vydheesw.blogspot.com
Showing posts with label POEMS. Show all posts
Showing posts with label POEMS. Show all posts

Sunday, March 25, 2012

வைதீஸ்வரன் கவிதைகள்:1. குழுக்கள் 2. தமிழ் பாடம்

வைதீஸ்வரன் கவிதைகள்:


1. குழுக்கள்

இரண்டையுமே
ஒன்றுபோல நேசித்து வந்தேன்
ஏதோ.....
ஒரு மனிதனுக்கு அது தான்
உயர்ந்த பக்குவம் போல

இரண்டுமே என்னை
ஏகமாகப் பாராட்டின
ஏதோ....
தங்களை மட்டும் நேசிப்பதாக
தவறாக எண்ணிக்கொண்டு
உண்மை ஒருநாள்
பொதுவாக விடிந்தவுடன்
இரண்டுமே என்னை
தூக்கி எறிந்தன தெருவில்
ஒற்றுமையாக!
ஏதோ.........
தங்கள் நேசத்துக்கு நான்
தகுதியற்றவன் என்பது போல
தெருமண் ஒட்டிய உடம்போடு
ஊன்றி எழுந்தபோது தான்
நியாயம் எனக்கும் உறைத்தது
ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று
ஒரு ஆரம்பமாக
அருகில் நின்ற நண்பனை
அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்
முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.

0
2. தமிழ் பாடம்

வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று
வாத்தியார் விரும்பினார்
அந்த நாளில் அது பரவலமான மோகம்
நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்
வீரம் விளங்காத வயது
பயம் அறியாத கன்று
அரையடி உயர மேடையில் வாத்தியார்
சிகை பறக்கும் வேகமும்
நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்
கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....
எனக்கு 'பக்கென்று' சிரிப்பு
பொத்துக்கொண்டது
அவர் அதட்டினாலும்அடங்கவில்லை
மறுகணம்
மேடைவீரம் தமிழ்ப்புயலாய்
கோலோடு குதித்தது என்மேல்
நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்
அடியோ பலம்
ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை
பேச்சைப்போல் கோபம்
பாசாங்காக இல்லை போலும்!
ஒழுங்கைத்தான்
உதைத்து சொல்லியது



0

ஆடுகள் – கவிதை


ஆடுகள் 

எஸ்.வைதீஸ்வரன்

சாலையோர மூலையில்
கொலை செய்த கையோடு
பீடியும், டீயுமாக
பிடிப்பா ரற்று நின்றவனை
நான் பார்த்ததுண்டு.
புறமுதுகில் கண்ணற்று பிறந்ததனால்
போலீஸ்காரர் பொறுப்பற்று
போக்குவரத்து நடுவில் நின்றிருந்தான்,
என நினைத்தேன்.
கும்பல் தெரியும் பட்டப் பகலில்
கொஞ்சமும் பதட்டமின்றி
சங்கிலி யறுத்து, பெண்ணிடம்
மேலும் வம்புகள் செய்து போன
கயவரை நான் கண்ணாரப் பார்த்தேன்.
அவனையும் சட்டம்
அசட்டை செய்தது.
ஏனோ வீட்டுநினைப்பின் அவசரத்தில்
தவறிவிட்டானோ?
ஏதுமறியா மீசை முகத்துடன்
எட்டி நடந்து போகிறானே, கான்ஸ்டேபிள்?’
எனப் பதறினேன்.
நாட்டுக்குள் நல்லவர்க்கு
நாதியில்லை, நீதியில்லை
கொலைகாரர்கள் திருடர்கள்
குளிர்விட்டுப் போனார்கள்.
நிலைகுலைந்து நாசமாச்சு
நகரத்து மக்கள் வாழ்வு!
எனத் தான் மனங்கொதித்து
நாற் சந்தி சிவப்பு விளக்கில்
கோபமுடன்
காத்திருந்தேன், வாகனத்தில்.
கூச்சலிட்டு விசிலடித்தான் ஒரு
கூர்மையான போலீஸ்காரன்.
கோட்டைத் தாண்டி நிக்கிறியே,
குத்தமின்னு தெரியலையா, மிஸ்டர்?
சோடா கடை யண்ட போயி நில்லு-
கோர்ட்டுக்குப் போனா
கூட கொஞ்சம் செலவாகும்…’ என்றான்.
ஆடுகள் தான்
எப்போதும்
அறுபடப் பிறந்தவைகள்.

Friday, September 3, 2010

மொழியற்ற உலா _ கவிதை

                               

கவிதை:

 மொழியற்ற  உலா
  ---------------------------

             தவழும் பூமியை நெருடும்
             ஈரக் கிரணங்கள்
             இளங்காலை.

              முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள்
              இலைகள  சூடிக் கொண்டு
               சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து
               வானவில்லைத் தரித்த மரங்கள்
               தோகை விரிக்கும் வழியெங்கும்.

                வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத
               வானம் முகில்களால்
                எழுதி எழுதிக் கலைக்கும்
                மொழியற்ற கவிதைகள்..    
                 பொழுதற்று.

                வேளைக்கு ஒரு நிறம் பூசித்
                 தன்னழகை விண்ணில் தேடியவாறு
                 அண்ணாந்து கிடக்கும் கடல்.

                 காற்றில் தள்ளாடும் மலரென மழலைகள்
                  புல்வெளியில் கூவிக் குதிக்கும் ஆனந்தத்தால்
                  இயற்கையின் எழில் ஒரு கணம்
                   தோற்றுப் போகும்.

                                    வைதீஸ்வரன்   [யுகமாயினி ]
               
                

ஞானத் தேநீர் - வைதீஸ்வரன் எழுதிய கவிதை

                           




ஞானத் தேநீர்.
                               --------------------------

       அந்தக் கடைக்கு நாங்கள்
       அடிக்கடி போவது
       அவள் தரும் போதைகாகத் தான்

       கொஞ்சும் அவள் பேச்சிடையில்  
       விம்மும் பெருமேச்சால்
        படபடக்கும் அவள் நெஞ்சு.

       நாற்காலிகளின் இடைவெளிகளில்
      அன்னத்தின் நளினத்துடன்
       நகரும்...நெருங்கும்...குலுங்கும்...குனியும்
       அவள் பணிவிடைப் பாங்கு
       நாங்கள்  பார்த்துத் தீராத கவர்ச்சி
                       
        எங்கள்  சுவைத்த கிண்ணங்களில்
        அவள் ஸ்பரிஸத்தின் எச்சம்
         சுவைக்கு சுவையூட்டும்

       பார்வை கிறங்கிய இருட்டில்
         அவள்  உடலை
        உருட்டிக் கொண்டேயிருக்கும்
         எண்ணங்கள்.
          வீடு திரும்பும் வரை!
   
          ஆனால் இன்று அவள்
          அந்த"  அவளாய் இல்லை.    
          உடம்பு வேறு தான் வேறாய்
           உட்கார்ந்திருக்கிறாள்.
           ஈ  விரட்டுவது  போல்
           எங்களை வரவேற்கிறது அவள் கை.

           நரைத்த கூந்தலுடன்
            கறுத்த பற்களிடையில்
           ஒழுகி வரும் சிரிப்பில்
            உடலின் ஓய்ச்சல்  வழிகிறது....

            இருந்தாலும்
             அவளிள்  ஊறும்  பிரியமோ
              மலர்ந்து பரவும் மனோரஞ்சிதம்!

             அவளைப் பார்த்த கணம்
             வெறியடங்கி
             சுகத்தின் மடியில் ஆழ்கிறது  காமம்
             காலத்தின்  மாயப் பூச்சழிந்து
             கருணை பரவுகிறது...காதலாக.
              போதையற்ற  போதம்
               பரவுகிறது  உள்ளெங்கும்.

                 திரும்பும் வழிகளில்
             உலகம் மூப்பற்று
              உள்ளம்  மிதக்கிறது
               நிர்வாணமாய்.


                                 வைதீஸ்வரன்   Published  in  Yukamaayini