Showing posts with label MSV. Show all posts
Showing posts with label MSV. Show all posts

Wednesday, September 01, 2010

எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி!

இன்று கும்மி அடிக்கலாம் வாங்க! வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல! கண்ணன் பிறந்த நாள் கும்மி! அதுவும் நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் கும்மி:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday KaNNa! - From me & my murugan :)
Image

கண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா என்று பலவிதமான பண்டங்களைக் குழந்தைகள் ஜாலியாக உண்டு மகிழும் நாள்! மகிழட்டும்! மகிழட்டும்!
Image
ஆனால் பெரியவர்கள் சற்றே நினைவில் வையுங்கள்! கண்ணன் பிறந்த நேரம் இத்துணை ஜாலியாகக் கழியவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர...

பால், தயிர், வெண்ணெய், நாவற்பழம் என்ற எளிமையும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்!
எனவே நம்மளவில் பூசைகளில் எளிமையைக் கைக்கொள்வோம்!

அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல் என்பனவற்றை எல்லாம், அருகில் காப்பகங்களில்....ஒருத்தி மகனாய்/மகளாய்ப் பிறந்து, ஒளிந்து வளரும் குழந்தைகளோடு பகிர்ந்துண்டு மகிழ்வோம்! அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
Image



கண்ணன் பிறந்தநாள் பதிவுகளின் தொடர்ச்சியாக..இது மூன்றாம் பதிவு! முத்தான பதிவு! ஏன்-ன்னா, எல்.ஆர். ஈஸ்வரியின் துள்ளலான கும்மி ஒலிக்கும் பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் கோதை மற்றும் முருகன் பிறந்தநாள் பதிவுகள் வருமே தவிர, கண்ணனுக்கு ஓரவஞ்சனை தான் செய்துள்ளேன் போலும்! இப்பத் தான் பார்த்தேன்! :)
அதான் இந்த ஆண்டு, ஓரவஞ்சனையை ஈரவஞ்சனை ஆக்கிறலாம்-ன்னு.... :)
Image
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-இன் கிருஷ்ண கானங்களின் நேற்றைய தொடர்ச்சியாக, இன்று எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணன் கும்மாளம்!
அவருக்கே உரித்தான துள்ளலோசையோடு! கேட்போமோ கண்ணன் கும்மி?
அப்படியே பெரியாழ்வாரின் கண்ணன் பிறந்த நாள் குதூகலங்கள் போலவே இருக்கும் பாருங்க!

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!
Image
இதோ ஒலிச்சுட்டி! கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்
Image

குழந்தைகள் கும்மி அடிக்கும் காணொளி:))

Tuesday, August 31, 2010

கோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்!

நாளை...கண்ணன் பிறந்த நாள்!

ஒரு திரு முருகன் வந்து "உதித்தனன்" உலகம் உய்ய என்பது போல்...
ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை!!
பிறப்பு அற்றவன் உலகில் பிறந்தால் அது = பிறந்தனன் அல்ல! உதித்தனன்/தோன்றினன்!
தாயைக் குடல் விளக்கம் செய்து, ஆயர் குலத்தில் "தோன்றும்" அணி விளக்கை!!

தோன்றும் அணி விளக்கு, தமிழ்க் கடவுளாம் மாயோனுக்கு, எம்.எஸ்.வி அலங்காரம் செய்வாரா?
Image
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!

கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!

அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!

1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS

இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?



இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!

ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)
Image
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த

பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட

பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)


Image
பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!

அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!
Image
படிப்பில்லாத ஆட்களே எனக்குப் போதும்! கற்றாரை யான் வேண்டேன் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்!
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் என்கிறாள் ஒரு இடைச்சி, என் தோழி!

வேதங்களுக்கே கிடைக்காத திருவடிகள், படிப்பில்லாதவர்க்கு எளிதில் கிடைப்பதால், அவர்களுக்கு வேதப் பொருள் தானாகவே விளங்கி விடுகிறது!
ஞான யோகம், கர்ம யோகம் என்றெல்லாம் படிப்பில்லாதவர்கள் ரொம்ப கஷ்டப்படுவதில்லை! தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள்! "தாங்களே" தங்கள் ஞானத்தால் தேடி அடைந்தோம் என்ற தொனி படிக்காதவர்களிடத்தில் இல்லை!

அதனால் தான்.....தமிழ் மாலைகளே எமக்குப் பெரிதும் உவப்பு!
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்று வேதக் கடலான தேசிகனே பாடி விடுகிறார்!!
பொருள் புரியாமல் இத்தனை நாள் தவித்து, ஆழ்வார்களின் ஈரத் தமிழ் மாலைகளை ஓதிய பின்னால், புரியாத வேதங்களும் புரிந்து விடுகின்றனவாம் அவருக்கு! இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக! :)


நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!

அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!
Image
கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?

ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!

தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!

அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!

இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!


Image
இப்போ லேடீஸ் மேட்டர்! யாராச்சும் லேடீஸ் வந்து இதுக்குப் பொருள் சொல்லுங்கப்பா! அப்பறமா நானும் சொல்லுறேன்! :)

சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)


ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்

Thursday, March 18, 2010

பி.சுசீலா - ஜெயதேவர் அஷ்டபதி - காதலா? காமமா?

பிருந்தாவனம்! யமுனைத் துறை!
புன்னை மரத்து நிழல் கீழே, நினைவென்னும் காதல் மடி மேலே, தலை வைத்து மெல்லியதொரு தூக்கம்! கலங்காது கை கோர்த்து சேரும்...கண்ணோரம் ஆனந்த ஈரம்...

அப்போது, இசையரசி பி.சுசீலாம்மா பாடிக் கொண்டே, தலையைத் தடவிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்த உறக்கத்தின் கிறக்கத்தில் உதித்தது தான்.....இந்தப் பதிவு! இப்போது என் துக்கங்கள்-தூக்கங்கள் எல்லாமும் அப்படியே!!



Image
ஜெயதேவர்-ன்னா ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! (1200 CE)
அஷ்டபதி-ஜெயதேவர்-ன்னு சொன்னாக்கா, இன்னும் சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞரான, அவர் எழுதிய காதல் காவியம் தான்.....அஷ்டபதி என்கிற கீத-கோவிந்தம்!

பேரில் என்னமோ கீத கோவிந்தம்-ன்னு "கோவிந்தம்" இருக்கு!
ஆனால் படிக்கறப்போ "வேற மாதிரி" இருக்கே!
இது பக்திக் காவியமா? காதல் காவியமா? காமக் காவியமா? :)

எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எனக்கு எதுவும் தெரியாது! :)

சரி, அது என்ன அஷ்ட-பதி?
கல்யாணம் ஆகும் போது, தீவலம் செய்து, 7 அடி எடுத்து வைப்பதை, சப்த-பதி-ன்னு சொல்லுவாய்ங்க!
இது கல்யாணம் ஆவதற்கும் முன்னாடியே (Pre Marital) என்பதால், ஒரு "அடி" கூடவா? அதான் அஷ்ட-பதியா?? :)

மொத்தம் 12 சர்க்கம், 24 பாடல்கள்!
ஒவ்வொரு பாட்டும் 8 பத்திகள், பதிகள்! அதுவே அஷ்ட பதி!

அஷ்டபதி என்பது சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஒரு நாட்டிய நாடகம்!
புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா?? ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?
Image

* ராதையின் அகங்காரம், ராதையின் திமிர்,
* ராதையின் கோபம், ராதையின் தாபம்,
* ராதையின் ஊடல், ராதையின் தேடல்,
* ராதையின் சாதல், ராதையின் காதல்,
* ராதையின் பேதை, ராதையின் மேதை,
இவை எல்லாமே நாடகத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கின்றன!

அதனால் தான், பின்னாளில்...
கண்ணனின் வாழ்வு கூட்டத்தில் கலக்க, ராதையின் வாழ்வு தனிமையில் கலந்து போனது!
கண்ணன் தனக்கா? உலகத்துக்கா? என்று வந்த போது...
தன் முகம் காட்ட மறுத்தாள்! முகவரியை மறைத்தாள்!

வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!

அவள் இருந்தாளா? = அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும்! எனக்கும் தெரியும்!
கண்ணனின் சோலையில் அவள் சுகந்த பரிமள வாசத்தை...காண முடியாது! முகர மட்டுமே முடியும்! முகர...முகர...முருகா!

* என் பால் நோக்காயே ஆகிலும்...உன் பற்றல்லால் பற்றில்லேன்!!
அவள் "பரிசுத்தமான காமம்"! = அதுவே "கீத கோவிந்தம்"!!!


திரைப் பாடலைக் கேட்டுக் கொண்டே, பதிவை வாசியுங்க!


அல்லது...கேட்க/தரவிறக்க மட்டும் இதோ!
பதிவின் இறுதியில் இதர கலைஞர்களின் குரலில், இதே பாடல்!



வடமொழியில் உள்ள வரிகளை, கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழாக்கி உள்ளேன்!
தமிழில் சரியாப் பொருந்தி வருதா?-ன்னும் பார்த்துச் சொல்லுங்க!


படம்: தெனாலி ராமகிருஷ்ணா (தெலுங்கு)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
(மயக்கும்) குரல்: சுசீலாம்மா
கலைஞர்கள்: ஜமுனா, பானுமதி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித
கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

சந்தனம் சிந்திடு்ம் நீல மேனி தனில்
பொன்பட்(டு) உடை வனமாலை!
தந்தன தந்தன குண்டலம் ஆடிட
மோகனப் புன்னகை லீலை!!
கண்ணனின் கன்னியர் நாணமும் ஆசையும்
கண்டு கொண்டே விளை யாடினரே!
Image
காபி விலாச விலோல விலோசன
கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ அதிகம் - மது
சூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவளொரு தாரகை, அவள்விழி முந்திட,
அவன் மனம் முந்திய நேரம்!
அவன்முகத் தாமரை, அவள்முகம் விரிந்திட,
மதுசூ தனன் இதழ் ஈரம்!
Image
ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி
காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப
ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!
நகைத்தனன் அவனும், பகைத்தனள் அவளும்,
இருப்பினும் கூடினள் கோதை!
(கண்ணனின் கன்னியர்...விளையா டினரே)

ஸ்ரீஜய தேவ பணிதம நேமம்
அத்புத கேசவ கேளி ரகஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் வித
நோது சுபாமி யஷாஸ்யம்!

இதுஜெய தேவர் அருளிய தாஸ்யம்
பிருந்தா வன விளை யாடல் ரகஸ்யம்
அற்புத மோகன கீத கோவிந்தம்!
அருளிடும் அவன்திரு் பாதர விந்தம்!!

ராகம்: காமவர்த்தினி
தாளம்: ஆதி
மொழி: வடமொழி
வரிகள்: ஜயதேவர்
காவியம்: அஷ்டபதி
Image


சுசீலாம்மா தனியாகப் பாடுவது: (Dont miss the veeNai interlude at the beginning)


சுசீலாம்மாவின் முன்பு, பூஜா என்ற பெண் முயற்சி செய்கிறார்!


கர்நாடக இசையில்:
* Priya Sisters

சற்றே மெல்லிசையில்:
* உன்னி கிருஷ்ணன்

பரதேசி என்னும் தெலுங்குப் படத்தில்:
* மனோ,சங்கீதா,சுபா (Just opening lines for a cinema song)

ஒரிய மொழி இசையில்:
* In Oriya Style, Prafulla Mohanty & Bhubaneshwari Mishra (The 1st one min is intro)
* Chorus, Nirmala Mishra & Rakhal Mohanty

சுசீலாம்மாவை நினைவிருத்தி...தமிழில் யாரேனும் எனக்குப் பாடித் தருகிறீர்களா?
உறக்கத்தின் கிறக்கத்தில் உறங்கச் செல்கிறேன்.....சிற்றஞ் சிறுகாலே 4:45!

Image


குறிப்பு:
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடம் - கிருஷ்ணா நீ பேகனே,
* மலையாளம் - வழிகாட்டுக வழிகாட்டுக,
* தெலுங்கு - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரம் - பகவத் நமமூஸ்
* வடமொழி் - பாவன குரு/அமர ஜீவிதம்/அஷ்டபதி,
* இந்தி் - பஸோ மொரே...மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்பன போன்றவை, எப்போதாவது ஒன்னு ரெண்டு வரும்!

Wednesday, February 04, 2009

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - என்பவள் யார்?

இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு!
* இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க!
* தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க!
அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?

"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"

"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"

"இல்லை! இது பராசக்தி பாட்டு!"

"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்?
* இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
* இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "

"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
"பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"
-ன்னு எழுதறாரே!"

"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"

"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)

"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"

"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"



கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!
* அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
* அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை!
* அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!

கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்?
பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!

பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
Imageகுழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!
கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!

இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!

பாரதியும் அதையே செய்கிறான்!
பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!



பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!

திரைப்படங்களில்:
* கலைஞரின் நீதிக்குத் தண்டனை படத்தில் இருந்து...சொர்ணலதாவின் முதல் பாடல்-எம்.எஸ்.வி இசையில்
* மணமகள் படத்தில் இருந்து...எம்.எல்.வசந்தகுமாரி

தமிழிசை-கர்நாடக இசைகளில்:
* மகாநதி ஷோபனா
* சாக்சோஃபோன்
* மகராஜபுரம் சந்தானம்
ImageImage
(பாரதி இட்ட ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)
இந்தப் பாடல் ஒரு நவரசப் பாடல்! மகிழ்ச்சி-சோகம், சிரிப்பு-அழுகை, வெற்றி-ஏக்கம்-ன்னு விதம் விதமா பிரதிபலிக்கும்!
இதுவும் "கிருஷ்ணை" பாட்டே! "கிருஷ்ணன்" பாட்டே! கண்ணன் பாட்டே!


சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!


பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!

ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!


உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
Imageகன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!

சொல்லும் மழலையிலே, கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!


இன்பக் கதைகளெல்லம், உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?


மார்பில் அணிவதற்கே, உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே, உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?


வாய்ப்பாட்டுகளில்:
* டி.என்.சேஷகோபாலன்
* செளம்யா
* உன்னி கிருஷ்ணன்
* பம்பாய் சகோதரிகள்

இசைக் கருவிகளில்:
* புல்லாங்குழல் - டி.ஆர்.மகாலிங்கம்
* மேண்டலின் - ஸ்ரீநிவாஸ்
* வீணை - ராஜேஷ் வைத்யா
* சாக்சோஃபோன் - கத்ரி கோபால்நாத்

நித்ய ஸ்ரீ
பாரதியார் பைரவியில் இதை இட்டாலும்...ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ராகமாக, ராக-மாலையாகப் பாடப்படுவதும் உண்டு!
காபி, மாண்ட், வசந்தா, திலாங், ஹிந்தோளம், நீலாமணி, நீலாம்பரி, வலாசி, மத்யமாவதி


TM கிருஷ்ணா - சஞ்சய் வாணன் (சின்னஞ் சிறு பையன் :)


வீணை சிட்டிபாபு


சுதா ரகுநாதன்


நடனம்

Wednesday, January 07, 2009

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்
(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்
நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்
ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)




அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர் நண்பர் இரவிசங்கரோட கட்டளைப்படி இந்தப் பாடலை வைகுண்ட ஏகாதசித் திருநாளாகிய இன்று இங்கே இட்டுவிட்டேன். பாடலின் பொருள் முழுவதுமாகப் புரியவில்லை. அதனால் எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் இருக்கலாம்; அப்படித் தென்பட்டால் திருத்துங்கள். நானும் திருந்தி இடுகையிலும் திருத்திவிடுகிறேன்.

என்றும் அழியாத, புகழில் குறைவு படாத வாழ்க்கையைக் கொண்டவன் அமரஜீவிதன். ஆசை, வெறுப்பு, கொடையின்மை, மயக்கம், கருவம், பொறாமை போன்ற குணங்களால் இறந்தவர் போலிருப்பவர்களையும் உயிர்ப்பிக்கும் வாய்மொழிகளைக் கொண்டவன் அமுதவாசகன். இவ்வகைக் குணங்களால் ஈனத்தன்மை அடைந்தவர்களைப் புனிதமாக்குபவன் பதிதபாவனன். அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.

வேணுகானம் என்னும் புல்லாங்குழலிசையால் மயக்குபவன் முரளிமோஹனன். அசுரத்தன்மைகளை அடக்கி ஒடுக்குபவன் அசுரமர்த்தனன். கீதையெனும் பாடலைப் போதித்தவன் கீதபோதகன். அவனுடைய திருநாமம் கிருஷ்ண என்னும் மந்திரம்.

மென்மையானவன் நளின தைவதன். மன்மதனைப் போன்ற அழகு உருவம் கொண்டவன் மதனரூபகன். காளிங்கன் என்னும் நாகத்தின் மேல் நடனமாடியவன் நாகநர்த்தனன். கோவிந்தா என்று கூவியழைத்தவளுக்கு அவள் மானம் காக்கத் துணிகளைத் தந்தவன் மானவஸ்திரன். பாண்டவர்கள் என்னும் ஐவரால் தொழப்பட்டவன் பஞ்சசேவகன். பஞ்சஜனன் என்ற சங்கு வடிவ அசுரனை வென்று அவனைத் தன் திருக்கர்த்தில் தாங்கியவன் பாஞ்சசன்னியன்.

எல்லாரையும் எல்லாவற்றையும் காப்பவன் ஸர்வரக்ஷகன். தருமம், இவன் என்று வந்தால் இவனையே தருமத்திற்கு முன்னர் கொள்ள வேண்டும் படி தருமமே வடிவம் ஆனவன் தருமதத்துவன். அன்பினால் கட்டுப்படுபவன் ராகபந்தகன். ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் ராசலீலகன்.

Saturday, December 13, 2008

சுசீலாவின் பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்!

காலங்கலமா இதே வழக்கம்ப்பா இந்த ஆண்களுக்கு! அழகான பெண்களைக் காதலிக்கவேண்டியது ,அப்புறமா மனசு மாறிட வேண்டியது!

பாருங்களேன் இந்த அழகான பெண்ணும், ஒரு கோபிகை தான்(கோபிகா அல்ல பாவனா அல்லன்னு KRS Ragav Rishan பின்னூட்டமிடு முன்பாக நான் முந்திட்டேனே:)))
Image
ம்ம்ம் என்ன சொன்னேன் அழகான் பெண் என்றேனா அவளைக் குழலூதும் கண்ணன் தன் இசையில் மயக்கி இருக்கிறான்.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்னு அந்தப் பொண்ணும் மயங்கிட்டா...
அவளை நல்லா மருக வைத்துவிட்டு நைசா ப்ருந்தாவனத்துக்கு வந்துட்டான், அங்க இருக்கற கோபிகைகளுடன் குதூகலமாய் விளையாட ஆரம்பிக்கிறான் கண்ணன்.

காதலிக்கிறவ்ரை அ(எ)ந்த ஆணையும் ஒரு எதிர்பார்ப்போட‌ ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க பொண்ணுங்க, ஆனா, காதலிச்சிட்டால் அவன் என்ன பண்றான் எங்க போறான் வேற‌ எந்த ஃபிகர்கிட்ட செல்லுல சொல்லுல ஜொல்லுவிடறான்னு மோப்பம் பிடிக்கற‌தேதான் அவங்கவேலை!

ஆணை விட பெண்ணுக்கு அன்பின் ஆளுமையும் பொஸஸிவ் நெஸ்ஸும் ஜாஸ்திங்க!மோதிரத்தை தொலைச்சி மனைவியை மறந்தது துஷ்யந்தன் தானே!! காற் சில‌ம்பை அட‌குவ‌ச்சி க‌ண்ண‌கியை அம்போன்னு விட்ட‌து கோவ‌ல‌ன் தானே! இன்னும் மீத‌ம் இருப்ப‌தை ம‌க‌ளிர் பொங்கி எழுந்து நினைவுப‌டுத்த‌க்கேட்டுக்க‌றேன்!(முடிஞ்சா மறக்கலேன்னா ஆண்க‌ளும்:))))

சரி இருங்க கதைக்கு வருவோம்...கண்ணன் ப்ருந்தாவனத்துக்குப் போனால் விஷயம் தெரியாம போயிடுமா, நம்ம தமிழ்நாட்டு தங்க மகளுக்கு, ஆல்ரெடி ஸ்மார்ட்னெஸ் தமிழ்ப் பெண்களுக்கு நிறைய உண்டுன்னு சொல்வாங்க இதுல கண்ணபெருமானின் கடைக்க‌ண்பார்வை வேறு பெற்றுவிட்ட்வள்!!காதல் பார்வையையும் கூட!

so,சும்மா இருப்பாளா வாரேன் சுவாமி உங்க ப்ருந்தாவனத்துக்கே நேரா வரேன் வந்து க்ருஷ்ணா நான் ஒருபாவியோன்னு கேட்பேன் அதுக்கு நீ பக்கத்துல ஏகப்பட்ட கோபிகைகளை வச்சிட்டு என்னை கேலியா பார்த்தா அதை தாங்கிப்பேன்னு நினைக்காத...என் கேள்விக்கு பதில் என்ன கேலியோன்னு கேட்காம விடமாட்டேன்,,,

நீ காயிலே புளிப்பாய் கனியிலே இனிப்பாய் ! நோன்பிலே உயிர்ப்பாய்கண்ணா ! ஆமா நான் இப்போ இருப்பது உயிர் நோன்பு ! காதல் நோன்பு! பாவை நோன்பு கொண்டாட இதோ மார்கழி பிறக்கப் போகிறது! உன்னையும் நப்பின்னை முதல் நந்தகோபனின் வாயிற்காப்பான் வரை வரை எல்லாரையும் விரட்டிக்கேட்க வில்லிப்புத்தூர் வீரப்பெண் வேறு வந்து விடுவாள். ஆகவே அப்போதைக்கிப் போதே வந்தேன் அடியாளை ஏறிட்டுப்பார்த்து ஏற்றுக்கொள்ளும் சுவாமி! என்கிறாள்.

ஒருபொண்ணு நின‌ச்சா, நின‌ச்சா.....எதுக்கு அதை ஒரு பெண்ணே இப்போ சொல்லணும், பாட‌லைக் கேளுங்க‌ க‌ல்லும் க‌னியாகும்!

பாட்டு பிருந்தாவனத்துக்கு வ‌ருகின்றேன் என்பெருமான் உன்னிட‌ம் கேட்கின்றேன்!

ப‌ட‌ம்..லட்சுமிகல்யாணம்
பாடியவ‌ர்.....சுசீலா
இசை...MSV

பாடலை இங்கு கேட்கவும்!

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?
(பிருந்தாவனத்துக்கு)

கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!
(பிருந்தாவனத்துக்கு)

குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?
(பிருந்தாவனத்துக்கு)

கிருஷ்ணா...கிருஷ்ணா...
கிருஷ்ணா...கிருஷ்ணா...


By...
............திருவரங்கப்ரியா(shylaja)

Wednesday, December 03, 2008

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!

சிறுவயதில் நிறைய தடவை இந்தப் பாடலின் அழகில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யார் எழுதியது, யார் பாடியது என்றெல்லாம் தெரியாது. இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது.

அன்று பெற்ற அமைதி இன்றைக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

இயற்றியவர் (மொழிபெயர்த்தவர்): கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்துப் பாடியவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்




பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும் பழி பாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!

(பாடிடுக பாடிடுக)

பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ?
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் பாணினியம் காவல் வருமோ?

(பாடிடுக பாடிடுக)

மாடு மனை தேடுவதும் வல்ல நிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரை தான்!
வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரை தான்!
ஓடி விடும் மேனிதனில் கோடி நரை தோன்றிய பின் கூடுவது என்ன சுகமோ?
கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணன் அடி! தேடிவிடு கண்ணன் புகழ்! நண்ணுவது அந்த சுகமே!
நாயகனை மாயவனை தூயவனை மாலவனை நல்லவனைப் பாடு மனமே!

(பாடிடுக பாடிடுக)

Sunday, June 15, 2008

97. ஜிரா தரவேற்றிய நம்பியார் கண்ணன் பாட்டு!

தசாவதாரம் படத்துல நெப்போலியன், கமல் கிட்ட ரொம்ப பீலா விடுவான்! "உங்களைப் போல வைணவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை அறி-வோம்! உங்கள் குரு இராமானுசர் எங்கே ஓடிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் அறி-வோம்!"
இப்படி அறி-வோம், அறி-வோம் என்று சொல்ல...
அதுக்கு கமல், "மன்னா! உன் வாயாலேயே ஹரி-ஓம்! ஹரி-ஓம்! என்று வந்து விட்டது பார்த்தாயா?" என்று வார்த்தை விளையாட்டு வெளையாடுவாரு!

இதைப் பார்த்தாரு நம்ம ஜிரா!
அ"றி"-வோம் என்பதை ஹ"ரி"-ஓம் ன்னு ஆக்கினீல்ல கமலஹாசா?
இப்போ, ஹ"ரி"-ஓம் என்பதை ஹ"றி"-ஓம் ன்னு நானும் ஆக்குறேன் பாரு-ன்னு சவால் வுட்டாரு! ர-வில் இருந்து ற-வுக்கு மாறி, ந"ற"ந"ற"-ன்னு பதில் வெளையாட்டு விளையாடினாரு அவரோட சூப்பர் விமர்சனப் பதிவுல! :-)

இதைப் பார்த்துட்டு நானும்,
ஹரி-ஓம், ஹறி-ஓம், எதுவானாலும் சரி, ஆனா நாம இப்ப, Hurry ஓம்!
படத்தை முதல் காட்சியில் இருந்தே மிஸ் பண்ணாமப் பாக்கச் சொல்லி இருக்காரு இவரு!
அதனால் Hurry-ஓம்னு பதிலுக்கு விளையாடிக்கிட்டு இருந்தேன்! ஜிராவின் ஃபார்முலா படி, ராகவன் றாகவன் ஆனாரு! ஜிராவும் ஜிறா ஆனாரு! :-)))

ஆனால் நம்ம ஜிரா நிஜமாலுமே அப்படித் தானா? அதெல்லாம் சும்மா உல்லல்லுலாலாயி...
கண்ணன் மேலும்,
கண்ணன் பாட்டு மேலும்,
கண்ணன் அடியார் (கேஆரெஸ்) மேலும் அதீத பாசம் கொண்டவரு! நல்லவரு! வல்லவரு!:-)

பலரும் அறியாத மிக அபூர்வமான கண்ணன் பாடல்கள்! இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பாடல்கள் சிலவற்றை, எனக்காகவே yotube-இல் தரவேற்றினாரு!
அதில் ஒன்று தான் இன்னிக்கி கண்ணன் பாட்டில் நாம் கேட்கப் போகும் 97th கண்ணன் பாட்டு!



ImageImage
சுப்ரபாதம் என்றொரு படம் வந்துச்சி! இறையருட் செல்வர் கே.சங்கர் இயக்கிய படம்!

புராணக் கதைகளை வைத்தும், பக்திக் கதைகளை வைத்தும் படம் பண்ணினா, அதோ கதி தான் என்ற மாறுபட்ட காலத்தில், அதை உடைத்த பெருமக்கள் இருவர்! * ஏ.பி.நாகராஜன்! ** கே.சங்கர்!!
ஏ.பி.நாகராஜன் பேரைத் திருவிளையாடல் என்றும் சொல்லும்! அதே போல் கே.சங்கரின் பேரை தாய் மூகாம்பிகை என்றும் சொல்லும்!

சுப்ரபாதம் படத்தில், நம்பியார் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர்!
பக்தர் என்பதைக் காட்டிலும் அன்பர்! உயிர் நண்பர்! உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருப்பவர்!
அவர் பெருமாளுக்குக் கோயில் ஒன்னு கட்ட நினைப்பாரு! அதுக்குப் பல முயற்சிகள் எடுப்பாரு! ஆனால் பல தடங்கல்கள் வரும், பொதுவிலும், சொந்த வாழ்விலும்!

கடந்தும், கிடந்தும், நடந்தும் அதை எல்லாம் நம்பியார் எப்படிச் சமாளிக்கிறார் என்பதைப் படத்தில் காட்டி இருப்பார்கள்! ஜிரா வந்து படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்லட்டும்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்கள் இந்தப் படத்தில்!

* கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி
* உண்மை தெரிந்திருக்கும் ஒருவனய்யா - வாணி
* உன்னைத் நீ அறிவாய், உலகெங்கும் நான் அறிவேன் - TMS/சுசீலாம்மா
* வடதிசையில் சில வைகுந்தங்கள் - பாலமுரளி/வாணி
* திருக்கோவில் கட்ட எண்ணி - சீர்காழி/வாணி

சீர்காழி முருகன் பாட்டுக்குப் பிரபலம் என்றாலும், பெருமாள் மீதும் பல பாடல்கள் பாடி இருக்காரு! அவரும், வாணி ஜெயராமும் சேர்ந்து பாடி இருக்காங்க இந்தப் பாட்டை!
பாருங்க, கேளுங்க! (பாட்டு இணையத்தில் இல்லை! கேட்டுக் கொண்டே டைப்பினேன்! பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்)


பாட்டில் சில திவ்யதேசங்கள் (108 திருப்பதிகள்) வரிசையா வருகின்றன! பாட்டை ஒழுங்காப் படிச்சிட்டு, எவை எவை என்று பின்னூட்டதில் சொல்லுணும் ஆமா!:-)

திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!


காஞ்சி நகர் வரத ராஜா - உன் கருணை பெருமை என்ன லேசா?
வாஞ்சை யுடன் எனக்கு அருள - காஞ்சி வரதா, நீ விரைந்தோடி வருக!

Image
திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!


பூலோக வைகுந்த வாசா, புகழ் ஓதும் ஸ்ரீ ரங்க நாதா
திருவரங்கத்து ரங்க நாதா, என் சேவைக்குத் துணைபுரிய வா,வா!


அனந்த பத்ம நாபா, ஆனந்த விஸ்வ ரூபா
திரு அனந்தை பத்ம நாபா, உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா,வா!

குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை, நடக்கக் கொஞ்சு தம்மா இரண்டு சலங்கை
வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா, நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா!

Image
பழமை நிறைந்த திருப்பதியே, எங்கள் அழகர் மலைக் கருணை நிதியே!
சோளிங்கர் ஆள்கின்ற முகமே, பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே!

தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!


நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா


மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா!
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா!
மெய்க்கூந்தல் வேதவல்லி தலை மகனே (?) - கனல்
நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே! (?)


எத்தனையோ உலகில் வடி வெடுத்தாய் - அன்று
எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்!
பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ - இன்று
சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ!

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா!
பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்: சுப்ரபாதம்


பி.கு:
இந்தத் "திருக்கோயில் கட்ட எண்ணி" பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி மயமாகி விடுவேன்! ஏன்னா, சிறு வயதில்,
எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் (ஆனைக்கருளிய அழகப்பெருமாள் - கஜேந்திர வரதராஜப் பெருமாள்) சிதிலம் அடைந்து இருந்தது!
ImageImage
அப்போது அதை மீண்டும் ஒழுங்கு செய்து கட்டணும்னு, ஒரு சின்னப் பையன் மனசு ரொம்பவே துடிக்கும்! மனசுக்குள்ளேயே குடமுழுக்கு, அபிசேகம், உற்சவம்-ன்னு வேற நடத்திப் பாத்துக்குவான்! கனவு வேற!! :-)

சின்னப் பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு அவுங்களுக்குப் பாடம் நடத்துறது; குடுங்கடா குரு தட்சணை-ன்னு, அப்பால எல்லாரும் கோயில்-ல புல்லு புடுங்கறது, ஒடைஞ்ச வாகனத்தை அரக்கு வச்சிப் பீஸ் பீஸா ஒட்டுறது-ன்னு ஒரே கலாட்டா!

வீட்டுல வேற இவன் அட்டகாசம் தாங்க முடியலை! சும்மா சும்மாக் காசு கேட்டுக்கிட்டே இருப்பான்! அப்பல்லாம் வீட்டுல இம்புட்டு வசதி போதாது! அப்போ-ன்னு பார்த்துக் குடும்பமும் சென்னைக்குக் குடி பெயர்ந்தது!

பின்னாடி என்னென்னமோ எல்லாம் நடந்து, ஊர்ப் பெரியவங்க கொஞ்சம் கண்ணைத் தொறந்தாங்க! ஃபாதர் ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்கள் பரிந்துரையில், ஊர் மாதா கோயிலின் மரப்பலகை எல்லாம் நன்கொடையாக வந்து சேர, பெரிய திருமலை ஜீயர் விஷயம் தெரிஞ்சி வந்து உதவி செய்ய, கோயில் ஒரு வழியாச் சரியானது!

கோயிலில் கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வச்சிக் குடுத்து, அய்யிரு கிட்ட அடி வாங்குனது, அய்யமாரு வூட்டுப் பொண்ணுங்க எல்லாம் அவன் சப்போர்ட்டுக்கு வந்தது! இதெல்லாம் தனிக் கதை!
இப்ப நெனச்சாக் கூடச் சிரிப்பு சிரிப்பா வருது! :-)))

ImageImage

Wednesday, June 11, 2008

96. எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆகா...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி என்றாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"
Image
"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அந்தக் கண்ணனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்! கிருஷ்ண பரமாத்மா!
சண்டை வேணாம்-னு தூது எல்லாம் போவாரே! ஆனாப் போயிட்டு வந்து சண்டையைச் சூப்பரா போடுவாரே! அவரு!"

"அடங்கொக்கமக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா"-ன்னு இசை அமைக்க...
இளையாராஜா, "பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, கொஞ்சம் இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதை எல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"



இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது, அப்போது!
வெகுஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை கொடுப்பாரு!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

இளையராஜா வீட்டு இட்லி சட்டி கூட இசை அமைக்கும்!
தோசைத் தட்டு கூடத் தோடி பாடும்! - அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!

எந்த ஒரு மகோன்னதமான இசை அமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல? எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி, கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்! ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா, எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்!
ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்! போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்! ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!
Image
அந்தச் சமயத்தில் வந்த படம் தான் "மெல்லத் திறந்தது கதவு"!
ராஜா-விஸ்வநாதன் ஒற்றுமைக்காக - மெல்லத் திறந்தது கதவு!

இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப் பட்டது!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு! - கண்ணன் எம்பெருமானே ஒற்றுமைக்கு வழி வகுத்தான்!
* குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா மீனிங் தான் புரியலை!
* பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பாடல்களின் பின்னணிக்கு, துவக்கம் மற்றும் Interlude-களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைப்பாரு!
இப்படி ஒரு ஜென்ட்டில் மேன் அக்ரீமென்ட்டு போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! படத்தில் மற்ற பாடல்களும் ஹிட் தான்!

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!
இன்னிக்கி 96th பதிவு! 100க்கு என்ன பண்ணலாம் மக்கா?


முதலில் MSV இசையமைக்க, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு! - இங்கு கேட்கலாம்!

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!

இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?
என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!
சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)
Image
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?
வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: ???
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)
படம்: மெல்லத் திறந்தது கதவு


இப்போ ரோல் சேஞ்ச்!
ராஜா இசையமைக்க, MSV பின்னணி!

** பாவன குரு பவன புரா! - இங்கே கேட்கலாம்!


பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே!
ஜீவன தர சங்காசம், கிருஷ்ணம் கோலோகேசம்!
பாவித நாரத கிரீசம், திரிபுவனா வனாவேசம்!!
(பாவன குரு-பவன-புராதி)

பூஜித விதி புரந்தரம், ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், அஜித முதாரம்!! - கிருஷ்ணா
ஸ்மர சத சுபகா (ஆ)காரம், நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், லலிதா சோதரம் பரம்!!

(பாவன குரு-பவன-புராதி)
Image
(இந்தப் பாட்டின் மெலடி சூப்பரா இருக்குப்பா, தப்லா-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)


குரல்: சித்ரா (தானே ???)
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), எம்.எஸ்.விஸ்வநாதன் (பின்னணிக்கு),
படம்: மெல்லத் திறந்தது கதவு
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா, நம்ம அமலா!
இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு பவன புரா"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!
என்றாலும்...படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)
Image

Sunday, June 08, 2008

95. சு-வா? ஜா-வா?? கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே!

அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்-னு ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-))

எத்தனை வயதானாலும், குரல் மட்டும் என்றும் பதினாறாய், கட்டிளங் கன்னியாய் இருக்கும் S.ஜானகி அம்மா தானே அதுக்கு வந்தாகணும்!- சரி தானே சர்வேசன்? சரியல்ல தானே ஜிரா? :-))

ரொமான்டிக் கிக் இருக்குற பாடலுக்கு ஜானகி ரொம்ப பொருந்துவாங்க! - ஏன்னா ஜானகி கொஞ்சம் குரலை மாத்தி மாத்திப் பாடுவாங்க! (முக்கல் முனகல் பாட்டுக்கு ஜானகி தான் ஈசி்யாச் சரிப்பட்டு வருவாங்க)!
மற்றபடி...மெலடி, இன்னிசை, மரபு வழி இசை, மெல்லிய காதல், சோகம், ஏக்கம், தாலாட்டு-ன்னு எல்லாம் எடுத்துக்கிட்டா அப்போ சுசீலாம்மா தான்!

மயூரி புகழ் சுதா சந்திரன் பல நடனப் பாடல்கள் ஆடியிருக்காங்க. அதுல ஒரு கண்ணன் நடனப் பாட்டு இன்னிக்கு! மெல்லிசை மன்னர் MSV இசையில் ஜானகி, அவுங்களுக்கே உரிய ரொமாண்டிக் குரலில் பாடின பாட்டு!
இந்தப் பாட்டுக்கு பல தனிக் கச்சேரிகளிலும் மவுசு. தனி மேடைகளில் இந்தப் பாட்டுக்குப் பரதமும் ஆடியிருக்காங்க பொண்ணுங்க!

மயூரி சுதா சந்திரன் பற்றி மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா!

பாட்டை, இங்கே வீடீயோ-வில் பாருங்க!




ImageImageகண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
(கண்ணன் மனம் என்னவோ)


கானத்தில், குழல் நாதத்தில்,
ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்!
மோனத்தில், அந்தி நேரத்தில்,

அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்!

கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்.

வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ....
(கண்ணன் மனம் என்னவோ)


மோகத்தில், விழி ஓரத்தில்,
கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில், நடு ஜாமத்தில்,

இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும்

மை கூட கரைகின்றதே

இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் - கண்மணிக்குள்

இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்!
(கண்ணன் மனம் என்னவோ)

படம்: வசந்தராகம்
குரல்: S.ஜானகி
வரிகள்:
இசை: M.S. விஸ்வநாதன்

கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
- இதுக்குப் பொருள் என்னாங்க? கூந்தல் நீவினவங்க யாராச்சும் பெரிய மனசு பண்ணிச் சொல்லுங்கப்பா சொல்லுங்க! :-)

Friday, May 23, 2008

93. யேசுதாஸ் குரலில், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே!

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்!

பிரபந்தம், திருப்புகழ் போன்ற சில சந்தத் தமிழ் பாடல்களைப் பாடும் போது மட்டும் அவருக்கு உச்சரிப்பு கொஞ்சம் நாட்டியம் ஆடும்! :-)
மற்றபடி குருவாயூர் கண்ணனையும் உடுப்பி கண்ணனையும் யேசுதாஸ் அழைத்தால், கண்ணன் ஓடியே வந்திடுவான்!....கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்?
இந்தப் பாடலைக் கேட்டு விட்டு, நீங்களே சொல்லுங்க! - சுவாமி ஐயப்பன் என்னும் படத்துக்காக, யேசுதாஸ் பாடுவது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய அழகிய இசைப்பாடல்!

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)

பாடலை இங்குக் கேட்கலாம்
இங்கே தரவிறக்கியும் கொள்ளலாம்!

SwamiAyyappan-Thir...



Image
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜெகன்னாதா
வருவாய் திருமாலே - துணை
தருவாய் பெருமாளே


படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்



ImageImage

அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!
7 Runs to Century! :-)
Boys & Girls! Ready for Field Strategy! Get, Set, Go! :-)

Thursday, October 25, 2007

70. வாணி ஜெயராம்: கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்!

அன்னிக்கி நம்ம ஜிராவுடன், ஜிடாக்கில், ஜிலுஜிலு என்று சாட்டிக்கிட்டு இருந்தேன்;
ஏண்ணா......முருகனருள் ராகவன்-னு போர்டு போட்டுக்குனு,
கண்ணன் பாட்டுத் திண்ணையில காலாற உட்காந்துகிட்டு இருக்கீக!
நீங்க கண்ணன் பாட்டுல பதிவு போட்டு எம்புட்டு நாள் ஆச்சுது? கொஞ்சம் எட்டிப் பாருங்கோண்ணா என்றேன்!

மனுசன் நெசமாலுமே எட்டிப் பார்த்தாரு! எட்டுமா எட்டுமா-ன்னு எட்டி எட்டிப் பாத்தாரு!
யாரை இப்பிடி எட்டி எட்டிப் பாக்குறீங்க? கண்ணனையா? அதான் ஒங்க முன்னாடி நானே இருக்கேனே-ன்னு சொன்னது தான்! மனுசன் ஒரு மொறை முறைச்சுப் பாத்தாரு!
எங்கடா அந்த ராதா? அவளுக்கோசரம் தான் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கே வர ஒத்துக்கிட்டேன் தெரியுமா?-ன்னாரு!

ImageImage


அத்தோட நிக்காம ராதா மேல பல பாட்டுகளை அள்ளி அள்ளி வீசினாரு!
எல்லாம் அவர் குருநாதர் எம்.எஸ்.வி போட்ட பாட்டாம்!
நான் எல்லாத்தையும் ஒடனே லபக் லபக்-னு ட்ராவிட் கணக்கா கேச் புடிச்சிக்கிட்டேன்! இந்தப் பாட்டுலயே ஏதாச்சும் ஒன்னைப் போடுங்க-ன்னு கேட்டேன்!
நீயே என் பேரைச் சொல்லிப் போட்டுக்க போடா! நான் பாட்டு போட்டா என்னா, நீயி பாட்டு போட்டா என்ன-ன்னு சொல்லிப்புட்டாரு!

வெறுமனே பாட்டு போட்டா போதுமா? பேக்கிரவுண்டு கொடுங்க! எல்லாம் ஒங்க காலத்துப் படம்...
எங்களுக்கு எல்லாம் யுவன், ஹாரிஸ் இப்படித் தான் தெரியும்-னு வேண்டிக் கொள்ள...இதோ ஜிரா!




இயக்குநர் கே.சங்கர் தெரியுமா? பல பக்திப் படங்களைக் கூடச் சமூக நோக்கில், எளிமையா கொடுப்பாரு! அவர் இயக்கிய ஒரு படம் சுப்ரபாதம்!
இந்தப் படத்தில் சாதாரண தட்டு மக்களையும், பல வைணவக் கோவில்களையும், அதை ஒட்டினாற் போலச் சில கதைகளையும் சோடிச்சி படம் பிடிச்சிக் காட்டி இருப்பாரு!

அதுல வாணி ஜெயராம் பல பாடல்களைப் பாடி இருப்பாங்க! ஆனா அவங்களும் ஜேசுதாசும் சேர்ந்து பாடின இந்த டூயட் செம ஹிட்!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

அப்படின்னு ஒவ்வொரு பத்தியிலும், எடுப்பா முடிப்பாங்க!

என்னது டூயட்டா? ஆமா கண்ணன் பாட்டுல நான் கொடுக்கறேன்னா, டூயட் இல்லாம என்னவாம்? படத்துல ஜெய்கணேஷும் லதாவும் ஆடுவாங்க!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா என்று நீங்களும் டூயட் ஆடிக்கிட்டே பாடுங்க!
இந்தா, கேளுங்க!
KannanaiNinaithaal...



Image
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)

ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

(கண்ணனை நினைத்தால்)



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP