Showing posts with label Izam. Show all posts
Showing posts with label Izam. Show all posts

Saturday, May 30, 2009

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

"இலங்கையில் இல்லாத தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?"

முடிந்ததாம்! Image
எல்லாம் முடிந்ததாம்!
பிரபாகரன் கொல்லப்பட்டதாக
வும், விடுதலைப் புலிகள் 'அடியோடு' ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.

இவை உண்மையா. பொய்யா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல!

பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற தமிழர்கள் அங்கே!
அப்பாடா! ஒருவழியாக இது முடிந்ததே என நிம்மதிப் பெருமூச்சு விட்டு, வழக்கம்போல், கிரிக்கெட், பீச், கச்சேரி, அரசியல் என தங்கள் பாட்டைக் கவனிக்கப் போகும் தமிழக மக்கள் ஒரு பக்கம்!

ஏதோ ஒரு தலைமை தங்கள் உறவுகளைக் காத்துக் கொண்டிருக்கிறது;
அதற்கான உதவிகளை இங்கிருந்து செய்தால் போதும் என நிம்மதியாக இருந்து வந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைதான் இப்போது குழப்பத்தில்!

தமிழகத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்!


பிரபாகரன் என்னும் ஒரு சக்தி இருந்த வரையிலும், ஒரு கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு ஏதாவது செய்யும் என நானும் உறுதியாக நம்பிக் கொண்டு அவர்களை ஆதரித்து எழுதியே வந்திருக்கிறேன்.

ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது.
காப்பாற்ற எவரும் இல்லாமல், பல லட்சம் மக்கள் சோற்றுக்கும் வழியில்லாமல், நாளைய நிலை என்னவென்றே தெரியாமல், வெட்டவெளியில் அல்லல் படுகின்றார்கள்.


காலை உணவு என ஒரு சிறு ரொட்டித் துண்டும், தண்ணீரும் பத்து மணிக்கு!
கஞ்சி கொஞ்சம் சோறு கலந்து மதிய உணவு என மாலை நான்கு மணிக்கு! இவைதாம் தினசரி அல்ல.... இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதாகத் தகவல்!

வலயத்துக்குள் சில சிங்களக் கடைகள் திறக்கப்பட்டு, அதிகப்படி உணவு, மற்ற தினசரித் தேவைக்கான பொருள்களை விற்கப்படுகிறதாம்!

ஆம்! காசு கொடுத்தால் கிடைக்கும்!
வலயத்துக்கு வெளியே தினசரி உறவினர் கூட்டம் அலை மோதுகிறதாம்!

உடை, பணம் இவை கம்பிகள் வழியே கொடுக்கப் படுகிறது!

உடைகள் அனைத்தும் உதறப்பட்டு, சோதனை செய்த பின்பே கொடுக்க முடியும்! பணத்தைக் கொடுக்கத் தடையில்லை! எல்லாம் சிங்களவருக்குப் போகிறதே! அதனால்!
தொலைபேசி வசதி கூடக் கொடுக்கப்பட்டு, வெளிநாட்டில் இருக்கும் உறவினரிடம் பேச அனுமதிக்கப் படுகிறது! அப்போதுதானே அவர்கள்பரிதாபப்பட்டு, பணம் அனுப்புவார்கள்!


இன்னும் எங்கு செல்லப் போகிறோம் எனத் தெரியாத நிலை அவர்களுக்கு!

எல்லா வட கிழக்கு மாகாணங்களிலும் பாதுகாப்பு நலன் கருதி, ராணுவக் குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் வேலை துவங்கப்பட்டு விட்டது!
இனி முழுக்க முழுக்க தமிழர் வாழும் இடம் எனச் சொல்ல ஒரு ஊர் கூட இருக்கப் போவதில்லை.

இதுதான் நிதரிசனம்!


இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னி, வவுனியா வாழ் தமிழர் நலன் கருதி சில போராட்டங்களைத் துவங்கி, உலக நாடுகளின் கவனத்தை இலங்கைத் தமிழர் அவலத்தின்பால் ஈர்க்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம்.

ஆனால், இன்னும் ஒரு சிலர் தமிழீழத் தாகத்தைக் காட்டும் செயல்களைச் செய்கின்றனர்.

கொடிகள், படங்கள், முழக்கங்கள் என இவர்கள் தங்கள் வேகத்தைக் காட்டியும் வருகின்றனர்.

பிரபாகரன் இல்லை என்று ஆகிவிட்டால் எங்கள் கோரிக்கை இல்லாமல் போய்விடாது என்பது இவர்கள் நிலை.

அவர் இல்லை என்னும் செய்தியைக் கூட நம்ப மறுப்பவரும் இருக்கின்றனர்.
இவையெல்லாம் தவறு என நான் சொல்ல மாட்டேன்.

இலங்கையில் எதுவும் மாறவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால், அதைத் தட்டிக் கேட்க ஒரு அமைப்பு அங்கு இல்லை என்பதும் உண்மை!
இவர்கள் இங்கு எழுப்பும் கோஷங்கள் அங்கு என்ன மாதிரியான விளைவுகளை அங்கிருக்கும் தமிழருக்கு ஏற்படுத்தும் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இங்கு எழுப்பும் ஒவ்வொரு கோஷமும் இலங்கை அரசை இன்னமும் ஆத்திரப்படுத்தி, அது இந்தத் தமிழர்களையே தாக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடக்குமுறை இல்லாத சுதந்திர மேலைநாட்டில் இருந்துகொண்டு நாம் எழுப்பும் முழக்கங்கள் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்கப்போகும் சிறு சிறு உதவிகளைக் கூடத் தாமதப் படுத்தும் என அஞ்சுகிறேன்.


முக்கியமாகக் குழந்தைகள்!

படக்கூடாத துயரங்களைப் பட்டு, பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, இழக்கக் கூடாத உறவுகளையெல்லாம் இழந்து, மறக்க முடியாத மன பாதிப்பை அடைந்து தவிக்கும் இவர்கள் அவலம் முதலில் நிற்க வேண்டும்.

முடியாதையா! முடியாது! இதற்கு மேல் இவர்கள் அவதிப் படுவதைத் தாங்கமுடியாது..... மனசாட்சியிருக்கும் எவராலும்!


இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நன்கு படிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க இவர்களுக்கும் வாய்ப்பு கிட்ட வேண்டும்.

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்!
வாழ வேண்டுமென வெளிச் சென்றவர்கள் நன்றாக வாழட்டும்!

வாழ வேண்டிய இவர்கள் இனியாவது வாழ வேண்டும்!


அதற்காகவாவது, இன்றைய நிலையை உணர்ந்து கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் பிற தமிழர்கள் என வேண்டுகிறேன்.

வை.கோ. முதல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் வரை அனைவரும் செய்யவேண்டியது இது ஒன்றே.


தமிழீழக் கோரிக்கையைத் தள்ளி வைப்போம்!.... தாற்காலிகமாவது!
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய முயற்சியாவது செய்வோம்!
இப்போதையத் தேவை இவர்களுக்கான நல்வாழ்வு!

அது இவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்போம்!


கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என ஒரு விடுதலைப் போராட்டம் முதலில் இந்தியாவில் நிகழ்ந்தது.

அது நசுக்கப்பட்டது!

அவர்கள் கொல்லப்பட்டார்கள்!

ஒரு நூற்றாண்டு காலம் அடுத்து ஒன்றுமே நிகழவில்லை!

மீண்டும் ஒரு சிப்பாய் கலகம் 1987ல்!

அதுவும் நசுக்கப் பட்டது!
அது முடிந்து அறு்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது!
இது வரலாறு!

இப்படித்தான் நிகழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை!

இதேபோல அல்லாமல், ஒரு சில ஆண்டுகளிலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும்
மக்களாட்சி மலர்ந்தது!
இதுவும் வரலாறுதான்!

இப்படியும் நிகழலாம்!

முறையான ஒரு அமைப்பு வந்து ஒரு முறையான போராட்டத்தை நடத்தும் காலம் வரும் வரைக்கும், வெளியில் இருந்துகொண்டு, உசுப்பிவிடும் பேச்சுகளைப் பேசாமல் நாவடக்கம் காக்க வேண்டும்!

இதையெல்லாம் சொல்வதால் நான் துரோகி எனச் சிலர் கொள்ளக்கூடும்!
நான் இலங்கையில் இருக்கும் என் தமிழரை மட்டுமே நினைக்கிறேன் என்பதால் இப்படிச் சொல்வதால் நான் வருந்த மாட்டேன்!

பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டுமல்ல!

கொழும்புவில் இருந்து பல இடங்களிலும் இருக்கும் என் இலங்கை நண்பர்களை நினைக்கிறேன்.


இங்கு நான் சுதந்திரமாக நடமாடி, நான் விரும்பும் செயல்களைச் செய்ய முடியும் நிலை போலவே, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது என் மக்கள் சம உரிமை பெற வேண்டும் என நிச்சயமாக விரும்புகிறேன்.

அதைக் குலைக்கும் எந்தச் செயலையும் வெளியில் இருக்கும் தமிழர்கள் செய்யக்கூடாது என உறுதியாக வேண்டுகிறேன்.


பிரபாகரன் என்கிற ஒருவரைக் காட்டியே இதுவரை, என் மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தார்கள்.

அவர் இல்லையென்றால், நாங்கள் என்னென்னவோ செய்வோம் எனப் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்!

இன்று, துரதிர்ஷ்டவசமாக அவர் இல்லை எனும் நிலை!

இன்று நான் ஒரு எதிர்க் குரல் கொடுத்தால், அதனால் அதையே காரணம் காட்டி, இந்தப் போலித் தலைவர்கள் செயல்படாமல் இருந்துவிட்டு, அதனால் என் மக்களே பாதிக்கப் படுவார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

அவர்கள் நலமோடு வாழ நான் என் குரலை தாற்காலிகமாகத் தாழ்த்திக் கொள்கிறேன்!

உணர்வை அல்ல! குரலை மட்டுமே!

அதை நான் புரிந்துகொண்டிருப்பது போலவே, மற்றவரும் புரிந்துகொண்டு என் மக்களை மேம்படுத்த மட்டுமே தம் செயல்பாடுகளைக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்!


ஈழத் தமிழர்
நலம் பெற வேண்டும் என மட்டுமே சிந்தித்துச் செயல்படுவோம்! இது ஒன்றே அவருக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

முழு நிவாரணம் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
இருக்க ஓர் இடம், புசிக்க உணவு, படிக்க ஓர் பள்ளி, வகிக்க தகுதியான வேலை!
இந்த உரிமைகளை இலங்கை அரசு உடனடியாக எம் மக்களுக்குச் செய்ய வேண்டும்!

அப்படிச் செய்ய அதற்கு உலக நாடுகளை வற்புறுத்தச் செய்வோம்!

இவற்றைச் செய்ய இலங்கை அரசுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம்!


அப்படிச் செய்யவில்லையெனில்,.............

.......................................????!!!!!!!

விடியல் தூரத்தில் இல்லை!

கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்!

காலம் வரும்!
எம் தமிழர் வெல்வர்!

அதுவரை காத்திருப்போம்!
இப்போது அமைதி காப்போம்!

அனைவருக்கும் நன்றி!

*********************

Read more...

Monday, May 11, 2009

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!


அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!
எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இது முற்றிலும் சரியான கணிப்பு எனச் சொல்ல மாட்டேன்.
ஆனால், எனக்குத் தெரிந்த அளவிலான உண்மைகளை மட்டுமே இங்கு சொல்ல விழைகிறேன்.

இப்போது எல்லா நாடுகளிலிருந்தும் நல்ல வாய்ப்புகளைத் தேடி அயல்நாடுகளுக்குச் செல்வதைப் போலவே, மேற்படிப்புக்காகவோ, அல்லது வேலை வாய்ப்பைத் தேடியோ, இலங்கையிலிருந்தும் பலர் 50, 60-களில் அயல்நாடுகளுக்குச் சென்று ஒரு நல்ல நிலைமையில் இருந்து வந்தார்கள்.

எழுபதின் ஆரம்பத்தில், தமிழருக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்க்க ஈழத்தில் பல தமிழ் அமைப்புகள் தோன்றின.
இவர்களது பாதுகாப்பில் சற்று தைரியமாக உலாவிய ஈழத் தமிழர்கள் மேலும் கொடுமைக்கும் வன்முறைக்கும் சிங்களவரால் ஆட்படுத்தப்பட்டபோது, பலர் அகதிகளாகத் தமிழகத்துக்குக் கள்ளத்தோணி மூலம் வரத் தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் அவர்களின் முழு ஆதரவும் இருந்ததால், அவர் அப்போது மத்திய அரசுக்கும் தோழனாக இருந்ததால், அவரால் இந்த அகதிகளை தமிழகத்தில் குடிவைக்க முடிந்தது.
இப்போது, தமிழ் அமைப்புகளின் வீரர்களும் தமிழகத்துக்குள் தாராளமாக வந்து, பயிற்சிகளும் கூடப் பெற முடிந்தது!

இந்தக் கால கட்டத்தில், இதில் யார் பெரியவன் என்னும் போட்டி வலுக்கவே, அதன் காரணமாக பல சண்டைகளும் தமிழக எல்லைக்குள் நடந்தன!

இதன் எதிரொலி இலங்கையிலும் தெரிய, அதன் காரணமாக அச்சுறுத்தப் பட்ட, அல்லது அச்சப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் செல்ல முனைந்தனர்.
இந்த நிலையில், சிங்கள அரசும் பல தமிழ் கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்ற, அதன் கொடுமையிலிருந்து தப்பிக்கவே பல லட்சம் மக்கள் வெளிக் கிளம்பினர் அகதிகளாக!


இதில் பலர் போராளிகளாகவும் மாறி, போராட்டத்தைத் தொடங்க, தங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத சொந்தங்களில் பலர் அங்கேயே தங்கி புலிகளின் பாதுகாப்பில் வாழத் தொடங்கினர்.
அகதிகளாகச் சென்றவரை அலட்சியமாகப் புலிகள் இகழவில்லை என்பதே நான் அறிந்த செய்தி.
மாறாக அவர்களிடமிருந்து பண உதவி, நிலையை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பணி போன்ற உதவிகளை மட்டும் எதிர்பார்த்து, வாங்கிக் கொண்டனர்.
ஒரு சில அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன என நான் அறிவேன்.

ஆனால், கடந்த 8 மாதங்களாகக் காட்டிவரும் தீவிரத்தை அதற்கு முன்னால் சரியாக இவர்கள் செய்யவில்லை என்பது என் கணிப்பு! கிளிநொச்சி விழும்வரை, புலிகளிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என எண்ணிக்கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே இவர்களின் செயல்பாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட!

இப்படி அகதிகளாகச் சென்றவர்கள் ஐரோப்பிய, பிரித்தானிய, அமெரிக்க கானடா நாடுகளால் அரவணைக்கப்பட்டு, அவர்களுக்குக் குடியேற்ற உரிமைவரை வழங்கப் பட்டன!

அந்தந்த நாடுகளின் சீதோஷ்ணம், பண்பாடு, வாய்ப்பு, வசதி அனைத்துமே இவர்களுக்குக் கிடைக்க வழி செய்த அந்தப் பெருந்தன்மைக்கு இடையே, இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

இதற்கு முழுப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்! தமிழக முதல்வர் தட்டிக் கேட்டால் இது நடக்கும். செய்யவில்லை... எம்.ஜி.ஆர். தவிர!

மேலைநாடுகளுக்குச் சென்ற அகதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே சுகமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சிலர் நல்ல நிலையில் இருந்தாலும், இவர்களில் பலர் இன்னமும் அடிமட்ட வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பதே உண்மை!

ஆம்! இவர்களிடம் நம்மவர் கண்ணுக்குப் பகட்டாகத் தெரியும் ஆடைகள் இருக்கின்றன! ஏனென்றால் அது குளிர் நாடு! அங்கு 'ஜாக்கெட்' என்னும் கம்பளி ஆடை அணியாவிட்டால் விறைத்துப்போய் விடுவார்கள்!
ஆம்! இவர்களிடம் 'கார்' இருக்கிறது! அது ஓட்டைக் காராக இருந்தாலும் அதுதான் இவர்களை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவும் சாதனம் என்பதால்!
இதையெல்லாம் வசதி என எண்ணாதீர்கள்!
அத்தனையும் கடன் கணக்கில்!!
பலர் உணவு விடுதிகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், சாதாரண வேலை செய்து கொண்டு தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்.

இவர்கள் உடல் அங்கே வாழ்ந்தாலும், அநேகம் பேர் இன்னமும் ஈழக் கனவில்தான் இருக்கிறார்கள்!
தொலைக்காட்சிகள் மூலமாக மட்டுமே தகவல்களைக் கண்டு, தினமும் அழுதுகொண்டிருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்!
அதனாலதான், அங்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கே வீதிகளில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்!
அதற்கு இந்த நாடுகளின் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதால்!

இவர்கள் ஏன் திரும்பவும் ஈழத்துக்கே சென்று போராடக் கூடாது என ஒரு கேள்வி எழலாம்!

இன்றைய நிலையில் அங்கு கால் வைத்த அடுத்த கணமே கைது செய்யப்பட்டு அழிக்கப்படும் பட்டியலில்தான் இவர்களில் பலர் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இதைத் தவிர, அரசினால் ஆபத்தில்லை என்றாலும், பணத்துக்காக ஆட்கடத்தும் கும்பல்களினால் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து வருமோ எனவும் அச்சப்படுகிறார்கள்.

இறங்கியவுடன், கையில் ஆயுதம் கொடுத்து, நீ போய் உன் உரிமைக்காகப் போராடு எனச் சொல்ல அவர்களுக்கு அங்கே ரத்தினக் கம்பளம் விரித்திருக்கவில்லை.
இந்த நிலையில் அவர்களை அங்கே போகச் சொல்வது விளக்கைத் தேடி விட்டில் பூச்சியை அனுப்புவது போலத்தான் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்!

இன்னொன்றும் எனக்குத் தெரிந்த ஒரு தகவல்!

இவர்களில் 80% பேர் நாளை ஈழம் பிறந்தால் அங்கு செல்ல மாட்டார்கள்!
இந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்து வரும் இவர்களில் பெரும்பாலோனோர் என்னிடம் சொல்லிய கருத்து இதுதான்!
அங்கிருக்கும் மக்கள் நன்றாக வாழ இங்கிருந்து என்ன உதவிக்ள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்ய இவர்கள் தயார்! ஆனால் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.

இதுதான் யூதர்கள் நிலையிலும் நடந்தது!

இவர்கள் துரோகிகளா?
நிச்சயம் இல்லை!
தப்பி பிழைத்தவர்களா?
ஆம்!
அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!

எனவே, இவர்களைத் தூற்றுவதை விடுத்து, இந்தப் பிரச்சினைக்கு என்ன விதத்தில் ஒரு தீர்வு நம்மால் தர முடியும் எனப் பாடுபடுவோம்.
முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்போம்!
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் சொல்கிறேன்! இவையெல்லாம் நானறிந்த செய்திகளை வைத்து எனக்குப் பட்ட கருத்தே! இது சரியா, தவறா என மற்றவர் வந்து சொன்னால் மகிழ்வேன்!
நன்றி, வணக்கம்!

Read more...

Wednesday, April 08, 2009

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"

"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"
Imageகுடமுழுக்கில் குளிர்கின்றாய்! - அங்கே
எரிதணலில் சாகின்றார்
இதுவுனக்கு முறையாமோ - இன்னும்
ஏனிந்த மௌனனமம்மா?

சுதந்திரமே கேட்டிருந்தார் - பல
கொடுமைகளைத் தாங்கிநின்றார்
இன்றங்கே மடிகின்றார் - இன்னும்
பாராமுகம் ஏனம்மா?

கோபுரங்கள் நீ காண - அவரோ
இடமின்றித் துடிக்கின்றார்
கொடுமையிதைக் கண்டபின்னும் - உனக்கு
கோபமிங்கு ஏனம்மா?

நீயங்கு சிரித்திருக்க - அடியே
யாமிங்கு வேகின்றோம்
அடுதுயரை நீக்காமல் - அடியுனக்கு
எம்மேல் ஏனித்தனை வெறுப்போ?

புதுவண்ணப் பூச்சுடனே நின்
கோவிலிங்கே மிளிர்ந்திருக்க
எதுவென்று தெரியாமல் - அங்கே
தவிப்பவரைப் பாரம்மா!

அழகான மணவாளன் -உடன்
அறிவான பிள்ளைரெண்டு
ஆனந்தமாய் நீயிருக்க - நாங்கள்
அழுவதுவும் கேட்கிலையோ?

நின்வண்ணம் கண்டிடத்தான் - இங்குனக்கு
எத்தனைபேர் பாதுகாப்பு
நாதியின்றிச் சாவோரை - நீயின்னும்
பாராததும் ஏனம்மா?

அலங்கரம் கொண்டிங்கு - நீயின்று
அழகாக ஜொலிக்கின்றாய்
அகம்பாவம் கொண்டவரால் - உன்மக்கள்
அழிகின்றார் பாரம்மா!

கதியில்லை வழியில்லை - இனியிங்கு
கடைத்தேறக் களமில்லை
எனவிங்கு ஓயமாட்டோம் - நீ
வாராமல் விடமாட்டோம்!

கொண்டாட்டம் போதுமடி - இப்போதே
எழுந்திங்கு வந்திடடி
இப்படிக்கு நீயிருந்தால் - அடியே!
இனியுன்னை விடமாட்டோம்!

குளித்தது போதுமடி - தாயே!
அழித்துவிடு பகைவர்களை
களித்தது போதுமடி - எழுந்துநீ
எம்வாழ்வில் மலர்ச்சி கொடு!

அடிமைகளாய் வாழ்ந்திடவோ - அடியே
நீயெம்மைப் பிறப்பித்தாய்
இதுவுந்தன் திருவுளமோ - மீனாளே!
சொல்லடி நீ சிவசக்தி!

எமதுரிமை எமக்குவேண்டும் - அது
இன்றே நீ தரவேண்டும்
இனிமேலும் மௌனித்தால் - என் தாயே
உனை யாம் அங்கு வந்து பார்க்கின்றோம்!:(((

Read more...

Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

Image
அன்புள்ள கலைஞர் அவர்களே!
வணக்கம்.

இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, 'ஆஹா! ஈழத்தமிழர் விடிவு இப்படித்தான் வர வேண்டியிருக்கிறதே!'
என மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!

நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு விதித்த கெடுவும், அதைக் கண்டு தமிழகமே தங்கள் பின் அணிவகுத்து மனிதச் சங்கிலியாய்த் திரண்டதும் நீங்கள் ஒரு செயல்வீரர் தான் என என்னை எண்ண வைத்தது.

நீங்கள் விதித்த கெடு முடியும்வரை இதை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனிக்கலாம் என இருந்தேன்.

ஆனால், இன்று........!!??!!

நடந்ததெல்லாமே ஒரு நாடகம்தான் என எண்ண வைக்கிறது!

ராஜிநாமாக் கடிதங்கள் போன இடம் தெரியவில்லை!

போர் நிறுத்தம் நடந்ததாகத் தெரியவில்லை!

ராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

நேற்று கூட ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டு அப்பாவி மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமரசப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப் பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நீங்கள் ஒன்றும் நடக்காதது போல நிவாரண நிதித் திரட்ட தீவிரமாக முனைந்து விட்டீர்கள்!

இதுவா ஈழ மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது?

நீங்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டும் என்பதா அவர்களின் எதிர்பார்ப்பு,... நம்பிக்கை?

இதற்காகவா இத்தனை நாள் நீங்கள் காத்திருந்தீர்கள்?

அங்கு ஆட்சி போனால், அடுத்த நொடியே இங்கும் ஆட்சி போகும் என்பது எனக்குத் தெரியும்.

முதல் அறிக்கை விடும்போது உங்களுக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், ...அல்லல் படும் மக்களின் அவலத்தை நிறுத்த உங்கள் செல்வாக்கு உதவும் என மிகுந்த ஆவலுடன் நம்பினேன்.

ஏமாற்றி விட்டீர்கள்!

என்னை மட்டுமல்ல!

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே!

இதெல்லாம் நாடகம் எனக் கூவிக் கொண்டிருந்தவர்களின் கூற்றை உண்மையாக்கி விட்டீர்கள் என வருத்தத்துடன் சொல்லிக்
கொள்கிறேன்!

இப்போது கூட இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த முறை போட்டி இடுவேனோ எனத் தெரியாது! எனச் சொல்லி முதல்வர் ஆனவர் நீங்கள்!

உங்கள் கூற்றை மதித்து, உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை அங்கு அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நம் தமிழர்கள்!

அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கவனமும் [ஒரு சிலரைத் தவிர்த்து!!] ஈழத்தமிழர்களின் விடியலை நோக்கியே இருக்கிறது என்பதே உண்மை!

'மறப்போம்! மன்னிப்போம்!' எனச் சொல்லும் அண்ணா வழியில் அயராது பாடுபட்டு வரும் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கால கட்டம் இன்று!

இலங்கை அதிபர் கூட உங்களை அழைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஈழத் தமிழரும் கூட, நீங்கள் நல்ல முடிவு கொடுப்பீர்கள் என நம்புகின்றனர்!

உணமை நிலவரத்தை அறிய நீங்கள் ஈழம் செல்ல வேண்டும்.

இரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை உங்களால் பெற்றுத் தர முடியும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்!

இந்த நேரத்தில், ஒரு வரலாற்று உண்மையையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிங்கப்பூர் என்ற நாடு முதலில் மலேசிய நாட்டுடன் இணைந்து, அதன் தனித்தன்மை தங்கள் நலனுக்கு ஊறு விளைக்கும் என பெருவாரியான மலேசிய மக்கள் நினைத்ததால், பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்து, சிங்கப்பூரை தனி நாடாக சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

இன்று அந்த இரு நாடுகளும் ஒருவர்க்கொருவர் இணக்கமாகவே இருந்து வருகின்றன!

இந்த அமைப்புதான் இன்றிருக்கும் நிலையில் சிங்களவர்க்கும், ஈழத் தமிழர்க்கும் நன்மை பயக்கும் செயல் முடிவாக இருக்கக்
கூடும் என நான் எண்ணுகிறேன்.

இதையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகினால் நலமாயிருக்கும்.

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது என்றாலும், மனதில் தோன்றுவதை
துணிவுடன் சொல்லிவிட எண்ணியே, இதைச் சொல்கிறேன்.

ஆனால், உங்களால் முடியும்!

'உன்னால் முடியும் தம்பி!' என அண்ணா அன்று தங்களைப் பார்த்துச் சொன்ன சொல் இதற்காகத்தான் என நம்பி இதில் முழுமனதுடன், முழு மூச்சுடன் ஈடுபட்டு நல்முடிவு தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்!

'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'
என அழைப்பு விடுத்தவர் நீங்கள்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

'தமிழர் தலைவா வருக! தமிழீழம் பெற்றுத் தருக!'

நடப்பது நடக்கும்!
நல்லதே நடக்கும்!

எனது அடுத்த கடிதம் தங்களைப் பாராட்டும் கடிதமாக இருக்க எல்லாம் வல்ல என் முருகனை வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!
Image

Read more...

Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4
Image

முந்தையப் பதிவு

'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு

நமது மூதாதையர் [நாற்பதிற்றாண்டின்]

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு

அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ? ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்

தவரோ? புராணம் ஆக்கிய காலமோ?

சைவரோ? வைணவ சமயத்தாரோ?

இந்திரன்தானே தனி முதற் கடவுள்

என்று நம் முன்னோர் ஏத்திய வைதிகக்

காலத்தவரோ? கருத்திலாதவர்தாம்

எமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு;

எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்

கலி தடை புரிவன். கலியின் வலியை

வெல்லல் ஆகாது என விளம்புகின்றனரால்,

நாசங் கூறும் 'நாட்டு வயித்தியர்'

இவராம்.'



இன்னொரு சாராரோ, தம்முடைய பண்டைப் பெருமையை

பலவாறும் விரித்துக் கூறி, அதுவே சிறந்தது எனவும் சொல்லி,

ஆயின், அது’ நீயெல்லாம் அடைய இயலாத ஒன்று’ எனக் கலியைக்

காரணமாகக் காட்டி நம் நம்பிக்கையைக் குலைப்பார்.

ஒரு சாரார் சீமை மருத்துவர்போல் வந்து 'ம்ஹூம்' என உதட்டைப்

பிதுக்கிச் சென்றால், இன்னொரு சாராரோ, நாட்டுவைத்தியர் போல

நாடி பிடித்து, 'தேறாது' எனச் சொல்லி நோயை அதிகமாக்குவார்

என்கிறான் பாரதி!

நமக்குத் தெரியாத நாகரிகத்தைச் சொல்பவரை சீமை மருத்துவர் எனச் சொன்ன பாரதி, நமக்கெல்லாம் ஓரளவு தெரிந்த ஒன்றையும் நம்மை அடையவிடாமல் செய்யும் இவரை நாட்டு வயித்தியர் எனச் சொல்லி கோபப்படுகிறான்!


'இங்கு இவ்விருதலைக் கொள்ளியின்

இடையே நம்மவர் எப்படி உய்வர்?'


எனக் கோபத்துடன் கேட்கிறான் விதியை நோக்கி!

'விதியே! விதியே! தமிழச் சாதியை

என் செயக் கருதி இருக்கின்றாயடா?
'

அனுதாபத்துடன் பாரதியைப் பார்த்து விதி சொல்கிறது!

'விதி:

மேலே நீ கூறிய விநாசப் புலவரை

நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்

எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்,

அச்சமொன்று இல்லை!'


நீ பார்க்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

இந்த தலைவர்கள் சொல்வதையெல்லாம்

அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாமல்,,

எது உனக்கு நன்மை என்பதை அறிவோடு சிந்தித்து

அது எவர் சொன்னதாக இருந்தாலும் அதனைக் கொண்டு

வாழ்வீராயின், தமிழச் சாதிக்கு அச்சம் என்பதே இல்லை!

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்

நாளென்ன பொழுதென்ன?

எனச் சொல்லி விதி தன் வழியே சென்றது!

இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்லும்

இந்தப் பாடல் வரிகளை நன்குணர்ந்து செயல் புரிந்தால்

நம் தமிழர் உயர்வர்!

இப்போது பாரதி இந்தக் கவிதை எழுதும் முன் சொன்ன வரிகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்!

"தமிழ்மொழி வாழ்த்து!"

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

********************************

[நல்லதே நடக்கும்!]

Read more...

Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

Imageமுந்தையப்பதிவு

'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்

அறிவுத் தலைமை ஆற்றிடும் தலைவர்—

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்--

இவர்தாம்.

உடலும் உள்ளமும் தம் வசம் இலராய்

நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை; பின்னும் மருந்து இதற்குண்டு;

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்,

மற்றிவர்.

சாத்திரம்--[அதாவது, மதியிலே தழுவிய

கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்]--

ஈங்கிதில் கலக்கம் எய்திடுமாயின்

மற்றதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
.'


எல்லாச் செயல்களுக்கும் ஒரு பரிகாரம் உண்டு என ஒரு சாராரும்,

பகுத்தறிவு கொண்டு சாத்திரத்தைத் தள்ளாவிடின் பின் மருந்தே கிடையாது

என இன்னொரு சாராரும் செய்துவரும் குழப்பத்தில் தமிழச்சாதி

குலைந்துபோகின்ற அபாயத்தைச் சுட்டுகிறான் பாரதி.

இதனை இன்னமும் விரித்துச் சொல்ல விழைகிறான்.



'இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே

அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்

தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;

ஒருசார்.

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றினும் சிறந்தன. ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்,

தமிழச் சாதி தரணி மீது இராது.

பொய்த்தழி வெய்தல் முடிபு' எனப் புகலும்.


நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை

வழியெலாம் தழுவி வாழ்குவம் எனிலோ

'ஏ ஏ! அஃது உமக்கு இசையா' தென்பர்;

'உயிர்தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்

தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை

பல அவை நீங்கும் பான்மைய வல்ல;

என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்

சாதியின் நோய்க்குத் தலை அசைத்து ஏகினர்'

என்பதேயாகும்; இஃதொரு சார்பாம்.'



மேலை நாகரிகத்தைத் தழுவினாலன்றி

தமிழருக்கு வாழ்வில்லை எனச் சொல்லி, அதே சமயம்

அவையெல்லாம் தழுவுவது உமக்கு வராது என

சிலபல தடைகளையும் போட்டு

ஒருசாரார் நம்மைக் குழப்புவர்!

இவர்களைச் சீமை மருத்துவருடன் ஒப்பிட்டுக் கேலி செய்கிறான்.

நமக்குத் தெரியா மருந்துகளைத் தான் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு,

அவற்றை நமக்கு விளக்காமல், தலை அசைத்துச் செல்லுவர் என!

அப்படியானால், அந்த இன்னொரு சாரார் எவர்?

நாளை வரும்!
****************

Read more...

Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2
Image
முந்தைய பதிவு

2. "தமிழச் சாதி" [தொடர்கிறது]

"ஏனெனில்,

'சிலப்பதிகாரச்' செய்யுளைக் கருதியும்,

'திருக்குறள்' உறுதியும், தெளிவும், பொருளின்

ஆழமும், விரிவும், அழகும் கருதியும்,

'எல்லையொன்றின்மை' எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக்கருதியும் முன்பு நான் தமிழச்

சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று

உறுதி கொண்டிருந்தேன். ஒரு பதினாயிரம்

சனி வாய்ப்பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன்;

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள

பற்பல தீவினும்பரவி இவ்வெளிய


தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்


இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார்'

என்பது என் உளத்து வேர் அகழ்ந்து இருத்தலால்!


பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதனைத் தெளிவுறக் காட்டும் வரிகள் இவை

என்பதைத் தவிர இதில் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

இன்றைக்கும் பொருந்தும் இவ்வரிகளைப் படிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள்
ஒரு கணம் நம் கண்முன் நிழலாடித்தான் செகின்றன.

இத்தனையையும் மீறி, ஒரு நம்பிக்கை வரியையும் சொல்லித்தான் செல்கிறான் பாரதி!

என்னதான் நடந்தாலும், கடவுளை நம்பி, நேர்மைச் செயல்கள் செய்து வரின், வெற்றி நிச்சயம்!

இப்படிச் சொன்ன பாரதியை விதி பார்த்துச் சிரிக்கிறது!

'எதனால் இப்படி ஒரு நிலைமை என அறிவாயா?' என்கிறது!

'தெரியும் எனக்கு! சொல்கிறேன் கேள்' எனத் தொடங்குகிறான் பாரதி.

எனினும்,

இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடாது இருந்த எனைக் கலக்குறுத்தும்

செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய்!

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து,

வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி,

சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;

சாத்திரமின்றேல் சாதியில்லை.

பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்

பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்;


இரு பிரிவினராய்த் தமிழச்சாதி பிரிந்து நிற்பதைக் காண்கிறான் பாரதி

சாதிக்குள்ளே சாத்திரம் புகுந்து அது பொய்யாகத் திரிக்கப்பட்டு

மக்களை அலைக்கழிப்பதைப் பார்த்து மனம் பொருமுகிறான்.

நால்வகையாகச் சாதிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சாதியிலும்

தானே அறிவாளி எனச் சொல்லுகின்ற தலைவன் ஒருவன் புகுந்து

எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள் என்பதை மேலும் விவரிக்கின்றான்:

**************************************

[தொடரும்]

Read more...

Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

Image

"பாரதி கண்ட சில காட்சிகள்"

மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் இது!

ஈழம் பற்றி எரிகிறது!

தமிழகம் கொந்தளிக்கிறது!

உலகெங்கிலும் தமிழக மக்களின் குரல் உச்சமிட்டு ஒலிக்கிறது!

இந்தியத் தலைநகரிலும் கூட இன்று தமிழரல்லாத மாணவ சமுதாயம் ஆர்ப்பரித்து நிற்கிறது!

தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து தமிழக பாரரளுமன்ற உறுப்பினர்களும் இருவார காலகட்டத்தில்

பதவி விலகுவார்கள் என அதிரடியாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாரதி என்ன சொல்லி இருக்கிறான் எனப் புரட்டிப் பார்த்தேன்!

என்னமோ தீர்க்கதரிசிக் கவிஞன் எனச் சொல்லுகிறார்களே, இவன் இதைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பானே என்ற நம்பிக்கையுடனே அவனிடம் கேட்டேன்!

சிரித்தான் பாரதி!

பாரடா எனச் சொல்லி ஒரு பக்கத்தை என்னிடம் காட்டினான்!

படித்தேன்!

சிலிர்த்தேன்!

தொழுதேன்!

கொஞ்சம் அழுதேன்!

கலைஞர் கொடுத்த இருவார அவகாசத்தில் இதைப் பற்றி உங்களுடன் பகிர எண்ணம் கொண்டேன்!

இதோ அது உங்கள் பார்வைக்கு!

இதில் வரும் பல வரிகள் விளக்கம் இல்லாமலே புரியப்படுபவை!

தேவைப்படும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களுக்குச் சொல்ல எண்ணம்!

இதோ பாடல்!

பாரதியின் அனுமதியோடு, அவன் வரிகளைச் சற்று பதம் பிரித்து இங்கு இடுகிறேன்.

"தமிழச் சாதி"

'எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்

பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ?'


என்னடா, இப்படி ஒரு தொக்கில் ஆரம்பிக்கிறானே என நிமிர்ந்தேன்!

விநாயகர் நான்மணிமாலை நினைவுக்கு வந்தது!

சட்டென முந்தைய பாடலைப் பார்த்தேன்!

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி"

எனத் தொடங்கி ஒரு எட்டு கண்ணிகள் எழுதி,

"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே"

என முடித்திருந்தான் பாரதி!

இப்படிப் பெருமையெல்லாம் பெற்று, வளர்ந்து, சிறந்த தமிழ்மொழி நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து,

எவருக்கும் பயன்படாத நீராக ஆகி, அது மட்டுமல்லாமல், ஒரு நோய்க்களமாகி அழிந்து போகவோ உனது நோக்கம் எனக் கேட்கிறான்!

யாரைப் பார்த்து இப்படி கேட்கிறான்?

அதை அடுத்த வரியிலேயே சொல்கிறான்!



'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று

உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்

சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே! தமிழ்ச் சாதியை எவ்வகை

விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்.'



வாழும் நிலைகளுடன் வைக்கப்போகிறாயா?

இல்லை அழிந்துபோகும் பொருள்களுடன் சேர்க்கப் போகிறாயா? என

விதியைப் பார்த்து ஒரு கேள்வி வைக்கிறான் பாரதி!

விதி திகைக்கிறது!

என்ன சொல்கிறான் இவன்?

நிகழ்வதைத்தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்!

இதில், நிலைப்பது, அழிவது என்கின்ற வேறுபாடு எனக்குக் கிடையாதே!

பின் எதைக் குறித்து இப்படிச் சொல்கிறான் என பாரதியைப் பார்க்கிறது!

சற்றும் தயங்காமல், அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறான் பாரதி.

நீரில் தோன்றிய இவ்வுலகு மீண்டும் நீரிலேயே முடியும் என்னும்

அறிவியலாளரின் கருத்துக்கொப்ப, எம் தமிழ் அழியாக் கடல் போல இருக்குமா?

அல்லது, ஒரு அழுத்தமான, கனமான மலர்மாலை தோளில் புரண்டதால் ஏற்பட்ட

அணிமலர்த் தடம், சிறிது நேரத்தில் மறைந்து போவதுபோல் போய்விடுமா?

பகலவன், மேகமூட்டம், இவற்றினால் இல்லாதது போலத் தோன்றினாலும்,

எப்போதும் மறையாத நட்சத்திரங்கள் போல அழியாமலா?

இல்லை, வெளிச்சம் வேண்டுமே என்பதற்காக ஏற்றப்பட்டு,

இயற்கை வெளிச்சம் வந்தவுடன் அணைக்கப்படும் ஒரு மாளிகை விளக்கு போலவா?

எவர் எது கேட்டாலும் தயங்காமல் தருகின்ற கற்பத்தருபோலவா?

அல்லது, எவருக்குமே பயனில்லாது தன் பெருமை மட்டுமே பேசி

தனிக்காட்டின் நடுவினில் நிற்கின்ற ஒரு காட்டுமரம் போலவா?

இப்படி எதுவாக வேண்டி எங்கள் தமிழச் சாதியை நீ விதித்திருக்கிறாய்? சொல்!

என அதிரடிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்!

விதி இன்னமும் புரியாமலேயே விழிக்கிறது!

பாரதி தொடர்கிறான்!

****************************

[நாளை தொடரும்]

Read more...

Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!

Image
கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

Read more...

Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

"கலைஞருக்கு ஒரு கடிதம்"


Image
அன்புள்ள ஐயா!
தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் என்கிற முறையில் இந்த மடலை வரைகிறேன்.

தமிழுக்கும், தமிழருக்கு பல நல்ல செயல்களைச் செய்யும் மனமும் உங்களுக்கு இன்னமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், தமிழர் என்பவர் தமிழகம் தாண்டியும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துபோய் விட்டீர்களோ என் ஒரு சந்தேகம்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் ஐயா!

உங்களுக்கும் தெரியும்தானே!?

கண்ணில் பட்ட எல்லாரும் குண்டுக்கு இரை ஆகிறார்கள்.

சாகாமல் பிழைத்தவர் அல்லல் படுகிறார்கள்.

ஒரு சாதாரண தமிழனான எனக்கு, அதுவும் ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்கே தெரியும்போது, உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதுவும் தமிழக முதல்வராக!

அது மட்டுமல்ல!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசையே நடுங்க வைக்கும் பலம் கொண்டவராகவும் இருக்கிறீர்காள்.

ஒரு சில துறைகள் தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி, அதையும் பெற்றவர் நீங்கள்!

இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் நீங்கள் இப்போது செய்யும் நிகழ்வுகள் உங்களது தலைமையையே சந்தேகப் பட வைக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

குறைந்த பட்சமாக, பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களுக்கு, நம் தமிழருக்கு, அடிப்படை நிவாரண உதவி கிடைக்கக் கூட நீங்கள் செய்யக் குரல் கொடுக்காமல்,
அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என நேரம் கடத்துவது கலக்கம் அளிக்கிறது.

இப்போது உடனடித் தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவி.

1987-ல் எம்ஜியார் செய்தார்!....செயலிழந்த

Imageநிலையிலும்!!

கப்பல் மறிக்கப்பட்ட நிலையிலும், விமானம் மூலம் இந்திய அரசு உதவி அளிக்க முன்னின்றார்.

அதைச் செய்யுங்கள் இப்போது!

தமிழீழம் கிடைப்பது கடவுள் விட்ட வழி!

அது நிச்சயம் கிடைக்கும்!

ஆனால், அதைக் காண மக்கள் இருக்க வேண்டும்!

நம் தமிழர் உயிரோடு இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது....

அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல!
உங்கள் பலத்தைப் பயன்படுத்தி, வருந்தும் தமிழருக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மட்டுமே!

பதவியில் இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது அல்ல!
முதல்வர் பதவியை விட்டு விலக அறிக்கை அளிப்பதே, மத்திய அரசைக் கலங்க வைக்கும்!

செய்வீர்களா!

வருந்தும் நம் ஈழத் தமிழரை வாழ வைப்பிர்களா?

செய்வீர்கள் என நம்புகிறேன்!

நன்றி!
வணக்கம்!

Read more...

Tuesday, October 07, 2008

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

Image
"நிறுத்துக!"



இலங்கை அரசே.....,
கண்மூடித்தனமாய்க் கொலைகள் செய்வதை....
எண்ணிக்கை பாராமல் இனத்தை அழிப்பதை.....
மண்கேட்ட மனிதரை மண்ணுக்கே அனுப்புவதை.....
புண்பட்ட மக்களைப் பலிகடா ஆக்குவதை.....
கண்ணில் பட்ட எவரையும் புலி எனச் சுடுவதை.....
அப்பாவி மக்களை அடியோடு அழிப்பதை.....
பெற்றவர் கண்ணெதிரே தமிழ்மானம் பறிப்பதை.....
கதறக் கதறக் கழுத்தை அறுப்பதை.....
அமைதிவழி காணாமல் அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதை....
அன்புவழி புத்தன் பெயரால் அக்கிரமங்கள் செய்வதை....!


விடுதலைப் புலிகளே....,
அன்புவழி நிச்சயம் வெல்லும் ஓர்நாள்
என்பதை இன்னமும் நம்ப மறுப்பதை....


அறவழி விடுத்து மறவழி தொடரும்

ஒருநிலை வெல்லும் என நம்புவதை......


இந்திய அரசே...........,
அண்டையில் ஓர் இனப்படுகொலை நிகழ்கையில்
அக்கறையின்றி வாளாவிருப்பதை....
சொந்தத் தமிழர் செத்து மடிகையில்
ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதை
அநீதிகள் சிலபல முன்பு நிகழ்ந்தபோதிலும்
அதை மனதில் கொண்டு இப்போது வேடிக்கைபார்ப்பதை....
அகதிகளாய் வருபவரின் நிலைகண்டும்
அக்கடா என ஒதுங்கி நிற்பதை.....
வல்லரசாய் இருந்து கொண்டும் ஒரு
நல்லரசாய்ச் செயல்படச் சுணங்குவதை....!

விரைவில் நம் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல விடிவு வர எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.

இது ஒரு மனிதநேய ஓலம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP