Showing posts with label Nathiyalai. Show all posts
Showing posts with label Nathiyalai. Show all posts

சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே

>> Monday, April 26, 2010

சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.

மிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.

அப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

சப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.

இங்கு கொசுக்கள் உண்டா? என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.

குளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.

சாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.

உணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.

உணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.

ஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.

வெளியே போன்றேன்

இம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.

பணியாளை அழைத்தார்.

‘சொல்லுங்க ஐயா’

‘ஒருநிமிடம் இங்கு வரியா?’

கையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.

‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா?’

‘நாயா? பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’

“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா? இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”

பணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்?’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.

‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’

‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’

சஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.

அவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.

இப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.

மேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.

புலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்?

ஆம்!. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.

ஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.

அடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா? சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா?

சஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.

புத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது?

அவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.

விளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.

நாயின் கொலையா?

சஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.

என்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது? தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.

இதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார்? அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா? அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது? அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா? ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.

ஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.

ஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.

தன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.

வெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.

அசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்?

ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.

விளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.

இப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.

நாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

காலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது.

அறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.

முந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.

சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

யாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.

சஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.

முந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.

திரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.

இறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.

அதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.

சஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா?’ என்று கேட்டார்.

‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’

ஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.

அதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும்? தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும்? அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன!

(1979)

பெங்காலியில் : சத்யஜித்ரே

ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை

From the book : The Best of Satyajit Ray, First Edition : 2001

Read more...

அலையுடனான வாழ்க்கை - ஆக்டோவியா பாஸ்

>> Thursday, January 28, 2010

நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.

அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.

அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.

“ஆ…..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது”

அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :

“இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்”

நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்

“நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?’

கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்

நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?

காவலர் தலைவரை அழைத்தார்

நீ தானே விஷம் வைத்தவன்?

தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. ‘இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.

ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.

உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.

ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.

சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். ‘இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.

அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.

நீ எப்படி திரும்பி வந்தாய்?

வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.

அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.

நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.

காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்…..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். மென் தொடுகைகளாலும் கிசுகிசுப்புக்களாலும் முத்தங்களாலும் அவளுடைய இருப்பு வந்துபோய்க்கொண்டிருந்தன. அவளின் நீரில் நுழைந்து முழுமையாக நனைந்து கண் இமைக்கும் நொடியில் மேல் எழுந்து உச்சமடைந்து தலைகிறுகிறுத்து அதிசயமாக தொங்கி கல்லை போல் கீழ் விழுந்து ஒரு இறகு உலர்ந்து மெல்லென இளைபாருவதைப்போல் உணர்ந்தேன். ஆயிரம் சந்தோஷ மென்னடிகளால் நொருங்கி விழிப்புற்று ஆயிரம் தாக்குதல்களால் புன்னகை பிடுங்கப்பட்டு நீரில் உறங்குவதற்கு ஈடில்லை வேறெதுவும்.

ஆனால் அவள் இருப்பின் மையத்தை என்னால் எட்டமுடியவில்லை. வலியின், இறப்பின் தெண்மையை என்றுமே தொட்டதில்லை. பெண்களை உறுதியற்றவர்களாகவும் புதிராகவுமாக்கும் அந்த ரகசிய தோற்றமும் எல்லாம் பிணைத்து துடித்து சமனாகி பின் மூர்ச்சிக்கும் அம்மின்சார புள்ளியும் அலைகளில் இல்லை. ஒரு பெண்ணை போன்றே இவளின் உணர்வுகள் நீர்த்திரைகளாக பரவுகிறது. ஆனால் அவை ஒரே மைய வட்டங்களாக அல்லாமல் கோணற்மானலாக, ஒவ்வொரு முறையும் பிற மண்டலங்களை தொடும்வரை நீள்கின்றது. இவளை காதலிப்பதென்பது நினைத்துப்பார்த்திராத மிகவொதுக்கானவற்றோடு தொடர்புற்று தூரத்து நட்சத்திரங்களுடன் துடிப்பதாகும். ஆனால் அவளின் மையம்….இல்லை, அவளுக்கு மையம் இல்லை. சுழற்காற்றில் இருப்பதுபோல் வெறுமனே வெட்ட வெளி மட்டுமே கொண்டவள் என்னை உள்ளிழுத்து திக்குமுக்காடவைக்கிறாள்.

அருகருகே படுத்து பரிமாறிக்கொண்டோம் நம்பிக்கைகளை, கிசுகிசுப்புக்களை, புன்னகைகளை. அனனத்துக்கொண்டோம். என் நெஞ்சில் பரந்து விரிந்தாள். என் காதுகளில் சிறிய நத்தைப்போல் பாடினாள். மிகவும் பணிவாகவும் வெளிப்படையாகவும் மாறினாள். சிறிய விலங்கைப்போல என் பாதங்களை பற்றிக்கொண்டாள் அமைதியான தண்ணீராக. அவளின் எல்லா எண்ணங்களையும் நான் வாசிக்கும்படியாக மிகவும் தெளிந்திருந்தாள். சில இரவுகளில் அவளின் தோள் பாஸ்பரஸால் போர்த்தப்பட்டிருப்பதை போலானாள், அவளை அனைப்பது இரவின் ஒரு துண்டில் பச்சைக்குத்திய நெருப்பை அனைப்பது போலிருந்தது. ஆனால் அவள் சமயங்களில் கருப்பாவும் கசப்பாகவும் கூட ஆனாள். எதிர்பாரா நேரத்தில் கத்தினால், துக்கித்தாள், சுருண்டுக்கொண்டாள். அவளின் உறுமல் சப்தங்கள் அண்டைவீட்டாரையெல்லாம் எழுப்பியது. இவளின் சப்தங்களை கேட்டு கடற்காற்று என் வீட்டின் கதவை பிராண்டியது. அல்லது மேல்கூரையில் உரக்க கத்தியது. மேகமூட்டமான நாட்கள் அவளை எரிச்சலூட்டியது. மேசை நாற்காலிகளை உடைத்தாள், மோசமான வார்த்தைகளை கூறினாள். என்னை பச்சை சாம்பல் நிற நுரைகளாலும் அவமானங்களாலும் மூடினாள். காறி உமிழ்ந்தாள், அழுதாள், தூற்றினாள், மிரட்டினாள். நிலவும், நட்சத்திரங்களும், உலகத்தின் பிற ஒளிகளுக்கேற்பவும் அவளின் தோற்றமும் குணமும் மாறிக்கொண்டே இருந்தன. நான் அற்புதமானவைகள் என்று நினைத்ததெல்லாம் மாறி ஒரு அபாயகரமான அலையை போலானாள்.

அவள் தனிமையை தவிர்த்தாள். வீடு முழுவதும் நத்தைகளும், சிப்பிகளும், அவளின் அதீத கோபத்தால் உடைக்கப்பட்ட சிறிய விசைப்படகும் இருந்தன. (இப்பிம்பங்களின் சுமைகள் ஒவ்வொரு இரவிலும் என்னை விட்டகன்று அவளின் கொடுமையான அல்லது மென்மையான சுழற்காற்றால் எல்லாவற்றுடன் சேர்ந்து நானும் மூழ்கினேன்.) எத்தனை சின்னஞ்சிறிய பொக்கிஷங்கள் அந்நேரத்தில் தொலைந்து போயின. ஆனால் என்னுடைய படகும், நத்தைகளின் மௌனமான பாடலும் போதுமானதாக இல்லை. மீன் கூட்டத்தை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. அவளின் மார்புகளை தடவிக்கொடுப்பதும், கால்களுக்கிடையில் உறங்குவதும், வண்ண நிறங்களை கொண்டு அவளின் முடிகளை பாராட்டுவதுமாக மீன்கள் அவளுடன் நீந்துவதை பொறாமையற்ற முறையில் நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அம்மீன்களில் குறிப்பாக சில அருவருக்கத்தக்கதும் முரட்டுத்தனமிக்கதும் இருந்தன. மிகப்பெரிய நிலையான விழிகளுடனும் கூர்மையான இரத்தம்தாகித்த வாய்களுடனும் சிறியநீர்நிலைகளிலிருந்து (aquarium) வந்த சிறுபுலிகள் அவை. என் தோழி எதன் அடிப்படையில் அவர்களுடன் விளையாடுவதில் மகிழ்கிறாளென்றும், யாரை நான் நிராகரிக்க நினைக்கிறேனோ அவர்களுக்கு வெட்கமற்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. மணிக்கணக்காக அக்கொடும் ஜீவன்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் என்னால் தாளமுடியாமல் கதவை திறந்து அவற்றை பிடிக்கப் போனேன். வேகமாக என் கைகளை விட்டு வழுக்கிக்கொண்டு நழுவியபோது அவள் சிரித்து என்மேல் வேகமாக அலை அடித்து வீழ்த்தினாள். மூழ்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நீலநிறமாகி நான் மரணத்தை தொடும் நேரத்தில் என்னை கரையில் ஒதுக்கி முத்தமிடத்துவங்கினாள் எதுவும் தெரியவில்லை எனச்சொல்லி. நான் மிகவும் சோர்வானேன், களைப்புற்றேன், பைத்தியமாக்கப்பட்டேன். அதே சமயத்தில் அவள் என்னை கிளர்ச்சியூட்ட துவங்கியது என் கண்களை மூடச்செய்தது, அவளின் குரல் மிகவும் இனிமையாயிருந்தது, மூழ்கி சந்தோசமாக மரணிப்பதை பற்றி அவள் பேசினாள். நான் மீண்ட பிறகு பயம்கொள்ள துவங்கினேன், அவளை வெறுத்தேன்.

இத்தொடர்பை தவிர்த்தேன். என் நண்பர்களை சந்திக்க துவங்கினேன். என் பழைய நெருங்கிய உறவுகளை புதுபித்துக்கொண்டேன். என் பழைய தோழியை சந்தித்தேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதான வாங்குறுதியை அவளிடம் வாங்கிக்கொண்டு அலையுடனான எனது வாழ்க்கையை பற்றிச் சொன்னேன். ஒரு ஆணை காப்பாற்றுவதற்கான சாத்தியங்களை போன்று வேறெதுவும் ஒரு பெண்ணை நெகிழ்விப்பதில்லை. அவளின் எல்லா திறன்களையும் பயன்படுத்தினாள். ஆனால் ஒரு பெண்மணியால் அதுவும் ஒரு எல்லைக்குள்ளான உடலும் உயிரும் கொண்ட பெண்மணியால் என்ன செய்ய முடியும் நாளும் மாறிக்கொண்டிருக்கும் என் தோழியின் எதிரில் – அதுவும் எப்போதும் என்றும் தொடரும் உருமாற்றங்களில் அவளுக்கு நிகர் அவளாகவே இருக்கிறாள்.

பனிக்காலம் துவங்கியது. வான் சாம்பல்நிறம் பூண்டது. நகரங்களில் பனி பொழிந்து ஆலங்கட்டிமழை பெய்தது. என் தோழி இரவுகளில் அழுதாள். ஒரு வயதான மூதாட்டி மூலையில் ஒடுங்கிக்கிடப்பதை போல பகல் நேரங்களில் மௌனமாக மூலையில் முடங்கி தன்னை தனிமை படுத்திக்கொண்டு முணங்கினாள். மிகவும் சில்லென்றானாள், அவளுடன் உறங்குவதென்பது நடுக்கமுற்று, சிறிது சிறிதாக இரவுமுழுவதும் ரத்தம், எலும்பு, எண்ணம் எல்லாம் குளிரால் விரைப்புற செய்தது. கடந்து செல்ல முடியாமல் அமைதியற்று மிகவும் ஆழமானாள். அடிக்கடி அவளை விட்டு அகன்றேன். ஒவ்வொரு முறையும் பிரிவை நீடித்தேன். அவள் ஒரு மூலையில் படுத்து கத்தினாள், இரும்பான பற்களாலும் கொடும் நாவாலும் சுவற்றை பிராண்டி பொடியாக்கினாள். இரவுகளை துக்கங்களோடு என்மேல் பழிசுமத்தி கழித்தாள். பயங்கர கனவுகள் கண்டு சூரியனை பற்றியும் வெதுவெதுப்பான கடல்களை பற்றியும் பிணாத்தினால். மாதங்களாய் நீண்ட இரவுகளில் துருவங்கள் ஒரு மாபெரும் ஐஸ் கட்டியாக மாறி, கருநிற வானத்தின் கீழ் மிதப்பதாக கனவுகண்டாள். என்னை அவமானப்படுத்தினாள். எள்ளி நகைத்தாள். வீட்டை பரிகாசங்களிலும் மிரட்சியிலும் நிரப்பினாள். பாதாள குருட்டு பூதங்களை கூவி அழைத்தாள். மின்சாரம் பாயத்துவங்கியது, தொட்டதையெல்லாம் பொசுக்கினால். அமிலத்தால் நிரம்பினாள். தொட்டு செல்லும் அனைத்தையும் கரைத்தால். அவளின் இனிமையான அனைப்புகள் என்னை நெருக்கும் முடிச்சுகளாக மாறின. அவளின் உடல் பச்சையாக ஒடுங்கிவிரியுஞ்சக்தியோடு கருணையற்ற அடிகளாக கடுமையாக தாக்கியது. நான் தப்பி ஓடினேன். அக்கொடிய மீன் தனது குரூரமான புன்னகையால் என்னை பரிகசித்து சிரித்தது.

செங்குத்தான பாறைகளையும் பைன் மரங்களையும் கொண்ட மலையில் மெல்லிய குளிர்காற்றை சுவாசித்தேன் சுதந்திர எண்ணத்தைப்போல். மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். தீர்மானித்திருந்தேன். பளிங்குகளாலான வெப்பமூட்டிக்கு அருகில் மிகவும் குளுமையாக இருந்தது. அனைந்திருந்த நெருப்பிற்கு அருகில் ஒரு ஐஸ் சிலையைக்கண்டேன். அவளின் சோர்வூட்டும் அழகில் நகரமுடியாமலானேன். பெரிய கோணிப்பையில் அவளை இட்டு என் தோளில் சுமந்தபடி தெருவிற்கு எடுத்து வந்தேன். புறநகர்பகுதியில் இருந்த ஒரு உணவு விடுதியில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை விற்றேன். அவன் உடனே அவளை சிறு துண்டுகளாக நறுக்கி குப்பிகளை குளுமையாக்க வைத்திருந்த வாளியில் பத்திரமாக நிரப்பினான்.

ஆங்கிலத்தில் வாசிக்க : My Life with the Wave by Octavio Paz

தமிழில் : நதியலை

நன்றி : உயிர்மை – நவம்பர் 2009

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP