலில் மாற்றம் ஒன்றை செய்து பென் டிரைவில் பிடிஎப் ஆக சேமித்துக் கொண்டேன்.

உடை மாட்டிக் கொண்டிருந்த போது வந்தார்கள். அவர் வேலையை ஆரம்பிக்க நான் பேன்ட், சட்டை, போட்டு காலணி அணிந்து புறப்பட்டு விட்டேன். இந்தப் பக்கம் போய் நெட்சிட்டியில் அச்செடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு. நெட்சிட்டிக்கு போகும் வழியில் ஷேர் ஆட்டோ தயங்கி அழைக்க நினைத்தார், காட்பாடி நோக்கி போவதற்கு. அவருக்கு மறுதலித்து விட்டு நெட் சிட்டி போனேன். 3 பக்கம் அச்செடுக்க 6 ரூபாய்.

சாலையைக்  கடந்து சிஎம்சி நோக்கி போகும் ஷேர் ஆட்டோவில் ஏறினேன். முன்னால் ஓட்டுனர் அருகில் ஒருவர், பின் இருக்கையில் மூன்று பெண்கள். வேண்டா வெறுப்பாக ஒதுங்கி இடம் கொடுத்தார். நானும் இருக்கை நுனியில் ஒட்டிக் கொண்டேன். ஒரு பெண் காங்கேய நல்லூர் விலக்கில் இறங்கிக் கொண்டார். காங்கேய நல்லூர் என்று கிருபானந்த வாரியாரின் ஊர் இங்குதான் என்று சில நாட்களுக்கு முன்பு வாக்கிங் போகும் போது தெரிந்தது. புதிய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தச் சொல்லாமல் சாலை நிறுத்தம் வரை உட்கார்ந்து கொண்டேன். மற்றவர்களும் அதைத் தாண்டிதான் போகிறார்கள் போலிருக்கிறது. 10 ரூபாய் வாங்கிக் கொண்டார்.

நல்ல வெயில், காத்திருப்பதற்கு நிழற் குடை கூட கிடையாது. சென்னை போகும் 102, 89, 86 விரைவு வண்டிகள் அல்லது காஞ்சிபுரம் போகும் அரசு பேருந்துகளை பிடித்தால் வாலாஜா போய் விடலாம். தனியார் பேருந்துகள் ஆற்காடு போய் போவதால் அவற்றில் ஏற முடியாது. ஆற்காட்டில் கணிசமான நேரம் நிறுத்தி வைத்து விடுவார்கள். கூழ் விற்கும் வண்டி நின்றிருந்தது. சளி பிடித்திருப்பதற்கு அது நல்ல தேர்வு இல்லை. பேருந்து வந்ததும் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நிறைய பேர் ஏறியும் எல்லோருக்கும் இடம் கிடைத்தது. இரண்டு பேர் இருக்கையில் உட்கார்ந்து கண்ண மூடியதும் கண்ணயர்ந்து விட்டேன். வாலாஜா புறவழிச்சாலைக்கு அருகில் வரும் போதுதான் விழிப்பு வந்தது.

இறங்கி எதிரில் சாலையைக் கடந்து மூர்த்தீஸ் கபேவுக்கு போனேன். 2 மணி ஆகியிருந்தது. சீக்கிரமாக சாப்பாடு தீர்ந்து விடும் அங்கே. நான்தான் கடைசி ஆளாக சாப்பாடு போட்டார்கள். 30 ரூபாய் சாப்பாடு. ஒரு பொரியல் தீர்ந்திருந்தது. சோறு, சாம்பார், ரசம், மோர், பப்படம், இரண்டு பொரியல்கள், ஊறுகாய். எல்லா உணவு பொருட்களுமே விலை குறைவாகத்தான் எழுதி போட்டிருந்தார்கள்.  முன்பெல்லாம் சென்னையிலிருந்து ராணிப்பேட்டை வரும் போது இந்த மூர்த்திஸ் கபேயில் வழக்கமாக சாப்பிடுவது உண்டு. அதன் உரிமையாளர் கொஞ்சம் கோபக்காரர், கெட்ட வார்த்தையில் திட்டுவார். சுமார் 40 வயதுதான் இருக்கும். இப்போது தாடி வளர்த்திருந்தார்.

சாப்பிட்டு விட்டு அருகிலிருந்து எழுதுபொருள் கடையில் புரபோசலை வைத்துக் கொடுக்க ஸ்டிக் அட்டை வாங்கிக் கொண்டேன். வெகு நேரம் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொடுத்தார். 10 ரூபாய்.

ஆட்டோ ஒன்று வந்து ஆள் இறக்கி விட்டு வேலூர் போகும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நிற்க அவரிடம் போய் ஏறிக் கொண்டேன். 50 ரூபாய் என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட கட்டணமாக ஆகி விட்டிருக்கிறது.

அவரிடம் புரபோசலை கொடுத்து விட்டு ஐபிஎம் சர்வர் விபரங்களையும் இணையத்தில் காட்டினேன். போய்க் கேட்டு விட்டு அழைத்துப் போனார். உள்ளே குளிரூட்டப்பட்ட அறை, சாப்பாடு மணம் அடித்தது. கொஞ்ச நேரத்தில் பழகி விட்டது. மிகவும் சாதாரணமான மனிதராக பேசினார் முதலாளி. என்னை என்ன சாதி என்று கேட்டுக் கொண்டார். இன்ன சாதிக்குத்தான் இப்படி எல்லாம் மூளை போகும் என்றார். நான் அதை மறுத்து சொன்னேன். அவருக்கு நெருங்கிய நண்பராம். மகன் பிடெக் தோல் தொழில் நுட்பம் படித்து இந்த ஆண்டு முடிக்கிறானாம்.

அதிகம் பேரம் பேசாமல் புரபோசலை ஏற்றுக் கொண்டார். விலை குறைக்க முடியுமா என்று கேட்டதற்கு விளக்கியதும் கிண்டல் அடித்து விட்டு விட்டார். உடனேயே வேலை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார். முன்பணம் கொடுக்க வேண்டுமா என்றும் விசாரித்துக் கொண்டார். வெளியில் வந்து பேசினேன். சர்வர் வாங்குவதற்கான விபரங்களை அச்செடுத்துக் கொள்ளச் சொன்னேன். வெளியில் வந்து மெயின் ரோடுக்கு வந்தார் ஒரு ஆட்டோ முத்துக் கடையிலிருந்து வந்து கொண்டிருந்தது. நிறுத்தி வாலாஜா விட்டு விடச் சொன்னேன். 40 ரூபாய் வாங்கினார்.

அருகில் இருந்த சந்தைக்குள் போய் காய் வாங்கிக் கொண்டேன். உள்ளி, மாங்காய், கத்தரிக்காய், முட்டை கோஸ், தக்காளி வாங்கிக் கொண்டேன். கொஞ்சம் அதிகமாகவே விலைகள் போட்டு 54 ரூபாய் வாங்கிக் கொண்டார் அந்த பையன். சாலையைக் கடந்து வேலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். காஞ்சிபுரம் வண்டி வர அதிலும் நிறைய பேர் ஏற வந்தார்கள். இறங்குபவர்களும் கணிசமாக இருக்கவே உட்கார இடம் கிடைத்தது. வேலூரில் பேருந்தை விட்டு இறங்கியதுமே 1ம் எண் பேருந்து நின்றது. நகரப் போனதை ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். நடத்துனர் சில்லறை இருந்தா கொடுங்க, இல்லா விட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி சீட்டு கொடுத்தார். நம்மிடம் சில்லறை இல்லை என்பது கோபத்தை தருவதில்லை, சில்லறைக்காக அவர்கள் அவ்வளவு கஷ்டப்படுவதை புரிந்து கொள்ளாததுதான் கடுப்பை தருகிறது. அப்படி புரிதல் நம்மிடம் இருக்கிறது என்று தெரிந்து விட்டால் மன்னித்து பெருந்தன்மையாக விட்டு விடுகிறார்கள்.

காந்தி நகர் உள்ளே போகாமல் நேராக ஓடைப் பிள்ளையார் கோவில் வந்து விட்டது. உள்ளே போனால் கல்யாண மண்டபம், டான் பாஸ்கோ, ஈபி, ஆக்சிலியம் என்று கூடுதல் நான்கு நிறுத்தங்கள்.

வீட்டுக்கு வந்து தோசை சுட்டு தின்று காபியும் போட்டுக் குடித்தேன். வேலை தொடர்ந்தது. ஏழரை மணிக்கு முடித்து விட்டு பல் தேய்த்து கை கால் முகம் கழுவி தூங்கப் போய் விட்டேன். எட்டரை மணிக்கு அழைப்பு வந்திருக்கிறது. தூக்கம் ஆழ்ந்த நிறைவான தூக்கம்தான். இடையில் இரண்டொரு முறை விழிப்பு வந்தது. கனவுகளும் திருப்தியான ஆக்கபூர்வமான கனவுகள்தான்.

இதை முடித்து விட்டு 4.30 கட்டுரையை எழுத வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம். அதன் பிறகு தயாரிப்பு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 1 மணி நேரம். ஆறரை ஆகியிருக்கும். ஆறரை மணிக்கு கட்டுரையை படிக்க வேண்டும். 7.30 மணி. ஏழரை மணிக்கு உலாவ போய், பால்+தேங்காய்+பச்சை மிளகாய் வாங்கிக் கொள்ள வேண்டும். காலை உணவுக்கு உப்புமா. 8.30க்கு காலை உணவு. 9 மணிக்கு கட்டுரையை இன்னொரு முறை படித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். 10 மணி. 11 மணிக்கு வீடியோக்களை பார்த்தல். 12 மணிக்கு மதிய உணவு தயாரிப்பு, சோறு, புளிக்கறி, முட்டை கோஸ் துவரன். புளிக்கறி சரிப்படா விட்டால் சாம்பார் வைத்துக் கொள்ளலாம். 1 மணிக்கு சாப்பாடு.

2 மணிக்கு ஜாவா ஸ்கிரிப்டு படித்து குறிப்பெடுத்தல். 3 மணிக்கு பேச வேண்டும். இன்று வெள்ளிக் கிழமை. மாலையில் வெளியில் போய் விட்டு வரலாம்.

நாளைக்கு சனிக் கிழமை, அடுத்த வாரம் கணினிகளை சரி பார்த்தல், கோப்புகளை சீர் செய்தல் பணி.

நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகவே இருக்கிறது. இடைவிடாமல் வேலை செய்ய வேண்டும். கடும் உழைப்பு தேவை. ஏற்படும் மாறுதல்களை தொடர்ந்து அறிந்து கொண்டு தேவையான புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் உருப்படியாக எதையும் நம்மால் பேச முடியும். 

நம் நாட்டு வரலாற்றைப் படிக்க வேண்டும். பிற நாட்டு வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய பொருளாதார அமைப்பு பற்றிய விபரங்களை படிக்க வேண்டும். பத்திரிகையிலும் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்திலும் வெளி வருவது பாதி உண்மை அல்லது திரிக்கப்பட்ட உண்மைதான். அதற்கு ஒரு வாழ்நாளும், ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் போதாது.

இதற்கிடையில் டுவிட்டர், கூகுள் பிளஸ், கணினி விளையாட்டுக்கள் என்று எப்படி நேரம் ஒதுக்க முடியும்?

நமது மூளையும் நரம்பு மண்டலும் விசித்திரமான ஆச்சரியப்படக் கூடிய அளவில் தகவமைத்துக் கொள்ளக் கூடியவை.

முரண்டு பிடிக்கும் திமிர் பிடித்த மாடுகளுடன் போராடி நேரத்தை வீணாக்குவதில் அர்த்தமே இல்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டியது கடமை. நான் வாழ்நாள் முழுவதும் குறைந்த பட்சம் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கடைப்பிடித்த, சரி என்று உணர்ந்த வாழ்க்கைக்கான வழி காட்டல். போட்டி, தனி மனித உயர்வு, மற்றவர் காலை இழுத்தல், பொய் சொல்லுதல், சட்டத்தை மீறுதல் என்ற நடைமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இங்கு வந்து நிற்கிறேன்.

நேர்மையான ஒருவொருக்கொருவர் ஒத்துழைத்து, சமூக வாழ்க்கை, உண்மையாக இருத்தல் இவற்றின் அடிப்படையிலான சமூகம் நிச்சயம் சாத்தியமானதுதான். 

மற்ற அனைத்தும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.

சனி, ஏப்ரல் 21, 2012

படித்தல்


ஏப்ரல் 21, 2012 காலை மணி 4.

நேற்று காலையிலும் சீக்கிரமே எழுந்து விட்டேன். இரண்டரை மணி என்று நினைவு. ஆனால் எழுதுவதற்கோ மிச்சம் வைத்திருந்த வேலைகளை செய்வதற்கோ மனம் வரவில்லை. முதலில் ஜாவாஸ்கிரிப்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் விழும் கட்டைகள் என்ற விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டேன். மிக எளிமையான வடிவமைப்புதான். இறங்கி விட்டால் பல மணி நேரம் சாப்பிட்டு விடும். 4 கணுக்களைக் கொண்ட கட்டைகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பவை கீழ் நோக்கி விழும் அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தி உட்கார வைக்க வேண்டும். ஒரு வரிசை முழுவதும் இடைவெளி இல்லாமல் பொருத்தி விட்டால் அது மறைந்து விடும், அதற்கான புள்ளிகள் கிடைக்கும். 4 வரிசைகளை ஒரு சேர மறைய வைத்தால் அதிக புள்ளிகள், ஒற்றை வரிசை மறைந்தால் குறைந்த பட்ச புள்ளிகள். நான்கு கணுக்களும் தலை/அடியாக இணைந்த கட்டை, 3+1 என்று இணைந்த வலது புற/இடது புற திருப்பமுடைய வகைகள் 2, 2+2 என்று இணைந்த வலது புற இடது புற திருப்பமுடைய 2 என்று மொத்தம் 5 வகை கட்டைகள். கட்டைகளை செங்குத்தாக கோணம் திருப்ப வசதிகள் உண்டு.

சரியாக 5 மணிக்கு திட்டமிட்ட வேலையை ஆரம்பித்தேன். எழுதி வைத்த கட்டுரைக்கு சரியான வடிவம் கொடுத்தேன். மொழிபெயர்த்த கட்டுரையின் உரையை உரைக்கோப்பில் எடுத்து பிழை திருத்தி அனுப்ப தயார் செய்தேன். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அதற்கு முன்பு கட்டுரையை அனுப்பி விட்டிருந்தேன். அடுத்த மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டது. அடுத்ததாக மாலை தமிழ் ஊடகப் பேரவையில் பேச வேண்டியதற்கான குறிப்புகளை எழுத வேண்டும். குறைந்த பட்சம் 1 மணி நேரத்துக்கு குறிப்பு எழுதிக் கொண்டால் சுமார் 20 நிமிடங்கள் பேச முடியும் என்று திட்டமிட்டிருந்தேன்.

பசிக்கவே, பல் தேய்த்து விட்டு முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை சாப்பிட போனேன். மாங்காய் ஊறுகாய் வாங்கியதில் உப்பு அதிகம், கூடவே காரக் குழம்பு மிச்சமும் இருந்தது. சாப்பிட்டு விட்டு தூக்கம் வராமலிருக்க உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு கப் கடும் காபி. 1 ரூபாய்க்கு கிடைக்கும் ப்ரூ பொதியை ஒரு கப்பில் கொட்டி, 2 கரண்டி சீனி, கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்தால் காபி தயார்.

பால் சேர்த்து தயாரிப்பதை விட இந்த கருப்பு காபிதான் மிகவும் விருப்பமானது. சிறு வயதில் வெறும் வயிற்றில் முட்டை உடைத்து குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கொடுப்பார்கள். அப்போது முட்டை வாடை தெரியாமல் இருக்கு இது போன்ற கடும் காப்பி கிடைக்கும். இந்த கடும் காப்பிக்காகவே முட்டை குடிக்க வாய்ப்பு தேடுவேன். அதன் பிறகு, வளர்ந்த பிறகு உடல் நிலை சரியில்லா விட்டால் இந்த கடும் காபிதான் மருந்து. இங்கிலாந்துக்கு போயிருந்த போது அங்கிருந்தவர்கள், காபியில் பார் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவார்கள். நான் காபியில் சர்க்கரை சேர்த்து பால் சேர்க்காமல் சாப்பிடுவேன்.

இதை செய்வதற்கு பாட்டிலில் காபிப் பொடி வாங்கி வைத்தால் சில நாட்களில் கெட்டித்துப் போய் வீணாகி விடுகிறது. அதனால் வாங்காமலேயே வைத்திருந்தேன். இப்போது 1 ரூபாய் பாக்கெட்டை பார்த்ததும் வழி தெரிந்து விட்டது. இரண்டு வாரம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வாங்கியது, தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு கப்புக்கு மேல் போவதில்லை. அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அளவையும், தடவைகளையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் பெரிதாக ஏற்பட்டு விடாது என்றுதான் நம்பிக்கை.

காபி குடித்து விட்டு பேச்சுக்கான தயாரிப்பு. மின் புத்தக படிப்பான்களை பற்றி என்று நினைத்து வைத்திருந்து கிண்டில் தொடர்பான வீடியோக்களை தரவிறக்கியிருந்தேன். கூடவே சொல்லியிருந்த 15ம் நூற்றாண்டு வாடிக்கையாளர் சேவை வீடியோ, கார்னிங் கிளாஸ் நிறுவனம் தயாரித்த எதிர்கால தொழில் நுட்ப சாத்தியங்கள் வீடியோ என்று வரிசைப்படுத்தி இவற்றை மையப்படுத்தி பேசலாம் என்று  முடிவு செய்திருந்தேன். இடையில் தொலைபேசி அழைப்புகள், குளியல், தியானம் எல்லாம் முடித்து எழுத ஆரம்பிக்கும் போது 11 மணி ஆகி விட்டது. ஓரளவு நிறைவாகவே வந்தது. இணைய இதழ்களின் தொழில் நுட்ப சாத்தியங்கள், எதிர்கால சாத்தியங்கள் என்னென்ன, இடையூறுகள் என்னென்ன போன்ற விபரங்களை  சேகரித்துக் கொண்டேன்.

12 மணிக்கு துணிகளை பைக்குள் எடுத்து வைத்து, மடிக்கணினி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். குடங்களை காலி செய்து கீழே கொண்டு வைத்தேன். தண்ணீர் வந்தால் பிடித்து வைப்பார்கள். காலி செய்த தண்ணீரை கொட்டி விடவில்லை. தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டேன்.

படிப்பதற்கு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். எப்போதோ வாங்கியது, சீனாவில் வெளியிடப்பட்ட பதிப்பு, சீன மொழியில் முன்னுரையுடன் இருந்தது. அமெரிக்க கல்லூரிகளில் பயிற்றுவிப்பதற்கான பாட புத்தகம். இப்போதைய ஆர்வத்திற்கு பொருத்தமான வாசிப்பு. பைக்கு கொஞ்சம் கனம் அதிகம் என்ற சிக்கல் மட்டும்தான்.

கோபால புரம் வந்து சாலையைக் கடக்கும் போது பகிர்வூர்தி நிறுத்தி ஏற்றிக் கொண்டார். புதிய பேருந்து நிலையத்துக்கு முன் இறங்கி டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு சென்னை பேருந்து நிற்கும் பகுதிக்கு வந்தால் ஒரு குளிர் சாதன அரசு விரைவுப் பேருந்து நின்றது. எந்த ஊரிலிருந்து வருகிறது என்று பார்க்காமலேயே ஏறிக் கொண்டேன். பெங்களூர் அல்லது திருப்பதியாக இருக்க வேண்டும். வழியில் சாப்பிட நிறுத்தும்போது பார்த்தால் 911 திருப்பதி வண்டிதான். உள்ளே அதிகம் கூட்டமில்லை. யாரும் உட்காராத இருவர் இருக்கையின் பின், உட்கார்ந்து கொண்டேன். இருக்கையை சாய்த்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். மொத்தமே 10-15 பேர்தான் இருந்தார்கள். பூந்தமல்லிக்கு 110 ரூபாய் சீட்டு.

தூக்கம் வரவில்லை, தூங்கவும் இல்லை. முதலில் நாளிதழ், தொடர்ந்து கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்துக் கொண்டிருந்தேன். திருப்பெரும்புதூர் தாண்டி கட்டண சாவடி தாண்டிய பிறகு சில நிமிடங்கள் கண்ணயர்ந்திருப்பேன். அதற்கு முன்பு காஞ்சிபுரம் மேம்பாலம் இறங்கியதும் இடது புறம் இருக்கும் (வெள்ள கேட் பகுதி) விடுதியில் சாப்பிட நிறுத்த ஒரு தயிர் சாதம் சாப்பிட்டுக்  கொண்டேன். 25 ரூபாய். 3 மணிக்கு பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தது.

54Fல் ஏறினால் நேராக போய் விடலாம். 54 போய்க் கொண்டிருந்தது. அவற்றில் ஏறாமல் பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன். 54L வேளச்சேரி பேருந்து பயணிகள் யாரும் உட்காரமல் நகர்ந்து கொண்டிருந்தது ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

இந்த பேருந்திலும் கூட்டம் மிக மிகக் குறைவு இருக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. சின்னமலை சீட்டு வாங்கிக் கொண்டேன். 11 ரூபாய். சின்ன மலையில் இறங்கினால் சைதாப்பேட்டையிலிருந்து வரும் பேருந்துகளையும் பிடிக்கலாம். நேரம் ஆகி விட்டால் ஆட்டோ பிடிக்கும் தூரம் கூட. வண்டி எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று வந்து ராமாபுரம் சாலை நிறுத்தத்தில் நின்று விட்டது. எஞ்சின் தொடங்க மறுத்தது. இறங்கி அடுத்த பேருந்தை பிடிக்க வேண்டுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் புறப்பட்டு விட்டது. கிண்டி தாண்டி 3.45க்கு சின்னமலையில் இறக்கி விட்டார்கள். இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வரும் முன்பு கடந்து போன ஆட்டோவை கை காட்டி ஏறிக் கொண்டேன்.

ஆட்டோ உள்ளே போகுமானால் உள்ளேயே விட்டு விடச் சொன்னேன். உள்ளே அனுமதித்தார்கள். வாசலில் பதிவு செய்து கொண்டு போய் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்கு முன்பே இறங்கிக் கொண்டேன்.

கூட்டம் முடிந்து  அடையாறு, கிரீன்வேஸ் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டன் வழியாக கதீட்ரல் சாலை வந்தது. ராணி மேரிக் கல்லூரி எதிரில் சாலை நிறுத்தத்தில் இறங்கிக்  கொண்டேன். வந்து ஆவணத்தை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். தேநீர் கடையில் ஒரு கோப்பை தேநீர் ஒரு சமோசா சாப்பிட்டு விட்டு அருகிலேயே இருந்த நகலகத்தில் கடவுச்சீட்டுக்கான நகலை எடுத்துக் கொண்டேன். முதல் பக்கம் மட்டும் போதும் என்று அதைக் கிழித்து கையெழுத்து போட்டு வைத்துக் கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். சொன்னபடியே அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இப்போது நேரம் 6 ஆகியிருந்தது. கூட்டம் 6.30 என்று சொல்லியிருந்தார்கள்.

அவரது வண்டியிலேயே வைட்ஸ் சாலையில் விட்டு விடுவதாகச் சொன்னார். கோபால புரம் வழியாக திரும்பி ராயப்பேட்டை வந்து மணிக்கூண்டு, எக்ஸ்பிரஸ் அவன்யூ தாண்டி வலது பக்கம் கட்டிடம் தென்பட்டது. இடது பக்கம் இறங்கி சாலையைக் கடப்பது பெரிய விஷயம்தான். பாதசாரிகள் சாலை கடப்பதற்கான வெள்ளை பட்டிகளும் போட்டிருக்கத்தான் செய்தார்கள். அது வரை நடந்து சென்று கடந்தேன்.

முதல் தளத்திலிருந்து கைகாட்ட ஏறி போனேன். குளிரூட்டப்பட்ட அறை. புரஜெக்டர், திரை என்று அமர்க்களமாக இருந்தது. கணினியை இணைத்து சரி பார்த்து விட்டு அணைத்து வைக்கச் சொன்னேன். ஆறரை மணிக்கு சிலர் வந்திருந்தனர். காபி, வடை கொடுத்தார்கள். நன்றாக இருந்தது. வடை பெட்டியை திறந்ததும் நல்ல மணம் வந்தது. 7 மணிக்குப் பிறகு கூட்டம் ஆரம்பித்தது.  முதலில் பேச ஆரம்பித்தேன்.

பேச்சு நன்றாகவே போனது, குறிப்பாக காணொளிகளை காட்டியது மிகவும் வரவேற்பை பெற்றது. யாரும் போரடித்து போயிருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. முடிந்ததும் கேள்வி பதில்களும் சுவாரஸ்யமாக போயின. அதைத் தொடர்ந்து அய்யநாதன் பேசினார். வெப்துனியாவிலிருந்து வெளி வந்து விட்டார் என்று பின்னர்தான் தெரிந்தது.

இளைய தலைமுறையினர் தம்மை மேம்படுத்திக் கொள்ள, பிறருடன் தொடர்பு கொள்ள, ஆய்வு செய்து விபரம் தெரிந்து கொள்ள, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இணையத்தை நாடுகிறார்கள். பொழுதுபோக்கு என்பது 5வது காரணியாகத்தான் இருக்கிறது. முதல் நான்கு நோக்கங்களுக்கு சரியான தீனி போட்டால் தவறான பொழுது போக்கு அம்சங்களை நாடி போக மாட்டார்கள் என்று பேசினார். அதற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டார். இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரையிலான இளம் இளைஞர்கள். 18 வயது முதல் 29 வயது வரையிலான முதிய இளைஞர்களில் 80 சதவீதத்துக்கு மேல் இணையத்தை நாடுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொன்னார். எந்த அடிப்படையிலான புள்ளி விபரம் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெரிதும் பொருந்தும் என்றே தோன்றியது.

அவர் பேசி முடித்த பிறகும் விவாதங்கள் தொடர்ந்தன. 9 மணிக்குப் புறப்பட்டோம்.

மீண்டும் சாலையைக் கடந்து வந்து ஆட்டோதான் பிடித்தேன். தாம்பரம் போகும் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடக் கேட்டுக் கொண்டேன். டிஎம்எஸ்சில் விட்டு விட்டு 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். 1B வந்தது. 17  ரூபாய் சீட்டு. பூந்தமல்லி - சின்னமலை = 11 ரூபாய், இப்போது 17 ரூபாய் - மொத்தம் 28 ரூபாய்தான் ஆகியிருக்கிறது. 50 ரூபாய் சீட்டு வாங்காதது நல்லதுதான். பேருந்தில் அருகில் இருந்த பெரியவர் வைத்திருந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனது பாட்டியும் அம்மாவும் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்ததை பிறகுதான் பார்த்தேன். அம்மா கூப்பிட்ட போதுதான் இவன் முகத்தில் மலர்ச்சியே வந்தது.

அதன் பிறகு அருகில் உட்கார்ந்தவர் பேருந்து கட்டண உயர்வைப் பற்றி புகார் சொல்ல அவரிடம் பேசிக் கொண்டே தாம்பரம் வந்து விட்டது.

வியாழன், ஏப்ரல் 19, 2012

உண்பதூம் உறங்குவதூம்


ஏப்ரல் 19, 2012.

நாட்குறிப்பு எழுதி ஒரு வாரம் தாண்டி விட்டிருக்கிறது. போன வாரம் புதன் கிழமை எழுதியது. வியாழக்கிழமை காலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டதால் எழுதவில்லை. வியாழக்கிழமை இரவே சென்னையிலிருந்து திரும்பி வெள்ளியன்று தாமதமாக எழுந்தது. சனிக்கிழமை மீண்டும் காலையில் எழுந்து சென்னைக்கு. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் புறப்பட எழுதவில்லை. திங்கள் கிழமை ஞாயிற்றுக் கிழமை களைப்பை போக்க தாமதமாக எழுந்திருந்தேன். திங்களன்று ராணிப்பேட்டை போய் விட்டு வந்த களைப்பு செவ்வாய் கிழமை காலையை சோம்பலாக்கியது. புதன் கிழமை, அதாவது நேற்றும் சோர்வான காலையாக ஆரம்பித்தது. இன்று சரியாக எழுந்து உட்கார்ந்து விட்டிருக்கிறேன்.

நேற்று காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி. திராட்சை பழங்களில் மீதியிருந்தவற்றை உதிர்த்து கிண்ணத்தில் எடுத்துக் கொண்டேன். தண்ணீரை கொதிக்க வைத்து காப்பித் தூளைப் போட்டு, சர்க்கரையும் சேர்த்துக் கொண்டேன். நிறைய வேலைகள் மீதியிருந்தன. முதலில் மொழிபயர்ப்புகளை திருத்த ஆரம்பித்தேன். அனுப்பிய கட்டுரையையும் தரவிறக்கி திருத்த ஆரம்பித்தேன். இந்த வேலைகளிலேயே நேரம் போனது. 8 மணிக்கெல்லாம் வந்து பாத்திரங்கள் கழுவ ஆரம்பிக்க, அவருடன் பேசிக் கொண்டே உணவுக்கான தயாரிப்புகள் செய்ய ஆரம்பித்தேன்.

முந்தைய நாளின் பழையது இருந்தது. நல்ல வேளையாக சாம்பார், மாங்காய் ஊறுகாய் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. ஓட்ஸ் பொதியுடன் கிடைத்த சமையல் பக்குவங்களுக்கான புத்தகத்தை புரட்டினால் ஓட்ஸ் பட்டாணி தோசை என்று போட்டிருந்தது. ஓட்சையும் உளுந்தையும் பொடித்து கலந்து, உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டு தோசை. பட்டாணியை வேக வைத்து வாசனை பொருட்களுடன் தோசையில் மடித்து பட்டாணி தோசை. முதல் பகுதியை மட்டும் செய்ய முடிவு செய்தேன். உளுந்தை கழுவி மிக்சியில் அரைக்கப் போட்டால் ஈரப் பதத்தில் பக்கத்தில் ஒட்டிக் கொண்டது. இப்படி உளுந்தை ஊற வைக்காமல், அல்லது வறுக்காமல் பொடித்து பயன்படுத்துவது செரிமான கோளாறை உருவாக்கும், உருவாக்கியது.

அதனுடனேயே ஒரு கப் ஓட்சை போட்டு பொடித்தேன். ஓட்ஸ் நல்ல மாவாக ஆனது. மூசிலியில் பயன்படுத்தப்படும் ஓட்ஸ் பெரியதாக துகள்களாக இல்லாமல் இருக்கிறது. திங்கள் கிழமை ஓட்சில், பழங்கள் சேர்த்து பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் என்று சிறிதளவு வறுத்தால் பொடிப்பொடியாக கரிந்து போக ஆரம்பித்தது.

ஓட்சுடன் சேர்ந்து உளுந்தும் பொடிந்து விட்டது. கொஞ்சம் குருணையாக இருந்தது. மொத்தத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி, உப்பு சேர்த்து கரைத்தேன். கொஞ்சம் சீரகமும்.

'என்ன புதுசு புதுசா செய்கிறேயே' என்று ஆச்சரியப்பட்டார். 'கொடுத்து வைக்கல, இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு செய்பவனோட' என்று அலுத்துக் கொண்டாள். 'இதையெல்லாம் மனுசன், மனுசி திம்பானா' என்று பாதி நகைச்சுவையாக சொன்னேன்.

டெக்கான் குரோனிக்கிளில் ஒரு 11 வயது சிறுமியைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆப்கனில் தற்கொலை தாக்குதலில் மாட்டிக் கொண்ட அந்த சிறுமியின் குடும்பத்தில் பலர் இறந்து விட்டிருக்கின்றன. அந்த பெண்ணின் வயதுதான். ஒரு நாளில் பல முறை அவர்களை நினைக்க வேண்டிய வந்து விடுகிறது. இன்னும் வயதாக வயதாக தேடுதல் அதிகமாகுமோ என்னவோ.

தோசை சுடுவதற்கு தோசை கல்லையும் அகப்பையும் கழுவி நீட்ட, அதை விட்டு விட்டு மூடி வைத்தேன். இப்போதைக்கு பழையது குடித்து விட்டு, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஊறிய பிறகு தோசை சுட்டுக் கொள்வேன். எப்படி வருகிறது என்று பார்க்க ஆர்வமாக இருந்திருக்கலாம். அவர் போன பிறகு பழையது அனைத்தையும் தட்டில் ஊற்றி உப்பு போட்டு, தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி வைத்துக் கொண்டேன். நன்றாகவே இருந்தது. மோரோ எந்த ஒரு குழம்போ சேர்க்காமல் கூட அரிசிச் சோற்றுக்கான மணத்தோடு தண்ணீர் ஊற்றி வைத்த பழையதின் ருசி தனிதான். இதை சாப்பிட்டால் இதையெல்லாம் தின்பதா என்று சிலருக்கு உண்டு. அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாதது.

சாப்பிட்டு விட்டு முடி வெட்டப் போனேன். ஒவ்வொரு வேலை செய்து முடித்த பிறகும் சில நிமிடங்கள் இணையத்தில் இணைந்து மேய்தல். இதற்குள் மொழிபெயர்த்த இரண்டு கட்டுரைகளையும், சரி பார்த்த கட்டுரையையும் அனுப்பி விட்டேன். இன்னும் மீதி  இரண்டையும் இன்று முடித்து விட முடியுமா என்று கேட்டால், மனிதன் நினைத்தால் முடியாதது எதவும் இல்லை என்று தத்துவம் சொன்னார்.

இறுக்கமான பேன்டையும் பிங்க் கோடு போட்ட டி-சட்டையையும் போட்டுக் கொண்டு போனேன். முடி வெட்டும் கடைக்கு அருகில் போனால் அங்கு கரண்ட் இல்லை, கடைக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நாற்காலியில் ஒருவர் காத்திருந்தார். பக்கத்து பத்திரிகை கடைக்குப் போய் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டிருக்கிறார்கள். சென்னையை போல செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

கடைக்குள் புழுக்கம், வேர்வை ஆறாக கொட்டியது. எனக்குத்தான் அதிகமாக வேர்த்தது. பழையது குடித்து விட்டு வந்ததால் அந்த ஈரம் எல்லாம் வெளியில் போக முடிகிறது போலிருக்கிறது.

உதவிக்கு வந்த பையன் ஷேவிங் மட்டும்தான் செய்வான் போலிருக்கிறது. எனக்குப் பிறகு வந்தவரை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தான். முதலில் முடி வெட்ட ஆரம்பித்தவரை சீக்கிரம் முடித்து விட்டு என்னை கூப்பிட்டார். வெயிலும், மின் வெட்டும் இரு முனை தாக்குதல்களாக வாட்டி எடுக்கிறது. 'தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது, உற்பத்தி அதே நிலையில் வைத்திருந்தார்கள், அதுதான் மின் வெட்டுக்கு காரணம்' என்று விளக்கினார் முடி வெட்டுபவர். அவருக்கும் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சம் சமாதானம். தலை, கழுத்து எல்லாம் வேர்த்து வடியும் போது முடி வெட்டுவது கூடுதல் சிரமமாக இருக்கும்.

ஒரு வயதான, சிகப்பான ஒருவர் வந்து உட்கார்ந்தார். ஷேவிங் எவ்வளவு என்று கேட்டார். 20 ரூபாய் என்று சொன்னதும், 10 ரூபாய் இல்லையா என்றார். அவரிடம் கொஞ்ச நேரம் வாக்குவாதம் செய்து விட்டு, 'இந்த இந்தி காரனுங்களே இப்படித்தான், அவங்க ஊரில் இருப்பது போலவே இங்கேயும் எதிர்பார்க்கிறான்' என்று அலுத்துக் கொண்டார் கடைக்காரர். 'பேசாம கடையை மூடி விட்டு வாட்ச் மேன் வேலைக்கு போகலாமான்னு நினைக்கிறேன். எங்க அப்பா அப்படித்தான் போகிறார், மாதம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மெட்ராசில, குடும்பத்தோட மெட்ராசுக்குப் போய் விட்டா நல்ல காசு' என்றார்.

'இது உங்க சொந்த தொழில், உழைச்சு மதிப்பா சம்பாதிக்கிறீங்க, மெட்ராசுக்குப் போய் யாருக்கோ கும்பிடு போட்டு வாழ்வது இதற்கு ஈடாகுமா. அது உங்க மனதுக்கு திருப்தியை தராது, பணம் வேணும்ணா கூடுதல் இருக்கலாம்' என்றேன். அவர் மனதில் சந்தோஷ புன்னகை. 'ஆமாமா' என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது, காலையில் சரியாக 4 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. அதற்குள் துணியை ஊற வைத்து விட்டு, பல் தேய்க்க எடுத்திருந்தேன். கரண்ட் கட்டானதும் நாற்காலியை வெளியில் போட்டு, ஸ்டூல் ஒன்றையும் வெளியில் எடுத்து மடிக்கணினியை இயக்கினேன். கையில் எடுத்திருந்த பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் தேய்த்து முடித்து விட்டு வெளியில் வந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் கொசு பட்டாளம் படை எடுக்கிறது. சட்டை போடாமல் உட்கார்ந்திருந்ததால் உடம்பையும் தோளையும் மொய்க்கின்றன. போய் சட்டையை, முழுக்கைச் சட்டையை போட்டுக் கொண்டேன்.

2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சத்துவாச்சாரியில் ஒரு கடையில் வாங்கிய சட்டை. சென்னையிலிருந்து வந்து மாற்றுச் சட்டை இல்லாததால் வாங்கிய சட்டை. வெள்ளை பருத்தி சட்டை. முஸ்லீம் திருமணத்தின் போது மாப்பிள்ளை போட்டுக் கொள்ளும் சட்டையாம். எனக்கு இடுப்பை சிறிதளவுதான் தொடும் அளவுக்குத்தான் நீளம். இப்போது கொசு. வெளியில் தெரியும் காலின் பாதங்கள், சாரத்தின் ஊடாக தொடை என்று கடிக்கின்றன. பேன்ட் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் அதையும் கொஞ்சம் தவிர்க்கலாம். எப்படியும் பாதங்கள்,  கழுத்து, முகம் திறந்துதான் இருக்கும். ஓடோமாஸ் போன்று கொசு எதிர்ப்பு களிம்பு வாங்கி பூசிக் கொள்ளலாம்.

வெளியில் மாடிப்பகுதியில் எதோ கருப்பாக தெரிகிறதே என்று வெளிச்சம் அடித்துப் பார்த்தால் தலையோடு மூடிக் கொண்டு யாரோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் ஒருவராயிருக்கலாம்.

மீண்டும் நேற்றைய நிகழ்வுகளுக்கு. அவ்வளவு புழுக்கம், வேர்வைக்கு மத்தியிலும் முடி வெட்டும் முறையில் எதையும் குறைத்துக் கொள்ள வில்லை. கத்திரி வைத்து வெட்டுவது, பக்க வாட்டில் வெட்டுவது, கத்தியால் ஓரங்களை சரி செய்வது என்று முழுவதும் செய்து முடித்தார். ஷேவிங் வேண்டாம் என்று சொல்லி விட்டதில் அவருக்கு ஒவ்வொரு முறையையும் போலவே வருத்தம்தான். 40 ரூபாய் வாங்கிக் கொண்டார். தொலைபேசியையும், பேனாவையும், வீட்டிலேயே விட்டு விட்டு வந்திருந்தேன்.

வீட்டுக்கு வந்து குளிக்க வேண்டும். குளித்து விட்டு தோசை சுட்டேன். நன்றாகவே வந்திருந்தது. உளுந்து அடை போல வந்தது. சீனியுடன் சாப்பிட்டேன்.

அதன் பிறகு வழக்கம் போல இணையம். ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன். அறிமுகம், பயிற்சி, மொழி விபரங்கள் முடிந்து இப்போது ஒவ்வொரு பொருளாக விளக்கும் பகுதி வந்திருக்கிறது. அதுவும் நாள் முழுவதும் ஓடியது. நேற்று ஜேகொரி பற்றிய புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஜாவா ஸ்கிரிப்டை கற்றுக் கொண்டு அதன் பிறகு ஜேகோரியை பயன்படுத்த ஆரம்பித்தால் உதவியாக இருக்கும்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சட்டை, பேன்ட் மாட்டி விட்டு புறப்பட்டேன். பிஎஸ்என்எல் டேட்டா கார்டுக்கான எண் குறிக்கப்பட்ட நாளேடு எடுத்துக் கொண்டு அதனுள், காசோலைகளை சொருகிக் கொண்டேன். வாலாஜாவில் டெப்பாசிட் செய்த காசோலை இன்னும் கணக்கில் சேர்ந்திருக்கவில்லை. இன்று போய் பார்க்க வேண்டும். முதலில் ரீசார்ஜ் செய்யும் கடை. கடைப்பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டே எண்ணை குறித்துக் கொண்டாள். சில நொடிகளில் தகவல் வந்து விட்டது. 750 ரூபாய் ரீசார்ஜ் ஆகியிருந்தது. 5 GB பயன்பாடு அடுத்த 18ம் தேதி வரையில். முன்பே மீதியிருந்த 50 MBயையும் சேர்த்து காட்டியது.

சாலையைக் கடந்து வங்கிக்கு போனேன். நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். முதல் டெல்லரிடம் படிவம் வாங்கிக் கொண்டு அவர் முன்பிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் படிவங்களை நிரப்பி கொடுத்து விட்டேன்.

அப்படியே கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்திருந்தேன். வெயிலில் போக மனம் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

தொலைபேசியவரிடம் நிலைமையைச் சொன்னால் வெள்ளிக் கிழமை மதியத்துக்குள் முடித்து விட்டால் கூட போதும் என்றார். கொஞ்சம் கண்ணயர்ந்து எழுந்து கடைக்குப் போனேன். ஒரு மேகி நூடுல் பொதியும், 1 ரூபாய் காபி பொடி 5 பொதிகளும் வாங்கிக் கொண்டேன். கடைப் பையனோடு இன்னொருவர் உட்கார்ந்திருந்தார், அவர்தான் உரிமையாளர் என்று தோன்றியது.

தொலைபேசி வெள்ளிக்கிழமை, அதாவது நாளை மாலை உரைக்கு புரஜெக்டர் தயார் செய்து விடுவதாகச் சொன்னார். இணையம் பற்றி பேசும் போது காட்சியாக காட்டினால்தான் புரியும் என்பதால் ஏற்பாடு செய்து விட்டார்களாம். இணையத்தில் தேடி பழங்கால வாடிக்கையாளர் உதவி பற்றிய வீடியோவை எடுத்துக் கொண்டேன். மெடிவல் சப்போர்ட் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை படிப்பதற்கு உதவி கேட்கும் காட்சி. அந்தக் காட்சி நமக்கு சிரிப்பாக தோன்றினாலும் அப்படித்தான் நடந்திருக்க முடியும். இன்றும் ஒரு சிறு குழந்தை புத்தகத்தை புரட்டவும், படிக்கவும் கற்றுக் கொள்வது அது போன்ற தடுமாற்றத்துக்குப் பிறகுதான். என்ன, பெரியவர்கள் படிப்பதை பார்த்து தெரிந்து கொள்வதும், பெரியவர்கள் இயல்பாக கற்றுக் கொடுப்பதும் நடந்து விடுகிறது.

அதே போல மின்னணு படிப்பான்களும் இப்போதைக்கு புதுமையாக தெரிந்தாலும் இன்னும் சில தலைமுறைகளில் இயல்பான படிக்கும் கருவிகளாக மாறியிருக்கும். காகிதங்கள் செய்ய மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், புத்தக தொகுப்புக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளலாம். கருவிக்கு மின்ஊட்டம் தேவைப்படுவது, அச்சிட்ட எழுத்துக்கு இணையான துல்லியம் இல்லாமல் இருப்பது இரண்டும்தான் இப்போதைய குறைபாடுகள். இரண்டுமே எதிர்கால தொழில் நுட்ப வளர்ச்சியில் சரிசெய்யப்படக் கூடியவைதான்.

கூடவே, வணிக நோக்கில் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பெரிய தொல்லையாக இருக்கின்றன. கிண்டில், நூக், ஆப்பிள் ஐ-பேட், டேப்லட் கணினிகள், பெரிய திரை தொலைபேசிகள் என்று படிப்பதற்கு பல கருவிகள் இருக்கின்றன. படிப்பதற்கான புத்தகங்கள் மொபி வடிவத்தில் கிடைக்கின்றன. பிடிஎப் வடிவமும் அனைத்து  கருவிகளிலும் படிக்க முடியும். இதுதான் இன்றைய நிலைமை. இன்னும் சில ஆண்டுகளில்
1. ஒரு பேப்பர் பேக் அளவில், கனத்தில் கருவி
2. சூரிய ஒளியிலிருந்து ரீசார்ஜ் செய்யும் மின்கலன்
3. உயர் துல்லிய எழுத்துக்கள்
4. திறந்த வகை  வடிவங்கள்.

இப்படி வந்து விட்டால் படைப்புகள் வாசகர்களை வேகமாக நேரடியாக போய்ச் சேர்ந்து விட முடியும். இப்போதும், படைப்புகளை மின் புத்தகங்களாக மாற்றித் தரும் இணைய தளங்கள் இயங்குகின்றன.

அடுத்த சில நிமிடங்களில் அழைத்தார். அவர் வேறு ஒரு டேனரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாராம். அவர்களுக்கு மென்பொருள் வேண்டுமாம். வந்து பேச முடியுமா என்று கேட்டார். இன்று போக வேண்டும். 11 மணிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.


மாலையில் அழைத்து அடுத்த மாதம் ஒரு பயிற்சி வகுப்பு நடக்க இருப்பதாகச் சொன்னார். மலை ஏற்றம், வகுப்பு நடக்குமாம்.


மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு காபியும் குடித்துக் கொண்டிருந்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்பட்ட போது வெளியில் வந்து உட்கார்ந்து ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகும் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்து விட்டு தியானம். 10 மணிக்கு தூங்கப் போகும் போது மின்சாரம் தடைப்பட்டது. அறைக்கதவை மூடி விட்டு, கொசு விரட்டியை பொருத்திக் கொண்டு, மின்விசிறியை வேகமாக ஓட விட்டிருந்ததால் மின்சாரம் தடைப்பட்டும் கொசு கடிக்காமல் தூங்கி விட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மின்சாரம் வந்தது என்று நினைக்கிறேன்.

காலையில் 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 மணி வரை. இரவு 8 முதல் 9 வரை மீண்டும் நள்ளிரவு 1 மணி நேரம், அதிகாலை 1 மணி நேரம் என்று 9 மணி நேரம் மின்சாரத்தை வெட்டி விடுகிறார்கள். சொல்வது போல பாதிக்குப் பாதி நேரம்தான் மின்சாரம் வருகிறது. இரவு போவது 1 மணி நேரத்துக்கா ஒன்றரை மணி நேரத்துக்கா என்று பார்க்க வேண்டும். 4 மணிக்கு போனது இன்னும் வரவில்லை.

மின்சாரம் வந்து விட்டது. இதை முடிக்கும் போது 5.05 ஆகியிருக்கும். அதன் பிறகு கட்டுரையை தொடர 1 மணி நேரம். 6 மணிக்கு அது முடித்து விட்டு வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைக்க வேண்டும்.
ஆறரை மணிக்கு உலாவப் போய் பால், நாளிதழ் வாங்கி வர வேண்டும். காலை உணவுக்கு ஓட்ஸ் காய்ச்சி பால் சேர்த்து குடித்துக் கொள்ள வேண்டியதுதான். பிரெட் கிடைத்தால் வாங்க வேண்டும்.

திரும்பி வந்து துணி துவைத்து, முகம் மழித்து, குளியல். இன்று, நாளை, சனிக்கிழமை போட வேண்டிய உடைகளை தேய்த்து கொள்ள வேண்டும், 9 மணிக்கு. 10 மணிக்கு ராணிப்பேட்டை புறப்பட வேண்டும். 11 மணிக்கு சந்தித்து விட்டு அப்படியே வங்கிக்குப் போய் கேட்டு விட்டு திரும்பி வர வேண்டும்.

அதன் பிறகு நாளைய உரைக்கான தயாரிப்பு. நாளைக்கு உரைக்கான தயாரிப்பு, மொழி பெயர்ப்பு முடித்து, மதியம் 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டும். 4 மணிக்கு கூட்டம், 7 மணிக்கு  கூட்டம். சனிக்கிழமை கல்லூரி. சனி மாலை திரும்பி விட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை இங்கு ஜாவாஸ்கிரிப்டு தொடரலாம். இன்னும் 1 நிமிடம் இருக்கிறது. எத்தனை சொற்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். 1824 சொற்கள்.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

திரைப்பட வாழ்க்கை


ஏப்ரல் 10, 2012 - நேரம் 4.24.

ஞாயிற்றுக் கிழமை காலையில் 2 மணிக்கு எழுந்து எழுத ஆரம்பித்தேன். எழுதி முடித்து விட்டு இரண்டு வகுப்புகளுக்கும் இன்டெர்னல் மதிப்பெண்களை சரி பார்த்து இறுதி செய்தேன். இன்னும் சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களுக்காக கூடுதல் வேலை கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன் பிறகு கொடுத்திருந்த வீட்டு பணியை சரி பார்த்து மதிப்பெண் கொடுத்தேன். சோர்வாக இருக்கவே படுத்து தூங்கினேன். இப்படி அதிகாலையில் எழுந்து விட்டு அதன் பிறகு தூங்குவதை உறுதியாக நிறுத்த வேண்டும். பகலில் தூங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தொலைபேசி அழைப்பில் எழுந்திருந்தேன். என்னுடைய கடவுச் சீட்டு எண் வேண்டுமாம். 'என்னிடம் கைவசம் இல்லை, நான் வெளியில் இருக்கிறேன்' என்று சொன்னேன். 'என்ன காலையில் ஆறரை மணிக்கு வெளியிலா' என்று கடிந்து சொல்ல, நான் வேலூரில் வசிப்பதையும் இப்போது சென்னையில் இருப்பதையும் சொன்னேன். 'அப்போ உன் சகோதரியின் வீட்டில் இல்லையா' என்று கேட்டதும் விபரம் சொன்னேன். அத்தோடு எழுந்து வெளியில் போனேன்.

இந்தப் பக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் கேட்டால் அதில் ஞாயிறு இணைப்பு மட்டும்தான் இருந்தது. செய்தி பகுதிக்குப் பதிலாகவும் இணைப்பு. அதை சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டு சாலையைக் கடந்து எதிர் புறம் போனேன். அங்கு டெக்கான் வாங்கி விட்டுத் திரும்பி வந்தேன். அறைக்கு வந்து துணிகளை அடுக்கி வைத்து விட்டு குளிக்க, முகம் மழிக்க போனேன். இன்னொரு முறை அழைப்பு. எடுத்தால் குரல். 'மாம்மியின் பிளட் குரூப்' என்ன என்று கேட்டாள். 'எனக்கு நினைவில்லை, மறந்து விட்டது, ஏதோ ஆர்எச் பாசிட்டிவ்' என்று மட்டும் நினைவிருக்கிறது. அதற்குப் பிறகும் பல முறை எடுத்திருப்பாளே' என்று அவளிடம் கொடுக்கச் சொன்னேன்.

அவளுக்கும் நினைவில்லையாம். 'ஆர்எச் +வ் என்று எழுதவா' என்று கேட்டாள். '+வ் தான் என்று உறுதியாகத் தெரியுமா' என்றாள். 'ஆமாமா, நீ எப்போதுமே பாசிட்டிவ்தான்' என்றேன். 'பேசாமல் ஏதாவது சோதனை லேபுக்குப் போனால் 5 நிமிடங்களில் பிளட் குரூப் சொல்லி விடுவார்கள்' என்றால், 'ஒண்ணும் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வைத்தாள். இரண்டு நிமிடங்களில் மீண்டும் அழைத்து  'உன் எண்ணைக் கொடுத்திருக்கிறேன். அழைத்து ஏன் வரவில்லை என்று கேட்டால், வெளியூரில் வேலையாக போயிருப்பதாகவும் இன்னொரு சமயம் வருவதாகவும்' சொல்லச் சொன்னாள். இப்போது குரலில் சங்கடம். ஒருவனிடம் போய் உதவி கேட்கிறோமே என்று சங்கடம்.

குளித்து விட்டு தியானம். அதன் பிறகு எதிரில் போய் சரவணபவனில் காலை உணவு. சிரித்த முகத்துடன் ஒருவர் ஆர்டர் எடுக்க வந்தார். 4 இட்லிகள் சொன்னேன். அடுத்தது அப்புறம். 4 இட்லி ஒரே பிளேட்டில் வந்தன. அதைத் தொடர்ந்து பூரி சொன்னேன். பிறகு காபி, சர்க்கரை போடாமல். சுகர் ப்ரீ வேண்டுமா என்று கேட்க, இனிப்பே வேண்டாம் என்று சொன்னேன். சர்வர் சுகர் ப்ரீ பாக்கெட்டுகளை எடுத்து வந்திருந்தார். திருப்பிக் கொடுத்து விட்டேன். காபியில் இனிப்பில்லாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது, அவ்வளவுதான்.

அறைக்கு வந்து பார்த்தால் 8 மணி ஆகி விட்டிருந்து. எந்த வேலையையும் ஆரம்பிக்க போவதில்லை என்று முடிவு செய்து விட்டு கிளம்பினேன். பைகளை அறையிலேயே வைத்து பூட்டிச் செல்லுமாறு சொன்னார். பூட்டி விட்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கிண்டி போகும் பேருந்தில் ஏறினேன். ஓட்டுனர் நடத்துனர் மட்டும்தான் இருந்தார்கள். 8 ரூபாய் சீட்டு. சில பேருந்துகளை போக விட்டு ஒரு 88 தடத்தில் ஏறினேன்.

சின்னமலை அருகில் ஏதோ கூட்டம். ஹால்டியா சந்திப்பிலிருந்தே வண்டிகள் வரிசை கட்டியிருந்தன. அந்த இடத்தைத் தாண்டும் வரை ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து அதன் பிறகு இயல்பு நிலை இருந்தது. பெரிய கூட்டம், ஏதோ திருவிழா போல. நிறைய பெண்களும். கிருத்துவ அமைப்பு ஒன்றின் கூட்டம் போல் தோன்றியது. எக்ஸ்பிரஸ் அவென்யூ போவதற்கு டிவிஎஸ் என்று சீட்டு கொடுத்திருந்தார்.

தொலைபேசி அழைப்பு வந்தது. இடிந்தகரை போயிருந்தாராம். இப்போது காவல் துறை குவிப்பை நீக்கி விட்டாலும், ஊர் மக்கள் ஆள் பார்த்துதான் அனுமதிக்கிறார்களாம். கூடி இருக்கும் மக்கள் கடைசி வரை போராடுவதாக உறுதியாக இருக்கிறார்களாம். அவர் குறும்பனை போய் சந்திக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு உடன் வர அழைத்திருக்கிறார். நான் ஊரில் இல்லை, சென்னையில் என்று சொன்னேன். அவர் சென்னை வந்த பிறகு சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டோம்.

இதற்குள் டிவிஎஸ் நிறுத்தத்தை தவற விட்டு எல்ஐசியில் இறங்கினேன். அது வரை ஒரு வழிப்பாதை. சாலையைக் கடந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த காவல் துறை குடிநீர் பந்தலில் தண்ணீர் குடித்துக் கொண்டேன். அருகில் நின்ற காவலருக்கு நன்றி சொல்லி விட்டு நடந்தேன். பேருந்து நிறுத்தம் அருகில் விசாரிக்க நேராக நடக்கச் சொன்னார்கள்.  நடந்தே வந்து சேர்ந்து விட்டேன்.

பெரிய கடைத்தெரு கட்டிடம். கார்கள் நிறுத்த பெரிய வளாகம். பல அடுக்க மாடிகள். உள்ளே நுழைந்து நகரும் படிக்கட்டுகள் மூலமாக ஒவ்வொரு மாடியாக ஏறினேன். கடைசி தளத்தில்தான் திரைப்பட அரங்கு இருக்க வேண்டும். துடைத்துக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டு போய்ச் சேர்ந்தேன். உள்ளே டிக்கெட் கொடுக்க கவுண்டர், தானாகவே டிக்கெட் அச்செடுத்துக் கொள்ள திரைகள், சாப்பாட்டுக் கடைகள் பளபளக்கும் விளக்குகளுடன் உயரமான கூரையினுள் இருந்தன. போய் சுற்றிப் பார்த்துக் கொண்டே அடுத்த வாசல் அருகில் வந்தேன்.

தொலைபேசி அடித்தது. வெளியில் போக முயற்சித்து கதவில் முட்டிக் கொண்டேன். வெளியில் போனால் தொலைபேசி நின்று விட்டது. திரும்ப அழைத்தால் பிசி என்று வந்தது. உள்ளேயே நின்று கொண்டிருக்கிறார். எஸ்கேப் என்று பெயர். பெரிய அரங்குதான். அகலமான இருக்கைகள், அகலமான கைப்பிடிகள். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டிருந்தது. திரைக்கு அருகிலான இருக்கைகள்.

உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். திரைப்படம் ஆரம்பிக்கும் வரை பேச்சு. திரைப்படம் கஹானி என்ற இந்தி திரைப்படம். சோதனைச் சாலையில் எலிகள் இருக்கும் கூண்டினுள் சிறு கண்ணாடி குமிழ்களை உள்ளே போட்டு உடைக்க, அதிலிருந்து வெளிப்படும் திரவம் ஆவியாகி எலிகள் இறக்கின்றன. அடுத்த காட்சியில் கொல்கத்தா மெட்ரோவில் பால் புட்டியில் இருந்து திரவம் வெளி வந்து நூற்றுக் கணக்கான பேர் இறந்து போகிறார்கள்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஏழெட்டு மாத கர்ப்பிணியாக வித்யா பாட்சி வந்து இறங்குகிறார். டாக்சியில் ஏறி பார்க் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசன் போகிறார். தனது கணவரை காணவில்லை புகார் கொடுக்கிறார். கணவர் பெயர் அர்னாப். கொல்கத்தாவுக்கு புராஜெக்டுக்காக வந்தவர் திடீரென்று காணவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும், வேலை பார்த்த இடத்திலும் விசாரித்தால் அப்படி யாரும் இல்லை என்கிறார்கள் என்று சொல்கிறார். புகார் பதிவு செய்து கொள்கிறார்கள். அவரை கொண்டு விட நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர், கணினியில் வேலை செய்பவர், ராணா என்பவர் வருகிறார். ஒரு கெஸ்ட் ஹவுசுக்குப் போகிறார்கள். அங்கு தனது கணவர் தங்கிய பதிவேடுகளை கேட்டால் அதில் அவர் பெயர் இல்லை.

தான் அங்குதான் தங்கப் போவதாகச் சொல்லி விட்டு தங்குகிறார். அடுத்த நாள் நகரத்தின் பிணவறையில் பிணம் அடையாளம் காட்ட அழைத்துப் போகிறார்கள். அர்னாபின் உறவினர்கள் என்று ஏதோ ஒரு இடத்துக்குப் போகிறார்கள். அர்னாப் படித்த பள்ளிக்குப் போய் விசாரித்தால் அங்கும் தகவல் இல்லை. நிறுவனத்துக்குப் போய்க் கேட்டால் மனித வள மேலாளர் அப்படி யாருமே வேலை செய்யவில்லை என்கிறார். ஆனால் மாலையில் அழைத்து அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்த ஒரு ஊழியரைப் போல இருக்கிறது என்று சொல்லி சந்திக்க அழைக்கிறார்.

அந்த மனித வள மேலாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அடுத்து ஒரு போலீஸ் தகவல் சொல்பவரை சந்திக்கிறார்கள். அவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்கிறார். அதில் 2 பேர் கொல்லப்பட்டார்கள், மூன்றாமவர் காயமடைந்தார், காயமடைந்தவருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார். அங்கு போய் விசாரித்தால் அந்த மருத்துவர் அடுத்த நாள் வரச் சொல்கிறார். அந்த மருத்துவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார். டில்லியில் ஐபி அலுவலகத்தில் இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஒரு அதிகாரி இதை கையாள கொல்கத்தா வருகிறார்.

இடைவேளையின் போது வித்யாவை மெட்ரோ ரயில் முன்பு தள்ளிக் கொலை செய்யப் பார்க்கிறார் முந்தைய கொலைகளை செய்த அதே கொலையாளி.

இடைவேளையின் போது வெளியில் போய் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்தேன். ஒன்று 20 ரூபாய். அதற்குள் புதிய ஜனநாயகம் படித்திருக்கிறார். அதில் வந்திருந்த மின்சாரம் கட்டுரை பற்றி கேட்டார். அதை விளக்கிக் கொண்டிருக்கும் போது திரைப்படம் மீண்டும் ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் வித்யாவையும் கொல்லும்படி உத்தரவு வருகிறது. கொலையாளி வித்யாவை துரத்த, அவரை ராணா துரத்த, ஒரு கட்டத்தில் கை கலப்பு ஏற்பட, துப்பாக்கி வித்யா கையில் வர, ஆளைச் சுட்டுக் கொன்று விடுகிறார். கொலையாளியின் தொலைபேசியில் இருக்கும் குறுஞ்செய்திகளைப் பார்த்து அவை எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்கிறார். அது அந்த ஐடி நிறுவனத்தின் பாதுகாவலர் கணினியிலிருந்து வருகின்றது. அங்கு போய் கணினியிலிருந்து தகவல்களை நோண்டுகிறார். அவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள்.

இப்போது ஐபியும் ராணாவும் ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இன்னும் ஒரு முறை கணினியை அணுகி விபரங்களை தேடச் சொல்கிறார்கள். ஒரு தொலைபேசி எண் கிடைக்கிறது. அதை அழைத்தால் ஐபியின் தலைவருக்கு போகிறது. தலைவரை அழைத்து தான் கணினியை நோண்டியதையும் இன்னும் பல தகவல்கள் கிடைத்ததாகவும் சொல்கிறாள். உள்ளூர் அலுவலரை அனுப்புவதாக சொல்கிறார். அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்ட இடத்தில் கோப்புகளைக் கொண்டு வரும்படி உத்தரவு வருகிறது.

அங்கு போகும் போது துர்கா பூஜையின் 10ம் நாள் உற்சவம். வெள்ளை/சிவப்பு உடை உடுத்து போகிறாள். கொலையாளியை சந்தித்து அவன் சுட முயற்சிக்கும் போது வயிற்றிலிருந்து தோல் பொம்மையை உருவி அவனை அடிக்கிறாள். அவனுடன் சண்டை போட்டு வீழ்த்துகிறாள். சுட்டு கொன்று விடுகிறாள். ஐபி அதிகாரியும் ராணாவும் வந்ததும் அவர்களை சந்திக்காமல் தப்பி ஓடி விடுகிறாள்.

தனது கணவனை கொன்றவனை பழி வாங்க முன்னாள் ஐபி அதிகாரியுடன் இப்படி வேடம் போட்டுக் கொண்டு வந்தார் என்று தெரிகிறது. அமிதாப் பச்சன் இறுதியில் மா, அசுரர்கள், வதம் என்று புராணம் சொல்லி முடிக்கிறார். படம் முடிந்து பெயர்கள் முடிவது வரை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். வெளியில் வந்து அருங்காட்சியகம் போகலாம் என்று முடிவு.

படிகளில் இறங்குவதால் பாதிக்கப்படுகிறார் என்பதும், அருங்காட்சியகம் போகலாம் என்று சொல்லியிருந்ததும் மறந்து போயிருந்தது. அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எழும்பூரில் போய் காரை அருங்காட்சியகத்தில் நிறுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால் எதிர் பக்கம் ஒரு அசைவ ஹோட்டல், மேசைக்குப் போனால் ஈ மொய்த்துக் கொண்டிருந்த ஒரு பாத்திரம் இருந்தது. வெளியில் வரும் போது முறைத்தார்கள். பக்கவாட்டு சாலையில் போய் ஹாட்பிரட்ஸ் பார்த்தோம், இந்தப் பக்கம் ஒரு அசைவ உணவகம், அதன் அருகில் சென்னை ராவுத்தர் பிரியாணி.

அங்கு போய் மீன் பிரியாணி, பிரியாணியில் முட்டை வறுத்து போட்டு, மீன் வறுத்ததை வைத்திருப்பார்களாம். கடைசியில் சாத்துக்குடி ஜூஸ் சொல்லியிருந்தேன். அதையும் மறந்து விட்டிருந்தேன்.

சாப்பிடும் போதும் பேசிக் கொண்டே இருந்தார். சாப்பிட்ட பிறகு மியூசியம் போய் ஓவியங்களை பார்க்கப் போனோம். நவீன கலைக் கூடத்தில் மூன்றாவது மாடியில். ரவிவர்மா ஓவியங்கள் பற்றி குறிப்பாக சொல்லியிருந்தார். ஓவியங்களை பார்ப்பதற்கான கலைக்கண்களை பெற வேண்டும். இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று சொன்னேன். சரியாக முடித்து விட்டு வெளியில் வந்து உட்கார்ந்தோம். பேச்சு தொடர்ந்தது. காரிலும் தொடர்ந்தது. ஸ்டெர்லிங் சாலை, ஆற்காடு சாலை வழியாக, அசோக் பில்லர் வந்து சரவண பவனில் காபி சாப்பிடப் போனோம். அதே சிரித்த முக ஆர்டர் எடுப்பவர். பேச்சு தொடர்ந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கப் போய் விட்டு தவறான நடைபாதையில் வேலூர் பேருந்துகளை தேடிக் கொண்டிருந்தேன். நாளின் இன்னொரு பெரிய சொதப்பல். காலையில் மீண்டும் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

கடைசியில் 102B non-stop திருப்பத்தூர் பேருந்து. மூவர் இருக்கையில் நடைபாதை ஓர இருக்கையில் உட்கார்ந்தேன். பூந்தமல்லியில் மூன்றாமவரும் வந்து நடுவில் உட்கார்ந்து கொண்டார். நீண்ட வார இறுதி முடிந்து வரும் மாணவர்கள் நிறைய பேர். தூங்கிக் கொண்டே வந்தேன். 12 மணிக்கு வேலூர். வெளியில் வந்து பகிர்வூர்தி. குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்கு பதில் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து பாஸ்போர்ட் விபரங்களை அனுப்பி விட்டு தூங்கினேன்.

நேற்றுக் காலையில் எழுந்திருக்கவில்லை. 7 மணி வரை தூங்கிக் கொண்டேன். எழுந்து பார்த்தால் தண்ணீர் இல்லை. பல் தேய்த்து சட்டை மாட்டிக் கொண்டு கீழே தண்ணீர் பிடிக்கப் போனால் 2 நாட்களுக்குப் பிறகுதான் வருமாம். முன்பு ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று போன வாரம் சொல்லியிருந்தார்கள். கரண்ட் கூட இல்லை என்பதையும் கவனிக்கவில்லை. குடத்தை வைத்து விட்டால் வரும் போது பிடித்து வைப்பதாகச் சொன்னார்.

வைத்து விட்டு மேலை வந்தேன். தண்ணீர் இல்லாமல் வேலை ஆகாது என்று உணர்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நடந்தேன். கடையில் வாங்க வேண்டும். வீட்டுக் காரர் கனிவமுது கல்யாண மண்டபத்தில் போய் பிடித்தால் 10 ரூபாய் என்று சொன்னார். அங்கு போய் காவல்காரரை கேட்டால் பக்கவாட்டில் போய் பிடிக்கச் சொன்னார். வெளிப்புற குழாயில் பிடித்து வந்தால் அது இல்லையாம். அதைக் கொட்டி விட்டு மண்டபத்தின் உள்ளே அறையில் பிடித்துக் கொடுத்தார்.

தோளில் சுமந்து கொண்டு வந்து சேர்த்தேன். திரும்பவும் கடைக்குப் போய், சாம்பார் பொடி, உளுந்து, துவரம் பருப்பு, ரவை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், தயிர், ஓட்ஸ் வாங்கினேன். வீட்டுக்கு வந்து ஓட்ஸ் காய்ச்சி வைத்து விட்டு குடிக்கும் போது போய் பால் வாங்கி வந்து காய்ச்சி சேர்த்துக் கொண்டேன். மீதிப் பாலை டம்ளரில் ஊற்றி வைத்தேன்.

கொஞ்சம் கண்ணயர படுத்தால் தொலைபேசி அழைப்பு. 2 மணி நேரத்தில் வருகிறார். இணைய வியாபாரத்துக்கு என்ன செலவாகும் என்பது குறித்து விசாரித்தார். தகவல்களைச் சொன்னேன். அதன் பிறகு துணி துவைப்பதும் சமையலும். தக்காளி ரசம், மோர் தாளிப்பு, கத்திரிக்காய் பொரியல், மாங்காய் ஊறுகாய் என்று திட்டம். குக்கரில் சோறு வைத்து விட்டு துணிக்கு சோப்பு போட்டேன். துணி துவைத்துப் போட்டு விட்டு குக்கரை இறக்கி ரசம், மோர் தாளிப்பு, பொரியல். இடையில் உப்பு தீர்ந்திருக்க போய் வாங்கி வந்தேன். இனிமேல் சிறுபயறு, அரிசி, கோதுமை மாவு வாங்க வேண்டும். துணி துவைக்கும் பிரஷ், காபி குடிக்கும் பீங்கான் மக் வாங்க வேண்டும்.

சமைத்து விட்டுக் குளியல், தியானம். அதன் பிறகு சாப்பாடு.  சொன்னது போல 1.45க்கு வந்தார். ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் இறங்கி நின்றதாக அழைத்தவரை வழி சொல்லி வரச் சொன்னேன். இடையில் திசை திரும்பி விட கீழே இறங்கிப் போய் அழைத்து வந்தேன். மே 6ம் தேதி அவருக்குத் திருமணம். ஞாயிற்றுக் கிழமை. ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து திரும்பி வருவதாகச் சொன்னேன். அப்படித் திட்டமிட்டுக் கொள்வேன். பார்க்கலாம். வெள்ளிக் கிழமை ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மே 4ம் தேதி திருமணம் முடிந்த உடன் ரயிலை பிடிப்பதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாகர் கோவில் விரைவு வண்டி, காட்பாடியில் இறங்கிக் கொள்ளலாம்.

மீதி மதிய உணவை முடித்துக் கொண்டு அவருக்கு சேர வேண்டிய காசோலையை கொடுத்தேன்.

அவர் போன பிறகு கரண்ட் வந்த பிறகு தோசை மாவு அரைத்தேன். மீதி இருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு தூங்கப் படுத்தவன் 8 மணிக்கு  அழைத்த போதுதான் எழுந்தேன். அவருக்கு செய்ய வேண்டிய பணியின் விபரங்களை விளக்கினார். ஓடெஸ்கில் 12 மணி வரை உட்கார்ந்திருந்தேன். அதன் பிறகு தியானம். தொலைபேசி நிலைமையை விளக்கி விட்டுத் தூங்கினேன்.

காலையில் 2 மணிக்கு ஒரு முறை விழிப்பு, மின்சாரம் தடைப்பட்டிருந்தது, 4 மணிக்கு எழுந்து விட்டேன். இதை முடிக்கும் போது 5.25 ஆகியிருக்கும்.

தேங்காய் திருவி துவையல் அரைத்துக் கொள்ள வேண்டும். 6 மணிக்கு கரென்ட் போவதற்கு முன்னால் அதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஓடெஸ்க் ஜாவாஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்க வேண்டும். 7 மணி. அதன் பிறகு குளித்து காலை உணவு. காபி போட்டுக் கொள்ளலாம் ஓடெஸ்க் டெஸ்டுக்கு முன்பாகவே.

12 மணிக்கு கடைக்குப் போய் அரிசி, பயறு வாங்கிக் கொள்ள வேண்டும். சமையல். 1 மணிக்கு சாப்பாடு.

தொலைபேசி காசு பற்றிக் கேட்க வேண்டும். அது உறுதி செய்தால் மட்டும்தான் நாளைக்குப் போக வேண்டும். html, css, javscript, php5 படிக்க வேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

புதுச்சேரி to சென்னை


ஏப்ரல் 8ம் தேதி, காலை 2.35 மணி. சென்னையில்.

5ம் தேதி காலையில் சென்னைக்கு கிளம்பி வரும் நேரத் திட்டமிடலில் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அன்று வியாழக் கிழமை. அதிகாலையில் சென்னைக்கு பயணம், முற்பகலில் வகுப்புகள், பிற்பகலில் பாண்டிச்சேரி பயணம், மாலையில் நடந்தே பாண்டிச்சேரி கடற்கரைக்கு, முன்னிரவில் வெளியில் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்து தூக்கம்.

6ம் தேதி, வெள்ளிக் கிழமை காலையில் ஐந்தரை மணிக்கு நடக்கப் போகலாம் என்று திட்டமிட்டிருக்க 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். பல் தேய்த்து விட்டு வெளியே புறப்பட தயாராகி விட்டு உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். அத்தோடு நாட்குறிப்பு நின்று போனது. திரும்பி வந்த பிறகு, குளித்தல், சாப்பிடுதல், பேசிக் கொண்டிருத்தல், மதிய உணவுக்கு வெளியில் போதல், வெளியில் சுற்றி விட்டு வருதல், வீட்டில் செடிகளுக்கு மண் மாற்றி தண்ணீர் ஊற்றுதல் என்று நேரமாகி விட்டது.

7ம் தேதி, சனிக்கிழமை நேற்றுக்கான பதிவுகளை இன்றைக்கு எழுதலாம்.

4 மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். முந்தைய நாள் தூங்குவதற்கு இரவு 11 மணி ஆகியிருந்தது. பல் தேய்த்து விட்டு கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது தண்ணீர் வருவது குறைந்து நின்று விட்டிருந்தது. நல்ல வேளையாக ஒரு வாளியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பல் தேய்த்து விட்டு கழிவறைக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, குளிக்க முடியாமல் முதலில் முகம் மழித்து விடலாம் என்று அதையும் முடித்து விட்டு உட்கார்ந்தேன்.

புத்தகத்தை படித்து குறிப்பு எடுக்க ஆரம்பித்தேன். 4 மணிக்கு ஆரம்பித்தது. அரை மணி நேரம் அமைத்திருந்தேன்.

நான்கரைக்கு நானும் எழுந்து குளித்து விட்டு பொருட்களை எல்லாம் பொதிந்து வைத்து 10 நிமிடங்கள் தியானமும் முடித்தேன். 5 மணிக்கு வெளியில் வர அதுதான் முடியும். வெளியில் வந்து குறிப்பேடு மற்றும் பண்பாட்டு குறிப்புகள் புத்தகத்தையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். எல்லா செய்முறைகளையும் முடித்து வெளியில் வந்து காரில் உட்கார்ந்து கிளம்பும் போது நேரம் 5.20 மணி.

சுமார் 6.30க்கெல்லாம் மாமல்லபுரம் தாண்டி விட்டது. சிவப்பு சூரியன், சில்வர் சூரியன் எல்லோரையும் தாண்டினோம். கோவளத்திலிருந்து இடது புறம் திரும்பி கேளம்பாக்கம் வந்து பழைய மாமல்லபுர சாலையில் சோழிங்க நல்லூர் நோக்கி வந்தோம். சிறுசேரி சிப்காட் வந்து விட்டது. நான் சொல்லி நிறுத்துவதற்கு முன்பு சில மீட்டர்கள் தாண்டி போய் விட்டிருந்தது. அந்த இராஜஸ்தானி டாபாவுக்கு எதிரில்.

7.15. இன்னும் 1 மணி நேரமாவது வெளியில் கழிக்க வேண்டும். நடந்தே போக ஆரம்பித்தேன். டிசிஎஸ் தாண்டி ஹெக்சாவேர் அருகில் திரும்பி நடந்து அந்த சாலையின் முனையில் வலது ஓரத்தில் மர நிழலும் உட்கார ஏதுவாக இரண்டு கான்க்ரீட் மூடிகளும் கிடந்தன. ஒரு மர நிழலில் உட்கார்ந்து பார்த்தால் வெயில் விழ ஆரம்பித்திருந்தது. அடுத்த மர நிழலில் சற்று உயரம் குறைவான கான்கிரீட் மூடியில் உட்கார்ந்து கொண்டேன். 45 நிமிடங்கள் அமைத்துக்  கொண்டு குறிப்பு எடுப்பதை தொடர்ந்தேன். 8.10க்குப் பிறகு எழுந்து நடந்து கல்லூரிக்குப் போனேன். கேட் திறந்திருந்தார்.

அறையில் போய் உட்கார்ந்து கொண்டு நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தேன். அரை மணி நேரம், 9 மணி வரை எழுதி விட்டு காலை உணவு என்று திட்டமிட்டாலும், கையெழுத்து போட அழைக்க, அதை முடித்து விட்டு உட்கார்ந்ததும் சிறிது நேரத்தில் காலை உணவுக்கு அழைக்க போனேன். பொங்கல், வடைகள் முழு அளவையும் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தேன்.

சாப்பிட்டு விட்டு வந்து இணையத்தில் கொஞ்ச நேரம் மின்னஞ்சல் பார்த்துக் கொண்டு 9.15க்கு வகுப்புக்கு புறப்பட்டேன். ஐபியில் வந்தால் எழுதுவதில் ஈடுபட்டிருந்தார்கள். எதிர்பார்த்திருந்தது போலவே அசைன்மென்டை சிறப்பாக முடித்தார். சிறப்பு ஒழுக்கம்தான். நேரம் எடுத்து வீட்டில் படித்து விடுகிறார் அவ்வளவுதான். பெரிய புத்திசாலி கிடையாது.

அவர்கள் முடித்ததும் பாடங்களை பயிற்சி செய்வதை ஆரம்பித்தேன். முதல் பாடத்தில் ஆரம்பித்து வாசித்துக் கொண்டே வந்து 8வது பாடம் வரை வந்து விட்டேன். இடையில் உள்ளே வந்தவர்களை கிண்டல் செய்து கொண்டேன். வந்ததும் கொஞ்சம் அதிகமாகவே காலை வாரினேன். ஜாலியாக எடுத்துக் கொள்கிறது. இடையில் தொய்வு ஏற்பட்டாலும் 8வது பாடம் வரை வந்து விட்டேன். 9வது பாடம் ஆரம்பிப்பதற்கு முன் இடைவெளி என்று கேட்க, போர்டில் சொற்களை எழுதும் பயிற்சியை ஆரம்பித்தேன். முதலில் பணிவான வார்த்தைகள் எழுத, அடுத்தது pronouns எழுத, நேர வார்த்தைகளை எழுத ஆனந்த், அவற்றை படிக்க, வினைச் சொற்களை எழுத என்று சுறுசுறுப்பாகவே போனது. இறுதியாக 9வது பாடத்தைப் படித்தோம். இரண்டு முறை படித்து விட்டு வருகைப் பதிவு எடுத்தேன். அடுத்த வகுப்புக்கும் பயிற்சி ஏதாவது கொடுத்து விட்டு வந்து வருகைப் பதிவு எடுத்து விடும்படி சொன்னார்.

தேர்வின் C பகுதியில் கேட்டிருந்த 3 கேள்விகளுக்கான விடைகள் தயாரித்து வைத்திருக்குமாறு சொன்னேன். அடுத்த வகுப்பு எம்ஐஎஸ்சுக்குப் போய் விட்டு நினைவு இன்றி அப்படியே கிளம்பி விட்டிருந்தேன்.

இடைவேளையில் வந்து வினா வங்கியை கொடுத்தேன். சீன மொழி வினாத்தாள் அச்செடுப்பை சரி பார்த்துக் கொண்டேன். எம்ஐஎஸ் வகுப்புக்கு வந்தால் மாணவர்கள் தமது presentation தர வேண்டும். முதலில் நன்றாகவே செய்தார்.  data warehousing and data mining பற்றி பேசினார். அடுத்து DSS பற்றி. மூன்றாவதாக decision making பற்றி. தொடர்ந்து programming oop பற்றி. கடைசியில் it systems உருவாக்குதல் பற்றி. இதற்குள் 12.30 ஆகி விட்டிருந்தது.

இடையிடையே குறுக்கிட்டு விளக்கம் அளித்திருந்தேன். பேசும் போது யாரும் இடையில் முணுமுணுத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய இருப்புதான் அதற்கு காரணம் என்று நினைக்கிறேன். என்னுடைய இருப்பு அவ்வளவு கடுமையானதாக இல்லை என்றுதான் அர்த்தம். அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கம் போல மோப்பிக் கொண்டிருந்தார். இப்படி படித்தால் இவ்வளவுதான் கிடைக்கும் என்று கடுமையாகச் சொல்லிக் கொண்டு வெளியேறி விட்டேன். அறைக்கு வந்து பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். மதிய உணவு தேவையில்லை. பிடித்தால் ஏதாவது கழுத்தறுக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவார்.

வெளியில் வந்து நின்றால் சுமார் 10 நிமிடங்களுக்கு எந்த பேருந்தையும் காணவில்லை. நல்ல வெயில் அடித்தது. ஒரு டாடா மினி வேன் வந்தது. 20 ரூபாய் வாங்கிக் கொண்டார். இறங்கி பேருந்துக்கு காத்திருந்தால் 19B குளிர்சாதன பேருந்து வந்தது. அதை விட்டு விட்டு 570க்காக காத்திருந்தால் அடுத்த 10  நிமிடங்களுக்கு எந்த  பேருந்துமே வரவில்லை. ஒரு வழியாக வந்து சேர்ந்த 19B குளிர்சாதனத்திலேயே ஏறிக் கொண்டேன். 45 ரூபாய் சீட்டு. உட்கார இடம் கிடைத்தது.

நல்ல தூக்கம் கண்ணைச் சுழற்றியது. தூங்கி விழுந்து கொண்டே வந்தேன். ஒரு பெண் அருகில் வந்து உட்காரும் போதுதான் தூக்கம் கலைந்தது. அந்தப் பெண் மத்ய கைலாஷ் தாண்டி நான் பேசும் போது எழுந்து காலியான கீழ் பக்க இருக்கைக்குப் போய் விட்டார். நான் அண்ணா பல்கலைக்கு அருகில் இறங்கினால் நின்றிருந்தார், பெயர் சொல்லி அழைத்தார். பாண்டிச்சேரி பேருந்தில் ஏறப் போனால் அவர்கள் நிறுத்தவில்லை. 49R இரண்டு வர, காலியாக இருந்த இரண்டாவது பேருந்தில் ஏறி இராமாபுரம் சீட்டு வாங்கினேன். கிண்டியிலேயே இறங்கி D70ல் ஏறி விட்டேன். நின்று கொண்டேதான் வர முடிந்தது.

அசோக் பில்லரில் இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன். 37Dயில் ஏறினேன். அது பிள்ளையார் கோவில், அம்மன் கோவில் வழியாக பாண்டிச்சேரி விருந்தினர் இல்லம் வந்து நெசப்பாக்கம் வந்தது. அருகில் இருந்த சாப்பாட்டு கடையில் சாப்பிடப் போனேன். புதினா சோறும் சாம்பார் சோறும் வாங்கிக் கொண்டேன். புதினா சோறு முடிக்கும் போது வந்தார். வெளியில் வந்து படிவத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சாம்பார் சோறும் சாப்பிட்டு விட்டு வெளியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்  கொண்டேன்.

புறப்பட்டு அசோக் பில்லரில் விடுவதாக அழைத்து சரவண பவன் அருகில் இறக்கி விட்டு விட்டார். டாடா மேஜிக் பிடித்து பில்லர் வந்தேன். நல்ல வேளையாக பேருந்து நிறுத்தத்தில் இறக்கினார். தாம்பரம் போகும் பேருந்துகள்  கூட்டமாக வந்தன.

2 மணிக்கு விழிப்பு வந்து விட்டது. 2.30க்கு எழுத ஆரம்பித்தேன். இதை முடிக்கும் போது 3.35 ஆகியிருக்கும். முதலில்  அசைன்மென்டை சரி பார்த்து இரண்டு வகுப்புகளுக்கும் உள்ளுறை மதிப்பெண்களை முடிவு செய்ய வேண்டும். அதற்கு 1 மணி நேரம். 4.35.

வெளியில் போய் நாளிதழ் வாங்கி வர வேண்டும். முகம் மழித்து குளியல், தியானம் 7 மணி. 9 மணிக்கு புறப்பட வேண்டும். மடிக்கணினியை எடுத்துக்  கொள்ள வேண்டும். 10.10க்கு திரைப்படம். 8.30 மணிக்கே புறப்பட்டுக்  கொள்ளலாம்.

திரைப்படம் முடிவதற்கு 12.30 ஆகலாம். 4 மணிக்கு அறைக்கு வந்து பைகளை எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும்.

நாளைக்கு வாணியம்பாடி போவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எம்ஐஎஸ் உரை, சீன மொழி வகுப்பு திட்டம் தயாரித்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் நான் மட்டும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லாமல் மாணவர்களை ஈடுபடுத்தும் இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த வாரம் வியாழக் கிழமை வந்து விட்டு இரவே திரும்பி விட வேண்டும்.

புதன், ஏப்ரல் 04, 2012

திட்டமிட்டு வாழ்தல்


நேரம் காலை 2.45. ஏப்ரல் மாதம் 4ம் தேதி, 2012ம் ஆண்டு.

நேற்று காலையில், நடு இரவில் என்றுதான் சொல்ல வேண்டும். 1.30க்கு எழுந்து விட்டேன். முந்தைய நாள் பகல் முழுவதும் தூங்கியது, வேலை எதுவும் செய்யாதது, மாலையில் சீக்கிரமாக தூங்கி விட்டது எல்லாம் சேர்ந்து உடலைப் பிடித்திருந்த காய்ச்சலை குணப்படுத்தி விட்டது போலத் தோன்றியது. புத்துணர்வாகவே இருந்தது. காய்ச்சல் இருந்திருக்கவில்லை. நாகர்கோவில் போனது, திரும்பி வந்தது - 2 நாட்கள், சென்னைக்கு அதிகாலை எழுந்து பயணித்தது என்று தூக்க பற்றாக்குறைகள் உடல் சோர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. வெயிலில் வேலூருக்குத் திரும்பி வந்து மதியம் சாப்பிடாமல் மாலையில் வெளியில் போய் சாப்பிட்டது பிடித்துக் கொண்டிருக்கிறது. நன்கு ஓய்வு எடுத்ததும் சரியாகி விட்டிருக்கிறது.

தவற விட்ட அழைப்புகள் முதலில்.

குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர்களுடைய டேனரியில் எடை எடுக்கும் எந்திரத்தில் எடையை கணினியில் பிடிக்கும் செயலி சரியாக வேலை செய்யவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லியும் இன்னும் சரியாகவில்லையே என்று புகார். முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், நான் அதற்கு முன்பே சொல்லியிருந்த இது போன்று பணிகளுக்கு வருடாந்திர ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்பதும் இன்னும் செயல்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றை அனுப்பியிருந்தாலும், இப்போது தர வேண்டிய தொகை, இனிமேல் செய்ய வேண்டியிருக்கும் பணிகள் இவற்றை பட்டியல் போட்டு அனுப்ப வேண்டும். அவர் அலுவலகத்துக்கு போகும் முன்பு அனுப்பினால் படித்து விட்டு டென்ஷன் ஆனாலும் ஆகி விடுவார். 10-11 மணி போல அனுப்பலாம் என்று முடிவு செய்தேன்.

பள்ளியில் என்னுடைய புகைப்பட அட்டை கேட்கிறார்களாம். மெயிலில் அனுப்பி விடு என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். மெயிலில் அனுப்புவது என்றால் என்னுடைய புகைப்படத்தையா அல்லது அடையாள அட்டையா என்று புரியவில்லை. 'இரவில் அழைத்த போது எடுக்க முடியாததற்கு காரணம் தூங்கி விட்டதுதான்' என்றும் 'என்ன அனுப்ப வேண்டும்' என்று கேட்டும் பதில் அனுப்பினேன். அதையும் 5 மணிக்கு அனுப்பினேன்.

2 மணிக்கு நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். முந்தைய நாள் தூங்கிக் கழித்ததை எழுதுவதற்கு நிறைய இருக்கவில்லை. செய்ய வேண்டிய வேலைகளும் அதிகம் அழுத்தி நிற்க நீண்ட நேரம் எழுதிக் கொண்டிருக்க மனம் வரவில்லை. சுமார் அரை மணி நேரம் கூட எழுதியிருக்க மாட்டேன். அதன் பிறகு பட்டியலிட்டிருந்த வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்க ஆரம்பித்தேன். முதலில் சரிபார்த்து வைத்திருந்த கட்டுரையை இன்னும் ஒரு முறை பார்த்து அனுப்பினேன். இரண்டாவதாக, சீன மொழி வினா வங்கியை அனுப்பி வைத்தேன். மூன்றாவதாக மொழிபெயர்த்த கட்டுரையை இரண்டாவது முறை சரி பார்த்து அனுப்பி விட்டேன்.

மின்னஞ்சலில் அனுப்பியிருந்த தகவல்களுக்கு பதில் அளித்தேன். இதற்குள் 5.30 ஆகி விட்டிருந்தது. துணிகளை துவைப்பதற்கு ஊற வைத்திருந்தேன். பசிக்க ஆரம்பிக்கவே தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு கப் காபியும், கொஞ்சம் மீதியிருந்த ஓட்சை கொண்டு கஞ்சியும் செய்து கொண்டேன். காலை உணவுக்கு இன்னொரு பாட்டிலில் மீதியிருந்த சிறுபயறையும், அரிசியையும் போட்டு கஞ்சி வைத்தேன். கஞ்சி வெந்து கொண்டிருக்கும் போது அடுக்களை அலமாரியின் கோலத்தைப் பார்த்து கடுப்பானேன். பொருட்களை வைப்பதற்கு இடம் இல்லை. ஒன்றின் மேல் ஒன்று நின்று கொண்டிருந்தன. ஒரே குளறுபடியாக இருந்தது.

மிக்சியையும் தண்ணீர் கொதிக்க வைக்கும் மின்சார கலனையும் இடம் மாற்றி விட்டால் சமையலறை பொருட்களுக்கு இடம் போதுமானதாக இருக்கும் என்று தோன்றியது. முன் அறையில் இருந்த கட்டில், தொலைக்காட்சி இரண்டையும் உள் அறைக்கு தள்ளினேன். இறக்கி வைத்திருந்த மின்விசிறிகளையும் இடம் மாற்றிக் கொண்டேன். இப்போது முன் அறை காலியாகி விட்டது. இரண்டு ஸ்டூல்களில் ஒன்றில் மிக்சியையும் இன்னொன்றில் கெட்டிலையும் வைத்து விட்டேன்.

அடுத்தது அடுக்களையை சீரமைக்கும் வேலை. அலமாரியின் மேல் அடுக்கில் வைத்திருந்த கண்ணாடி தடுப்புகளை தலைக்கு மேல் இருந்த தட்டில் வைத்தேன். குளியலறையில் ஜன்னலில் மறைப்புக்காக வைக்கப்பட வேண்டிய துண்டுகள் இவை. அங்கு பொருத்த ஏற்பாடு இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அந்த அடுக்கை ஒழித்து, தூசி தட்டி, பெரிய டப்பா, மிக்சி பாத்திரங்கள் வைத்தேன். கூடவே கத்தி, கத்திரி, இடுக்கி, தீப்பெட்டி போன்ற அடிக்கடி பயன்படும் பொருட்களையும் மேலேயே வைத்து விட்டேன்.

அடுத்த 2 அடுக்குகளிலும் பொருட்கள் போட்டு வைக்கும் உலர் பாத்திரங்கள், பாட்டில்கள். மேல் அடுக்கில் கொஞ்சம் பெரிய கலன்கள், மூன்றாவதில் சின்ன கலன்கள். நான்காவதும் சமையலறை மேடையின் மட்டத்திலான அடுக்கில் பாத்திரங்களை வைத்தேன். ஒவ்வொரு அடுக்கிலும் இருந்தவற்றை எடுத்து இடம் மாற்றி விட்டு தூசி தட்டி புதிய தாள் விரித்து பொருட்களை வைத்தேன். கீழ் அடுக்கில் கரண்டிகள், தட்டுகள், டம்ளர்கள் வைக்க வேண்டும். தரைக்கு மட்டத்திலான அடுக்கில் பெரிய பாத்திரங்கள் - குக்கர் பாத்திரம், சப்பாத்தி கல் போன்றவற்றை வைத்தேன்.

இப்போது சமையலறை மேடையின் கீழ் குப்பலாக போடப்பட்டிருந்த பாத்திரங்கள் கொஞ்சம் சீரடைந்திருந்தன. ஒரு சில வகையின மட்டும்தான் அங்கு கிடந்தன.

தண்ணீர் கொதிக்க பயன்படுத்தும் கெட்டில் மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொண்டே இருந்தால் அதை கழுவும் வசதி சரிவர இல்லாததால் தேய்த்து கழுவுவதே இல்லை. தண்ணீர்தானே என்ன அழுக்கு படிந்து விடுகிறது என்று விட்டு விட்டிருந்தேன்.

ஓரிரு முறை தண்ணீர் கொதிக்க வைத்ததுமே, அதன் பக்க வாட்டு சுவர்களில் உப்பு படிமமாக படிந்து விடுகிறது. அந்த படிமங்கள் உறுதியாக பற்றிக் கொண்டிருக்கின்றன. அதன் பக்கச் சுவர்களில் வரிவரியாக இருப்பதால் தேய்த்து கழுவும் போது கைகளை உரசி காயப்படுத்துகிறது. அதை எடுத்து ஒரு வழியாக கழுவ ஆரம்பித்தேன். பல் தேய்த்து பழசான பிரஷ்சை எடுத்து தேய்த்தேன். வெளிப்புறமும் அழுக்கு போக தேய்த்து கழுவி வைத்தேன். இதை சரி செய்யும் வரை தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் கொதிக்க வைக்காமலேயே தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதை கழுவி வைப்பதற்கே கணிசமான நேரம் பிடித்தது.  குளியலறைக்குப் போய் துணி துவைக்க ஆரம்பித்தேன். துணி துவைக்கும் சோப்பும் சின்னதாகியிருந்து. கடைக்குப் போகும் போது வாங்கி வர வேண்டும். துணி துவைக்கும் போது தொலைபேசி அடித்தது. சுமார் ஆறரை மணி தாண்டியிருந்தது. இந்த விஷயத்திலும் எங்கள் இரண்டு பேருக்கும் ஒத்து போவதுதான். ஏதாவது ஒன்றை நினைத்து விட்டால் அது உடனே நடந்து விட வேண்டும் என்ற அவசரம். அவளிடம் அதனால் நிதானம் தவறுவதில்லை, எனக்கு நிதானம் தவறி விடும்.

தொலைபேசியை எடுத்ததும், வேக வேகமாக, 'உன் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமத்தை ஸ்கேன் செய்து அனுப்பி விடு' என்று சொன்னாள். அதற்குள் ஹலோ சொல்லியிருந்தேன். அவள் பேசி முடித்ததும், 'உன் யாஹூ முகவரிக்கா' என்று உறுதி செய்து கொண்டேன். போன வாரம் அனுப்பிய மின்னஞ்சல் போய் சேர்ந்திருக்கவில்லை ஆக இருக்கலாம். ஏனென்றால் பதில் வரவில்லை. அதைப் பற்றி அவள் குறிப்பிடவும் இல்லை. எனக்கு ஒரு நாள் முழுக்க பட்ட பாட்டில் தொண்டை கட்டியிருந்தது.

துணி துவைத்து குளித்து தியானம் முடித்த பிறகு கஞ்சி சாப்பிட்டேன். அதன் பிறகு 9 மணிக்கு வெளியில் புறப்பட்டேன். பணம் ஒரு கவரில் எடுத்துக் கொண்டேன். வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுக்க வேண்டும். இன்னும் பென் டிரைவ் வாங்குவதற்கு. அவர் வீட்டுக்குள்ளிருந்து பூஜை மணி ஓசை கேட்டது. சார் என்று கூப்பிட்டால் முதலில் அந்த அம்மா வந்தார்கள், பின்னாலேயே அவர்.

'மூன்று மாதங்களாக மின்கட்டணம் தரவில்லையே சார்' என்று கேட்டேன். 'நானும் மறந்து விட்டேன்' என்று சொல்லிக் கொண்டார். 'எவ்வளவு தொகை என்று சொல்லுங்கள், கொடுத்து விடுகிறேன்' என்றேன். அப்படியே நடந்து நெட் சிட்டிக்கு முன்பு போனேன். தொலைபேசி வினா வங்கி அனுப்பியதை தெரிவித்தேன். நெட் சிட்டி திறந்திருக்கவில்லை. போய் விட்டு திரும்ப வர வேண்டியதுதான்.

அப்படியே சுற்றி போய் நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அடுமனையில் ஒரு பிரெட் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து பிரெட் சூடாக்கி பக்கத்திலேயே எலுமிச்சம் பழம் கரைத்து கொண்டேன். இப்போது அடுத்தக் கட்ட வேலைகள். எம்ஐஎஸ் தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆரம்பித்தேன். அதற்குள் அனுப்பியிருந்த நிகழ்வு ஆய்வுகளை தேர்ந்தெடுத்து சேர்த்தேன். கேள்விகளுக்கான விடைகளை தயாரித்துக் கொண்டேன்.

10 மணிக்கு தொலைபேசி முந்தைய நாள் முழுவதும் அழைத்த போது எடுக்காமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரது சிறு பணியை செய்து முடித்தேன். இங்கிருந்தே தொலை புகுபதிகை செய்து வேலை முடிந்தது. நேரில் போகும் வேலை இல்லை. 11 மணிக்கு மீண்டும் நெட்சிட்டிக்கு போனேன். பென் டிரைவ் 4 ஜிபி என்று போட்டது சேன் டிஸ்க். ஐ-பால் என்று போன தடவை வாங்கியது இல்லை. 325 ரூபாய்க்கு கொடுத்தார். ஸ்கேன் செய்வதற்கு 20 ரூபாய். அந்த டிரைவிலேயே போட்டுத் தரச் சொன்னேன்.

மையத்தின் உரிமையாளர் முன்பே பழக்கமானவர். இப்படி வந்து போனதில்தான். அவருடன் பேசிக் கொண்டிருந்தவர், பழைய கணினி கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். என்னிடம் 3, 4 கணினிகள் இருக்கின்றன என்று இடைமறித்து சொல்லவில்லை.

திரும்பவும் வந்து தொலைபேசினேன். வாணியம்பாடிக்கு வருவதாகச் சொன்னதைக் குறிப்பிட்டேன். முந்தைய நாள் முழுவதும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததையும் தெரிவித்தேன். 'நாளைக்கு வாணியம்பாடி போக வேண்டாம் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்' என்று சொல்லி, வணிக ஒப்பந்த விபரங்களையும் அனுப்பி விடுவதாகத் தெரிவித்தேன். அப்படியே அவரிடம் பேசி முடித்ததும் ஏற்கனவே எழுதி தயாராக வைத்திருந்த மின்னஞ்சலை அனுப்பி விட்டேன்.

இதற்கிடையில்வியாழன் மாலை பாண்டி போய், சனி காலையில் திரும்புவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரும் சனிக்கிழமை காலையில் சென்னை திரும்புவதாகவும் அவருடன் காரிலேயே நானும் வந்து விடலாம் என்றும் பதில் போட்டிருந்தார். வேறு வேலையை அவர்களுடன் நேரம் செலவழிப்பதோடு பொருத்திக் கொள்ள வேண்டியது என்று சொன்னதற்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று பதில் சொல்லியிருந்தேன். அவருக்கு புதிதாக ஏற்பட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆர்வங்களுக்கு எனது முந்தைய அனுபவங்களை குறிப்பிட்டிருந்தேன்.

அடுத்த அஞ்சலில் தேர்தல் தொடர்பாக பல கேள்விகளை கேட்க அவற்றுக்கு பதில் எழுதி அனுப்பி விட்டேன். அதற்கும் பதில் நாள் முடிவதற்குள்ளாகவே வந்து விட்டது. மதிய உணவுக்கு எதுவும் செய்யவில்லை. அறையில் நடந்திருந்த மாற்றங்களை பார்த்து சுறுசுறுப்பாகி விட்டார். தோசைக்கு ஏன் அரைக்கவில்லை என்று கேட்டு என்னை கட்டாயப்படுத்தி ஊறப் போட வைத்தார். உளுந்து கொஞ்சம்தான் இருந்தது, அதையும் அதற்கு இணையான அரிசியும் போட்டு ஊற வைத்தேன்.

கொச்சியிலிருந்து பேசுகிறோம் என்று 81 என்று தொடங்கும் எண்ணிலிருந்து கால் வந்தது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் குறித்தான அழைப்பு. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடுப்போடு துண்டித்தேன்.

அதன் பிறகு இணையத்திலேயே பொழுது போனது. விவாதம் மறைமுகமான தனிப்பட்ட தாக்குதல்களுடன் போனது. மாலையில் சிரிப்பானுடன் அவர் முடித்துக் கொள்ள நானும் சிரிப்பான் சேர்த்து முடித்துக் கொண்டேன். சுமார் 3 மணிக்கு கரண்ட் போவதற்கு முன்பு அரைப்போம் என்று தோசை மாவை அரைக்க ஆரம்பித்தேன். அரிசி நன்கு ஊறியிருக்காது போலிருக்கிறது. 100% நைசாக அரையவில்லை. 3 மணிக்கு கரண்ட் போகவும் இல்லை.

அப்படியே கோதுமை மாவு கரைத்து, ஒரு வெங்காயம் வெட்டி போட்டு தோசை சுட முடிவு செய்தேன். இடையில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைத்தேன். சாப்பிட்டு விட்டு எழுத்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். நேரம் அமைத்து விட்டு கட்டுரையை ஆரம்பித்தேன். மிகவும் அவசர கோலமாக பிரச்சார நெடியுடன் இருந்தது. உடனேயே முடித்து அனுப்பியிருந்தால் பரிசீலித்திருப்பார்கள். இது நேற்றுதான் தோன்றியது. பொதுப்படையானதாக இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்வது சந்தேகம்தான் என்றும் தோன்றியது.

அதை படித்து விட்டு அதன் பிறகு கட்டுரையை பல முறை படித்து திருத்தி எழுதினேன். கருத்துக்களை முன் பின்னாக இடம் மாற்றினேன். முடித்து அனுப்புவதற்கு 6 மணி ஆகி விட்டது.

கொடுப்பதற்கு ஒரு கட்டுரை இருக்கிறது, அதை சத்துவாச்சாரியில் அவரை சந்தித்து கொடுத்து விட முடியுமா என்று கேட்டார். வேலூர் அருகில் யுரேனியம் எடுப்பதற்கான பணிகள் நடப்பதைப் பற்றிய கட்டுரையாம். மின்னஞ்சலில் அவர் அனுப்புவார் அதை அச்செடுத்து, கையில் கொடுக்க வேண்டும். அனுப்பியும் விட்டார். இன்று போய் கொடுக்க வேண்டும்.

மாலைக்கு மேல் கட்டுரையில் மீண்டும் இறங்கினேன். இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே வந்தேன். 6.45க்கு மின் வெட்டு. 7.30க்கு திரும்பி வந்தது. மீண்டும் 9 மணிக்கு மின்வெட்டு. அத்தோடு நிறுத்தி விட்டு தியானம் ஆரம்பித்தேன். 9.30க்கு தூங்கப் போய் விட்டேன். நன்கு கண் அயர்ந்து வந்த நேரம் 9.45க்கு மின்சாரம் வந்து மின்விசிறி ஓட ஆரம்பித்தது. கலைந்த தூக்கம் மீண்டும் வரவில்லை. 10 மணிக்கு எழுந்து இன்னும் 15 நிமிடம் மனதை ஒழுங்கு செய்யும் போது கொட்டாவி வந்தது. அதன் பிறகு தூங்கி விட்டேன்.

காலையில் 2.30க்கு எழுந்திருக்கும் போது தாமதமாகி விட்டது என்று பதட்டம் இருந்தது. அதற்கு முன்பு இன்றைய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

இதை முடிக்கும் போது 3.45 ஆகியிருக்கும். அதன் பிறகு பல் தேய்த்து விட்டு துணிகளை மடித்து வைத்து வைக்க வேண்டும். 4 மணி. 4 மணிக்கு கட்டுரையை முடிப்பதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். ஒரு வடிவம் வந்ததும் அனுப்பி விட வேண்டியதுதான். இதற்கு 6 மணி வரை நேரம். 6 மணிக்கு வீடு ஒதுங்க வைத்தல், வேலை செய்யும் அறையை ஒதுங்க வைக்கலாம், முகம் மழித்தல், குளியல். 7 மணி ஆகி விடும். தியானம் 7.30. அதன் பிறகு தோசை. அதற்கு கடைக்குப் போய் தேங்காய் வாங்கிக் கொண்டு வரலாம். தேங்காய் திருவி துவையல் அரைத்துக் கொள்ளலாம் நேற்று சுட்டு வைத்த கோதுமை தோசையும் இருக்கிறது ஒன்று.

9 மணிக்கு கரண்ட் போய் விடும். அதன் பிறகு மொழி பெயர்க்க வேண்டும். எம்ஐஎஸ் வினா வங்கியை இறுதி செய்ய வேண்டும். மதியம் வரை இதில் போய் விடும். 12 மணிக்கு அல்லது 11 மணிக்கு கரெண்ட் வந்ததும் துணிகளை தேய்க்க வேண்டும். மதிய உணவும் சமைத்துக் கொள்ள வேண்டும். மதியத்துக்கு மேல் தொடர்பு கொண்டு பேசி விட்டு அச்சு எடுத்து கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

மாலையில் எம்ஐஎஸ், சைனீசுக்கான வகுப்பு உரைகளை எழுதிக் கொள்ள வேண்டும். எம்ஐஎஸ்சுக்கான குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 1 மணி நேரம் என்று 3 மணி நேரம் தேவைப்படும்.

சுமார் 9 மணிக்கு தூங்கி அதிகாலை 2 மணிக்கு எழுந்து விட்டால் போன வாரம் போல 4 மணிக்கு புறப்பட்டு, 4.30க்கு பேருந்து பிடித்து, 6.30க்கு பூந்தமல்லி போய், 7.30க்கு கிண்டி போய் விடலாம். கிண்டியில் பேருந்து கிடைத்து விடும்.

இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றன. 1882 சொற்கள் முடிந்து விட்டிருக்கின்றன. நிமிடத்திற்கு 33 சொற்கள் என்பதுதான் எனது இப்போதைய வேகம். இன்றைக்கு சிறப்பாக எதையும் வேகமாக எழுதி விடவில்லை, வேகக் குறைவுக்கும் குறிப்பான காரணங்கள் இல்லை. இந்த வேகம்தான் இப்போதைய தமிழ் தட்டச்சு வேகம். அப்படியே ஆங்கில தட்டச்சையும் பரிசீலித்துக் கொள்ளலாம். வகுப்புக்கான தயாரிப்பில் அது தெரிய வந்து விடும். இன்னும் மணி அடிக்கவில்லை.