மாமி சொன்ன கதைகள்
இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் தீர வேண்டும். ஆனால் அந்த இறப்பு வருவதில் ஒரு ஆர்டர் இல்லை. அதாவது முதலில் பிறந்தவர்கள்தான் முதலில் இறப்பார்கள் என்று இல்லை. முதியவர்களும் இறக்கிறார்கள், நடு வயதினரும் இறக்கிறார்கள், இளம் வயதினர்களும் இறக்கிறார்கள், ஏன் குழந்தைகள் கூட இறக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
இந்த உலகம் படைக்கப்பட்டு அதில் ஜீவராசிகளும் உண்டாக்கப் பட்டதும், படைக்கப்பட்ட ஜீவன்கள் எதுவுமே இறக்கவில்லையாம். இதில் புதிது புதிதாக உயிர்கள் வந்துகொண்டே இருக்க, பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி திணறினாளாம். அவள் கடவுளிடம் சென்று முறையிட்டு தன் பாரத்தை குறைக்க வேண்டும் என்று வேண்ட, கடவுள் எம தர்ம ராஜனைப் படைத்து, உயிர்களை பறிக்க வேண்டிய வேலையை அவனிடம் ஒப்படைத்தாராம்.
அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட எமதர்மன், தன்னுடைய உதவியாளனை அழைத்து இன்று முதல் உலகில் வந்த உயிர்கள் நீடித்திருக்காது, பறிக்கப்படும். அது முதலில் முதியவர்கள், பின்னர் நடு வயதினர், பின்னர் இளம் வயதினர் இறுதியாக குழந்தைகள் என்ற வரிசையில் பறிக்கப் படும் என்று பொருள் படும்படி பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர,இலை உதிர என்று தண்டோரா போடச் சொன்னாராம்.
அந்த பணியாள் அப்படியே செய்ய, முதியவர்களுக்கு கோபம் வந்து விட்டதாம். "ஏன் நாங்கள்தான் முதலில் இறக்க வேண்டுமா? ஒத்துக்க முடியாது" என்று அடாவடி செய்தார்களாம்(எதைச் சொன்னாலும் ஒத்துக்க முடியாது என்று சொல்வது எப்போதுமே உண்டு போலிருக்கிறது)
சரி, முதியவர்கள் மனதை நோகடிக்க வேண்டாம், முதலில் குழந்தைகள், பின்னர் இளம் வயதினர் என்று படிப்படியாக உயிரை பறிக்கலாம் என்று முன்னால் போட்ட தண்டோராவை அப்படியே திருப்பி,"இலை உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, பழம் உதிர" என்று போடச் சொன்னாராம்.
இதை யாருமே ஒப்புக் கொள்ளவில்லையாம். "கிழம், கட்டைகள் இருக்கும் பொழுது, சிறு குழந்தைகள் சாவதாவது? இப்படி செய்தால், உலகில் முதியவர்கள்தான் இருப்பார்கள். மேலும் தங்களை விட இளையவர்கள் இறப்பதை பெரியவர்கள் பார்க்க நேருவதால் உலகமே சோகமாகி விடும்" என்றெல்லாம் கூறினார்களாம். எமன் பார்த்தானாம், தன் உதவியாளரிடம், "உன் வாயில் எப்படி வருகிறதோ அப்படி தண்டோரா போட்டு விடு, நான் அதன்படி நடக்கிறேன்" என்று கூறி விட்டாராம்.
உடனே எமனுடைய உதவியாளர்,"காய் உதிர, பூ உதிர, இலை உதிர, பழம் உதிர, பிஞ்சு உதிர "என்று கலந்து கட்டி தண்டோரா போட்டு விட்டாராம், அதன்படியே யமதர்மராஜனும் நடந்து கொள்ள ஆரம்பித்தாராம். அதனால்தான் உலகில் இறப்பு எந்த வயதிலும் நேருகிறதாம்.
எப்படி கதை? ரசித்தீர்களா? கொஞ்சம் வேடிக்கையான இன்னொரு கதை அடுத்த பதிவில்.