அலைச்சல் அனுபவங்கள்
![]() |
திருவண்ணாமலை |
![]() |
| அண்ணாமலையார் கோவில் கோபுரம் |
![]() |
| மலை மீது தவழும் மேகம் |
கிட்டதட்ட பத்து நாட்களாக ஒரே அலைச்சல். பங்களூர், ஷீர்டி, மும்பை, பங்களூர், திருவண்ணாமலை, சென்னை மீண்டும் பங்களூர் என்று சூறாவளி சுற்றுப் பயணம்! திருமணம், பூணூல், பிரிந்தவர் கூடுதல், தினசரி எல்லோரோடும் கதைத்து விட்டு இரவு நேரம் கழித்து உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, விருந்து சாப்பாடு சாப்பிட்டு, விமானம், பேருந்து, ஆட்டோ, கார் என்று அனைத்திலும் பயணித்து, வரிசைகளில் நின்று…. ஊஃப்! உடம்பு களைத்து விட்டது. தலையிலிருந்து கால் வரை வலி. இன்னும் அசதி தீரவில்லை. இதற்கிடையில் வீட்டிற்கு விருந்தினர் வருகை. விரைந்து வந்து கொண்டிருக்கும் தீபாவளி.
சாயி சத்சரிதாவை படித்துவிட்டு ஷிர்டிக்கு முதல் முறையாக செல்பவர்கள் ஏமாந்து போவார்கள். எல்லா புனித தலங்களையும் போலவே ஷிர்டியும் வியாபார தலமாகி விட்டது. ஆன்லைனில் நாங்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டல் கோவிலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் அங்கு தங்காமல், கோவிலுக்கு அருகில் வேறு ஒரு ஹோட்டலில் தங்கினோம். அன்று வியாழக்கிழமையாக இருந்தாலும் நாங்கள் ஷிர்டியை அடைந்த பொழுது, நேரம் அதிகமாகி விட்டதால் அன்று இரவு தரிசனம் செய்ய முடியவில்லை.
![]() |
| ஷீர்டி பாபா கோவில் கோபுரம் |
மறு நாள் காலை முதல் தரிசனம் காணச்சென்றால் அவ்வளவாக கும்பல் இருக்காது என்றார்கள். எங்களிடம் யாரோ சொன்னது போல பல பேரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் போலிருகிறது. நல்ல கும்பல் இருந்தது. தரிசனம் முடித்து விட்டு வந்து, செல்ஃபோனை திரும்ப பெற்றுக்கொள்ள சென்ற பொழுது காற்று வாங்கியது. ஹூம்!
மும்பையில் நடந்த திருமணம் ஒரு ஃபுயூஷன் வெட்டிங். ஊஞ்சலுக்கு பதிலாக சேரில் மணமக்களை அமரச்செய்து, பாடச் சொன்னார்கள். பாடத்தெரிந்தவர்கள் இல்லாததால், நான், ‘கன்னூஞ்சல் ஆடி நின்றாள் காஞ்சனமாலை மனமகிழ்ந்தாள்..’ தொடங்கி, ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்..’வரை பாடி தீர்த்து விட்டேன். மேளம் கிடையாது. டி.ஜே.யில் மேளம், அதிலேயே கெட்டி மேளம் கூட இருக்கிறது.
மும்பையிலிருந்து வந்த அடுத்த நாளே திருவண்ணாமலையில் ஒரு பூனூல் கல்யாணதிற்காக செல்ல வேண்டியிருந்தது. திருவண்ணாமலை அதிகம் மாறவில்லை. குறிப்பாக ரமணாஸ்ரமம். ஷிர்டி சாயி பாபா, ரமண மஹரிஷி இருவருமே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்கள்தான். ஷிர்டி ஒரு ப்ரார்த்தனை ஸ்தலமாக இருப்பதால் அங்கு லோகாயதமான விஷயங்களை வேண்டிச் செல்பவர்கள் அதிகமாக இருக்கிரார்கள். அதனால் அந்த இடமும் வணிக தலமாக இருக்கிறது. ரமணாஸ்ரமத்துக்கு வருபவர்கள் ஆழமான ஆன்மீக தேடலை உடையவர்களாக இருப்பதால் இன்னும் மாறவில்லை. இதுவும் அவர்களுடைய சங்கல்பமே.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்யச் சென்ற பொழுது என் மகனுக்கு வாயு பிடிப்பா, தசைப் பிடிப்பா என்று தெரியாமல் திடீரென்று வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்ததும், அங்கு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே, எடுத்து, அதில் எதுவும் ப்ரச்சனை இல்லை என்று தெரிந்து, ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்தது ஒரு தனி கிளை கதை.
ரமணாஸ்ரமத்தில் தியானம் செய்வது ஒரு அற்புத அனுபவம். அந்த அனுபவதிற்குப் பிறகு, “இன்னும் எத்தனை நாட்கள் இப்படி தேடி நிதம் சோறு தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, வாடி மிக உழன்று கொண்டிருக்கப் போகிறோமோ?” என்று தோன்றியது.
![]() |
| ரமணாஸ்ரமத்திலிருந்து மலையின் காட்சி |
வீட்டிற்கு வந்ததும் விருந்தினர்களுக்காக கல்கண்டுபாத், வடை என்று
சம்பிரமமாக சமையல், தீபாவளி பட்சண பிரிபரேஷன், புடவைக்கு மேட்சாக தைக்க கொடுத்திருந்த ப்லௌஸ் சரியாக தைக்கப்பட்டிருப்பதில் சந்தோஷம், இன்னும் மேட்சிங் ஆக உள் பாவாடை வாங்க வேண்டும்.. அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம்.




